பூக்கள் என் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

ரஜித்


பூமரம் நான்
பூக்களாக
என் கவிதைகள்
***
பட்டாம்பூச்சிக்கும்
பட்டு வண்டுக்கும்
அந்தப்புரமாம்
பூக்கள்
***
புதிய தலைமுறை
புறப்படும் இடம்
பூக்கள்
***
மழை செய்யும் மரம்
உணவு செய்யும் இலை
உயிர் செய்யும் பூக்கள்
***
மகரந்தச் சேர்க்கை
எவரும் அறிவார்
மதுவின் சேர்க்கை
எவருமே அறியார்
***
துல்லிய வண்ணம் சொல்ல
தூரிகைகள்
தோற்றுப் போகும்
***
வடித்தவனே
அறிவான்
வாசனை ரகசியம்
***
விதை யின்றி
கவிதை யில்லை
பூக்களின்றி
விதைகளே இல்லை
***
அர்த்தங்கள் தொலைக்கலாம்
அறுபதாண்டு வாழ்க்கை
ஒருநாள்தான் வாழ்க்கை
ஓராயிரம் அர்த்தங்கள்
***
வளர்த்த மண்ணுக்கு
மரங்களின் காணிக்கை
பூக்கள்
***

பூக்களின் சீதனம்
வனப்பு வண்ணம்
மணம் மது
***
தாவரங்களில்¢
விதவைகள்
பூக்களற்ற இனங்கள்
***
தேடிவரும் பூச்சிக்காய்
காத்துக் கிடக்கும்
ஓணான்கள்
காட்டிக் கொடுக்காது
பூக்கள்
***
அறுத்துப் போடும் குரங்குகள்
செரித்து முடிக்கும் புழுக்கள்
சலித்துக் கொள்ளாது
பூக்கள்
***
பூக்கள்
என் கவிதைகள்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்