அத்துமீறல்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

நடராஜா முரளிதரன்-


எப்படி மனிதர்களை அளப்பது?
பல கருவிகளைப் பயன்படுத்தி
அளக்க முடியும் என்று
எனது மனைவி கூறுகிறாள்
அந்தக் கருவிகள்
அனைத்தையும் பயன்படுத்தி
அவள் என்னையும்
அளந்திருப்பாள்
என்றே எண்ணுகின்றேன்
அப்படியெனில்
அவளால்
எப்படி என்னோடு கூடவே
வாழ முடிகின்றது

மனங்களின் நெருக்குவாரத்தில்
சிக்கியிருக்கும் கழிவுகளை
அகற்றுவதற்கான
துவாரங்கள்
அடைபட்டுக் கிடக்கையில்
அவற்றினை
வாயு மூலக்கூறுகளாகக்
கவர்ச்சிவிசை குறைந்த
துணிக்கைகளாக
மாற்றிவிடுவதற்கான
பிரயத்தனத்தில்
ஈடுபடுவதாகவே
என் மீது எனக்கோர்
சந்தேகம்

ஆனாலும்
எனது மனைவி
என்னை அப்பளுக்கில்லாதவனாகக்
கருதுவதாகவே
உள்ளூர உருவகித்துப்
புளகாங்கிதமடைந்து
கொள்கின்றேன்

பகற்பொழுதினில்
ஐதாக அகண்டவெளிதனில்
அலைந்து திரிந்த
அந்தத் துணிக்கைகள்
இரவானதும்
தங்கள சுயத்தைக்
காட்டுதற்காய்
திமிரெடுத்து நிற்கின்றன

அவை மனைவி
மீதான தொந்தரவாக
எழுந்து
பின் அந்நியர்
மீதான அத்துமீறலாக
மாறி
இரவின் இருள்
இன்னுமோர் பயங்கரத்தைக்
கட்டவிழ்த்துச்
செல்கிறது

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)