தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

கே.பாலமுருகன்


1

தொடக்கத்திலிருந்து
வந்து தொலைகிறேன்

எங்கிருந்து வருகிறாய்?

மலேசியாவிலிருந்து

இருக்கட்டும்

ஜெயமோகனை வாசித்திருக்க வேண்டும்,
பிரம்மராஜனின் நான்கு தொகுதிகளையும்
கரைத்துக் குடித்திருக்க வேண்டும்,
செய்தாயா?

இல்லை. அவர்களை இன்னும் நெருங்கவில்லை

வெறென்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?

மலேசிய கவிதைகள்

கெட்டாய்.
இனி இலக்கியம் படைக்கும் முன்
தமிழக ஆளுமைகளைக் கரைத்துக்
குடித்துவிட்டு வா.
முடிந்தால் மலேசிய இலக்கியம்
படிக்காதே! என்ன புரிகிறதா?

“அப்படியே ஆகட்டும்”

2

தொடக்கத்திலிருந்து
வந்து தொலைகிறேன்

எத்தனை கதை எழுதியுள்ளாய்?

4 கதைகள், 30 கவிதைகள்

உன் படைப்புகள் குப்பையாய்
மிதக்கின்றன

ஓ! அப்படியா?

ஆமாம், மேதாவி சொல்கிறேன்
கேட்டுக் கொள்
இங்கு எனக்கு மட்டுமே
மிகப் பெரிய ஆளுமை
உண்டு.
நான் மட்டுமே ஆழ்ந்து வாசித்து
எழுதக்கூடியவன்.
எனக்கு முன்
நியெல்லாம் எம்மாத்திரம்?

அப்படியா?

ஆமாம்டா. புரியுதா?
என்னைக் கொஞ்சம் கவனித்துக்
கொள்.
அவ்வப்போது மரியாதை செலுத்து.
வெளி இடத்தில்
என் கதையைப் பற்றி
புகழ்ந்து பேசு.

அப்படியே ஆகட்டும்.

3

தொடக்கத்திலிருந்து
வந்து தொலைகிறேன்

எனக்கொரு கும்பல்
உண்டு.
உனக்கு?

இல்லை. தனியன்.

அப்படியா? அது நல்லதல்ல.
ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்.
கூட்டமாகச் சேர்ந்து கூவ
வாய்ப்பாக இருக்கும்.

அப்படியா?

ஆமாம். கூட்டத்தில்
குசு விட்டாலும்
யாருக்கும் தெரியாதே.

நீ பேசும்போது
உனக்குக் கூஜா
தூக்க 4-5 பேரை
சேர்த்துக் கொள்.

கூட்டத்திற்கு
என்ன பெயர் வைப்பது?

பின்நவீனத்துவ கூட்டம்
அல்லது அமைப்பியல் கூட்டம்
அல்லது போராளி கூட்டம்
அதுவும் இல்லையென்றால்
சேகுவாரா கூட்டம்
என்று வைத்துக் கொள்.

எதற்கு?

கும்மியடிப்போம் கும்மியடிப்போம்
என்று கதறுவதற்கு.

அப்படியே ஆகட்டும்.

4

தொடக்கத்திலிருந்து
வந்து தொலைகிறேன்.

ஒரு கதை எழுதிவிட்டாயா?
அதை யாரிடம் காட்டினாய்?

நண்பர்களிடம்.

அட முட்டாளே. யாரிடமும்
காட்டாதே.
நீயே வைத்துக் கொள்.
உனக்கெதற்கு அங்கீகாரம்?
மன்னாங்கட்டி. அது என்னைப் போன்ற
ஆளுமை பைத்தியங்கள்
தேடிக் கொள்வதற்கு.

அப்படியா?

ஆமாம். நாங்கள்தான் இருக்கிறோமே.
பிறகென்ன தனியாக
இயங்கப் பார்க்கிறாய்?
யாருக்கும் கதையை அனுப்பி வைக்காதே.
புரிகிறதா?
எனக்கு அதில் விருப்பமில்லை.

அப்படியா? என்ன செய்வது?

மூடிகிட்டு நான் யாரைக் கொண்டாடுகிறேனோ
அவனுக்குக் குமாளம் போடு.

அப்படியே ஆகட்டும்.

5

தொடக்கத்திலிருந்து
வந்து தொலைகிறேன்.

என்னவேண்டுமானாலும் பேசு.
நீ பேசிக் கொண்டிருப்பதைப்
பதிவு செய்து கொண்டிருக்கிறேன்
பத்திரப்படுத்தி வைத்து
கழுத்தறுபதற்கு.

எப்படிச் சாத்தியம்?

காக்கா பிடித்து
10 பேரைக் கூடவே
வைத்திருக்கிறேனே
உன்னைப் பற்றி தகவல்களைச்
சேமித்து வைத்து
வயிறு எரிய.

நண்பனா?
அட போடா . ..
அன்பா?
போடா தத்தி.
நேர்மைத்தான் முக்கியம்.
குரல் அறுந்து தொங்கும்வரைப்
போராடுவோம் போராடுவோம்.

அப்படியே ஆகட்டும்

– – – –
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்