தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தீபச்செல்வன்




பறவை மிருகமாகியது

எனது தனிமையில்
துயருமும் இருந்தது
நிம்மதியும் இருந்தது
நான் எப்படி
சொல்லிவிட
கூட்டத்திற்கும்
தனிமைக்கும்
உங்களுக்கும்
எனக்கும் இடையில்
உறவு தேவையென்பதை
எனது நண்பனும்
நானும்
மிருகமாகி
தனித்திருக்கிறோம்
நகங்களை
கூர்மையாக்கியபபடி
பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை
நானும் அவனும்
யாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு
நழுவி நகர்கிற
மிருகமாகி
நானும் அவனும்
பிரிந்து போகிறோம்
நானும் அவனும்
ஒரு கூட்டமாகியிருந்ததை
யார் கவனித்தார்கள்
இந்த மிருகமுகங்களை
அணிந்ததையும் கூட
யார் கவனித்தார்கள்…..



பாம்பு நெளியும் அறை

சைக்கிளில் பாம்புகள்
நெளிந்து வழிகிறது
இன்னும் கயிறு
பாம்பாகவே தெரிகிறது
இருட்டை நிறைத்திருந்த
பாம்புகள்
பகலிலும் நெளிகிறது
சொற்களிலும்
புன்னகையிளலும்
நீ பாம்பை நெளிய விடுகிறாய்
பாம்புகளாய் காண்கிறாய்
கழுத்தில் பாம்பு
அசைய
கயிற்றில் விஷம் வடிகிறது
மரங்களையும்
வீதிகளையும்
நீ பாம்புகள் என்கிறாய்
புல்வெளிகளை
பாம்புமேடு என்கிறாய்
மேசையில் வந்துகிடந்த
பாம்பு மெல்ல
அசைந்து அசைந்து
அறையை விட்டு
வெளியேறுவதுபோல
நீ அறையை விட்டுபோகிறாய்
குட்டிப்பாம்புகளைப்போல
உனது சொற்களும்
உனது கோபங்களும்
கொட்டிக்கொண்டிருக்கிறது
பாம்புக்கயிற்றால்
நீ கட்டி வைத்திருந்த
பிடியும் முடிச்சும்
அறுந்துவிட
நான் வெளியில் விழுகிறேன்


மேசைக்கு கீழே புகைந்த சிகரட்

மின்சாரம் நிரபப்பட்ட
மீன் தொட்டியில்
துடிக்கிற
மீன்களைப்போல
உனக்கும் எனக்கும் இடையில்
மேசைவிளக்கு துடிக்கிறது
உடைந்த கதிரையை
கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு
என்னை இருக்கவைத்து
பேசிக்கொண்டிருக்க
உனது குரூர வார்தைகளுடன்
கதிரையும் நானும்
உடைந்து விழுகிறோம்
கடல் கரையில்
நீயும் நானும்
குடித்தவிட்டுப் போட்ட
பியர் போத்தல்கள்
பிசுங்கானாகி
காலை கிழித்து விட்டிருக்கிறது
நீயும் நானுமிருந்து
பேசியகடல் மணல் கரையில்
குருதி கொட்டியிருக்கிறது
உனது சொற்களும்
பிசுங்கானைப்போல
என்னை
கிழித்தப் போட்டிருக்கிறது
முகம் பார்த்த கண்ணாடி
கைதவறி விழுந்து
உடைவதைப்போல
உனது சைக்கிளில் இருந்து
நான் விலகி விழுகிறேன்
நீ ஒளித்து வைத்து
புகைத்த
சிகரட்டின்
சாம்பல் தணலாகி காலை
சுடுகிறது
மேசைக்கு கீழிருந்து
சிகரட்டை
புகைக்கிறாய்
இனி
உனக்கும் எனக்கும்
இடையில்
கயிறுகளும் இல்லை
பாலமும் இல்லை
படிகளும் இல்லை
துரோகம் மட்டும்
சுற்றி வளைத்திருக்கிறது.


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தீபச்செல்வன்


நீ பேசாது போன பின்னேரம்

நீ பேசாது போன பின்னேரம்
எனது சொற்கள் செத்துக் கிடந்தன
தூரத்தில் போனபிறகாவது
திரும்பிப்பார்ப்பாய்
என பார்ர்த்துக்கொண்டிருந்தேன்
உனது உருவம்
புள்ளியாய் சிறுத்து
கரைந்துவிட
எனக்குள்
நீ நிரம்பியயிருந்தாய்
என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்
நெருங்கிவரும் பொழுது
தவிக்கிற நமது இருதயங்கள்
எப்பொழுது வெளித்தெரியும்
நீயும் நானும்
சொல்ல முடியாத உணர்வால்
துடிக்கிறதை
நிலவு பார்க்கிறது
பிரிந்ததுமில்லை
சேர்ந்ததுமில்லை
யாருக்கம் தெரியாது
நாமும் அறியாமலிருந்தோம்
ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்
நாம் அருந்திய
தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன
நமது இருதயங்கள்.


ஆள்களற்ற தொலைபேசி

ஆள்களற்ற தொலைபேசி
நமது மொழியில் ஏதோ
பேசுகின்றன
நீயும் நானும் பேசுவது
கம்பிகளின் வழியாய்
பாடலாக வழிகிறது
நேற்று நீ பேசிவிட்டுப்போக
நாள் முழுக்க
கொட்டிக்கொண்டிருந்தது
உனது சொற்கள்
உனது கண்களும்கூட
கம்பிகளின் ஊடே
பேசிக்கொண்டிருந்தது
தொலைபேசியின் ஊடாக
நமது குரல்கள்
இணைந்துகிடக்கிற
காற்றின் வெளியில்
நீயும் நானும்
எங்கிருக்கிறோம்
எனது கண்கள் கரைந்து விட
உனது முகம்
நிரம்பிவிடுகிறது
நமது இருதயங்களை சிலுவையில்
அறைகிறது
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி
நேற்று
நமது உரையாடலை
அறுத்த வேகமான காற்று
இன்று
என் தனிமைமீது
உன் சொற்களால்
பேசிக்கொண்டிருக்கிறது
காற்றில்
கலந்திருந்தன நமது சொற்கள்
நாம்
இன்னும் பேசியபடியிருப்போம்
காற்று நமதருகில் வீசுகிறது
நீ பேசாத
தொலைபேசி
கையிலிருந்து தவறி வீழ்கிறது.



தாடிமுகம்

ஏன் தாடி வளர்த்திருக்கிறாய்
என்று கேட்கிறாள்
எனது தோழி
எப்போதாவது
தாடி வழித்த என் முகத்தை
கண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
இல்லை என்கிறாள்
தானாய் வளர்கிற
எனது தாடியை
குழந்தைகளின்
முடியைப்போல
நான்
வருடிக்கொண்டிருந்தேன்
தாடிக்குள் நானும்
எனது முகமும் மறைந்திருக்கிறோமா?
அது ஒரு சோலையாக
நான் அதற்குள் உலவித்திரிகிறேனா?
நான் முகம்
மழித்தபோதும்
தாடி
முகத்தில்
ஒட்டியிருக்கிறது
முகம் மழித்தபடி
வகுப்பறையில் இருந்தேன்
அவள் தாடி பற்றி
பேசாமலிருந்தாள்
நான்கு நாட்கள் போக
ஏன் தாடி வழிக்க வில்லை
என்றாள்
நான்கு நாட்களுக்கு முன்பு
எனது தாடியை கண்டாயா
என்று கேட்டேன்
அப்பொழுதும்
நீ தாடி வளர்த்திருந்தாய்
என்றாள்
நான் தாடியாகியிருந்தேன்..


நிலவு தேடிய குழந்தை

deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தீபச்செல்வன்


சிகரட் நண்பன்

வாகனங்கள் புகைத்தபபடி
போய்க்கொண்டிருந்தது
எனக்கு
ஒரு சிகரட் வேண்டும்
என்றான் நவராஜ்
அல்லது
என்னிடம் இருபது ரூபா இருக்கிறது
வா
ஒரு சிகரட் புகைப்போம் என்றான்.

கடையின் மேல் மாடியிலிருந்து
நானும் அவனும்
சிகரட்டை குடித்துக்கொண்டிருந்தோம்
கடையின் சமையல் பகுதியும்
புகைத்தபடியிருந்தது

அந்த மாடிக்கு செல்லும்
படிகள்
சாம்பல் படிகளாகியிருந்தன
ஒரு சிகரட்டை புகைப்பதற்காக
என்னை நகர் முழுவதும்
தேடிக்கொண்டு வந்தான்.

ஒரு நாள் இரவு
பெட்டிக்கடை ஒன்றிற்கு
பக்கத்தில்
நானும் அவனும்
ஒரு சிகரட்டை மாறிமாறி இழுத்தோம்.

அவனின் வீட்டில்
முழுநாளும் தங்கியிருந்தபோது
அம்மாவுக்கு தெரியாமல்
மாமரத்தில் ஏறி சிகரட்டை இரகசியமாய் குடித்தோம்
மாம்பூக்களில் கலந்திருந்தன சாம்பல்.

நான் உதிர்ந்த சாம்பலுக்காய்
வருத்தப்பட்டு தேடினேன்
விழுந்திருந்த ஓவியங்களை
ரசித்துவிட்டிருக்க மிதிபடும்
சாம்பலை கைகளால் மூடினேன்
எப்போழுதுக்குமாய் எனது தோள்களை
இறுகப்பிடித்திருந்தான்.

சைக்கிளின் முன்னாலிருந்தான்
பொக்கற்றில் கிடக்கும்
ஒரு சிகரட்டோடு
அந்த சைக்கிள் நகர மறுத்தது.

நாளைக்கு நீ போகாதே என்றான்
என்றாவது நான்
போயாகவேண்டியிருந்தது
அன்று முழுக்க அவனின்
தேளில் நகராமல் சாய்ந்திருந்தேன்.

சாம்பல் கிண்ணத்தில் நிறைந்து
கிடந்தன
சாம்பல்களோடு
சிகரட்டின் அடித்துண்டுகள்
சிகரட்டில் கலந்திருந்த நமது சொற்கள்
கிண்ணத்தில் நிரம்பிக்கிடந்தது.

நமது வாடிக்கையான தேனீர்கடையின்
மொட்டைமாடியில்
நம்மோடு இரண்டு சிகரட்டுகள்
புகைந்தன
அவனின் முகம் கரைந்தபடியிருந்தது

நான் நிலவைப் பார்த்தேன்
அதுவும்
ஒரு சிகரட்டை புகைக்க
கொட்டிக்கொண்டிருந்தது சாம்பல்
நமது நகரமெங்கும்…..
————————————————-

செலவு
————————–தீபச்செல்வன்

மூன்று நூறு ரூபாய்
தாள்களின்
முகத்தோடு பியர்
சிரித்துக்கொண்டிருந்தது
கிளாசில்
நிரம்பியிருந்த
வீண்செலவை
குடித்து விட்டு திமிரடைந்தேன்.

கலைச்செலவு
இருபத்தைந்து ரூபா
மதியமும் இரவும்
தொண்ணுறு ரூபா
ஜயாயிரம் ரூபாவில்
மீதி
படிப்புபகரணங்களுக்கு என்று
அவன் சிரித்தபடி கூறினான்.

மாலைத் தேனீரை தவிர்க்கப்போறேன் என்றான்.

அம்மாவின் காசுகள்
வியர்வைகள் என்றான்
எனக்கு வந்த
இரண்டாயிரம் ரூபாவில்
பல ஆயிரம்
அம்மாவின் களைப்புகள் கேட்டன.

அந்த சின்னவன் சிரித்தான்
எனது முகத்தில்
ஓங்கி அறைந்தது
அந்த பொறுப்புடைய வாழ்க்கைச் சிரிப்பு.

கிளாஸ் உடைய
அதற்குள்
எனது உடைந்த முகம்
நொருங்கிக் கொட்டியது…
—————————————————-

இரவு நதி
————————–தீபச்செல்வன்

இரவை மிருகம்
என்ற
நண்பனிடமிருந்து
நான் பிரிந்து விட்டேன்
இரவு நதியாகி பரவுகிறது
படிகள் இல்லாத
மொட்டை மாடியில்
விரிந்து கிடக்கிறது
வெக்கையடிக்கும்
எனது
பாட புத்தகங்கள்
அறையை பூட்டிவிட்டு போகிறான்
தோழன்
எனதறைக்கு
காதலி ஏறிவர
படிகள் இல்லை என்றாள்
இரவு அறைக்கு
ஏறி வருகிறது
இரவை ஒரு கோப்பையில்
நிரப்பி வைத்து
பார்த்துக்கொண்டிருந்தேன்
மின்குமிழ் அழுதது
படியிறங்கும்
என்னை தின்பதற்காய்
கீழே
ஒரு மிருகம் திரிகிறது.


நிலவு தேடிய குழந்தை

வாகனங்களுக்கிடையில்
குழந்தையின்
அழுகையும் சிரிப்பும்
தாயின் பாடலும்
நசிந்து விடுகிறது
நசிக்கப்பட்ட
கொஞ்ச சோறுகளுடன்
தாய் நிலவை
தேடிக்கொண்டிருந்தாள்
உயர வளர்ந்து
வானத்தை மூடிய
கட்டிடங்கள்
எரிந்து புகைவிட்டன
தலையில்
தூக்கி வைக்கப்பட்ட
ஜந்து மாடிகளையும்
இறக்கி
எறிந்து விட்டு
மொட்டைமாடியில்
அரிதாய் திரிகிற
காற்றை பிடித்து
குடித்துக்கொண்டிருந்தேன்
நிலவு வானத்தில்
ஒரு மூலையில்
ஒட்டி ஒளிந்திருந்தது
தாய் நிலவை
தேடிக் களைக்கிறாள்
சேரிக்குடியிலிருந்து
அவள்
என்னைக்காட்டி
குழந்தையின் வாயில்
சோற்றை திணிக்கிறாள்.
———————————————-

குறியுடன் வரும் இரவு
—————தீபச்செல்வன்

அடையிலிருக்கும் கோழியை
வலிந்து
சேவல் புணர்கிறது
இன்னும் சில சேவல்கள்
முதுகைக் கிழித்து
குறியை புதைக்கின்றன
சேவலின்
கால்களுக்கிடையில்
கோழி
நசிந்து கிடக்கிறது
இருட்டில் இருட்டுடன்
புணர்வதைப்போலிருக்கிறது
இரவோடு
முகம் கரைகிறது
வெறும் குறிகளும்
முலைகளும்
நிறைந்து தெரிகிற
நினைவில்
குறி புதைந்து விடுகிறது
சொற்களில்லை
நீளமில்லை
உடல்கள் ஒட்டிக்கொள்ளாது
சேவலைப்போல
குறி
எழும்பி விழுகிறது
குறியை புதைத்து விடுகிற
இரவு
பயங்கரமாய் வருகிறது
பகல் குருடாகிப்போக
இரவானதும்
நெருங்கிவிடுகிறோம்
குறிகள் புதைந்து விடுகிறது.
—————————————–

பல்லி வசித்த அறைக்கு திரும்பியது
————————–தீபச்செல்வன்

அவனுக்கு சொல்லாமலே
நான் அறையை விட்டு போய்விட்டேன்
எனது புத்தகங்களையும்
உடுப்புகளையும்
வந்து தேடினான்
எனது கட்டிலுக்கு கீழாய்
பழைய செருப்பு கிடந்தது
முகம்
பார்க்கும் எனது கண்ணாடியையும்
பழைய
வானொலிப்பெட்டியையும்
அவனுக்காய்
விட்டுச்சென்றிருந்தேன்
கண்ணாடியின் மூலையில்
உடைந்த
எனது துண்டு முகம்
ஒட்டியிருந்ததாய்
யாரிடமோ சொல்லியிருந்தான்
தண்ணீர் கூஜாவில்
தனித்தமுகம்
மிதக்கக்கண்டான்
அந்த வானொலிப்பெட்டி
எப்பொழுதும்
பாடியபடியிருந்தது
அது ஒரு குளிரான அறை
நான் வேறொரு
அறைக்கு சென்றபோது
என் புத்தகங்களிற்குள்ளும்
ஆடைகளிற்குள்ளும்
வெக்கை புகுந்தது
அந்த அறையின்
பயங்கரத்தை பற்றி
நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லை
அதற்கு பிறகும்
அவன் என்னை கண்டு பேசினான்
நான் ஒரு நாள்
அந்த பழைய அறைக்கு
சென்று
அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்தேன்
அவனது அறை
வெளித்து காற்று நிரப்பியிருந்தது
ஆறுதலாய் பேசினான்
அறையின் சுவர்கள் எங்கும்
புன்னகை
பூத்து விரிந்து கிடந்தது
தனியாளாய் படிகளால்
கீழே இறங்கினேன்
பயங்கர அறை ஒன்றினுள்
சென்றடங்குவதை
அவன் கண்டான்
வெளியில் தூக்கியெறிந்த
ப்பாக்கோடு
வீதியில் நின்றேன்
அந்த இரவில் என்னை
யாரும் காணவில்லை
மீண்டும் அவன் என்னை
கூட்டிச் சென்றான்
அந்த அறைக்கு
மாடியின் படிகள் பூத்திருந்தன


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

தீபச்செல்வன்


சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து….
——————————————-

உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்

எல்லோரும் அழுதபடி

இருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருப்பது

மாணவ விடுதியல்ல

சிறைச்சாலை அல்லது

அகதிமுகாமாக

இருக்கவேண்டும்.

இங்கிருக்கும்

சில சகோதரர்களின்

உறவுகள் அங்கு

விமானங்களால்

பலியெடுக்கப்பட்டதாக

அழுதுகொண்டிருக்கிறார்கள்

யாருக்கும் யாரும்

ஆறுதல்சொல்ல முடியாது

மூலைகளில்

வைக்கப்பட்டிருக்கிறோம்.

நேற்று முன்னைய தினம்

எங்களோடிருந்த

மாணவர்கள் இருவர்

சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்

எங்களால் அவர்களுக்காக

சத்தமிட்டு அழக்கூட முடியவில்லை.

அகதி முகாமாயிருக்கும்

எங்கள் விடுதிமீது

கைக்குண்டு தாக்குதலும்

நடத்தப்பட்டது

சிலர் வைத்தியசாலையில்

மருந்துப்பொருட்கள் இன்றியும்

அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருக்கும்

மாணவ அகதிமுகாமிற்குள்

அச்சுறுத்தும்படி

ஆயுதங்களுடன் புகுந்து

சோதனையிடப்பட்டது

முகாம்களை தகர்ப்பதுபோல

முற்றுகையிடப்பட்ட

நாளின் அதிர்ச்சியில்

எலலோரும் படுகொலை செய்யப்பட்ட

புத்தங்களாக பரவி இருக்கிறோம்.

எங்களில் சிலரை காணவில்லை

ஊரடங்க அமுலில் சிலர்

காணாமல் போகிறோம்

ஊரடங்கு அமுலற்ற போது

பலியெடுக்கப்படுகிறோம்

எல்லோரும் வேண்டுமளவுக்கு

கௌரவமாக வருத்தப்படுகிறோம்.

எவ்வளவு வலிமையாயிருந்த

எங்கள் குரலின்நாடி

துப்பாக்கிகளின் முற்றுகையிலும்

பச்சை உடைகளின் நிழலிலும்

அன்றைக்கு

ஒடுங்கித்தான் போனது

அவர்களது துப்பாக்கிகளும்

வீடியோக்களும்

எங்கள் முகங்களை

பதிவுசெய்தபோது

உன் முகமும் அழைப்பும்

அவசரமாகவே ஞாபகமானது.



ஏ-9 வீதி – வண்டிகள் புறப்பட்டுவிட்டன

——————————————-

நமது நகரத்தை சூழ்ந்திருந்த

எல்லாவண்டிகளும் புறப்பட்டுவிட்டன

புனரமைக்கப்பட்ட வீதி

மீண்டும் தனித்திருக்கிறது

எல்லாப்பயணங்களும் முடங்கிவிட்டன

நம்மிடம் இப்பொழுது

ஒரு பயங்கரஅமைதியும்

குருரகலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது

வெள்ளையடித்து பயணிக்கப்பட்ட

இந்த வீதியை சிதைப்பது பற்றி

யாரிடம் முறையிடுவது?

அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?

குருதியால் பெறப்பட்ட

சிவப்பு வீதியின் வரலாற்றை

வெள்ளைத்தேரணங்கள்

பிரதிபலிக்காமலே போய்விட்டன

வீதி கிழிந்து கிடக்கிறது

இது எனது வீதி

எனது வீட்டிற்கு பிரதானமானது

எனக்காக நீளுகிறது

இதற்காக நம்மில் பலர்

குருதி சிந்தியிருக்கிறார்கள்

உயிரை புதைத்திருக்கிறார்கள்

இப்பொழுது இந்த வீதி

பசியின் வரலாறாகவும்

நோயின் தரிப்பிடமாகவும்

உயிர்களை பறிகொடுக்கிறது

நிழலுக்காக முளைத்த

பனைமரங்களின் கனவுகள்

தின்னப்;படுகிற முகாமாகிவிட்டது

பனைமரங்ளை தரியாதீர்

என்ற மூத்தோரரின் குரல்கள் கேட்கின்றன

எத்தனை பனை மரங்கள்

காயப்பட்டிருக்கின்றன

எத்தனை பனைமரங்கள்

அழிந்து விட்டன

எதிர்கால பனைமரங்களுக்கான

விதைகளும் நாற்றுக்களும்

எங்கிருக்கின்றன?

வந்த வண்டிகள் எதையோ

ஏற்றி விட்டு திரும்பி போகின்றன

எங்கள் வண்டிகள் எதுவும்

எரிபொருள் இன்றி நகருவதில்லை

வெள்ளைப்போர் நம்மை சூழ்கிறது

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்?

எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?



மரணத்தோடு விளையாடிய குழந்தை

——————————————-

உனது ஒளிமிகுந்த கவிதைகளிடம்

அவர்கள் முழுமையாக

தோற்றுப் போனார்கள்

இருளை கொடூர முகத்தில்

அப்பிக் கொண்ட அவர்கள்

வலிமை மிகுந்த

உனது குரலிடம்

சணைடைந்து போனார்கள்.

விழித்துக் கிடந்த

உனது சுதந்திரத்தின்

குழந்தை மீது

கூரிய கத்தியை வைத்து

குரலை ரசித்துவிட்டு

சிரித்தபடி போகிறார்கள்.

நீ சுமந்து வந்த

தேன் நிரம்பிய மண்பானை

உடைந்து போனதாய்

அவர்களுக்குள்

திருப்தி தலைதூக்க

வீதியை இருட்டாக்கி

ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;.

இருப்பினும் உனது

எல்லா கவிதைகளும்

விழிகளில்

சூரியனை கொண்டு

பிரகாசிக்கின்றன

உனது எண்ணங்கள்

கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.

நீ வாழ்ந்து வந்த

சோலைகளின் மீதும்

அவர்களின் கத்திகள் பதிந்தன

நீ வளர்த்த மரங்களின் மீதும்

அவர்களின் துப்பாக்கிகள்

பதிந்தன

உன்னை தூக்கிக்கொண்டு

கருகிய வனம் ஒன்றிற்குள்

போகச் சொன்னார்கள்.

நீ கொண்டாடிய சிரிப்பை பலியெடுக்க

பின் தொடர்ந்து வந்தார்கள்

நீ எதிர்த்த பயங்கரத்தை

உன் மீதே

பிரயோகிக்க திரிந்தார்கள்.

எப்பொழுதும் போலவே

உனது வானம்

உனது நிறத்தை அணிந்திருக்கிறது

எப்பொழுதும் போலவே

உனதுவழி உனது வெளிச்சத்தில்

மிகுந்திருக்கிறது.

இன்னும்

உனது வார்த்தைகள்

உனது இசையால் நிறைந்திருக்கிறன்றன

உனது கேள்வியும் போராட்டமும்

அதிகாரங்களுக்கு முன்னால்

முண்டியடிக்கிறது.

ஒரு குழந்தையை

படுக்ககையின் மீது

படுகொலை செய்து விட்டு

எப்பொழுதும் விடுதலைக்காய்

அதிகாரத்தை எதிர்த்து

குரலிடும் அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை

எடுத்துப் போகிறார்கள்….


சுவரொட்டிகளின் முகங்கள்

——————————————-

என் அப்பாவின்

குருதியில் எழுதப்பட்ட

சுவரொட்டிகள்

இன்று காலை பரவலாக

ஒட்டப்பட்டிருக்கின்றன.

நேற்று அப்பாவின்

கண்களுக்கு

சில சுவரொட்டிகள்

காண்பிக்கப்பட்டன.

அவைள் குறித்த

அப்பாவின் ஆதங்கமும்

கடுமையான குரலும்

நேற்றைய இரவோடு

நசுக்கி சந்திகளில்

ஒட்டப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கான

புதிய சுவரொட்டிகளாய்.

அப்பாவின் பொதுமைப்பட்ட

குரலையும் முகத்தையும்

காயப்பட்டபடி

இப்போது இந்த

சுவரொட்டிளில் பார்க்கிறேன்.

அப்பாவின் காயாத குருதி

மௌனித்து திகைப்பதும்

பேசத்திறனற்று அழுவதுமாய்

கசப்பைக் காட்டுகிறது

தெருவில் போகும்

முகங்களைப் பார்;த்து.

அப்பாவின் குருதியிலான

சுவரொட்டிகளில்

பிசாசுகளே ஊரை

காத்து ஆழ்வதாக

பிசாசுகளே எழுதியிருக்கின்றன.

பிசாசுகள் ஊரை

காப்பதன் விசித்திரமும்;

நசுக்கப்பட்ட குரல்களின்

முகங்களும் சந்திகளில்

அப்பாவோடு சேர்க்கப்பட்டிருக்கும்

இதர சுவரொட்டிகளிலும் தெரிகின்றன.

அவை நாளுக்கு நாள்

அதிகரிக்க வெற்றிடங்களும்

விடப்பட்டிருக்pன்றன.

நாளை அதிகாலையில்

இதே சந்தியில்

எனது குருதியாலும்

சுவரொட்டிகள் எழுதப்பட்டு

ஒட்டப்படும்.

ஊருக்கான புதிய பாதுகாப்பு விதிகளின்

எனது முகமும் கீறியபடி.


தீபச்செல்வன்-ஈழத்திலிருந்து.

deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்

தீபச்செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

தீபச்செல்வன்



பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்

வானம் இடிந்து விழுந்திருந்தது

பாட்டியின் முகத்தில்

பழைய கதைகள்

உறைந்திருக்க

புதிய உலகம் பற்றியகதை

தெரியத்தொடங்கியிருந்தது

குழந்தைகள் கதைக்காக

பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்

ஐதீகமும் மர்மமும்

குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது

ஐதீகமும் மர்மமுமுடைய

கனவுலகின் கதையில்

தீவிரம் அற்றுப்போயிருந்தது.

உலகம் வேறொன்றாக இருந்தது.

குழந்தைகள் பாட்டியிடம்

ஜதார்த்தமும்

நடைமுறைச்சாத்தியமுமுடைய

கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்

சிக்கியிருந்தது

முற்றங்கள் பாதிக்கப்பட்டு

சுருங்கிக்கொண்டிருந்தன.

சதையும் குருதியுமுடைய

மண்டைஓடுகளின் மத்தியில்

குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்

குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்

பற்றிய கதையை

அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்

நிரம்பியிராத உலகம்

உருவாகப் போகிறது.

அங்கு மரங்கள்

கிழிந்திருக்கப்போவதில்லை

நிலவு கலவரமின்றியிருக்கும்

முற்றம் அச்சமின்றி

விரிந்திருக்கும்

காற்றில் மரணத்தின்

வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்

வாசனை வீசப்போவதில்லை

பறவைகள் மீண்டும் தங்கள்

சங்கீதங்களை இசைக்கும்

தெருக்களில் சூழ்ச்சி இருக்காது

மரணங்கள் பற்றியும்

சவப்பெட்டிகள் பற்றியும்

நம்மில் யாரும் அறியாதிருப்போம்.

வானம் மனிதாபிமானத்தில்

வெளித்திருக்கும் விழிகள்

எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்

மிகப் பசுமையானகாட்சிகளால்

அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை

கூறியதாகப் பாட்டி

திருப்திப்பட்டாள்

பாட்டியின் இருப்பில்

நிம்மதியிருந்தது.

கதையில் நம்பகம் இருப்பதாக

குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்

அச்சம் நீங்கின

பாட்டியின் வார்த்தையின்

ஆர்வம் குழந்தைகளை

குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்

புதிய உலகம்

நிகழத்தொடங்கியது.


எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு

இந்த நகரத்தில் மட்டும்

ஏதோ ஒரு விதத்தில்

மனிதர்கள

தீர்நதுகொண்டிருந்தார்கள்

தங்கள்பிள்ளைகளை

மரணங்களுக்கு

ஒப்புக்கொடுத்துவிட்டு

புதைந்துபோன தாய்மார்களின்

கண்ணீரில்

எரிந்தநகரம்

சூடேரிக்கொண்டிருந்தது.

கல்லறைகளும்

தகர்க்கப்பட்டு வரும்

அகண்டகாலடியில்

அழிவுகள் முளைவிட்டன

மரணங்களுக்கும்

மரணமளி;த்து

சுடலைகளும் அழக்கப்பட்டு

சுடலையாயின.

வீடுகள் சிதைந்து

பயணங்களின்

அடையாளமும் அர்த்தமும்

கிடையாது

சறுக்கி விழுந்துகிடந்தன.

குழந்தைகளின் எலும்புக்கூட்டின்

சுhம்பலில் மலர்ந்த மலர்களில்

வெள்ளைக்காகங்கள் வந்து

குந்திக் கொண்டன.

எண்ணிக்கையிலடங்காத

தனிமையில்

நகரம் துடித்துக்கொண்டிருந்தது

கணக்கெடுக்கப்படாத

அழிவின் சீருடைகளை

அணிந்த எண்ணற்றவர்கள்

எரிந்து முடிந்த நகரத்தை

படையெடுத்து

வந்து சேர்ந்தனர்.

பிய்ந்து அழிந்துபோன

கூடுகளை

தாங்கிய பட்டமரங்களின்

நிழலில்

எரிந்து கருகிய

மனிதர்களின் சாம்பல்கள்

அடுக்கப்பட்டிருந்தன.

சிறகுகள் கிழிந்து

தொங்கிக்கொண்டிருக்கவும்

தீர்ந்துவிடவும்

பறவைக்கூட்டங்களில் எஞ்சியவை

நகரின் மரங்களை இழந்து

எங்கோ?

தோலைந்துகொண்டிருந்தன..


குருதிவிதிப்பட்ட புன்னகை..

ஏனக்கென்று ஒரு

புன்னகை இருந்தது

அது எனது அடையாளமும்கூட.

எனது மகிழ்வும் அழுகையும்

ஊட்டப்பட்ட ஒலியில்

எனது புன்னகை ஒளிர்ந்தது.

இன்னாளில் விலக்கப்பட்ட

புன்னகையாய்

முகத்திற்கு அதிதூரப்படுகையில்

உதடுகள்

புனையைப்போல

பதுங்கிக்கொள்கின்றன.

எனக்கென்று உரிமையுடைய

வார்த்தைகள் எவற்றையும்

விரித்து வாசிக்கமுடியாது போயிற்று.

நான் என்னை மூடிப்போகிறேன்

வேற்று ஆடைப்போர்வையில்

எனது உருவம் ஒடுங்கியிருக்கிறது.

எனது புன்னகையில்

குருதிதான்வடிகிறது

உதடுகள் உதிர்ந்து

மிதிபட தெருக்கள்

எதையும் கவனிக்காது

மௌனமாய் கிடக்கிறது

காயப்பட்ட எனது உதடுகளில்

என்னை மீறி

குருதியின் வாசனையுடைய

புன்னகை வெளிவருகிறது.

எனது புன்னகையை

யாரோ களவாடிவிட்டார்களா?

ஆல்லது எனது புன்னகை

தனது வேருடன் அழிந்துவிட்டதா?

களவாடப்பட்ட எனக்குரிய

ஓலிகளை தேடுகையில்

காற்றுதீர்ந்துவிட

கண்கள் இரவாப்போகின்றன.

எனது எனது புன்னகை மிதிபட

எழும் ஒலியை இரசித்து

சக்கரங்கள் உருள்கின்னறன.

குருதியுடன் சம்பந்தப்பட்ட

புன்னகை பிறண்ட

வார்த்தைகள்

தடைசெய்யப்பட்ட காலத்தில்

முகத்தை கழற்றி

ஏறிந்துவிட்டு வருகிறேன்.

ஒருநாள் தெருவெளிக்கையில்

பதுங்கிய உதடுகள்

மீள வந்துசேரும்

எனது புன்னகையியின்

வேர் தளைக்கும்

எனது புன்னகை

வானமாய் விரிந்து வெளிக்கும்..



முகம் எரிந்துகொண்டிருக்கிறது.

குரலைத்திருகியவர்கள்

இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்

வார்த்தையை அடைத்தவர்கள்

நாவின்மீது

வாள்வீச வருகிறார்கள்

குழந்தைகளின்

புண்னகைச்சின்னங்களை

நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க

வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.

புதைந்தவர்களிள் வாக்கு மூலம்ங்கள்

தட்டிக்கழிக்கப்பட்டன

அமைதியைப்பற்றி

பிரசங்கம் செய்தவர்கள்

ஆயுதங்களை வழங்குகிறார்hகள்

அபிவிருத்தியைப்பற்றி

ஆய்வு நடத்தியவர்கள்

குண்டுகளை கையளிக்கிறார்கள்

பயங்கரவாதம் பற்றி

விளக்கமளித்தவர்கள்

அதிவேக விமானங்களை

பரிசளிக்கிறார்கள்

சாகசங்களே பாராட்டப்படுகின்றன.

அவர்கள் யாரும்

எல்லைகளைப்பற்றி

ஏன் பேசாதிருக்கிறார்கள்?

எல்லை தான்டி வரும்

பயங்கரவாதத்தை எதிர்த்து

தீர்க்கப்புறப்படுபவர்கள்

சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு

ஏன் எல்லை தான்டிவரவில்லை?

பாராமுகங்களை படைத்து கைமாறினர்.

கல்லறை நிறம்பிய

ஊர்களின்பாடலிடம்

எதுவரை செவிடராயிருப்பர்?

குருதி பாய்ந்து கொண்டிருக்கும்

நதியிடம் கால்நனைத்தும்

எதுவரை உணராதிருப்பர்

அந்தரப்படும் அப்பாவிகளின்

ஆன்மாக்களின் மொழியிடம்

எதுவரை ஊமராயிருப்பர்

தமது வர்ணவண்டிகளை

மிக வேகப்படுத்தினர்.

வயிறுகளில் வெறுமை முட்டிய

பசியின்கேள்விகளிடம்

இறுக மூடிய தெருக்களிடம்

சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்

சித்திரவதைக்கப்படும்

சிறைக்கூடங்களிடம்

பயணங்களை கைது செய்யும்

காவல் விதிகளிடம்

அடையாளத்தை அழிக்கும்

நிறைவேற்று அதிகாரத்திடம்

கண்ணாடிகளை அனிந்து

எதுவரை குருடராயிருப்பர்.

முகங்களை மாற்றி

வார்த்தைகளுக்கு நிறமணிந்து

மாளிகைகளுக்குள்

அடைந்து கொண்டனர்.

முகம் எரிந்துகொண்டிருக்கிறது.



புதிய வீதி

நீ எனக்காக

ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்

நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்

நிம்மதி தருகி;ற

கௌரவம் தருகி;ற

அங்கிகளையே நானும் அணிந்து

நீ செய்து தந்த வீதியில்

உன்னோடு வருகிறேன்.

மிகுந்த ஆவல்கள்

ஊட்டப்பட்ட

நமது தோட்டம் இன்னும்

பசுமை துளிர்த்து வருகிறது

நீ தேர்வு செய்த

பாடல்களை பாடியபடி

தோட்டத்தை அடையலாம்.

முதலில் தோட்டத்தில

புசிக்கத்தகாது விலக்கப்பட்ட

கனிகளை

தேடிஅழிப்போம்

நமது சந்ததியின்

அமைதியான வாழ்விற்காய்

ஆரொக்கியம் தரும் நல்ல

கனிகளை உற்பத்தி செய்வோம்.

நமது நாகரீகங்கள்

அழிந்துவிட்டது

என்று நமது

முகங்கள் மீது

கரிப+ச சாத்;தான்கள்

படையெடுக்கின்றன.

எல்லோராலும்

புறக்கனிக்கப்பட்ட

இரவொன்றில்

மிக அதிகதூரத்தில்

மங்கி எரியும் விளக்கைச்சுற்றி

நமது புத்தகம்

மிகுந்த பற்றுடன்

வாசிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இராத்திரியிலும்

கூடுகளை அடைந்தபிறகு

வீதியின் பாடலுக்காக

தவமிருக்கும் கால்கள்

உதிர்ந்தும் கிடக்கின்றன

தோட்டத்தின் பசுமைக்காக

காத்திருக்கும் கண்கள்

விழித்தும் கிடக்கின்றன.

நமக்காக எழுதப்பட்ட

புனித புத்தகத்தை

வாசித்தபடி

பயணங்களில்

மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

உன்னால் திட்டமிடப்பட்ட

வீதிகளின்

இனிய வாசனையுடன்

நீ மூட்டும்

அழகியதோட்டத்தின்

இதமான பசுமையில்

புதியவாழ்வு

பரிசளிக்கப்பட இருக்கிறது

அப்பொழுது

நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்

நமது புத்தகம் வாசிக்கப்படும்

நல்ல கனிகளை புசித்தபடி.



நிலவிலே பேசுவோம்

நிலவு உடைந்துவிடவில்லை

உனது திசை கறுத்திருக்கிறது

பகிரவேன்டிய சமாச்சாரங்களுக்கு

அப்பால் சுருங்கிய

வழியின் இடைநடுவில்

உனது பயணம் தள்ளாடுகிறது

உனது புன்னகையின்

கலவரம் புரியாது

உதடுகளை கணக்கெடுத்த

குழந்தைகள் முகங்களை

பொத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்கு ஒளிவீசும்

நிலவுமீது

கூரிய கத்தியை வீசிவிட்ட

உனதுதிசை இருளாகிறது.

உனது குரலில் யதார்த்தமும்

செயல்களில் கருணையும்

ஒரு போதும்இருக்கப்போவதில்லை

இதுவரையிலும்

உனது செயற்கைமழை

பெரியளவில்

அடித்து ஓய்ந்திருக்கிறது.

எந்தவிதமான குளிச்சியும்

அடங்கியிருக்காத

நிரந்தரமும் உறுயும் இல்லாத

உனது அதிகரத்தின்

செயற்கை மழையில்

எனது சிறகுகள்

ஒடுங்கிவிடவி;லை

நான் நேசிக்கும் வழிகள்

கரைந்து விடவில்லை

எனது வேர்கள் அழிந்துவிடவில்லை.

உனது மலைதான் சிதைகிறது.

வெளிகளை தடைசெய்து

முகங்களை சிறைப்பிடித்த

உனது பாரியமலை

அதிவேகமாக சிதைய

மிகப் பெரும்கற்கள்

உனது முகத்தை

நோக்கியபடி வருகின்றன.

நீ உருவாக்கிய கிளர்ச்சியில்

உனது இருப்பு வெடித்து சிதறுகிறது

எனது அடையாளம் ஒளிர்கிறது

நம்பிக்கை சிவக்கிறது.

எந்த பதற்றமுமின்றி

மிக அமைதியாக இருகிறது

எங்கள் நிலவு.

இருப்புக்கான புரட்சியுடன்

நாங்கள் போராடுவோம்

எங்கள் அழகிய

விடுதலை பற்றி

எல்லோருமாக பேசுவோம்

உரிமையுடன் செயற்படுவோம்

குற்றமில்லாத நிலவின்

மிக நீணடவெளி

எல்லையற்று இருக்கிறது

அவசியம்

எங்களுக்கு தேவையான

கருணைக்கும் விடுதலைக்குமாக.


இலங்கையின்–கிளிநொச்சியிலிருந்து….


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்