பொம்மை நேசம்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


எனைச் சிலகாலம் உன் மனதிற்குத்
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்

தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்

சில காலம் ஆயிற்று – எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்

மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்

இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்