கருணை வேண்டிக் காத்திருத்தல்

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

சித்தாந்தன்


வலி மிகு இரவுகளை
என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன்
ஆணிகளறையப்பட்ட இதயத்திலிருந்துவழியும்
பச்சை இரத்தத்தின் வெம்மை
காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது

இரவைப்போல படியும் பனிப்புகாரை
விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத
கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது
அச்சத்தின் கருநிழல்

எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
ஒரு பயணியின் கைப்பிடிக்குள்ளிருந்து
வழிகின்றன கனவுகள்
மிதமிஞ்சியதான அகோரத்துடன்
வனங்களின் உட்பாதைகளில் மரணங்கள்
காற்றின் இயல்பாய் நடந்;தேறுகின்றன
கம்பிகள் அடித்திறுக்கப்பட்ட சிறைகளுக்குள்ளிருந்து
உயிர் கருகும் நெடி

கையாலாகாதவனின் கண்ணீர் வீழ்ந்து
சமுத்திரங்களில் மூழ்கிறது தீ
மூடுண்ட நகரத்தின் சாட்சியாய் சுவர்களில்
மோதிச்சிதறுகிறது வெளவால்களின் குரல்

இரட்சிப்பின் வார்த்தைகளில் ஈரமுலர்ந்த பின்னும்
சிறைக்கதவை உதைத்து
முகத்தில் எச்சில் உமிழ்பவனிடமிருந்து
இன்னும்
கருணை வேண்டிக்காத்திருக்கிறது மனசு

10.03.2008 இரவு 11.55

Series Navigation

சித்தாந்தன்

சித்தாந்தன்