வேத வனம் விருட்சம் 16

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

எஸ்ஸார்சி


தொடரும் தியானம்
உறுதி செய்யும்
பிரம்மானுபவம்

இவ்வுடல் நான்
விடுபட்டு யானே
சச்சிதானந்தம்
அறிய ஞானக்கூர்
வாள் வசமாகும்

ஆளும் பொருளும்
ஊரும் எதுவும்
மனம் லயிக்க
பிடிபடும் உடனாய்
பிடி படல் இறப்பு
விடுபடல்
என்றுமுளதாகும்
ஒப்பிலா வாழ்க்கை

உடல் உயிர்
மனம் புத்தி
காரணம் எனும்
ஐந்து உறை போர்த்திய
ஆன்மா
என்றுமுளது
எல்லாம் நிறைந்தது
பகுத்திட முடியா
பரம் பொருள்

பாசி மூடிய
திருக்குளத்து நீர்
அஞ்ஞானம் போர்த்திக்கொண்ட
ஆன்மா
தியானம் செய்
பாசி விலகும்
பிறப்பும் இறப்பும்
தொலைக்கும் வழி
ஆன்மானுபவம்
பரமானந்தமெனும்
நிறை அமைதி.

விடுதலை வசப்பட்ட
ஆன்மா
அமைதியாய் அடக்கமாய்
ஆத்திரம் தொலைத்து
ஆட்டிபடைத்தபோதும்
ஆனந்த த்துயிலங்கே
அமர வசப்படும்
எப்போதும் மகிழ்ச்சி
எதிலும் மகிழ்ச்சி.

உறங்கி உறங்காது
கனாக்கண்டும் காணாது
விழித்தும் விழிக்காது
தன்னுள் லயித்தல்
விளக்கி மாளாதது.

எட்டாத்தொலை
எட்டும் அண்மை
உட்புறம் வெளிப்புறம்
மொத்தம் நுணுக்கம்
இறப்பினொடு பிறப்பு
காலம் ககனம்
நேற்றின்று நாளை
நல்லது கெட்டது
இன்பதுன்பம்
பெரிது சிறிது
உயர்வு தாழ்வு
மொத்தத்தில் அத்தனையும்
விடுதலை உணர்ந்து
லயித்திடும் ஆன்மா முன்
அர்த்தம் தொலைத்தவை. -சொருப போத உபநிசத்

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி