கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

கருணாகரன்


தெற்குத் தெரு

நாங்களிருந்த தெற்குத் தெருவை

ஆடுகளின் தெரு என்றார்கள்.

ஆட்டின் குரல்களும்

மொச்சையும் மீந்திருக்கும் தெருவில்

எப்போதும் ஆடு வாங்கிப்போகும்

கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு திரிந்தார்.

ஆட்டிடையனுக்கும் கரீம் காக்காவுக்கும்

தீராப்பிணக்குகள் ஏராளம் ஏராளம்.

என்றபோதும்

இருவருடைய பொழுதுகள்

ஆடுகளில்தான் விடிந்தன

ஒருவனிடம் கத்தியிருந்தது

ஒருவனிடம் தீனிருந்தது.

ஆட்டிடையனின் மடியிலும் மனசிலும்

துள்ளிவிளையாடும் ஆட்டுக் குட்டிகள்.

தோளில் தூக்கிப் போட்ட குட்டியோடு

வீதியில் வரும் புத்தனை

அழைத்துப் போகும் ஆடுகள்

காலையிலும் மாலையிலும்.

ஆட்;டிடையனின் மீதிருந்த ஆட்டு மொச்சை

கரீம் காக்காவிடமும் படிந்திருந்தது

ஆட்டின் நிறங்களோடும்

சாயல்கள் மற்றும் குரல்களோடும்.

அவருடைய கத்தியிலும் இருந்தது

காயாத குருதிக்கறையும்

ஆடுகளின் இறுதிக்கண தீனக்குரலும்.

ஆடுகளின் தெருவில்

எப்போதுமிருந்தன மாமிசத்த்pன் கசாப்பு நெடி

கூடவே நிழல் விரித்திருந்தது

ஆடுகள் உண்ணும் குழையின் வீச்சமும்

பால் மணமும் குட்டிகளின் துள்ளும் குரலிசையும்.

நாங்கள் ஆடுகளின் தெருவில் இருந்ததாகவே

எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்

இத்தனை கொலை நடந்த தெருவில்

ஒரு நாளேனும்

யாரையும் தேடி காவலர் வந்ததில்லை

விலங்கோடு

ஆடுகளின் தெருவில்

எதுதான் நடக்கும் எதுதான் மிஞ்சும் என்று தெரியவில்லை.


00

வடக்குப்படை வீடு

வடக்கில் படை வீடுகளிருந்தன

குருதி வடியும் கண்கள் தெறித்துப்புரண்ட

படை வீட்டில்

இருண்ட காலத்தின்

பயங்கரங்கர நிழல்கள் மினுங்கும்

பாழ் கிணறிருந்தது.

பாழ் கிணற்றில் மிதக்கும்

இளம் பெண்களின் விம்மலொலியில்

எப்போதும் படைவீடு

போதை கொண்டது.

கடத்தப்பட்டவரின் தனிமைக்குரல் படிந்த

அந்த வீட்டின் சுவர்;களில்

கூரொளிரும் வெண்குருதி வடிந்து கொண்டிருக்கிறது

காயாமலே.

அதில் ஒவ்வொரு வதையிலும்

உயிரணுவின் கண்ணிகள் பிளவுண்டு

ஓலமிட்ட மனிதனின் நிழலும்

அதை விரும்பிப் போதை கொண்டவனின் முகமும்

தெரிகிறது ஓவியத் தொகுதிகள் பலவாக.

வதையின் முன்னே மண்டியிட்டவரின்

ஒவ்வொரு காட்சியையும்

ரசித்துக் கொண்டிருக்கும்

படை அதிகாரியிடம்

தன்னுடைய விருப்பங்களைச் சொல்லத்தயங்குகிறான்

எப்போதும் அதிகாரியின் நிழலைத்

தொழுது கொண்டிருந்த சிப்பாய்.

சிப்பாயின் காதல்

அவனுடைய இதயத்திலும்

அதிகாரியின் காலடியிலும் நசுங்கிக் கொண்டிருக்கிறது

துயரம் மிகக் கொண்ட

ஒரு விசுவாசியின் விசுவாசத்தை

எப்படி எஜமானனிடம் தெரிவிப்பது என்பதை

எத்தனையோ தடவை ஒத்திகை பார்த்தபிறகும்

சறுக்கியே செல்கிறது

அவனுடைய விருப்பங்களைச் சுமந்திருக்கும் குதிரை

தானியக்கதிர்களில்

தன் சப்பாத்துகளையும் காதலியின் கடிதங்களையும்

மறைத்து வைக்க விரும்பும்

படைச்சிப்பாய்

பூங்காட்டில் தனக்கான பெண்பறவையை தேடிக் கொண்டிருக்கிறான்

ஆற்றில் இறங்குவதற்கு முன்னர்

வடக்குப்படை வீட்டில் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும்

இளம் பெண்களின் முனகலொலியில்

நடுங்குகின்றன இலைகள் ஒவ்வொன்றும்

சிப்பாயின் காதில் விழுகிறது

அவனுடைய காதலியின் குரலும்

அவள் சிந்தும் அன்பின் துளிகளும்.

வடக்குப் படை வீட்டில்

மறுநாள் சிப்பாய்களின் கலங்கிய விழிகளினூடே

காலைச் சூரியன் தயங்கிவந்தபோது

அதிகாரியின் மரணத்தை கொலை என்று

அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்கள்

விசாரணை அதிகாரிகள்.


மாமிசம்

ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன்பிறகும் மாமிசம் இருந்தது

கனிகளினுள்ளே காயங்களோடு

காயத்தின் மீது கனிச் சுவைததும்ப

மலரின் மென்னிதழ் விளிம்பெலாம்

கலந்து பரவியது

மாமிச வாடையும் கனிமலர் கலந்த வாசனையும்.

இப்போதும் மாமிசத்தை

வாங்கிப்போகும் பெண்ணிடம்

எதைக் கேட்பது

இந்தப் பசிக்கு.

அவளுடலின் இரத்தவாடையை

அவளுடலின் பால் வீச்சத்தை

மறைத்துக் கொண்டு அவள் போகிறாள்

காற்றையும் அள்ளிக் கொண்டு போகும்

மாபெரும் சமுத்திர அலைகள் தானென்று.

பெண்ணுடலில் விளைந்த

மலைகளையும் ஆறுகள் நிலப்படுகைகளையும்

வெளிகள் சமுத்திரங்களையும் கடந்து

மலர்களையும்

பசுமை நிரம்பிய இலைகளையும்

சுவையூறிய கனிகளையும்

அள்ளிக் கொண்டேன்

அவளுடலில் திளைத்துக் கொண்டிருந்த

மாமிச வாடை மெல்லக் கிpளர்த்தியது

என்னையொரு மிருகமாக.

நான் தோற்றேன்

அத்தனை கால பிரார்த்தனையிலும்.

அவளுள்ளிருந்த கள்ளின் ஊற்றை

பெருக்கிவிட்ட பின் பாய்ந்தது காம அருவி

என்னுடலை இப்போது மாமிசமாக்கி உண்டாள்

அப்பெண் தன்பசி யெல்லாம் தீர.

காலமுழுதும் அடக்கிய அவள் பசிக்கு

என்னைத்தின்னக் கொடுத்தேன்

முடிவற்று

என்பசியும் அடங்கவில்லை முடிந்து

2

ஆதியிலே மாமிசம் இருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

என்றான் ஒரு நண்பன் பெண்ணுடலில்

தன்னை இறக்கிக் கொண்டே

அவன் அறிய அறிய

அவளின் ஆழம் பெருகியது

மாபெரும் சமுத்திரமாகி

எண்ணத்தீரா அலைகளாகியும்.

அவளும் அறிந்ததில்லை

அவனும் ஒரு மாபெரும் சமுத்திரம் தானென்று.

ஆதியிலே மாமிசமிருந்தது

அதன் பிறகும் மாமிசம் இருந்தது

இப்போதும் மாமிசம் இருக்கிறது

00

அவர்கள் போன பிறகு

அவள் கேட்டாள்

இவர்கள்தானா அவர்கள் என்று

அவர்கள்தான் இவர்கள் என்றேன்

இவர்களைப்போல அவர்கள்

என்றும் சொன்னேன்

இவர்;களுக்கும் அவர்களுக்குமிடையில்

என்னதான் இருக்கிறது

என்று மீண்டும் அவள் கேட்டாள்

அதுதான் எனக்கும் புரியவில்லை

வந்தவர்களும் வராதவர்களும்

இவர்களும் அவர்களும்தான்

என்று நான் தெரிவதெப்படி

அவள் விளங்குவதெப்படி

இதையெல்லாம் நகுலன் எப்படிச் சொல்வார்


தூக்கத்தை தொலைத்த கிழவன்

பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்

கனவு அழைத்துப் போகும்

இளமைக்காலத்துக்கும்

பிள்ளைகள் கொண்டு சென்ற

தூக்கத்துக்குமிடையில் கிடந்து அவிகிறான்

இருளைக் குவித்து வைத்திருக்கும்

அந்த வீட்டில்

பிள்ளைகளின் குரல்கள்

சத்தத்தை அடக்கி

சுவர்களில் படிந்திருப்பதாக நம்பும் கிழவன்

அந்தக்குரல்கள் அதிகாலையில் ஒலிக்காதா

என்று விழித்திருக்கிறான்.

ஒரு முனையில்

கிழவன் முன்னிரவில் பேசும்போது

அதே கணம்

மறு முனையில்

பிள்ளை பதிலளிக்கிறான் அதிகாலையில்.

இந்தக் கால முரணுக்கிடையில்

தன்னைக் கொடுத்திருக்கிறது

அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி

கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான

கருணையில்.

அதிகாலையில் நிராதரவின் தத்தளிப்பு நிரம்பிய

கிழவனின் குரலை

கருணையுள்ள தொலைபேசி

எடுத்துச் செல்ல முயன்றபோதும்

முடியவில்லை

பிள்ளையின் இரவு கதவைச் சாத்தியிருந்தது

ஆழ்ந்த உறக்கத்தில்.

அப்போது அங்கே நள்ளிரவு

வழியற்ற கிழவன்

தன்னுடைய சூரியனை பின்னிரவிலிருந்து

பெயர்த்தெடுத்து அனுப்புகிறான்

பிள்ளையின் குரலை அது எழுப்பட்டுமென்று.

வௌ;வேறு கண்டங்களுக்கிடையில்

வெட்டித் துண்டாடப்பட்ட

அன்பின் உடல் கிடந்து துடிக்கிறது

தந்தையென்றும் பிள்ளையென்றும்

அங்கும் இங்குமாக

உலகம் சுருங்கியதென்று சொன்னவர் வாயில்

கொப்பளிக்கும் கண்ணீரை

எந்தப் போத்தலில் அடைப்பேன்.


பெண்நிழல்

தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கிய பெண்

அதை மீண்டும் பயிராக்கினாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

ஆதியிலிருந்து தொடர்ந்து வரும் வேரை

அதன் வாசனையோடு

தன்னுள் கொண்டிருக்கும் அவளிடம்

தலைமுறைகளிடம் தன்னைப் பரிமாற்றிக் கொள்ளும்

வித்தை நிறைய இருந்தது.

அவளே வேராகவும் விதையாவும்

தன்னுடலில் இருந்து விளைந்து கொண்டிருந்தாள்

ஓயாது

அவளில் கிளர்ந்த தானிய வாசனை

தாயின் முகத்தை வரைந்தது

மலர்களின் நிறத்தை அள்ளி

அந்த முகத்தில் பயிரிட்டது

கடலின் மீது அதை ஒரு படகாக்கி

மிதக்கவிட்டது

எல்லா ஒளிக்கதிர்களிலும்

தன்னைப் பரப்பும் வல்லமையுடைய

வாசனை நிரம்பிய அந்தவேர்

இளமை குன்றா நதியில் கரைந்து

இடையறாது பாய்ந்து கொண்டிருக்கிறது

மணம் பரப்பி

தன்னுடைய இளமைக்காலத்தின் கதிர்களை

விதையாக்கும் பெண்

அதை மீண்டும் பயிராக்குகிறாள்

தன்னுடலின் வெப்பத்திலும் ஈரத்திலும்

காதல் மிகக் கொண்டு

தாயாகி

இடையறாது விளைகின்றன

வேர்களும் விதைகளும்

அவள் உடலில்.

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கருணாகரன்


பூனையின் சித்திரங்கள்

பூனை என்றவுடன்

உங்கள் நினைவுக்கு வருவது

‘மியாவ்’ என்ற அதன் குரலா

ஓசையற்ற அதன் மிருதுவான நடையா

உடல் சுருக்கி கண்மூடி

பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன் தோற்றமா

மரத்தில் தாவித்திரியும்

அணிலைக்குறிவைத்து நோக்கும் அதன் ஒற்றைப்புலனா

ஏதோ ரகசியத்தை கண்டறிந்ததைச் சொல்லும்

அதனுடைய வாலாட்டலா

உங்கள் காலுரசி தோழமைகொள்ளும்

அதன் பிரியமா

எப்போதும் தன் சுத்தம் பற்றி

அக்கறையோடிருக்கும் அதன் குணமா

அல்லது

பூனை பாஸ்கரனா

பாஸ்கரனின் பூனையா

(ஓவியர் பாஸ்கரன் பூனைகளையே அதிகமாக வரைந்திருக்கிறார். அவருடைய பூனைகள் நினைவாகவும்)

2

கண்மூடிக்குவிந்திருக்கும் பூனையின்

தியானத்துள்

விரியும் காட்சிகளென்ன

அலையும் கனவுகளென்ன

3

நீங்கள் புணரும்போது

ரகசியமாகிறீர்கள்

பூனைகள் புணரும்போது ரகசியம் கரைகிறது

எலிகள் புணருகின்றன பூனைகளுக்காக

பூனைகள் புணருகின்றன எலிகளுக்காக

எலிகளும் பூனைகளுமில்லாத உலகம் எப்படியிருக்கும்

அதைப்போல

எலிகளில்லாத பூனைகளின் உலகமும்

பூனைகளில்லாத எலிகளின் உலகமும்

4

ஒருபோதும் பூனைகளை எதிர்க்காத

எலிகளை

எப்போதும் பகையாகக் கொள்வதேன் பூனைகள்

என்ற கேள்வி யெழுந்தது

திடீரென ஒரு நாள் ஒரு எலியிடம்

அந்தக் கேள்வி இன்னும்

கேள்வியாகவே இருக்கிறது

பூனைகளுக்கும் எலிகளுக்குமிடையில்

5

எங்கள் வீட்டில் பூனைகளுமுண்டு

எலிகளுமுண்டு

எலிகளைப் பூனைகளுக்குப்பிடிக்காதிருக்கலாம்

பூனைகள் எலிகளுக்குப் பகைமையாக இருக்கலாம்

ஆனால்

எலிகளும் பூனைகளும்

அது அது அதனதன் பாட்டில்

பூனைக்கு சோறு வைக்கிறேன்

எலிகளுக்கோ எதுவும் கொடுப்பதில்லை

அதனாலவை

தாமே எடுத்துக் கொள்கின்றனவா வேண்டியதை எல்லாம்

தாமே எடுத்துக் கொள்வதால்

எதையும் எடுக்கலாம்

எப்படியும் கொள்ளலாம் என்பதால்

சகிக்க முடியவில்லை

எலிகளின் வன்முறையை

எலிகளும் பூனைகளைப்போல்

நட்பாயிருந்தால்

எதையாவது கொடுத்துத் தீர்க்கலாம்

ஆனாலவை எப்போதும்

மிரண்டோடுகின்றன

அவற்றின் கண்களில் படபடக்கிறது

குற்றவுணர்வும்

அது பெருக்கும் அச்சமும்

எலிகளுக்குப் பூனைகள் மட்டுமா பகை

எங்கள் வீட்டில்

எலிகளுமுண்டு

பூனைகளுமுண்டு

நாங்களுமுண்டு


சினேகம்

பள்ளி நாட்களில்

எப்படியோ அறிமுகமாகிவிட்டது

குரங்குளோடான நட்பு

குரங்குகளுக்கும் பள்ளிப்பிள்ளைகளோடுதான்

சினேகம்

ஆனால் ஒன்று

எல்லாக் குரங்குகளும் ஒரேமாதிரியானவையில்லை

என்றபோதும்

எந்தக்குரங்குடன் நம் சினேகம் என்று தெரிவதேயில்லை

பலவேளை

வீட்டுக்கூரையில்

மாமரத்தில்

தெருக்கரைப்புளியில்

மதிலில்

காரின் மேல்

தோட்;டத்தில்

என்று எங்கும் புழங்கினாலும்

எந்த மனிதரும் குரங்கை அழைத்ததில்லை

ஒரு விருந்தாளியாக

எங்கேதான் குரங்கைக் கண்டாலும்

கல்லெறியாத எந்தச் சிறுவனும் இல்லை

சிறுவர்களோடு விளையாடாத குரங்குகளும்

எந்தத் தெருவிலும் இல்லை

சிறுநுனிக் கொப்புகளில்

தாவித் தொங்கும் குரங்குகளிடம்

மலைதிரண்ட பலமா

இல்லைக் குரங்கேறும்போது அக்கொப்;புகளில்

துளிர்க்கும் வீரியமா

எதிலுண்டு அப்பெரும் சாகஸம்

மரத்திலா குரங்கிலா

எவ்வளவுதான் ஊரிலும்

நகரத்திலும் இருந்தாலும்

குரங்குகளை காட்டுப்பிராணியென்றே சொல்கிறார்கள்.

நகரத்துப்பழக்கங்களில்

குரங்குகளுக்கு ஈடுபாடிருந்தாலும்

அவை காட்டின் வாசனையோடேயிருக்கின்றன

என்னால் ஒருபோதும் குரங்குகளை மறக்க முடியவில்லை

காட்டில் பயின்ற வித்தைகளை

அவை ஒருபோதும்

விட்டதில்லை யாருக்காகவும் எதற்காகவும்

எப்போதும் எங்கும்

இந்த நகரத்திலும்

அதனால் அவற்றை பிடித்திருக்குமா

இல்லை

எங்கோவோர் புள்ளியில் இன்னும்

அறுபடாமல் தொடரும்

தொப்புள் கொடியுறவின் நிமித்தமா



திருக்கோணேச்சரம்

பாடல்பெற்ற திருத்தலத்தின் திசைமுகங்களில்

போரிசை முழக்கம்

உடுக்கொலி மறைத்து

சங்கொலி மறைத்து

எழும் நாதப் பேரிசை மறைத்து.

மலைகளை அதிரவைக்கும் விதமாய்

‘தென்னாடுடைய சிவனே போற்றி…’

என்றவரெல்லாம்

அடிவீட்டில் முடங்கினார்

வழிதோறும் மலைமுழுதும்

படைவீட்டின் பெருக்கம் கண்டு.

இராவணன் வெட்டில்

கடல் குமுறித்துடித்தது

நூற்றாண்டாய், அதற்கும் அப்பால்

ஆயிரமாண்டுகளின்

தேவாரப்பண்ணிசையை

அலைகள் பாடின ரகசியமாய்

‘நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பு…’

பீரங்கிகளோடு அலைகளை மேவி அலைந்தன

போர்ப்படகுகள்

துறைமுகத்தில்.

எண்ணெய்க்குதங்கள் இந்தியாவுக்கு

சில பங்குகள் சீனாவுக்கு

பிறிமா ஆலை சிங்கப்பூருக்கு

சிமெந்து ஆலை யப்பானுக்கு

துறைமுகமோ அமெரிக்காவுக்கு.

சிவனுக்கோ

அடியாருமில்லை

அடிவைக்க இடமுமில்லை.

மலை முகட்டில் புத்தரின் சொருபம்

நிஷ்டையில்.

தியானம் வசதியாகிப் போய் விட்டது

அவருக்கு

அடையாள அட்டை இல்லாதபோது

கண்மூடி அமர்ந்து விடலாம்

சற்றுப்பாதுகாப்பு.

மலையில் சிவன்

சுற்றிவரப்படையாட்கள்

எங்கே போவது

துவாரபாலகர்களையும் காணவில்லை

அவர்களைப் பிடித்துச் சென்றது யார்

யாரிடம் முறையிடுவது

பதற்றத்துடன் உமையொருபாகன்


மிஞ்சும் உயிர்

நெகிழ்ந்து கரையட்டு;ம்

இந்த உடல்

கனமும் வலியும் நிரம்பி

எல்லோரையும் உறுத்தும் படியாய்

இன்னுமிருக்க வேண்டாம்

மாத்திரைகளை தின்னத் தொடங்கும்போதே

மரணத்தின் சாயல் முகத்தில் விழுகிறது

தொங்கும் கயிற்றின் நிழலாய் என்றேன்

இல்லையில்லை

மரணத்தை விரட்டும்

சவுக்கோடு காத்திருக்கின்றன அவை,

அச்சமில்லை’ என்றார் அன்றிரவும் மருத்துவர்

சிரித்தவாறு.

எப்போதும் நினைவில் எழுந்தாடும்

கத்திகள்

உயிரைக் கொண்டேகவா

அல்லது ஒரு சிமிழில்

மீண்டும் பக்குவமாக்கவா என்று புரியவில்லை

சத்திர சிகிச்சைக் கூடத்தின் சுவர்களிலும்

சுழலும் மின் விசிறியிலும்

கனவிலுந்தான்

ஒரு மிடறு தண்ணீர்

சாவதற்கு முன்னும்

பின்னும்

இடையில் என்ன நடந்தது

யாருக்கும் நினைவில்லை.

மிஞ்சிக்கிடக்கின்றன மாத்திரைகள்

எதுவும் செய்ய முடியாமல்

பிரிந்த உயிரின் உடலோடு


முகம் -1

எத்தனை முகங்களை

நிதமும் பார்த்தேன் என்று யாருக்கும் கணக்கிருக்குமா

என்று தெரியவில்லை

பார்த்த முகங்களெல்லாம்

நினைவிலிருக்கும் என்றும் சொல்வதற்கில்லை

இத்தனை முகங்களையும் பார்த்திருப்போம் என்றும்

நினைத்ததில்லை.

ஒரு முகத்தை எத்தனை தரம்தான் பார்த்தோம் என்றும்

நினைவில்லை

பார்க்காத முகங்கள் எத்தனை என்றும் தெரியவில்லை

பார்த்த முகங்களில் எத்தனை விதமென்றும்

பார்க்காத முகங்களில் எத்தனை வகையென்றும் கூட

பார்த்த முகங்களிலும்

பார்க்காத முகங்களிலும் என்ன இருக்கிறது

என்ன இல்லை என்றும் புரியவில்லை முழுதாய்

தெரிந்த கணக்குகள்

எப்போதும் சறுக்க முனைகின்றன

முகங்களின் வளவளப்பிலும்

அவற்றின் பள்ளத்தாக்குகளிலும்

பார்க்காத முகங்களையெல்லாம் பார்ப்போம் என்பதற்குமில்லை

எந்த நிச்சயமும்

பார்த்த முகங்களையும் எத்தனை தடவைதான்

பார்ப்போம் என்றும் சொல்வதற்கில்லை

தெரிந்த முகங்களிலும் தெரிவதில்லை

எந்த முகத்தில் என்ன

இருந்ததென்று சிலபோது

இன்னுமொன்று

எந்த முகத்தை இறுதியாகப்

பார்ப்போமென்று யாருக்காவது தெரியுமா

அதுவும் எப்போதென்று



முகம் -2

அம்மாவின் முகம்

தங்கையின் முகம்

காதலனின் முகம்

நண்பரின் முகம்

தோழியின் முகம்

தாத்தாவின் முகம்

கள்வனின் முகம்

கொலையாளியின் முகம்

கொல்லப்பட்டவனின் முகம்

குழந்தையின் முகம்

மந்திரவாதியின் முகம்

படை அதிகாரியின் முகம்

பிச்சைக்காரனின் முகம்

துக்கம் நிரம்பிய கவிஞனின் முகம்

நடிகனின் முகம்

இறந்தவரின் முகம்

கடனாளியின் முகம்

நோயாளியின் முகம்

காற்றின் முகம்

பூவின் முகம்

வானத்தின் முகம்

கடலின் முகம்

கடவுளின் முகம்…

எங்கேனும் கண்டாயா என்னுடைய

காணாமற்போன முகத்தையும்

ஒப்பனை முகத்தையும்

நான் மறைத்து வைத்த முகத்தையும்

நீ கண்டெடுத்த முகத்தையும.;


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

கருணாகரன்


வீடு

” இப்பெரும் பூமியில்

இல்லைத்துயரிற்றிருக்க ஓரிடமும் ”

என்றபோது சொன்னான்

” இல்லை, எனக்கும்

ஒரு குழி நிலம் சொந்தமாக ”

என்று,

என்னருகில் இருந்து

எதுவுமே அற்றவனாய்

எல்லைக்கற்கள்,

வேலிகள்

காணி உறுதிகள்

மதில்கள்

எல்லாவற்றுக்கும் அப்பால்

இருவரும் நின்றோம்

எப்போதும் பெரு வெளியில்

சிறியவீடுகள்

பெரியவீடுகள்

தொடர்மாடிகள்

அடுக்கு மாடிகள்

பழைய வீடுகள்

புதிய வீடுகள்

எதிலுமில்லை ஓரறையும்

இருவருக்கும்

” அம்பலத்தில் நீ” யென்றான்

ஒரு நாள்

சிரித்தவாறு

ஒரு மரம் வீடானது அப்போது

அது

யாரோ ஒருத்தர்

யாராயிருத்தல் கூடும்.

ஒலித்தது பெண்குரலா ஆண்குரலா

எங்கிருந்து

நினைவில்லை.


பூட்டு

நடந்து தொலைக்க முடியாத

இப்பெரும் பூமியில்

போக முடியவில்லை எங்கும்

போவதற்கு இருந்தன

ஏராளம் இடங்கள்

போக முடியாத படிக்கு

அழைப்பும் அழைப்பின்மையும்

எப்போதும் குழம்பிக் கொண்டேயிருந்தன

பிரியத்தையும் கசப்பையும்

கலந்தபடி

வாசலில் தொங்கும் பூட்டு உறுத்துகிறது

யார் மீது நம்பிக்கை கொள்வதென

எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்

அதன் அடையாளத்தை மீறி

செல்ல முடியவில்லை

எந்த வீட்டிலும்

தாராளமாக.

என்னையில்லா விட்டாலும்

யாரையோ அது சந்தேகிக்கிறது

எப்போதும் கவனமான

ஒரு அவதானியாயும்

பிடிவாதக்காரக் காவற்காரனாயும்



ஓட்டம்

இருள் நிரம்பிய வீடுகளில்

துயரத்தின் நிழல்

அலைந்து கொண்டிருக்கிறது

தனிமையில்

காத்துக் கொண்டேயிருக்கும்

நாற்காலியில்

கைவிட்டுப்போன பொம்மை

காத்திருக்கிறது குழந்தையின் ஞாபகங்களுடன்

விளையாடிய கணங்களோடும்

கொண்டு செல்ல முடியவில்லை

என்னோடிருந்த எந்தக்காலையையும்

எடுத்து வர முடியாத

மலர்களின் அழைப்புக்குரல்

இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

தொடுவானப்புள்ளிக்கு மப்பால்

மறைந்து கொண்டிருக்கும்

வீட்டிலிருந்து

வழி நெடுகத் தொடர்ந்து கொண்டிருந்த

அழுகையின் குரைப்பொலி

விரட்டிக் கொண்டேயிருந்தது

எங்கும்

தொடர்ந்து

இந்த மரத்தின் கீழே

வந்த நேரம் தகிக்கிறது நிழலும்

கண்ணீரில் தீ மூண்டு


தோழி

வீட்டிலிருக்கும் போதே வெளியேறிச் செல்கிறேன்

வெளியிலிருக்கும்போதே

வீட்டிற்குள் நுழைகிறேன்

சிலபோது

வரவேற்பறையைக்கடக்க முடியவில்லை

உள்ளே நுழையும்போதும்

வெளியேறிச் செல்லும்போதும்

யாருடையவோ நினைவுகள்

கடக்கமுடியாதபடி

கனத்த திரையாக தடித்துக்கிடக்கின்றன

எங்கும் கொண்டு போக முடியவில்லை

அன்பின் வாசனை நிரம்பிய சிறுசிமிழையும்

மிஞ்சியிருந்த அவளுடைய சொற்களையும்

பிரியத்தையும்

வைத்திருக்கவும் இயலாது

அவற்றின் கமழும் வாசனையை தடுத்தும்

சுடரும் ஒளியை மறைத்தும்

இன்னும்

அதனால் விட்டுவிட்டேன்

அவற்றின் திசைகளில்

திசையறிந்து பறக்கட்டும் பறவைகளாய் என்று.

இப்போ

தனிமையின் பிராந்தியத்துள்

கண்ணயரும்

நினைவுக்குலையில்

எதுவும் பருகுவதற்கில்லையா என்றாள்

எதிர்பாராத விதமாக இந்த மாலையில் வந்து

என்னெதிரில் நின்று வீம்பாக

கடந்த காலங்களை இழுத்து வரும்

சிரிப்பொலியில்

அவளிருந்தாள் வீடு நிரம்ப அப்போது

அப்போதும் இப்போதும்

நான் வீட்டிலிருந்தேனா வெளியிலிருந்தேனா

சொல்லடி என் தோழி


திசைமுகம்

இந்தக் கோடுகளைக் கீறியபோது

நான் வெளியிலிருந்தேன்

அதுவே நல்லது

காய மறுத்த இரத்தத்தினடியில்

சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தை

என்னாற் பார்க்க முடியவில்லை

யாரால்தான் முடியும்

கொலைகளின் மீது

பூக்களின் அலங்கரிப்பை

ரசிப்பதற்கும்

அதற்காக வாழ்த்துப்பா இசைப்பதற்கும்

தும்பைச் செடிகளை விலக்கி

நடந்தபோது

என்னோடு கூட வந்த நிழலைக்காணவில்லை

யாருடனோ சென்ற அது

வழி தவறி

உடைந்த பாலத்தின் முனையில்

தேம்பியவாறு நின்றது

காற்றிலாடிய பனைகளுக்கிடையில்

சுருங்கி விரியும் வெளியினூடு

உறைந்திருந்த பேச்சுக்குரல்களை விலக்கி

சந்தைக்குப்போகும் பெண்களிடம்

அச்சம் நிரம்பிய ரகசியங்களும் கதைகளுமிருந்தன

எங்கும் விற்கமுடியாமலும்

தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாமலும்

எல்லோருடைய கண்களிலும்

முடியாமைகளின் ஊற்று

பெரும் சதுப்பு நிலப்பரப்பை

உருவாக்கிக் கொண்டிருந்தது

அவர்களையே சுற்றி

ஒரு வியூகமாய்

எதிர் மறைகளுக்கிடையில்

முளைத்திருந்த

ஒற்றை விழியை

யாருந் தீண்ட மறுத்தபோதும்

எல்லோரும் மறந்த போதும்

நானெடுத்துக் கொண்டேன்

மூன்றாவது கண்ணாய்

அதுவே முதற்கண்ணென்று

‘ நெற்றிக்கண் திறப்பினும்’

என்றவரெல்லாம் காணவில்லை

ஒளி மலர் விழியை

அதன் உள்ளும் புறமும்

தகிக்கும்

முக்காலத்தின் திசை முகங்களை


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

கருணாகரன்


கருணையில்லாத பிணம்

கருணையில்லாத பிணம்

எல்லோரையும்

கதறியழ வைக்கிறது

அன்பின்றி

சிறு நன்றியுமின்றி

சாவின் களை நிரம்பிய முற்றத்தில்

துக்கம் பூத்து

படர்கிறது வாசமாய்

பேரிசை கொண்டெழுகிறாள்

ஒப்பாரிப் பெண்

உயிரைத் தேடி

அசைவைத் தேடி

எந்தக்குரலுக்கும் பிரதிபலிப்பின்றி

கரையமுடியாதிருக்கிறது

மயானம்

முடிந்தது ஒரு பயணம்

விலகியது மந்தை

கூட்டத்தில் பெரும் பள்ளமாய்

துக்கத்தின் மறை பெருக்கி

மிஞ்சிய கனவில்

தீ மூழுமா

புல் முளைக்குமா

வெற்றிடத்தில் அமர்கிறது காகம்

பிதிர்ச் சோற்றுக்காய்

கரைந்து

பாடல் பாடியவாறு

போய்ச்சேர்ந்த பிறவிக்காய்

இறுதி நேரப்பரிசை

அழாது கொடுக்க யார் வருவீPர்

இறுதி விடை பெற்றபின்னும்

துக்கத்தோடா

வழிவிடுவது

ஒரு துளி சிரிப்பையொலிக்க

யாராலும் முடியவில்லை

தோற்றது போ

இவ்வுலகம்

துடிக்கும் மரக்கிளையில்

காற்றை விலக்கி

அமரும் குருவிகள்

யாதறிந்தன

இந்த மரணப்பொழுதைப்பற்றியும்

விடை பெற்ற பயணி குறித்தும்


இனிச் சொல்ல முடியாது

மேற்குச் சூரியன் மறைகிறது

இருள் மணக்கும் வனத்தில்

உதிர்ந்த சிறகுகளின் குவியல்.

மாமிச நெடில் வீசும்

மரங்களில் எழுதிய பெயர்கள்

வேட்டைக்காரனை ஞாகப்படுத்துகின்றன.

கண்காணாத தேசத்து பரிவாரங்களின் பரிகாசத்தில்

செய்வதற் கெதுவுமின்றி

முழந்தாள்களில் தலையை வைத்து

மண்டியிட்டழுதாள் தேவி

பெருந்தேவி

கொக்குகள் பறந்து திசை பெயர்ந்த

மாலையில்

வயற் கொட்டிலில்

புகை மெல்லக் கிழம்பி வர

மூள்கிறது நெருப்பு

உடுக்கொலி நிரம்பும் வயல் வெளியில்

முன் பனிக் குளிர் வாட்;ட

கொடுகிக்கிடக்கும் கிழவனின் காதுகளில்

தேள் கொட்டியது

வடக்கே பெரும் பீரங்கி முழக்கம்

ஆயிரம் தலைகொண்ட நாகம்

படமெடுத்தாடும் சந்நதத்தை

காட்டின் நாயகி கண்டு துணுக்குற்றாள்

கொல்லைப்புறத்தில்

மருத மரங்களில்

கூடிய பறவைகள் சிதறித் தெறிக்க

இருள் விழுங்கிய

தாமரைக் குளத்தில்

மருத மரங்கள் பாறி வீழ்ந்தன

சனங்களின் குரலால்

நிறைந்த வானத்தில்

எந்த நட்சத்திரமுமில்லை

கண்ணறிய.

புயல் கொண்டு போகிறது

கையிலேந்திய

ஒரு சொட்டு நீரையும்

இரவுக்கரை

இன்றிரவு

பெயர்ந்து

ஒரு பகலிடம் போய்ச்சேர்ந்தபோது

நானிறங்கினேன்

அதிலிருந்து பதற்றத்தோடு

நகரம்

நாய்களால் நிரம்பியிருந்தது

ஒரேயொரு நாயினால்

படைத்தளபதிகள்

பீரங்கிகளோடு சம்பாஷித்துக் கொண்டிருக்கையில்

இரகசியமாக

பனைகளின் மறைவில்

நகர்ந்து கொண்டிருந்த சூரியனுக்கு

ஒரு சிப்பாய் குறிவைத்தான்

சிதறித் தெறித்தன பல்லாயிரம் பனைகள்

நகரத்தில்

புழுக்களுக்கு வணக்கம் சொல்லி

வரவேற்றான் படைத்தளபதி

ஒரு விருந்துக்காக

துளிரும் இலைகளின் மேல்

புழுக்கள் கூடுகட்டின

யாரும் கவனிக்கவில்லை

பீரங்கிகளிலிருந்து இரத்தம் வடிவதையும்

கண்ணீர் பெருகுவதையும்

அப்போது

அலறியபடி வந்த சிப்பாய்

தளபதியின் காலடியில்

மண்டியிட்டழுதான்

அந்தப்பீரங்கிகளில் ஒன்றையேனும்

தந்ததால்

நீர் பெய்து தன்வம்சம் பெருக்கும்

திறன் பெறுவெனென்று

கூடிய தளபதிகள்

சிப்பாயை

முறிந்த பனைகளின் கீழே

புழுக்களிடம் பரிசளித்தனர்

முற்றிய பகலில்

திணறிக் கொண்டிருந்தன

முந்தைய இரவும் வரத்தயங்கும் இரவும்


என்னை எங்கும் காணவேயில்லை

பீரங்கியின் குழல் வாய் மொழி

அடங்க மறுக்கும் சிறு குரலை

மறைத்து வைத்திருந்தேன்

பதுங்கு குழியின் இடுக்கினுள்

பீரங்கியிடம் அது சொல்லவிருந்த

சில வார்தைகளையும்

கேட்கவிருந்த சில கேள்விகளையும்

நான் களவாடினேன்

நிகழக்கூடிய அபாயம் கருதி

ஐயா, ஒரு போதும் எதற்கும்

அடங்கியதில்லை

நெஞ்சறிந்த உண்மையை யன்றி

நானோ

ஒரு பல்லியாகிச் சுவரில் ஒட்டினேன்

அது பகல்

தீரா விடாய் கொண்ட பகல்

தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்த

அப்போதில்

இடிபாடுகளில் புறாக்களும்

பிரார்த்தனைகளும் சிக்கிய வேளை

பீரங்கிகளின் குழல் வாய் மொழியைக் கேட்டேன்

அருகில்

மிக அருகில்

யம சேனை

என்னை மிதித்துச் சென்றது

போதையுடன.;

பெருகிய குருதியில்

தாகம் தீர்த்த பகல்

கள்வனைப்போல் இரவிடம் பதுங்கியது

இதோ சிதறிக்கிடக்கிறது

கோவில் மணியோசை

இறுதி நேரப்பிரார்த்தனையின்

கடைசிச் சொற்கள்

இனித் தேவனைப்பாட

சொற்களிருக்குமா

பிரார்த்தனைகளிருக்குமா

ஆயிரமாயிரம் சுடர் கொண்ட விழிகளோடு

வானத்தை வெறித்தபடியிருக்கும்

சிறுமியின் அருகில்

பெயர்ந்து கொண்டிருந்தது

மிஞ்சிய நம்பிக்கையும்

அவள் சேகரித்து வைத்திருந்த எதிர்காலமும்.

பிளந்து கொண்டு போகிறது

பூமி

என்னிடமில்லை

அடங்க மறுத்துத் திணறிய அக்குரல்

இப்போது


சூடிய போதில் மாலை

ஒரு மாலை கொண்டு வா

பீரங்கியின் கழுத்தில் சூடலாம்

சாவின் தீரப்பசியுடைய

பெருந்தேவன் இதுவல்லவா

இந்தப்பகலை

கொய்து

சுவரில் அறையுங்கள்

ஒரு பகலில் எதுதான் தோற்கும்

எதுதான் வெல்லும்

வாழ்வைத் தோற்கடித்த

மரணத்தின் முன்னே இரவென்ன பகலென்ன

சிலுவைக்கருகில் சாவின் பிணமும்

சேகரித்த சிரிப்பும்

தனிமையில்

மரங்கள் பைத்தியமாகி

நடந்து திரிகையில்

இதோ வசந்தம்

கண்களிலிலிருந்தும் மரங்கள் பூக்களிலிருந்தும்

பெயர்க்கப்பட்டு வருகிறது

மனதை விழுங்கி

வேண்டப்படாத மௌனத்தை

பரப்பி இருக்கும்

அந்தச் சனங்களிடம்

ஒரு வார்த்தை, ஒரேயொரு வார்த்தை

பெற்றுக் கொண்ட பிறகு

மெல்ல வாருங்கள் இந்தப் பீரங்கிக்கருகில்

அவனுடைய தோலில்

முழங்கப்படும் பேரிசைக்காக

காத்திருக்கும் வேதனையுடைய காலையே

நடுங்கும் கரங்களோடு

அலைகிற காற்றுக்கருகிலே

மூர்ச்சையற்றுக் கிடக்கிறாள்

அவனுடைய தாய்

ஒரு தகர்ந்து போன பாலமாய்

எங்கே பாண்காரன்

இலையான்களை விட்டுச் சென்றது

கருணையில்லாத பிணம்

பசியின் கூடாரத்துள் வெற்றிக்கொடிகளை

களவாடிச் சென்ற

வெளியாட்களை தேடப்பொனது யார்

காட்டு வழியில் சூடிய மாலைகளோடு நின்ற

பீரங்கிகளில்

மோதி வீழ்ந்தவர் யார்

சருகுகளில் வேர் கொண்டெழுகிறது

காடு

இந்த வேதனைகளில் பற்றியெரியும்

என்னுடலை தீயுடன் தருகிறேன்

யாராவது கொண்டு செல்லுங்கள், எங்காவது

படையாட்களிடம்

பூக்களையும் பொம்மைகளையும்

கடந்த காலத்தையம் கொடுத்து

ஒரு படைவிருத்தியைச் செய்வோம் என்ற

வழிப்போக்கனை தேடுகிறேன் விருந்துக்காக

காலம் அவனைப் பணிக

நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும்

ஓட்;டை போடும்

நுட்பத்துக்காக

பரிசளித்துக் கொண்டிருக்க முடியுமா எப்போதும்

படைக் கென்றாள்

பாலகி

யாருமில்லை இந்த வெளியிலும் இருட்டிலும்

தனித்தேயிருக்கிறது

வழி

ஒளியுமின்றி இருளுமின்றி

ஒரு சிதறிய கண்ணாய்.


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்

கருணாகரன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

கருணாகரன்




மூடிய யன்னல்

அந்தரித்துத் தவிக்கும்

இசைக்குறிப்புகளின் பின்னோடி

ஒரு மரக்கிளையில் உறங்கிய

உன் கண்களை எடுத்;து வந்திருக்கிறேன்

தீராத மோகத்தோடு

என்னைக் கவ்வி

இழுத்துப் போன அந்தக் கண்கள்

உன் படுக்கை மீது

என்னைச் சாய்த்து விட்டு

நாம் சேர்த்த இசைக்குறிப்புகளால்

என்னைப் போர்த்தியபின்

மெல்ல வௌளியேறிப் போயின

யன்னலோரத்தில்

நினைவுக்கும் கலக்கத்துக்குமிடையில்

துடித்துக் கொண்டிருக்கும்

வாழையிலையில்

தத்தளித்துக் கொண்டிருந்த

இசைக்குறிப்புகள்

என் போhர்வையிலிருந்து எழுந்து சென்றவையா

வெளியேறிப் போன கண்களைத்தேடியலையும்

யாத்திரையில்

இளமையின் பிரியாவிடை

காலடியில் நிகழ்கிறது

எனக்கும் உனக்குமிடையில் அந்;தரித்து

ஏனின்னும் உட்திரும்பல்களில்லை

எப்போதும்

எதிர் முனைப்பயணங்களில்

தீராப்பிடிப்பென்ன

அறியேன்

அறியேன்

குழந்தையின் குரல்

தத்தளிக்கும்

ஒரு குழந்தையின் குரல்

திருவிழாவிலிருந்த விலகிவிட்டது

கூட்டத்தில் நசிபடாமல்

அந்தரிப்போடும் துயரின் கனதியோடும்

அது பெருகிப் பரவுகிறது எங்கும்

அப்படியே

திருவிழாவைத் தீண்டி

அதன் மேல் விசமாகப்பரவி

தன்னை எழுப்பி விடுகிறது

மாபெரும் துயரொளியாய்

அப்பெரும் கொண்டாட்டத்தில்

குழந்தையின் குரலில் மிதக்கும்

தத்தளிப்பை

திருவிழா பகிர்ந்தளித்தது

ஒவ்வொருவரிடமும்

தத்தளிக்கும் குழந்தைக்குரலை

எடுத்துச் சென்றனர்

ஒவ்வொருவரும்

இன்னும்

தத்தளிப்பை குழந்தையிடமே மிஞ்சவிட்டு.

பொம்மையின் ஞாபகம்

வாசலைத் திறந்து

செல்ல முடியாத

பொம்மை

எல்லோரும்

வெளியேறிச் சென்றபின்

தனித்திருக்கிறது

குழந்தையின் ஞாபகங்களுடன்

கiரையமுடியா நினைவுகள்

கரைய முடியா நினைவுகளின் மீது

எனது தனிமை மிதக்கிறது

திறந்த கண்களுடன்

மறக்க முடியா இளமையையும்

கனவின் தீராக் காதலையும்

தன் முடிச்சுகளில் வைத்திருக்கும் தனிமையின் கீழ்

துயரின் வேர்கள்

கூடவே சிறகுடைய மலர்;களும்

கரைய முடியா நினைவுகளின் மீது

கடவுளின்; நிழல் எப்போதுமிருக்கிறது

திரும்பிச் செல்லமுடியா இடங்களையும்

மறுபடியும்

காணமுடியாக் காட்சிகளையும்

சந்திக்க முடியா நண்பர்களையும்

மீண்டும் பெற முடியா முத்தங்களையும்

பிரிவின் இசையோடு சேமித்திருக்கின்றன

கரைய முடியா நினைவுகள்

வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையில்

நிரம்பியிருக்கும் சுனையில்

மிதக்கின்றன கரைய முடியா நினைவுகள்

காத்திருப்பின் நிழல்

உருகிச் சிதறும் நிமிடத்தின்

ஒவ்வொரு துளியும் சேமிக்கின்றன

நம்முகத்தின் பிரதிபலிப்புகளை

பகர்ந்து கொள்ள முடியா

முத்தத்தின் ஈரம்

வானவில்லாகி மிதக்கிறது

இந்த மாலையில்

நீ பருக மறுத்த பானத்தை

முழுவதுமாக

நான் பருகுகிறேன்

கசப்போடும் இனிமையோடும்

திரைகளின் பி;ன்னான

பள்ளத்தாக்குகளில்

மாயப்பறவையின் வினோதம் நிகழ்கிறது

இன்னும் காலியாகாத பானம்

மீதமிருக்கிறது

உன்னை நினைவூட்டியபடி

எப்போதும் பேசாமல் சேமித்திருக்கும்

எனக்கான உன் சொற்களின் ரகசியத்தில்

திரண்ட மகரந்தத்தில்

அமர்ந்திருக்கிறதென் வண்ணத்துப் பூச்சி

மலையின் உச்சிச் சிகரத்தில்

மீதிப்பானத்தோடு

ஒற்றைச் சிறகில் நடனமிடுகிறது

ஞாபகங்களும் கனவும் நிரம்பிய

என் மனம்

காத்திருப்பின் நிழல்

வீதியாய் நீண்டு

கடலாகி

வானத்தில் சேர்ந்து

விரிகிறது

வானமாகி

நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசைக்கப்பால்

சுழன்று கொண்டிருக்கும்

முடிலாப்புள்ளியின் காய்ந்த மலர்

இன்னும் வற்றாத ஞாபகங்களின் ரேகைகளோடு

படபடக்கிறது ரகசியங்களுக்காக

இப்போது

காலியாகி விட்டது பானம்

வானவில்லில் தெரியும்

அன்பறிந்த சொல்லை

மொழிபெயர்க்க முடியுமா உன்னால்

ஆயின்

என் காய்ந்த மலரிலும்

நடனமிடும்

வாசனையையும் தேன்துளியையும்

அறி

ஒரு கடைசி இரவு

எப்போதும் ஒளியூறும்

ஒரு திசைப்புள்ளியைச் சிதறடித்தபின்

அவர்கள் அந்த நள்ளிரவில்

பியர் அடித்தார்கள்.

நுரை பொங்கும் கண்ணாடிக்குவளைகளில்

காற்றின் குருதியை

நிரப்பிக்குடித்தார்கள்

அந்த இரவு முழுதும்

கொடூரத்தின் நிழல் கவியும் போதையில்

அந்த இரவு தள்ளாடியது

நரகத்தின் வாசலைத்திறந்து

அந்த மண்டபத்தில்

சிதறடிக்கப்பட்டவனின் குருதியை எடுத்துப்

பூவாய் அலங்கரித்தார்கள்.

அந்த மாளிகை கறுப்பாய் மாறியதை

அவர்கள் அறியவில்லை

அது பாம்புகள் விருந்துண்ட பேரிரவு

அன்றிரவு

அந்தத்திசைப்புள்ளி

நூறாயிரம் திசைமுகங்களாய்

திக்குகளெங்கும் பரவியது

பலி கொள்ளப்பட்டவனை

மறைக்க முடியாமல்

ஒளியானது அந்த இரவு

பதற்றத்தோடு

இருளில் மறைந்த திசைகளில்

அந்த ஒற்றையடிச்சுவட்டை

யாரின்னும் நினைவில் வைத்திருக்கக் கூடும்

அதை யாரால்

அடையாளம் காணமுடியும்

உதிர்ந்த மலர்களை

யாhர்தான் ஞாபகங் கொள்கிறார்கள்.

அவனுடைய தொலைபேசி இலக்கம்

அவன் எழுதிய இறுதிக்கட்டுரை

அவன் சொல்வதற்கிருந்த

ஏராளம் வார்த்தைகள்

எல்லாவற்றிலும் தீ மூண்டது

பாம்புகள் விருந்துண்ட பேரிரவில்

ஒருதிசைப்புள்ளியின் மீது வீழ்ந்தது

கிரகணம்

(தராகி டி சிவராம் நினைவாக )

வெளி

பெருவெளியில் இல்லை

படரும்

நிழல்

இல்லை நிழல்

வானத்துக்கும்

ஒரு நாள்

அந்த முற்பகலில்

அப்படியொரு நிலையில்

உன்னைச்சந்திப்பேனென்று

நான் நினைக்கவேயில்லை

அவர்;களால் தனித்துவிடப்பட்ட

பயணத்தின் ஓரவஞ்சனை

உன்னிதயத்தைச் சிதைத்திருந்தது.

மகிழ்வு ததும்பும்

உன் கண்களின் எல்லாக்கதைகளையும்

மறைத்தபடி துளிர்த்த கண்ணீர்

என்னைத்தடுமாற வைத்தது

கொந்தளிக்கும் இதயத்தின் வெக்கை

உன் வார்த்தைகளை உறுஞ்சியது

நீ பேசுவதற்கு விரும்பவில்லை

ஆயினும் சில வார்த்தைகள் சொன்னாய்

கோபமும் வேதனையும் நிரம்பிய குரலில்

உன் வார்த்தைகள் அவர்களைப்

பின்வாங்கச் செய்தது

அறிவின் ஒளி நிரம்;பிய

அந்த நியாயங்களை

அவற்றின் உண்மைகளை

கண்டு வியந்தேன்

கதையில்லாத கண்களின் கண்ணீரில்

என்னிதயம் கரைந்தொழுகியது

எங்;கும் பெருகியிருக்கும்;

பழியின்

சாறாய்

அதொரு சாபம் பெற்ற பொழுது

பிறகொருநாள்

இன்றிரவு

நீ முழுதாகப்பூத்திருந்தாய்

நட்சத்திரங்களுக்குக் கேட்கும்படியாகச் சிரித்தாய்

பலதை மறந்திருப்பதும் சிலதை நினத்திருப்பதும்

சந்தோசமானது

என்னவெல்லாமோ பேசினோம்

அப்போது

உன்னுடைய ஒளிப்படங்களைப்போல

நீ அழகாக இருந்தாய்

அந்தக்கண்கள் ஆயிரமாயிரம் கதை பேசின

குழந்தையைப்போல அழகாக

ஒரு குழந்தையின்; எளிமையாக

நான் இரண்டிரவுகள் தூங்காதிருந்திருக்கிறேன்

நீ அழுதபோதும்

நீ சிரித்தபோதும்.

.


poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்