தேங்காய்களை தின்று அசைகிற கொடி

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

தீபச்செல்வன்


கவிதை:
____________________________________

உனது அப்பாவை தின்ற அதேகொடி
இன்று உனது நகர்
தேங்காய்களை தின்று அசைகிறது.

கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்
முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை
அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை
எந்த தேங்காய்களுமில்லை.
கற்கள் நொருங்கிய வீதியில்
கச்சான் கடைகள் கைப்பற்றப்பட
உடைந்த அடுப்புக்கள்
நெருப்பாய் எரிய
தெருமுறிகண்டி வீழ்ந்ததென
கோயில் மணிகள் துடிக்கின்றன.

தும்பிக்கையற்ற பிள்ளையாரின்
கோயில் மணியை
படைகள் அசைக்க
நான் கிடந்து எழும்பிய
மடங்கள் பின்னால் நொருங்குகின்றன.
கழற்றி விட்டிச்சென்றிருந்த செருப்புகள்
கால்களை தேடுகின்;றன.

மீண்டும் முறிகிற வேப்ப மரங்களின் கீழே
எனது சைக்கிளை விட்டு வந்தேன்.
உனது சிறுநகரம்
வீழ்ந்ததெனக் கூறுகையில்
நமதாயிருந்த வீடு இழந்தோம்.

கண்டிப்படைகள் புகுந்து
கொடி பறக்கவிடுகையில்
நமது சனத்தின் தேங்காய்
உடைத்த கைகள் கழன்றே போயின
படைகள் நீ அணியும்
திருநீற்றை பூசுகின்றன.
சந்தனத்தை உரசி பூசுகின்றன.
நாம் நெற்றிகளை இழக்க
சனத்தின் முகம் சுருங்குகிறது.

உனது அப்பா மீட்ட
தெருவில் படைகள் மிதந்து நிற்க
மீண்டும் உன் வீடு சிதைந்துகொண்டிருக்கிறது.

பிள்ளையாரையும் கைவிட்டு வந்தோம்.
புத்தரின் பிள்ளைகள்
வெறிபிடித்தலைகிற
காடுகளில் இழக்கப்பட்ட
உனது அப்பாவின்
கோயிலை புத்தரே கைப்பற்றினார்.
கொக்காவில்
காடுகளின் கீழாய் இறங்குகிறது.

வெல்ல முடியாத யுத்தம்
மற்றொரு கோயிலை பிடித்துவி;ட்டு
மீள நகரக் காத்திருக்கிறது.
இந்தக் கொடி மீளமீள அசைந்து
வலியினை கிழிறிக்கொண்டேயிருக்கிறது.

உடைந்த தேங்காய்களை நம்பிக்கை
பொறுக்கி எடுக்கிறது.
சிரட்டை சில்லுகள் கூர்மையடைகின்றன.
அடுப்புக்கள் எரிந்து கொண்டேயிருக்கின்றன.

படைகள் அசைத்து குதிக்கிற
இந்தக் கோயில்மணி
இரணைமடுக் காட்டின் மரங்கள்
கொதித்தசைய
ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.
———————————————————————-
11.12.2008.முறிகண்டி,கைப்பற்றல்.


தீபம் பதுங்கு குழியிலிருந்து ஒரு வலைப்பதிவு

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்