என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

சக்தி சக்திதாசன்



கேள்விகளை நான் கேட்பேன்
அது என் கடமை
பதில்களைத் தருவது
உன் திறமை.

பத்துநாளாய்ப் பட்டினி
பாடிக் கொண்டே கையை நீட்டும்
பாலகன் அவனையும் இறைவா
பசியுடன் படைத்தது நீயா ?

நோயினில் தவித்திடும் அத்தாய்
பாயினில் உறங்கிடும் அவள் பதி
கோலங்கள் பலவாய் மாற்றிக்
கொடுத்ததும் நீயா சொல் ?

பொழுது போக்க பள்ளிக்கு
போகும் சில செல்வச் சிறார்
பள்ளிவாசலில் கண்ணீரொடு
பார்த்து நிற்கும் சின்னஞ் சிறுவன்
பாரதன் ராஜ்ஜியத் தலைவனும் நீயா ?

கண் மூடும் போதும், விழிக்கும் போதும்
கடவுள் உன்னை கண்பதே பணியென
கடமை தன்னை கடவுளாய்ப் புரியும்
கர்மவீரன் கண்களில் கண்ணீர்
காலத்தின் கோலத்தை வரைவது நீயா ?

பெண்களாய்ப் பிறந்த காரணத்தால்
பொன் கேட்கும் உலகின் பேராசையால்
வாழ்வின்றித் தவிக்கும் கன்னியரின்
வதைப்பைப் போக்கும் வகையில்லா
வாழ்வை வகுத்த வள்ளலும் நீயோ ?

உழைத்து, உழைத்து தம்முடலை
உருக்குலைத்த மக்கள் வாழ்வினில்
உயர்ச்சி என்பதே இல்லா நிலமை
உனது உலகம் இதுவோ சொல் ?

நீயில்லை என்பார் வரிசையில்
நானில்லை என்று அறிவாய் இறைவா
ஏனில்லை உலகில் நியாயம் என்றே
ஏக்கம் நெஞ்சில் தோன்றுது அத்னால்
எழுந்தன கேள்விகள் பதிலென்ன சொல்?

http://www.thamilpoonga.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்