மயிலிறகுக் கனவுகள்

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்



படிக்கப் போவதாய் சொல்லி
புத்தகங்கள் கையில் ஏந்தி
படிப்படிப்பாய் தாவி ஏறி
மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
சாய்வாய் உள்ளடங்கி-
புத்தகத்தை கைகள் விரிக்கையில்
விழிகள் விரிந்ததென்னவோ
விண்ணினை நோக்கி.

கண் எட்டிய தூரமெல்லாம்
அகண்ட பெருவெளியாய்
அது ஒன்றே தெரிந்திட-
உலகமே அதுதானோ என
வானின் அழகில்
மனமது லயித்திட..

பொதிப் பொதியாய்
நகர்ந்திட்ட வெண்பஞ்சு
மேகக் கூட்டமதனில்
பலப்பல வடிவங்களை
உள்ளம் உருவகப்படுத்தி
உவகை கொண்டிட-
கூடவே குடை பிடித்து
உற்சாகமாய் கனவுகள்
ஊர்வலம் சென்றிட..

கூட்டம் கூட்டமாய்
பறந்திட்டக் கிளிகளோ
கூட வாயேன் நீயுமெனக்
கூப்பிடுவதாய் தோன்றிட-
இல்லாத இறக்கை
இரண்டால் எம்பிப்
பறக்கவும் துவங்கிடுகையில்..

தலைமாட்டுச் சுவற்றின்பின்
தலைதட்டி நின்றிருந்த
கொய்யாமரக் கிளையிலிருந்து
கூடு திரும்பிய
காகமொன்று கரைந்திட-
மறைகின்ற சூரியனுடன்
கரைகின்ற வெளிச்சம்
கவனத்துக்கு வந்தது.

மூடியது பதிமன்
மடியிலிருந்த புத்தகத்தை-
மயிலிறகெனக் கனவுகளைப்
பத்திரமாய் உள்வைத்து-
கரைந்திடுமோ அவையுமென்ற
கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-
படிக்காத பாடங்கள் மட்டுமே
பாரமாய் நெஞ்சில் இருக்க.


Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி