என் தடத்தில்…

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


எப்போதும் நான்
உன்பின்னே.


இயங்காத வேளையிலும்
எண்ணமெல்லாம்
நீயாக இருக்கிறாய்

உன்னோடு இருப்பதுதான்
வாழ்க்கை
என்று அர்த்தமாகிவிட்டது

ஓர் உயர்ந்ததை
ஓர் உன்னதத்தை அடைய
உன்துணை தேவைதான்

அதற்காக
இன்னொரு வீடாய்
ஒரு கனவுலகம்கூட தேவையே

எல்லாமே நீதான்
என்றிருப்பது
எனக்கு ஏற்புடையதல்ல

எத்தனை காலத்துக்குச்
சராசரியாயிருந்து
வாய்நீர்வடித்து வாழ்வது

ஒரு கணமாவது
உள்ளத்தின் வலிமைக்கு
வாய்ப்புத்தரவில்லையே நான்

காலத்தின் கையில்
தூரிகையைத் தந்தது
தவறு

யாரோ ஒரு
ஒப்பனைக்காரரிடம்
ஒப்படைத்ததும் அப்படியே

காலம்
என்கையில் தூரிகையாய்
இனி

வண்ணம் தீட்டுவேன்
என்னைத் தீட்டுவேன்

என்
இருத்தலின் அடர்த்தியை
எடைபோட
இப்போதிலிருந்து நான்…

:

எதையும் மறைக்காமல்
சிரிக்கிறேன் நான்

காயும் நான்
கனியும் நான்

உங்களைப்போல் நான்
பிணமாவதில்லை
கனியாகிறேன்

நான் மரத்தில்
செடியில் கொடியில்
கனியாகிறேன்

சொல்வதையெல்லாம்
கனியாய்ச்சொன்னால்
கனிவாய்ச்சொன்னால்
நீங்கள்
கனிகளின் மரமாகலாம்

என் மணம்போல்
உங்கள்
மனத்திற்கும்வேண்டும் மணம்

என்னிடம்
மணத்துடன்கூடிய மனமும்
உங்களிடம்
மனத்துடன்கூடிய மணமும்
இருந்தால்
நாம்தாம் மகத்தானவர்கள்.

எல்லாம்
என் விழித்தலில் இருக்கிறது
தேவதையின் தரிசனம்

என் தேடலெல்லாம்
தேவதையின் தரிசனமல்ல
தேவதைதரும் தரிசனம்

அங்கிருந்துதான்
என் திசைகள் தொடர்கின்றன

அந்த விழுதைப்பற்றித்தான்
தொங்கினேன்;ஆடினேன்

அந்தக்கணத்தில்தான்
தேவதையின்
சிறகுகளைப்பொருத்திக்கொள்கிறேன்

இருளில் ஓர் ஒளி
நெளியிது பாம்பாய்

பகலில் ஓர் இருட்டு
தெரிகிறது வெளிச்சமாய்

கனிகள் என் கைகளில்

எல்லாம்
அந்த ….


03.12.2006

pichinikkaduelango52@gmail.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ