கடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

கே.பாலமுருகன்


கடவுளின் பசி
காமப்பசி கொண்ட
ஒரு தீர்க்கத்தரிசி
மனிதர்கள் வசிக்கும்
இடங்களில்
சுற்றி அலைந்து
கொண்டிருந்தார்

“எல்லாமும் ஆகிய
இறைவன் அருளாலே
உங்களை இரட்சிக்கிறேன்”

தீர்க்கத்தரிசி
நாளடைவில்
காமத்தின் விரக்தியில்
அருள்வாக்கு
அளிக்கும் மனநிலைக்கு
ஆளாகினார்

“அமைதியானவர்களே
உங்களைத் தொலைக்க
ஆசைப்படாதீகள்
காலம் விரைந்து வருகிறது
காணாமல் போக
விரும்பாதீர்கள்”

தீர்க்கத்தரிசி
தேடி வந்த
காமம்
அங்கில்லாத தீர்மானத்தில்
கோவில்களைத் தேடி
நடக்கத் துவங்கினார்



பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்

சன்னாசி கிழவன்
அன்றாட கடமையாக
நகரத்தில்
கால் அகட்டி
அமர்ந்துகொண்டு
அவனைக் கடக்கும்
பேருந்துகளைப் பார்த்து
எச்சில் துப்பி
தொலைகிறார்

பேருந்தில் அமர்ந்திருக்கும்
பகல்வேசிகள்
தூக்கம் களைந்து
மீண்டும்
சன்னாசியின் மீது
எச்சில் துப்பி
வைக்கிறார்கள்

நகரத்தில்
எல்லாம் இடங்களிலும்
இப்படித்தான்
எச்சில் துப்பி
காரி உமிழ்ந்து
பகட்டு வாழ்வின்
விமர்சனங்களைப்
பகிர்ந்து கொள்கிறார்கள்


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்