காதலே ஓடிவிடு

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

குரும்பையூர் பொன் சிவராசா


காதலியே உனைக் கைபிடிக்க

என் கையை நீட்டியபடியே

உனை நோக்கி நான் வந்தேன்

ஆனால் உன் கைகளோ

இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது

அன்று செயலிழந்த என் கைகள்

இன்னும் தன் உணர்வுகளை மீளப் பெறவில்லை

காதலியே உனைப் பார்பதற்காய்

என் கால்களின் வலிமையை அதிகமாக்கி

பல மைல் தூரம் ஓடோடி நான் வந்தேன்

நீயோ சொகுசுக் காரொன்றில்

இன்னொருவனுடன் அருகே அமர்ந்திருந்தாய்

அன்று செயலிழந்த என் கால்கள்

இன்னும் ஓர் அடி கூட நகரவில்லை

காதலியே உனை அணைப்பதற்காய்

என் நெஞ்சத்தின் இனிமைகளை அதிகமாக்கி

உன் அருகே விரைவாக நான் வந்தேன்

என்ன கொடுமை இது

உன் நெஞ்சை அணைத்தபடி இன்னொருவன்

அன்று மூடிய என் நெஞ்சத்தின் உணர்வுகள்

இன்னும் உறக்கத்தில் இருந்து எழவேயில்லை

காதலியே உனை மணமுடிப்பதற்காய்

மலர் மாலை சகிதம் மகிழ்ச்சியுடன்

உன் வீடு தேடி நான் வந்தேன்

நீயோ மாற்றான் ஒருவனின் மனைவியாய் இருந்தாய்

அன்று உடைந்த என் இதயம்

எவராலும் பொருத்த முடியா அவல நிலையில்

மீண்டும் ஓர் முறை நான் காதலித்தால்

என் இதயம் அழிந்தே மாய்ந்து விடும்

காதலே ஓடிவிடு! என்னை வாழ விடு!


ponnsivraj@hotmail.com

Series Navigation

குரும்பையூர் பொன் சிவராசா

குரும்பையூர் பொன் சிவராசா