தருணம்/2

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

சித்தாந்தன்


நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல
என்குரல் கிடக்கிறது

முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை
நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில்
பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்
ஈரலித்தது

உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில்
காதல் ததும்பும் நீர்ச்சுனை உள்ளடங்கியிருக்கிறது
மறுதலிப்பின் உதிர்நாழிகைகளில் வாசிக்கத்தொடங்கியிருந்தாய்
காமம் கிளர்ந்தூரும் வரிகளை

என் குறியிறங்கி தலையணைக்கடியில்
சர்ப்பமாய்ச் சுருண்டது
ஓரிரவில் குறியற்றவனாய் வாழ நேர்ந்தது

சுவர்கள் கடலாய்ப்பிரதிபலித்தன
மீன்கள் கலவி நட்சத்திரங்கள் பிறந்தன
நீ சுவர்க்கடலில் பிணமாய் மிதந்தபடியிருந்த என்சடலத்தை
பிய்த்துத்தின்னும் மீன்களை வருடிக்கொடுத்தாய்
அவற்றின் பற்கள் கிழித்த எனதுடலில் வழியும் குருதி
இன்னொரு கடலாவது தெரியாமல்

அலைகள் ஓய்ந்து கடல் வற்றத்தொடங்கிய பிறகு
அவசரத்தில் எழுந்து தலையணையடிலிருந்து
என்குறியை எடுத்தேன்
மீனாய்த்துள்ளி சுவர்க்கடலில் மூழ்கியது

இன்னும் நீ வாசித்தபடியிருக்கிறாய்
குறியற்றவனின் காமம் கிளர்ந்தூரும் சொற்களை.


siththanthan@gmail.com

Series Navigation

சித்தாந்தன்

சித்தாந்தன்