வேத வனம் விருட்சம் 19

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

எஸ்ஸார்சி



உடல் அன்று
உள்ளம் அன்று
பிராணன் அன்று
புத்தியும் அன்று
இவை நீங்கிப்பின்
உள்ள ஒன்று அது

ஜீவன்
பிரம்மம்
இடை
விழு திரை
விலகிட
கைப்படுவது அது

மன வெளி
உள்ளக்குகை
வதி யும் அது

புலன் அடக்கி
பிரம்மம் ஒழுகி
மெய் போற்றி
தானது அடங்கி
தக்கவை பயில
வசமாகும் அது.

எல்லை யில்லா
ஆழம் தெரியா
அளந்து மாளா
அறையவும் இயலா அது

கன்களின்றிக்காண
காதுகள் இன்றி கேட்க
நாவின்றி ருசிக்க
மூக்கின்றி முகர
கால்களின்றி நடக்க
கைகளின்றி வசமாக்க
உடலின்றி உணர
மனமின்றி அறிய
சித்திக்கும்
சுத்த சித்த
சாதனை அது.


உலகு உறங்க
தான் விழித்து
பிரளயப்போதும்
தானொளிரும்
ஆதி
அனாதி அது

எல்லாமாய்
எதிலுமாய்
அனைத்தும்
தன்னிலுமாய்
தானே அனைத்திலுமாய்
அமர்ந்த அது. – பிரம்மானுபவ உபநிசத்

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி