அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்



ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1

காட்சி வடிவம் இங்கே

“அருவி”

உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!

அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!

கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!

வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!

– கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 2

காட்சி வடிவம் இங்கே

“மூப்பு”

இளமை என்னும் பருவம் ஏனோ
எப்போதும் நிலைப்பதில்லை
இளமையாய் இருக்கும்போது – அதை
நாமும் ஏனோ நினைப்பதில்லை

மூப்பு வந்து முதுகை அழுத்த
மூச்சிறைத்து மார்பும் வலிக்க
முட்டாள் மனது ஏக்கத்தோடு
வானைப் பார்த்துக் கலங்குகிறது.

மங்கி மறையும் மாலை ஒளியில்
நெஞ்சும் நடந்த காட்சியெல்லாம்
திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து
காலைவேளைக்குக் காத்து நிற்கிறது

இருள் சூழ இன்னும் எத்தனை கணங்களோ!
இமைகள் மூட இன்னும் எத்தனை நாட்களோ!

பசுமை நிறைந்த காலமும் போய் – இன்று
மொட்டைமரமாய் நான் நிற்கின்றேன்.
எண்ணங்களுக்கோ குறைவேயில்லை – அவை
எல்லா திசைகளிலும் தாவுகின்றன.

நேற்று, இன்று, நாளை என்று – மனம்
எல்லாக் காலத்தையும் நாடுகின்றது.
எங்கெங்கோ சென்றுவிட்டு
கிடைத்ததையே மீண்டும் தேடுகின்றது.

மலர்கள் பூத்துக் குலுங்கிய நாளும்
வண்டாய்ப் பறந்த நேரமும் எங்கே?
அன்புக்காக ஏங்கும் நெஞ்சில்
முட்களே வந்து குத்துகின்றன
சென்ற நாட்களோ திரும்புவதில்லை
உடைந்த இதயம் சேர்வதுமில்லை

உடலும் உலர்ந்து ஓய்ந்து விட்டது – இன்று
உயிரும் பசையின்றிக் காய்ந்து விட்டது
மீண்டும் பசுமை எட்டாக் கனவோ
என்றே உள்ளம் வாடும்போது
‘உண்டு வாழ்க்கை’ என்று யாரோ
காதில் சொல்வது கேட்கிறது – அது
மொட்டாய் முளைத்து வெளியே வந்து
மெல்லச் சிரித்தென்னைப் பார்க்கிறது!

இன்று போனால் போகட்டும், நெஞ்சே!
நாளை என்பது வரத்தான் செய்யும்
இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்.
மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்.

– ஆர்.எஸ். மணி
கேம்ப்ரிட்ஜ், கனடா

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய காட்சிக்கவிதை

காட்சி வடிவம் இங்கே

“பூங்கா”

(திறந்தவெளி)

தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி
திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.

– முத்துலட்சுமி
புது தில்லி

*

முதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை

காட்சி வடிவம் இங்கே

“உயிர் வலிக்க வலிக்க…”

என் வேர்கள்
உயிர்
வலிக்க வலிக்க
பிடுங்கப் பட்டன…

என்
கால்களுக்கு
சிறகு முளைத்த
வீதிக்கரைகள்…

கனவுகளும் உயிரும்
குழைத்துக் குழைத்துச்
செய்த
என் வீட்டுத் தாழ்வாரம்…

நான்
தமிழும் கவிதையும்
கற்ற
பாடசாலை…

வேலியோர வேப்பமரத்து
சிட்டுக் குருவியின்
பாடல்…

வான் பார்க்கும்
சடலங்கள் நடுவில்
எதையோ
தேடுகிறேன்…

இழந்து போன
வாழ்வையா?
மிச்சமிருக்கும்
நம்பிக்கை எச்சத்தையா?

வெறிச்சோடிய
வீதிகளில்
என் மனசு
அழுகிறதே!!!

கொடியவர்களே!
தென்றலுக்கு
ஏன்
தீ வைக்கிறீர்கள்?

இதோ……
…………………
……………….

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…

எனக்குள்
அதிர்கிறது!!!

காற்றுக் கூட
உன்னை
சுட்டு விரல் நீட்டி
தொட்டதில்லை…

உன்
பனித்துளி முகத்தில்
இன்னும் காயாத
ஈரம்…

என்
உயிர் நனைக்கிறதடா!!!

வரண்ட சஹாராக்களுக்கு
பூவில் ஈரம்
புரியாது!!!

என்
தாய் பூமியே
சென்று வருகிறேன்…

விடை கொடு…
என்றைக்குமாய்

முன்னொரு வயதில்
கிளிஞ்சலும்…
பின்னொரு வயதில்
காதலும்…
பொறுக்கிய
கடற்கரை!!!

உயிரில்
ஓரிடம்
ஊசியாய் வலிக்கிறது!!!

உன்
ஞாபகத்தூறலோடு
நடக்கிறேன்…

நான்
இன்னும்
நீண்ட தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது!!!

– சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா
மாவனல்லை, இலங்கை

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு – நடுவர் இசைக்கவி ரமணன்

வெற்றியாளர்கள்: எஸ். சங்கரநாராயணன், சிறில் அலெக்ஸ், சுவாமிநாதன், கே.எம். அமீர்

*

முதல் பரிசுக்குரிய இசைக்கவிதை

ஒலிவடிவம் இங்கே

“நிசப்தம்”

நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்
உள்ளும் வெளியும் உலகம் நிசப்தம்
முன்னும் பின்னும் எல்லாம் நிசப்தம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

சலனமில்லாமல் அசைவு எதுவுமின்றி
காற்றது மோனம் கொள்ளும்
கனவெளி மோனம் கொள்ளும்
நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்

அலைகளும் உறங்கும்
ஆகாயம் உறங்கும்
மலர்களும் தியானம் செய்யும்
மனிதரும் தியானம் செய்யும்
நிசப்தம் நிசப்தம் சர்வம் நிசப்தம்

பூதகணங்கள் கைகட்டும்
துன்பம் வாய்பொத்தும்
அன்னை சந்நிதி முன்னிலையில்
அண்டசராசரம் அமைதியினில்
நிசப்தம் நிசப்தம் ஏகம் நிசப்தம்

காலமும் ஒடுங்கும்
கவலையும் பதுங்கும்
பாவமும் விலகிக் கொள்ளும்
பரவசம் தழுவிக் கொள்ளும்
நிசப்தம் நிசப்தம் யோகம் நிசப்தம்

நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்
உள்ளும் வெளியும் உலகம் நிசப்தம்
முன்னும் பின்னும் எல்லாம் நிசப்தம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பங்கேற்பு, கவிதை: எஸ். சங்கரநாராயணன், சென்னை
இசை, குரல்: லஹரி

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய இசைக்கவிதை

ஒலிவடிவம் இங்கே

“பூவானது”

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே

மலை தரும் பாடங்கள் என்ன
மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம்
பூவானது

0

துள்ளித் துள்ளி முயல்களும்
சந்தோஷம் கொள்ளுதே
அள்ளி அள்ளி வாழ்க்கையைக்
கொண்டாடச் சொல்லுதே

கள்ளிச்செடி வெட்டினால்
கண்ணீரைச் சிந்துதே
வன்முறைகள் தேவையில்லை
சொல்லாமல் சொல்லுதே

வானத்தில் ஏறிவரும்
மேகங்களும்
யாருக்கும் தடையின்றி
மழை பொழியும்

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம்
பூவானது

பங்கேற்பு, கவிதை, இசை, குரல், அனைத்தும்:
சிறில் அலெக்ஸ், சிகாகோ

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய இசைக்கவிதை 1

ஒலிவடிவம் இங்கே

“கவிதை கேட்க வாரும்”

(பூபாளம்)

எழுந்தோடி வாரும்
என் கவிதையைக் கேட்க வாரும்

புல்லின் மேல் துஞ்சும் பனி போலவும்
புதுமலர் வாசம் போலவும்
துள்ளும் கடலலை போலும்
துவளும் கொடி போலும் தோன்றும்

(என் கவிதை கேட்க வாரும்…)

(ஆரபி)

செவியில் தேனாய் ஒலிக்கும்
புவியில் ஆறாய்ப் பாயும்
கேட்டவர் மகிழ்ந்து கண்மூடி
மயங்க வைக்கும்

(என் கவிதை கேட்க வாரும்…)

(சிந்து பைரவி)

சிந்தனைக்கு விருந்து தரும்
சிறப்பான பொருள் தரும்
நடையில் நடனம் மிளிரும்
நாதத்தில் தேனாய் ஒலிக்கும்
கடவுள் பெருமை பேசும்
காலமெல்லாம் வாழும்

(என் கவிதை கேட்க வாரும்…)

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ்
இசை, குரல்: கல்யாணி சதாசிவன்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய இசைக்கவிதை 2

ஒலிவடிவம் இங்கே

“வான் பூவே வா”

வான் பூவே, வா, ஒரு வெண் பூமி தா !
தீத் தூறல்கள் இனி வேண்டாமே, வா !

நீ நான் எனவே, பிரிந்து ஏன் வீண் மயக்கம் ?
ஓர் நாள் உலகம், பகைமைத் தீயை அணைக்கும் !
வா, சேர்ந்து நடப்போம், இதயம் தேன் ஊறித் ததும்பும் !
நாம் கைகள் பிணைத்தால், வழியில் பூப் பாதை விரியும் !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

ஏன் பிறந்தோம் புவி மீதிலே ?
எவர் அறிவார் இதன் ரகசியமே ?
வீண் பிறவி எனப் போவதா ?
புது உலகம் அதைத் திறந்திடுவோம் !
ஓர் குடை அடியினில் சேரலாம் !
நாடலாம், முழு ஒற்றுமை !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

போர்முனையில், தினம் தேய்பிறை !
முழுநிலவு, இனி மலர்ந்திடுமா ?
யார் முதல்வன் எனும் தேடலில்,
மனிதனையே, அட, மறந்துவிட்டோம் !
போதுமே, எதிரொலிச் சண்டைகள் !
தேடுவோம், புது நட்புகள் !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

பங்கேற்பு, இசை: கே.எம். அமீர், சென்னை
குரல்: இர்பானுல்லா
கவிதை: நாக. சொக்கன்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


நடுவர்கள்:
ஆசிப் மீரான், துபாய்; யெஸ். பாலபாரதி, சென்னை; மற்றும் இன்னொருவர்

படக்கவிதை – பார்க்கச்சுவை – கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது

*

முதல் பரிசுக்குரிய படக்கவிதை

“ஒரு மனைவியின் விடைபெறல்”

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை…
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்

எவ்வளவு முயன்றும் – உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து…!

– மேரித் தங்கம்
சென்னை

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய படக்கவிதை

“குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்”

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?

பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம்

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை

– சோ. சுப்புராஜ்
துபாய்

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

“தொட்டுவிடு”

பூமி
எத்தனை முறை
மரண தண்டனை வழங்கினாலும்
அழியாமல் இருக்கும்
மனித விதையை யார் போட்டது

அவன்
தொட்டுத்தொட்டுத் தொடங்கிய
தொடர் ஓட்டத்தை யார் தொடங்கியது

தொடுவதுதான் வேற்றுமையை
விடுவதின் தொடக்கம் என்பதால்
தொடுவோம்

தவறுகளை
சுட்டிக்காட்டுவதற்குத்தான்
விரல்கள் என்று யார் சொன்னது
உறவுகளை ஒட்டிப் பார்ப்பதற்கும்
தொடுவதுதானே தொடக்கம்

தீண்டாமையைக் கொளுத்தும்
தீக்குச்சிகளாய் விரல்கள் மாறட்டும்
ஏனென்றால்
தொடுவது இருக்கும் வரைதான்
இந்த மண்ணில்
மனித நேயம் இருக்கும் – அதனால்
தொடுவோம்!

– மு. பாண்டியன்
நெய்வேலி

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

வறண்ட மார்புடன்
வானம் பார்த்த பூமி
ஏங்கிக்கிடக்கிறது
பானையிலிருந்து சிந்தும்
ஒரு துளி நீருக்கு!

– கே.வி. உஷா
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை

ஒலிக்கவிதை – கேட்கச்சுவை – கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.

*

முதல் பரிசுக்குரிய கவிதை

“இருட்டிலே ஒரு மெழுகுவத்தி”

நெருப்பே
நீ மெழுகுவத்தியைத்
தின்றபோது தான்
இருள் இங்கே விலகியது

ஆனால் நீ
வெடிகுண்டாய் வந்தபோது
வெளிச்சம் கூட வெட்கப்பட்டது

நெருப்பை நெருப்பால்
அணைத்தபோது தான்
இருள் கதவு
இங்கே விலகியது

வெளிச்சம் தரும்
சூரியன் கூட
அண்டவெளியில்
இருட்டில் தானே கிடக்கிறது

இருட்டைப் போக்கும்
எத்தனையோ மெழுகுவத்திகள்
வெளிச்சத்தைப் பார்த்ததேயில்லை

ஒரு மெழுகுவத்தி
மகாத்மாவாக மாறியபோது தான்
உலகம் அகிம்சையைப் புரிந்துகொண்டது

ஒரு மெழுகுவத்தி
ரோஜாவாக மாறியபோது தான்
விடுதலைப் பத்திரம் இங்கே எழுதப்பட்டது

வெளிச்சத்தை நாங்கள்
விலைகொடுத்து
வாங்கும்போதெல்லாம்
கதவுக்கு வெளியே
இருள் தானே காத்திருக்கிறது

வெளிச்சம் வீட்டுக்குள் வருமென
அறிவுக் கதவுகளைத் திறந்தால்
மதக்கொடிகளுக்குக் கீழே
இருள் தானே ஊர்வலம் வருகிறது

இங்கே பள்ளத்தில் விழுவதற்கு
ஏணிகள் செய்கிறார்கள்
விழுவதைக் கூட
பறப்பதாய்ச் சொல்கிறார்கள்

இன்பம் அங்கே இருக்குமென்றால்
இரவும் பகல் தான்

இருட்டிலே ஒரு மெழுகுவத்தி
இருந்துவிட்டுப் போகட்டும்

ஆனால்
மனிதநேயம்
மரணப் படுக்கையில் இருக்கும்போது
வெளிச்சத்தைப் பார்க்கவே
எங்களுக்கு விளக்கு வேண்டும்

– மு. பாண்டியன்
நெய்வேலி

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய கவிதை

“உன்னை நினைக்கையிலே”

உன்னை நினைக்கையிலே
உல்லாசத் துள்ளலில்
முன்நிற்கும் நெஞ்சத்தை
எந்த முகப்படாமிட்டு
மறைப்பதென்று தவிக்கையிலே
மலையாக உன் நினைவே
முன்னின்று எதிர்கொள்ளும்.

முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச்சுற்றியே
நினைவு.

வழிப்பாதை இடைஇடையே
பொதி சுமக்கும் கழுதையின்
முரண்டாய் பிடிவாத நினவுகள்,
ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.
ஒப்பனைக்குப் பின்னும்,
என் கண்ணில்
உன் முகமே தெரிவதாக
தோழி சொல்கிறாள்.

உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?
ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்.

நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.

– ஷைலஜா
பெங்களூர்

*

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1

“பிடிமானம்…”

உளியாய் வந்தாய்
உருகும் உள்ளமறிந்து
சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்

காற்றாய் வந்தாய்
காதலில் கசிந்துருகி
எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்

வண்ணமயமாய் தீட்டினாய்
வீணே கிடந்த சீலையையெடுத்து
வானமளக்கச் செய்தாய்
விரியும் சிறகுகள் விரித்து

அன்பளித்து அன்பளித்து
அன்பின் ஊற்றாக வந்தாய்
அண்டத்தின் சிகரம் காண
அழைத்துச் சென்றாய்

பாரையே புதுப் பார்வையால்
காணவைத்த நீ
பார்வையிழக்கச் செய்து
கண்காணா தொலைவில் மறைந்தபடி
போர் தொடுக்கிறாய்

மீட்சியின்றித் தவித்தாலும்
வாழ்கிறேன்
வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு…

– மதுமிதா
சென்னை

*

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2

“அன்புடன் அபலை”

நான் பலமுறை
விற்றிருக்கிறேன்
உடலை

யாசிக்கின்றேன்
அன்பை
யோசிக்கிறார்கள்

அந்தியில்
கடை விரிக்கும் போது
சந்தியில்
முகம் பார்த்தழைக்கும்
ஆடவரும்

பணப்பந்திக்கு
முந்தி வந்து
கையேந்தும் பெண்டிரும்
யோசிக்கிறார்கள்

ஆண்களுக்குத் தேவை
உடல்
பிற
பெண்களுக்குத் தேவை
பணம்
எனக்குத் தேவை
மனம்

கற்பை
கரையும் வியர்வையில்
கரைத்தவர்களும்
பகலிலும் இரவிலும்
கனவில் கூடிக்கூடிக்
களித்துக் களைத்தவர்களும்

என்னைக் கற்பிழந்தவள்
என்கிறார்கள்.

அமாவாசை
இருளில்
சிறகு விரிக்கும்
மின்மினியின்
ஒளி போல
நெஞ்சத்தில்
புதைந்து கொண்ட
சின்னச் சின்ன
ஆசைகள்

அஸ்திவாரத்தோடு
நின்றுபோன கட்டிடங்கள்
போல
அனாதரவாய்
மன ஊஞ்சலில்…

தோள் கொடுக்க
வாரீரோ
என அழைத்தால்
படுக்கைப் பந்தியென
கடுகவே விரைகிறார்கள்…

சித்திரத்துத்
தாமரை போல்
நான் கொள்ளும்
பொய்ச்சிரிப்பும்

மங்கலமாய்
சிவந்து நிற்கும்
அந்தி வானமாய்
என் பெண்மையின்
பொய் நாணமும்..

ஆடித்தள்ளுபடிக்கு
மக்களை ஈர்ப்பது போல்
ஈர்க்கிறது.

குத்து விளக்காய்
குளிர்ந்து நிற்கும்
என் மன அழகு
உண்மை..

திருமண அழகு
தேடும்
பலாச்சுளை போன்ற
என் இனிய பெண்மை
உண்மை..

செயற்கையைச்
சந்தையில்
வைத்து
வயிறு கழுவும் நான்
சிந்தையில் வைத்த
உண்மையைச்
சந்தைப்படுத்த இயலாது.

சந்தைக்கு வாராத
பொருட்கள்
விலை போகாது

விலை போகாத
பொற்சிலை நான்..

தூசு ஏறி
மதிப்பிழந்து

தூசைத் துடைப்பவன்
பாக்கியவான்
மரபை உடைப்பவன்
பாக்கியவான்.

ஈரேழு
சென்மமாயினும்
அவனுக்காகக் காத்திருப்பேன்

காத்திருக்கும் காலம்
கற்பிழந்த சமுதாயத்தைப்
புறந்தள்ளி
இல்லற வேள்வியில்
எனை
ஆகுதியாய் இட்டிட
என்னைச் செப்பனிடுவேன்…

உடற்பசியைத்
தணித்திட்ட நான்
என் பசித்தீயில்
எரிய நேரிடினும்
மகிழ்வாக மடிவேன்

மடிந்த பின்னாவது
மடி கிடைக்குமா? ஆதரவாக
காலச் சக்கரம்
போல் என் ஆசைகளும்
சுழலும்….

ஆசைகளோடு,
அபலை.

– V. லஷ்மணக்குமார்
மதுரை

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

கவிதைகள் ஒலி வடிவ இணைப்புகள்
மெழுகுவர்த்தி
உன்னை நினைக்கையில்
பிடிமானம்
அன்புடன் அபலை

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

கவிஞர் புகாரி


அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது…. மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும் நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா, பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார், எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார் என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.

http://groups.google.com/group/anbudan

அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம். அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 758 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள், 66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது. தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன. எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன. அன்புடன் சுடரோட்டம் – ஆளுனர் அன்பர் முபாரக் – நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் தித்திப்பு யுத்தம் – நடுவர் அன்பர் ஆனந்த குமார் – நடந்து முடிந்துவிட்டது. அன்புடன் பட்டிமன்றம் – நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் – நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் கவிதைப் போட்டிகள் – இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார். துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும் மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி சேதுக்கரசி செய்து வருகிறார்.

போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக நடுவர்கள் யார் யார் என்று அறிவிக்க வேண்டாமா?

கவிதைப் போட்டிகளை ஐந்து வகையாகப் பிரித்துப் போட்டி வைத்தோம்.

1. இயல்கவிதை – வாசிக்கச்சுவை – கவிதையை யுனித்தமிழில் தட்டச்சு செய்து தரவேண்டும்.
2. படக்கவிதை – பார்க்கச்சுவை – கவிதையை கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எழுதித் தரவேண்டும்
3. ஒலிக்கவிதை – கேட்கச்சுவை – கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்
4. இசைக்கவிதை – பாடச்சுவை – கவிதையை பாடிப் பதிவு செய்து தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை – இயக்கச்சுவை – கவிதையை இயங்கும் காட்சி இணைப்போடு பதிவு செய்து தரவேண்டும்

எதிர்பார்த்ததைவிட கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்து குவிந்துவிட்டன. படைப்பாளிகளிடமிருந்து சில சந்தேகங்களும் எழுந்தன. அவற்றுள் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு நான் இவ்வேளையில் பதில் தர விரும்புகிறேன். ஏன் மரபுக் கவிதைகளுக்கு என்று ஒரு பிரிவு ஏற்படுத்தவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.

கவிதை என்றால் எனக்கு அனைத்து வகைகளும் ஒன்றுதான். கவிதைக்குள் கவிதை இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கும் கவிஞன் நான். கவிஞனிடமிருந்து கவிதையாய் மலர்ந்திருக்கும் கவிதை, களையாகிக் போன கவிதை முயற்சி என்ற இரு பிரிவுகள் மட்டுமே எனக்குக் கவிதைகளில் உண்டு. இந்த இரண்டுமே எனக்கு நிகழ்ந்தும் இருக்கிறது 🙂 மற்றபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை, பின் நவீனத்துவகவிதை என்றெல்லாம் நான் பிரித்து போட்டி வைக்க வில்லை.
மேலும் மரபுக்கவிதைக்குள் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா, சிந்து என்றெல்லாம் பல பிரிவுகள் பிரித்து போட்டி வைக்க விரும்புவதும் இல்லை.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு வெண்பாவை எழுதி ஒரு படத்திற்குக் கவிதையாய் அனுப்பியிருக்கலாம். இன்னொருவர் ஒரு ஹைக்கூ கவிதையை வீடியோ காட்சி
அமைத்து காட்சிக் கவிதைக்கு அனுப்பியிருக்கலாம். எல்லாமும் சமமாகவே கருதி நன்றாக வந்திருக்கும் கவிதையைப் பரிசுக்குரியதாய் நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “காற்றுவெளியிடைக் கண்ணம்மா” என்ற கவிதையை பாரதி யுனித்தமிழில் தட்டச்சு செய்து மட்டும் அனுப்பி இருந்தாரானால் அது இயல் கவிதை பிரிவில் வெற்றி பெற்றிருக்கும். அதே கவிதையை தன் சொந்தக் குரலில் வாசித்து பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது ஒலிக்கவிதை பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அவர் ராகத்துடன் பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது இசைக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அன்புடன் அனுப்பிய பத்தாவது படமான கடற்கரையில் நிற்கும் காதல் ஜோடிக்கு அனுப்பி இருந்தாரானால் அது படக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை ஜெமினி கணேசனையும் சாவித்திரியையும் வைத்து காட்சிப் படமாக்கி அனுப்பி இருந்தாரானால் அது காட்சிக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அவ்வளவுதான். ஆனால் எழுதியது பாரதியார் என்று மட்டும் நடுவர்களுக்குத் தெரியவே தெரியாது 🙂 பாரதியார் மீசையை முறுக்கிக்கொண்டு வந்து பரிசு வாங்கும்போது மட்டுமே நடுவர்களுக்குத் தெரியவரும் 🙂

இதேபோல இந்த ஐவகைப் பிரிவுகளிலும் எவரும் மரபோ, புதுசோ, ஹைக்கூவோ, நவீனமோ, பின்நவீனமோ எழுதி இருக்கலாம். அன்புடன் அனைத்துக் கவிதைகளையும் அணைக்கும் அன்புடன்தான் இந்தப் போட்டிகளை அறிவித்தது. போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிவைத்த கவிஞர்கள் யார் யார் என்று எந்த நடுவருக்கும் தெரியாது. நடுவர்கள் யார் யார் என்று எவருக்குமே தெரியாது. அதைத் தெரிந்த மூவர்:

1. ஆண்டுவிழாத் தலைவர் ப்ரியன் என்கிற விக்கி
2. அன்புடனின் தொடர் சேவைக்கரசி சேதுக்கரசி
3. நான் (உங்கள் அன்புடன் புகாரி)

இப்போதும் நான் உங்களுக்கு இயல் கவிதைப் பிரிவின் நடுவர் மாலனை மட்டுமே அறியத் தந்திருக்கிறேன். அடுத்தடுத்த கவிதைப் பிரிவின் பரிசுக்கவிதைகளின் அறிவிப்பின் போதுதான் அந்தந்த நடுவர்களையும் முறையாக நாங்கள் உங்களுக்கு அறியத் தருவோம். படைப்பு மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம். ஆயினும் நாங்கள் தேர்வு செய்த அத்தனை நடுவர்களும் கவிஞர்களின் பெயர்களைத் தந்திருந்தாலும்கூட நடுநிலையாகவே தேர்வு செய்திருப்பார்கள்.

கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்திருந்ததால் நடுவர் குழுவையும் அதற்கேற்றவாறு பல நடுவர்களாக நியமிப்பதே சரி என்று பட்டது. எழுத்தாளர் “திசைகள்” மாலனை நடுவராய் இருக்க அழைத்தோம். தன் பணிச்சுமைகளுக்கு இடையே அவர் அன்புடன் இயைந்தார். மாலனை அறியாதோர் இணையத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் புதியவர்களுக்காக மாலனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

மாலன் ஒரு கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமரிசகர், கணிஞர் என்று பலமுகங்கள் கொண்டவர். நீண்டகாலம் இலக்கியம் மற்றும் அரசியல் அனுபவங்களை அழுத்தமாகப் பெற்றவர். இணையத்தில் அதிகம் எழுதும் முக்கிய எழுத்தாளர். முதன் முதலாக யுனித்தமிழில் வந்த இணைய சஞ்சிகையான திசைகளின் ஆசிரியர். மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி ஆகியவற்றின் திட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவரிடம் இயல்கவிதைப் பிரிவினைக் கொடுத்தோம். எண்ணிக்கையில் அவை மிக அதிகமாக இருந்தும் எங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்று இவர் மட்டுமே தனித்த நடுவராக இருந்து இயல் கவிதைப் பிரிவின் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். எனவே அன்புடன் முதலில் அறிவிக்கப்போகும் வெற்றிக் கவிஞர்கள் இயல்கவிதைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

பரிசு பெற்ற கவிதைகள் தனியாக்வும், நடுவரின் தேர்வுரை தனியாகவும் வருகிறது. அவற்றையும் திண்ணையில் காணலாம்.

அன்புடன் புகாரி

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி

அன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

மாலன்


கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள்.

தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தார்கள், வந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். உலக அனுபவம் வாய்ந்தவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்கள்.சமணர்கள் ஆதலால் பிற உயிர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்கள். நல்ல தமிழறிவும் கொண்டவர்களாக அவர்கள் விளங்கினார்கள்.

பாண்டியனுக்கு அவர்கள் தனது நாட்டை நாடி வந்தது குறித்து மகிழ்ச்சி. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை நன்றாகவே பேணி வந்தான். அவர்களைத் தனக்கு ஆலோசனை சொல்ல அரசவையிலேயே வைத்துக் கொண்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் நாட்டில் பஞ்சம் தீர்ந்து விட்டதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. மீண்டும் தங்கள் நாட்டிற்கே திரும்பி விட விரும்பினார்கள். எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா?

மன்னனிடம் போய் தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள். பாண்டியனுக்கு அந்தச் சான்றோர்களைப் பிரிய மனம் இல்லை. இங்கேயே இருந்து விடுங்கள், உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் செய்து தரச் சொல்கிறேன் என்று உறுதியளித்தான். ஆனால் துறவிகளுக்குப் பெரிதாக என்ன தேவை இருந்துவிடப் போகிறது? அவர்கள் சொந்த ஊருக்கே திரும்பத் துடித்தார்கள்.

ஓரிரவு, அரசனிடம் சொல்லிக் கொண்டு போவதெல்லாம் இனி நடக்காது என்று தீர்மானித்த அவர்கள், இரவோடு இரவாகப் பாண்டிய நாட்டு எல்லையைக் கடந்து போய்விட முடிவு செய்து கிளம்பினார்கள். ஆனால் இடர் வந்தபோது, இத்தனை நாள் தங்களைப் பரிவோடும், மரியாதையோடும் நடத்திய மன்னனது அன்பையும் மறக்க முடியவில்லை. அதனால் அவனுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணினார்கள். அரசனுக்குக் கொடுப்பதற்குத் துறவிகளிடம் என்ன இருக்கும்? அவர்களிடம் தமிழ் இருந்தது. எனவே ஆளுக்கு ஒரு கவிதை எழுதி அதைப் பாண்டியனுக்குப் பரிசாகக் கொடுத்துவிடத் தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலை அவர்கள் ஊரை விட்டுப் போய்விட்ட தகவல் மன்னனுக்குக் கிட்டியது. அத்தோடு அவர்கள் பரிசாக வைத்து விட்டுப் போயிருந்த எண்ணாயிரம் கவிதைகளும் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டன. அவனுக்கோ கடும் சினம். ‘நாம் அவ்வளவு சொல்லியும் அவர்கள் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புறப்பட்டுப் போய்விட்டார்களே, இது நம்மை அவமதிக்கிற செயல் அல்லவா?’ என அவன் மனம் புகைந்தான். ‘யாருக்கு வேண்டும் அவர்களது பரிசு. கொண்டு போய் அதை ஆற்றிலே போடுங்கள்’ என உத்தரவிட்டான்.

அந்த எண்ணாயிரம் கவிதைகளும் வைகையில் வீசியெறியப்பட்டன. ஆனால் என்ன ஆச்சரியம், அவற்றில் நானுறு கவிதைகள் ஆற்றின் வெள்ளத்தை எதிர்த்துக் கரை நோக்கி நீந்தத் துவங்கின. ‘அப்படியொரு சக்தியா அந்தக் கவிதைகளுக்கு? அப்படியானால் அவற்றில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்’ என எண்ணிய அரசன் அவற்றை சேகரித்துத் தொகுத்தான்.

அந்த நூல்தான் நாலடியார்.

இந்தக் கதையை – கதை என்றுதான் சொல்ல வேண்டும், வரலாறு என்று ஏற்க ஆதாரங்கள் இல்லை- என் பள்ளி நாட்களில், தமிழ் வகுப்பில் கேட்ட போது, நான் ஆசிரியரைக் கேட்டேன்: “அந்த நானூறு கவிதைகள் அற்புதமானவை, எதிர்த்துக் கரையேறின என்றால், மீதமுள்ள, ஆற்றோடு அடித்துக் கொண்டு செல்லப்பட்ட, ஏழாயிரத்து அறுநூறு கவிதைகளும் பொக்கைக் கவிதைகள் என்றல்லவா ஆகிறது?” “உட்காருடா அதிகப் பிரசங்கி” என்று ஆசிரியர் என்னை அடக்கிவிட்டார்.

பின்னாளில் வளர்ந்து இலக்கிய வாசிப்பும் ஏற்பட்ட பிறகு புரிந்தது, கவிதை மட்டுமல்ல, எந்த இலக்கியமும், ஏன் எந்த மனித முயற்சியுமே, கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடாமல் இருக்க வேண்டுமானல், அது காத்திரமானதாக இருக்க வேண்டும்.

காத்திரமான கவிதை எப்படி இருக்கும்?

நல்ல இலக்கியத்தின் அடையாளங்களில் ஒன்று நினைவில் தங்கிவிடுவது. திருப்பதிக்குப் போனார் ஒருவர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து கடவுளைப் பார்த்து விட்டு வெளியே வந்தார். நல்ல பசி. ஒரு புளியோதரைப் பொட்டலம் வாங்கிக் கொண்டார். பஸ் வந்ததால் அதில் ஏறிக் கீழே வந்து விட்டார். கீழே வந்து பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே சோற்றோடு ஒரு எறும்பு. ஒரு நிமிடம் திகைத்துப் போனார்: இந்த மலையில் ஒரு படியாகக் கிடவேனா? தூணாக நில்லேனா? புல்லாக இருக்கமாட்டேனா? ‘எம் பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆகேனோ’ என்று ஒருவர் உருகி உருகிப் பாடினாரே அவர்தான் இந்த எறும்பாகப் பிறந்திருப்பாரோ, அவரைத்தான் நான் கீழே எடுத்து வந்து விட்டேனோ, என்ன பாவம் செய்துவிட்டேன் எனப் பதறிப் போய் அப்படியே அந்தச் சோற்றுப் பொட்டலத்தை மறுபடியும் மலையேறிப் போய் அங்கேயே போட்டுவிட்டு வந்தார் என ஒருவரைப் பற்றி பேராசிரியர் தொ.பரமசிவம் ஒருமுறை சொன்னார். பசி நேரத்திலும் கட்டெறும்பைப் பார்த்த போது அவருக்குக் குலசேகர ஆழ்வாரது பாட்டு ஞாபகம் வந்தது. அதன் பின் எறும்பைச் சாதாரண எறும்பாக எண்ண முடியவில்லை. நல்ல இலக்கியம் இப்படியெல்லாம் இம்சிக்கும்.

உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் நீங்கள் உங்கள் மனதில் தங்கிவிட்ட கவிதையைத்தான் சொல்லுவீர்கள். அது சினிமாப் பாடலாகக் கூட இருக்கலாம்.

ஏன் நாம் படிக்கும் பல கவிதைகளில் கேட்கும் பாடல்களில் ஒருசில மட்டும் நம் மனதில் தங்கி விடுகிறது? ஆழ்ந்து அலசிப் பார்த்தால் அதனுள் நாம் வாழ்க்கை அனுபவம் சிறிதளவேனும் படிந்து கிடக்கும். நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய ஏமாற்றம், நம்மமுடைய கோபம், நம்முடைய காதல், நம்முடைய அழகுணர்வு, நம்முடைய பக்தி, இப்படி ஏதேனும் ஓர் உணர்வு அதனுள்ளே புதைந்து கிடக்கும். நீங்கள் சொல்ல விரும்பிய ஒன்றை, நீங்கள் விரும்பியமாதிரியே அல்லது நீங்கள் நினைத்தைவிட சிறப்பாகக் கவிஞர் சொல்லியிருப்பார்.

இன்னும் கொஞ்சம் பார்த்தால் உங்களுடையதைப் போலத் தோன்றுகிற அந்த வரி, உண்மையில் அவரவர் மனதிற்குத் தோன்றுவதைப் போல எல்லோரும் நினைத்துக் கொள்ள இடம் தரும் ஒரு பொதுத் தன்மையைக் கொண்டிருக்கும். தனி ஒருவரது அனுபவம் உலகப் பொது அனுபவமாக மாறுகிற ரசாயனத்தால்தான் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை; நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை” இது காதல் தோல்விக்கு மட்டும்தானா பொருந்தும்? ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பெருமிதம், இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை என்ற கழிவிரக்கம் இரண்டையுமே வெவ்வேறு தருணங்களில் அடைந்திருக்கிறோம்.

கடிகாரம் ஓடுமுன் ஓடு! — என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது — கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது

என்று பாரதிதாசன் போல நாமும் பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் நம் குழந்தையைக் கெஞ்சியும் நயந்தும் கடிந்தும் கொண்டிருக்கிறோமே!

நம் மனதில் தங்கிய கவிதைகள் அல்லது நல்ல கவிதைகளின் லட்சணங்களில் ஒன்று அது எளிமையாக இருக்கும். எளிமையாக இருப்பது எளிதல்ல. எளிமையாக இருப்பது பல நேரங்களில் வலிமையானதாகவும் இருக்கும். தண்ணீரைப் போல எளிமையானது வேறொன்றில்லை. ஒரு சிறு குழந்தைகூட அதைக் கையில் ஏந்தி விட முடியும். தண்ணீரைப் போல வலிமையானதும் வேறொன்றில்லை. அது மலைகளையும் பெயர்த்தெடுத்து இழுத்து வரும், என்கிறது சென் பெளத்தம். மகாத்மா காந்தியின் ஆங்கிலமும் பாரதியின் தமிழும் எளிமையானவை. அவை ஒரு சாம்ராஜ்யத்தையே புரட்டிப் போடக் கூடிய வல்லமை கொண்டிருந்தன. எளிமை எங்கிருந்து அதன் பலத்தைப் பெறுகிறது? எளிய சொற்கள் எவருக்கும் புரியும். அதனால் அது மனதில் தங்கிவிடுகின்றது. ‘ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ – இது 2000 வருடத்திற்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ். இதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்று ஐந்தாம் வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூடப் புரியும்.

எனவே நல்ல கவிதை என்பது, நம் அனுபவத்தைச் சொல்லும் (somewhere personal), எல்லோருக்கும் பொருந்தும் (somewhat universal) எளிமையாகவும் ஆனால் அழுத்தமாகவும் (simple yet strong) இருக்கும்.

இப்படி ஒரு நல்ல கவிதையை, இந்தக் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் என அன்புடன் நண்பர்கள் புகாரி, சேதுக்கரசி, விக்கி ஆகியோர் கேட்டபோது சற்றுத் தயக்கமாகவும், மலைப்பாகவும் இருந்தது. படைப்பு என்பதன் மகத்துவமே அதன் பன்முகத் தன்மைதான். ஒரே மாதிரியான பூ ஒரு செடியிலேயே கூடக் கிடையாது. ஒரு செடியில், ஒரு பருவத்தில் பூக்கும் பூக்களே, ஒன்றுபோல இருப்பதில்லை. எனவே படைப்பில் உயர்வு தாழ்வு, சிறந்தது, குறைந்தது, எனக் கிடையாது. பிடித்தது, மனதைத் தொடாமல் போனது என்ற வகைகள்தான் உண்டு. ஒன்று நமக்குப் பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் நம்முடைய நம்பிக்கைகள், வாழ்க்கை அனுபவம், ரசனை, பார்வை, வாசிப்பனுபவம் எனப் பல காரணங்கள். நீரளவே ஆகுமாம் நீராம்பல்.

அன்புடன் தமிழ்க் கவிதைக்குக் கொடுத்துவரும் ஊக்கம் பாராட்டிற்குரியது. புதுக்கவிதை இயக்கத்தின் விளைவாகத் தமிழ்க் கவியுலகம் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஊருக்கு நடுவே ஒரு குளம் என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு வீட்டுக் குழாயிலும் ஒரு வாளித் தண்ணீர் என்னும் ஜனநாயகம். வரவேற்கப்பட வேண்டியதான். ஆனால் தமிழ்க் கவிஞர்களின் எண்ணிக்கை வளர்ந்திருக்கிற அளவு, தமிழ்க் கவிதை வளர்ந்திருக்கிறதா என்ற கேள்வி தமிழ் மீது அக்கறை கொண்ட மனங்களில் இருந்து வருகிறது. பாரதி போன்ற ஒரு பெரும் ஆளுமையை தரிசித்தவர்களிடம் இந்தக் கேள்வி உக்கிரம் பெறுகிறது. ”பாரதிக்குப் பின் பிறந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார் ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம் நாரதனே” என்ற புதுமைப்பித்தன் குரலில் ஆத்திரத்தை விட ஆதங்கம்தான் அதிகம் தெரிவதாக நான் கருதுகிறேன். ஆனால் பாரதி எதிர்காலக் கவிஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தான். தனக்குப் பின்னே பிறந்து காவியம் செய்யவிருக்கிற வரகவிகளுக்குத் தன் பாஞ்சாலி சபதத்தை சமர்ப்பித்திருப்பதே சான்று. பாரதியைப் போலவே அன்புடனும் கவிஞர்கள் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருப்பது அதன் ஆக்கபூர்வமான (positive) மனோபாவத்தைக் காட்டுகிறது. தன் சமகாலத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்த்துகளுக்குரியவர்கள்.

அன்புடன் கொடுத்த இந்த வாசிப்பனுபவம் பல சிந்தனனைகளைத் தந்தது. சிலரின் கவிதை வரிகள் எண்ணங்களைக் கிளறின.

பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும்சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை

எத்தனை வயதானாலும், (பயணிக்கும் அவசரத்தில் இல்லாத நாட்களில்) நம்மைக் குழந்தைகளாக்கிவிடும் மாயம் திறந்த வெளியில் விரையும் இரயில் வண்டிகளுக்கு உண்டு. அந்த அதிசயத்தை மட்டும் சொல்ல வரவில்லை கவிதை. அலுப்பும் எரிச்சலும் ஊட்டும் வாழ்க்கைக்கு நடுவில் நம்மை ரசனைகளுக்கு இட்டுச் செல்லும் தருணங்களை ஒரு புகைப்படம் போலக் கவிஞர் பதிவு செய்கிறார். நல்ல snap shot. ஆனால் அந்தத் தொழில் நுட்பம் மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை என அலுத்துக் கொள்ளும் கவிதைகளுக்கு இடையே மனிதர்கள் அலுத்துப் போகிறார்கள், இயந்திரம் உயிர்ப்பிக்கிறது என வாழ்வின் மறுதலையை (converse) பேசமுற்படும் அந்த மாறுபட்ட பார்வை யோசிக்க வைத்தது. அதை அவர் உரத்துப் பேசாமல், மேசையைத் தட்டி வாதிடாமல், டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் நண்பனிடம் பேசுவது போலப் பேசும் தொனி எனக்குப் பிடித்திருந்தது.

பாத்திரம் பெரிதா, அல்லது அந்தப் பாத்திரத்தைப் படைத்தவன் பெரியவனா? கற்பனை பெரிதா, அல்லது அந்தக் கற்பனைக்குக் காரணமானவன் பெரியவனா? ராமன் பெரியவனா? ராமனைப் படைத்த கம்பன் பெரியவனா? யோசிக்க யோசிக்க இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், விடைகாண முடியாத நித்தியத்துவம் பெற்ற கேள்விகளையும் எழுப்பியது ஒர் கவிதை.

கல்வியை நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் மாயக் கம்பளத்தோடு ஒப்பிட்டு (அந்த ஒப்பீட்டையும் நுட்பமாகச் செய்து) எழுதப்பட்ட ஒரு கவிதையும் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையை ஒரு கதை போல நெய்திருந்தார் கவிஞர். கல்வியின் அவசியத்தைப் பற்றி தமிழ்க் கவிதைகள் காலம் காலமாகப் பேசுகின்றன. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாமல் கற்றல் நன்றே என்ற சங்காலக் கவிதையில் துவங்கி கல்வி பற்றி ஒரு சில நூறு கவிதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலில் வேகாது என்பதில் துவங்கி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வரை கல்வியின் பயனையும் பட்டியல் இட்டிருக்கிறார்கள். மலை வாழை அல்லவோ கல்வி நீ வாயார உண்பாய் புதல்வி என பாரதிதாசனின் கல்வியை எளிய வாழைப்பழமாக செய்த கற்பனையிலிருந்து இன்று நாம் வெகு தூரம் வந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறது மந்திரக் கம்பள உவமை. ஆனால் கவிதையின் சிறப்பு அந்த அம்மா பாத்திரம். ஞானக்கூத்தனின் அம்மா சொன்ன பொய்களில் வரும் அம்மாவின் ஜாடை கொண்ட கெட்டிக்கார ஆனால் அன்பான அம்மா. கற்பனையும் பாத்திரமும் சமகாலத்தைப் பதிவு செய்கின்றன. படைப்பிலக்கியத்தின் பலன்களில் அதுவும் ஒன்று.

சமகாலப் பிரசினைகளைக் கூர்மையான பார்வையோடும், ஆழமான கவலையோடும் பார்க்கும் சில கவிதைகள், அதிலும் சுற்றுச் சூழல் கெட்டு வருவதை, கடல்களில் எண்ணைப் படலங்களைப் பரப்பிச் செல்லும் கப்பல்கள், ஓசோன் படலத்தில் விழும் ஓட்டை இவை குறித்து அக்கறையோடு எழுதப்பட்ட கவிதைகளை அதன் பின் உள்ள உலகு தழுவிய பார்வை, எதிர்காலம் குறித்த, கேள்விகள் கொண்ட நோக்கு இவற்றிற்காகப் பாராட்டுகிறேன். எய்ட்ஸுடன் ஒரு பேட்டி, யுத்தம் பற்றிய கவிதைகளையும் சமகாலப் பதிவாக பார்க்கிறேன்.

சில கவிதைகளில் காணப்படும் உவமைகள் அசர வைக்கின்றன. வெயில் தின்ற முகம் என்று உழவனை வர்ணிக்கிறது ஒரு கவிதை.

ஐந்து தலைமுறையாய்
ஆண் வாரிசு
இல்லாத குடும்பத்தில்
ஆண் குழந்தை
பிறந்ததைப் போல
இருந்தது
என்னைப் பிடிச்சிருக்கு
என்றபோது.

என்ற வரிகள் முறுவலை வரவழைத்த உவமை.

இறுதிச் சுற்றில் இரண்டு கவிதைகள் என் முன் நின்றன. நலம் நலமறிய ஆவல் என்று ஒரு கவிதை. வெளிப்படு என்றொரு கவிதை. ஒன்று உணர்வுகளால் நெய்யப்பட்டது. மற்றொன்று சிந்தனைகளால் செறிவூட்டப்பட்டது.

கடிதம் வருமா வருமா எனக் காத்திருந்து, வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடை பயின்று, வருவர் எல்லாம் தபால்காரர் என்று மயங்கி, ஒருநாள் கடிதம் வந்ததும் அதைப் பரபரப்பாய்ப் பிரித்து, உள்ளே வழக்கம் போல உலகுக்கு முக்கியம் இல்லாத, ஆனால் உணர்வுகளோடு பேசுகிற வரிகளை வாசித்து, உடனே பதில் போட உட்கார்ந்து, நலம் விசாரிப்பதில் துவங்கி ஊர் வம்பில் முடிகிற கடிதங்கள் எழுதிய, கடந்த காலத்தை சுவையாய் அசை போடுகிறது நலம் நலமறிய ஆவல். மண் வாசனை ததும்பும் ஈரமான தமிழ். பேச்சு வழக்கிற்கு அருகில் கவிதை மொழியைக் கொண்டு வந்துள்ள ஆற்றல். கவிதைக்கு லயம் கொடுக்கும் மோனை நயம். மிகைப்படுத்தாத மெய்யான உணர்வுகள். இவை எல்லாம் கவிதையைச் சிறக்கச் செய்கின்றன.

ஆனால்-
மின்னஞ்சல் வந்துவிட்டதால் காத்திருக்கிற சுகம் போய்விட்டது என்ற வாதத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது. அறிவியலின் மிகப் பெரிய சிறப்பே அதன் ஜனநாயக அம்சம்தான். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இப்படிச் செய், இப்படி வாழு என்று வாஞ்சையுடன் ஆணையிடுகிற தகப்பன் அல்ல. இன்னின்ன இருக்கு வேணுமா உனக்கு எனக் கடைபரத்துகிற வியாபாரி. அறிவியல் சாதனங்கள் எவையும் என்னை ஏற்றுக் கொள் என எவரையும் வற்புறுத்தாது. ஏற்றுக் கொள்ளாமல் போனால் ஏங்கி இளைக்காது. ஏற்றுக் கொண்டவர்களுக்கு சலிக்காமல், சிணுங்காமல் அடிமைச் சேவகம் செய்யும். உங்களுக்குக் கடிதம் எழுதிக் காத்திருப்பதுதான் சுகம் என்றால், தாரளமாகக் காகிதம் எடுத்து எழுதுங்கள். உலகத்தில் உள்ள தபால் அலுவலகங்களையெல்லாம் தாழ் போட்டு சீல் வைத்து விட்டார்களா என்ன? மின் அஞ்சல் உலகத்தில் பாசத்தைக் காணல, தமிழ் சுவாசத்தைக் காணல என்கிற புலம்பல் பொய்யானது. எழுதுவது தொழில்நுட்பம் அல்ல. மனம். பாசம் இருக்க வேண்டிய பாண்டம் அதுதான். சட்டியில் இருந்தால் அகப்பைக்கு எட்டாமலா போய்விடும்? என் கோடிங் வேறு உன் கோடிங் வேறு என ஆளாளுக்கு ஒரு encodingல் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், இணையத்தில் எவர் எழுதுவதையும் அவரன்றி அடுத்தவர் வாசிக்க இயலாமல் தமிழ் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. யுனித் தமிழ் என்று ஒன்று ஏற்பட்டு அதை உலகில் கணிப்பொறியின் எல்லைகளைத் தீர்மானிக்கிற மைக்ரோசாஃப்ட்டின் மென் பொருட்களும். அவர்கள் தீர்மானிக்கிற விளிம்புகளை ஏற்க மாட்டோம் அதை விசாலப்படுத்துவோம் என்கிற தளையறு மென் கல இயக்கமும் யுனித் தமிழுக்கு இடம் கொடுத்த பின்னும் தமிழ் சுவாசத்தைக் காணல என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. அப்படியே இணையத்தில் போதுமான அளவிற்குத் தமிழ் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் அதற்குத் தொழில்நுட்பம் காரணம் அல்ல. வினைத் திட்பம் இல்லாமை காரணமாக இருக்கலாம்.

கடந்து போன காலத்தைப் பொற்காலமாகக் கருதும் இந்த மனப்பான்மை ஊக்குவிக்கத் தகுந்ததல்ல என்ற ஒரே காரணத்திற்காக இந்தக் கவிதையை நிராகரிக்கிறேன். எவ்வளவு அழகாகக் கட்டப்பட்டிருந்தாலும் நாம் கல்லறைகளில் வசிக்க முடியாது. காரணம் அங்கே ஜன்னல்கள் இல்லை. கடந்த காலங்கள் எத்தனை உன்னதமாக இருந்தாலும் அதில் நாம் கால் பதிக்க முடியாது. சென்றதினி மீளாது மூடரே என்று பாரதியைப் போலக் கடுமையான வார்த்தைகளில் சாடவிரும்பவில்லை. ஆனால் புதியன விரும்பு என்ற அவனது கட்டளையைக் கவனப்படுத்த விழைகிறேன்.

வெளிப்படு, (கவிதை எண் 5 ஈ) கவிமனத்தின் உணர்ச்சிப் பெருக்கால் நனைந்து கிடக்கும் நதியல்ல. சிந்தனைக் காற்று சலனம் எழுப்பும் சிறு தடாகம். மனித குலத்திற்கும் மதத்திற்கும் உள்ள உறவை உன்னிப்பாக ஆராய்கிறது. மதம் மனிதனுக்குக் கிடைத்த புதிய சிறகுகளா? அல்லது பூட்டப்பட்ட பொன் விலங்கா? மனிதனுக்கு மதம் தேவையா? தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்கிற காலம் வரை, அது நமக்குத் தேவை. கவிஞர் சொல்கிற மாதிரி அது நடக்கக் கற்றுக் கொடுக்கிற நடைவண்டி. ஆனால் அதற்காக ஆயுசு பரியந்தம் நடைவண்டியைப் பிடித்துக் கொண்டே நடக்க முடியமா? சப்பாணிகளாகவே சாகப் பிறந்தோமா நாம்? கற்றுக் கொடுக்கிற எதுவும், கற்றுக் கொள்கிற எதுவும், நம்மைச் சிறப்பிப்பதாக இருக்கலாம். சிறைப்பிடிப்பதாக இருந்துவிடக் கூடாது. அவை நமக்குக் கையாக உதவ வேண்டும். காலாக இட்டுச் செல்ல வேண்டும். கை விலங்காகவோ, காலில் கட்டிய கனமான குண்டாகவோ ஆகி விடக் கூடாது.

ஆகிவிட்டால்? தலையானது எனக் கருதிய ஒன்று தளையாக ஆகிவிட்டால் அறுத்தெறிய வேண்டியதுதான். இது நன்றி கொன்றதாகாதா? சிந்திக்கவே நான் தான் உனக்குக் கற்றுக் கொடுத்தேன் என்பதற்காக சிந்துபாத் கதையில் வரும் கிழவனைப் போல அவை நம் முதுகை விட்டிறங்காமல் வருமானால் அதை உதற வேண்டியதுதான். இது நன்றி கொன்றதாகாதா? எந்த வீட்டிற்குள்ளும் வாசற்படி இருப்பதால்தான் ஏறி உள்ளே போகமுடிகிறது. அதற்காக அதைப் பெயர்த்தெடுத்துப் பூசையில் வைத்து விட வேண்டுமா? இது நன்றி கொன்றதாகாதா? விடை கவிதையில் இருக்கிறது.

கவிதை அணிந்திருக்கும் மொழி சாதாரணமானது. ஒப்பனையின்றி நேரடியானது. செறிவானதைச் சொல்ல முற்படுவது எனினும் இருண்மை இல்லாதது. மனித குலம் முழுமைக்கும் பொதுவான ஒன்றைப் பற்றி அடங்கிய குரலில் ஆழ்ந்து யோசிப்பது. கேள்விகளை அடுக்கிவிட்டுக் கிளம்பிவிடாமல், சரியெனப் பட்டதைப் பரிந்துரைப்பது. கவிதையின் லட்சணங்கள் எனக் கம்பன் முன்மொழிந்த, பாரதி வழிமொழிந்த தெளிவு, தண்மை, ஒழுக்கம் (ஒழுக்கம் என்றால் நேரடியாகச் செல்வது) என்ற அம்சங்கள் கொண்ட இந்தக் கவிதையை பரிசுக்குரியதாகப் பரிந்துரைக்கிறேன்.

எதிர்காலத் தமிழ்க் கவிதை சிந்தனைச் செறிவால் ஊட்டம் கொள்ளட்டும். விளிம்பு நிறைய உணர்ச்சி என்ற எண்ணெய் ததும்பி நின்றாலும் சிந்தனைப் பொறி ஒன்றல்லவா விளக்கில் வெளிச்சம் ஏற்றும்?

அன்புடன்,

மாலன்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

மாலன்

மாலன்