இருள் கவியும் முன் மாலை

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

வே பிச்சுமணி


இருள் கவியும் முன் மாலை
கார்மேகம் கரும்போர்வை போற்ற
கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்
அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்

மணல் அளக்கும் உன் கைபற்றி
மணமுடித்தல் பேச
கரை தொட்டு திரும்பும் அலைகளாய்
என் கையிலிருந்து நழுவியது
விடுபட்டது உன் கை

பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்
யோசிக்க நேரம் வேண்டுமென்றாயே
அவ்வமயம் நமது காதல்
மரத்தில் கரையான் ஏறியது
அரித்து முடிக்குமுன்
உன் சிந்தனை புல்லினை நிறுத்தி
கரையான்களை தின்றுவிடு

காதலிக்கும் போதும்
உனக்கும் எனக்கும்
குடும்பம் இருந்தது
கல்யாணம் எனறால்
புது உலகத்தில் பிறந்தாற்
போல் பசப்பாதே
முழுவதும் இருள் கவியும் முன்
உள்ளத்தை சொல்லி விடு


vpitchumani@yahoo.co.in

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி