இருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்!

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழநம்பி


அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும்

திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண்

டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க

எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது!

ஆரையும் விடவும் ஆரிய அரவை -5

நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய

ஒருதனிப் பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந்

தெருள்தெளி மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது!

மூடுற்ற தமிழினப் பீடு விளக்கிய

ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது! -10

தாய்நிலந் தன்னைத் தமிழ்நா டென்றே

வாய்மகிழ்ந் தழைக்க வைத்தவர் பெயரிது!

ஆட்சியில் கல்வியில் காட்சியில் இசையில்

நீட்சி தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி

நலக்கலை சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச் -15

சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது!

செத்ததை விலக்கிய செந்தமிழ்த் திருமணம்

ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!

பிறப்பிற் பிரிவினை இறக்கங் கூறிய

சிறப்பறு ‘ஆரிய மாயை’ செறுத்தவர்! -20

தமிழர் உணர்வுத் தழல்’தீப் பரவுக’!

இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென

ஆர்த்தவர்; உழைத்தவர்; அதன்வழி

சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே! -24


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி