பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

பா.சத்தியமோகன்



3540.

அளவிலாத புகழுடன் விளங்கும் ஏயர்கோன் கலிகாமர்

இவ்வாறு எண்ணினார்

அந்தப் பெருமையை பெற்ற நம்பி ஆரூரர் –

இதனைக் கேட்டார் ;

“இனி

இதற்கு

வேறு என்ன தீர்வு” என வேண்டிக்கொண்டார்

அழகிய கொன்றையும் கங்கையும் அணிந்த சடையுடைய

சிவபெருமானிடம்

அதனை விண்ணப்பம் செய்து –

3541.

நாள்தோறும் வணங்கிப்போற்றுகிற –

நாதராகிய சிவபெருமான் அதனை நோக்கினார்

அன்பால்

நீண்டவாழ்வு கொண்ட தொண்டர்கள் இருவரும்

தமக்குள் நட்பு கொண்டு

பொருந்தி வாழும்படி அருள்புரிவதற்காக

ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு

அவர் மேனி வாடும்படி

சூலைநோய் அருள் செய்தார்

3542.

குற்றமிலாத பெருமை நிறைந்த செயல்கொண்ட

ஏயர்கோன் கலிக்காமரிடம்

சிவபெருமான் ஏவிய சூலை நோயானது –

காய்ச்சிய வேல் குடைவதைப்போன்ற வேதனையை

மேலும் மேலும் உண்டாக்கியது

அந்த வலியினால்

உடைந்து வீழ்ந்து

ஐம்பூதங்களுக்கும் நாயகனாகிய இறைவரின்

பொன் அடிகளைப்பற்றிக் கொண்டார்

போற்றித்துதித்தார்

3543.

தன் சிந்தையாலும் வாக்காலும்

ஏயர்கோன் கலிக்காமர்

இறைவரின்

சீர்செய்யும் திருவடிகளைப்போற்றினார்

எம் தலைவரான ஏயர்கோன் கலிக்காமரிடம்

இறைவர் வந்து தோன்றினார்

“ உன்னிடம் வந்து வருத்தும் சூலை நோய்

வன்தொண்டன்

தீர்த்தால் தவிர தீராது” என

இறைவர் மொழிந்து அருளியதைக்கேட்டு –

3544.

“ எம்பெருமானே

என் தந்தையை –

அவர் தந்தையை –

தந்தையின் தந்தையை –

இவ்வாறு

எம் கூட்டம் முழுதுமே காக்கும் பெருமானே

வழி வழியாய்த்

தங்களின் திருவடியினையே சார்ந்து வாழ்கிறோம்

இத்தகைய இவ்வுலகில்

பெருகிய வாழ்வுடைய என்னை

வருத்தும் சூலை நோயை

புதிதாக ஆட்கொள்ளப்பட்ட ஒருவனோ தீர்ப்பான் ! ”

3545.

“ அந்த வன்தொண்டன் தீர்த்தால்தான் தீருமெனில்

அந்நோய்

எனை வருத்துவதே நல்லது

காளைக்கொடி உயர்த்திய பெருமானே

தாங்கள் செய்யும் பெருமையை

எவரால் அறிய முடியும்!

பொருந்திய வன்தொண்டர் சுந்தரருக்கே

ஆகின்ற உறுதியைச்செய்தீர்”

என்றதும் –

கற்றையான நீண்ட சடையுடைய இறைவரும்

அவர் முன்பிருந்து அப்போதே மறைந்தார்

3546.

வன்தொண்டரான சுந்தரரிடம் சென்று

வள்ளலார் சிவபெருமான்

இவ்வாறு கூறி அருளினார்:-

“ இன்று

நமது ஏவலாலே

ஏயர்கோன் கலிக்காமரிடம் ஏற்பட்ட சூலைநோயை

நீ சென்று தீர்ப்பாயாக”

உள்ளமும் உடலும் நன்கு மகிழ்ந்து

போற்றி வணங்கினார் சுந்தரர்

3547.

அன்ணலாராகிய சிவபெருமான் அருளி மறைந்தார்

விண்ணவர்களின் தேவதேவரான இறைவரின் ஏவலால்

நம்பி ஆரூரர்

விரைந்து செல்ல எண்ணினார்

ஏயர்கோன்கலிக்காமரிடம் கொண்ட நட்பினால்

காதலினால்

வலிமையான சூலைநோயை

தீர்ப்பதற்கு வரஇருப்பதைத் தெரிவிக்க

தூதரை அனுப்பிவிட்டார்

3548.

சிவபெருமானின் திருவருளால்

ஏயர் கோன் கலிக்காமரைத் துன்புறுத்தியது சூலைநோய்;

அதற்குபிறகு –

இறைவர் உரைத்து அவரது

செவி கேட்டதும் துன்பமொழிதான்;

இவையே

வருத்திக்கொண்டிருக்கும்போது –

“இத்தனைக்குப்பின்னும்

எம்பிரானாகிய இறைவரையே தூதுவராக ஏவிய

வன்தொண்டர் இங்கு வந்து

எனது சூலைநோயைத் தீர்க்கின்ற

பெரும் கேடும் வந்தால்-

“யார் என்ன செய்ய முடியும்!” என்பவராகி –

3549.

சுந்தரன் இங்கு வந்து

என் சூலை நோயைத்தீர்க்கும் முன்பாக

இறக்கும் அளவு வேதனை தருகிற

நீங்காத

பாதகமான

இந்த சூலைநோயை

அது பொருந்தித் தங்கியிருக்கும் வயிறோடு கிழிப்பேன்

நான் அழித்துவிடுவேன்” எனத்துணிந்து

தன் உடைவாளால் வயிற்றைக்கிழித்தார்

சூலை நோயுடன்

உயிரும் தீர்ந்தது

3550.

நினைத்துப்பார்க்கவும் இயலாத அளவு

பெருமையும் அன்பும் கொண்ட

ஏயர்கோன் கலிக்காமர் மனைவி

ஒப்பிலாத தன் கணவரோடு

தன் உயிரும் போக விரும்பினார்

அதற்குரிய நிலையை அமைக்கும்போது –

“நம்பி ஆருரர் இங்கு வந்துள்ளார்” எனும் தகவலை

முன்வந்தவர் கூறினர் –

“ ஒருவரும் அழவேண்டாம்” என

உடன் இருந்தவர்களுக்குச் சொல்லிய பிறகு –

3551.

தன் கணவர் செய்த செயலை மறைத்தார்

காவலர்களை நோக்கி

“நம்பி ஆரூரர் வருவதற்குள்

இங்கு

மிக நன்றாக அலங்கரிக்கப்பட வேண்டும்

எதிர் சென்று

வரவேற்று அழைத்து வாருங்கள்!”

என ஏவினார்.

உடனே

நிலையுடைய வாசலில்

தீபத்துடன் பூரண கும்பத்துடன்

மலர்மாலை கொத்துகள் தொங்கவிட்டு

நம்பி ஆரூரரை எதிர் கொள்ளச் சென்றனர்.

3552.

செம்மை சேர்ந்த சிந்தனை உடைய மக்கள்

ஆளுடைய நம்பியை எதிர்கொண்டு

மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர் துதித்தனர்

உண்மையான விருப்பத்தோடு பொருந்தி உள்ளே புகுந்தார்

மிக்க மலர்கள் தூவிய இருக்கை மீது

முகம் மலர்ந்து அமர்ந்திருந்தபோது –

3553.

விதிமுறைப்படி அமைந்த அர்ச்சனைகள் யாவற்றையும்

பண்போடு ஏற்றுக் கொண்டார்

நான்கு வேதங்களையும் தொடர்ந்த

வாய்மையுடைய நம்பி ஆரூரர்

பிறகு

“மிக்க துன்பம் செய்யும்

கொடிய சூலை நோயை நீக்கி

ஏயர்கோன் கலிகாமருடன்

மகிழ்ச்சியாக

உடன் தங்கி இருப்பதற்கு இயலாதே”

என மிகவும் வருந்துகிறேன் என்றார்.

3554.

அம்மையாரின் ஏவலின் படி

இல்லத்தில் தொழில் செய்யும் மக்கள்

“இங்கு கெடுதி ஒன்றும் இல்லை

கலிக்காமர் உள்ளே உறங்குகின்றார்” என உரைத்தனர்

நம்பி ஆரூரர் அதனைக் கேட்டு

“தீமையின் சார்வு ஏதுமில்லை என்றாலும்

என் மனம் தெளிவு கொள்ளவில்லை

ஆதலால்

அவரை நான் காண வேண்டும்” என்று கூறி அருளினார்.

3555.

இவ்வாறு

வன் தொண்டர் கூறியதும்

மற்றவர்கள் நம்பி ஆரூரரை அழைத்துச் சென்று

கலிக்காமரைக் காட்டினர்

நிரம்ப இரத்தம் வெளிப்பட்டு

சோர்ந்து

தொடர்ச்சியுள்ள குடல் வெளியே வந்து

உயிர் நீங்கிக் கிடந்த

அவரைக் கண்டார்

பார்த்ததும் “நன்று ! ” என மொழிந்து

“நானும் இவர் முன்னே இவ்வாறே சாவேன்” என்றார்.

3556.

தற்கொலை முடிவுடைய மனத்தை உடையவராகி

குத்திக் கொள்வதற்குரிய உடைவாளினைத்

தம் கையால் பற்றினார்

பற்றியதும்

ஆளுடைய நம் இறைவரின் அருளால்

கலிக்காமரும் உயிர் மீளப்பெற்று

“நட்புடையவராகிக் கெட்டேனே” என விரைந்து எழுந்தார்

நம்பி ஆரூரரின் கையிலிருந்த

வாளைப் பிடித்து தடுத்தார்

வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.

3557.

நம்பி ஆரூரர் வணங்கி விழுந்ததும்

ஏயர்கோனும் வாளை அகற்றிமுடித்தபின்

நம்பி ஆரூரரின்

ஒலிக்கும் கழல் அணிந்த

பாதங்களில் பணிந்து வீழ்ந்தார்

அன்று நிகழ்ந்த இந்த அதிசயத்தைக் கண்டு

தேவர்கள்

அழகிய மலர்மழை பொழிந்தனர்

மண்ணுலகத்தினர் துதித்தனர்.

3558.

இருவரும் விழுந்து வணங்கியபின் எழுந்து

இடைவிடா நட்புடன் தழுவிக் கொண்டனர்

ஒப்பிலாத மகிழ்ச்சி பொங்க

திருப்புன்கூர் சென்று

புனிதராகிய இறைவனின் பாதத்தில்

பொருந்துமாறு வணங்கி நின்று

வன் தொண்டரான நம்பி ஆரூரர்

பெருமானின் திருவருளை நினைத்து

“அந்தணாளன்” எனத் தொடங்கிப் பாடினார்.

3559.

சிலநாட்கள் கழிந்தன

சில பகல்கள் கழிந்தன

தம்மோடு வந்த ஏயர்குலத் தலைவரான கலிக்காமருடன்

புகழுடைய திருவாரூரில்

மகிழ்ச்சியுடன்

குளிர்ந்த பூங்கோயிலில்

நிலையாக வீற்றிருக்கும் இறைவரை

நிறைந்த அன்பினால் கும்பிட்டு

அங்கு தங்கியிருந்தனர்.

3560.

திருவாரூரில்

விரும்பித் தங்கியிருந்த பிறகு

நம்பி ஆரூரரிடம் விடைபெற்று

மீண்டும் தம் நகரம் சென்று தங்கினார்

அத்தகைய காலத்தில்

ஏயர்கோன் கலிகாமர்

தமக்கேற்ற தொண்டு செய்தார்

சிவந்த கண்ணையும் பெருமையும் கொண்ட காளையை

ஊர்தியாக உடைய இறைவரின் திருவடிகளை

சிறப்புடன் சேர்ந்தார்.

3561.

நடுஇரவிலே

தமது இறைவரைத்

தூதாக அனுப்பிய

நம்பி ஆரூரரின் நண்பரான வள்ளலார் ஏயர்கோனின்

மலர் போன்ற திருவடிகளை வணங்கி

உள்ளே உரைத்தக்க

ஞானம் முதலான

ஒரு நான்கின் உண்மையைத் தெளிவிக்கும்

இனிய தமிழால்

தெள்ளு தீந்தமிழால்

திருமூலநாயனாரின் பெருமையைச் சொல்லப் புகுகின்றேன்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் முற்றியது)

36 திருமூல நாயனார் புராணம்

3562.

அந்தியில் தோன்றிய இளம்பிறையை

மாலையெனச் சூடிய அண்ணலார் சிவபெருமானின்

கயிலை மலையில்

பழமையாய் உள்ள திருக்கோவிலுக்கு

முதற்பெருநாயகமாக

முதற்பெரும் காவலராக தலைமையேற்று

இந்திரன் – திருமால் – நான்முகன் முதலிய தேவர்களுக்கு

நெறியை அருள்கிற தொண்டினைப் புரியும்

நந்திபெருமானின் திருவருள் உபதேசம் பெற்ற

நான்மறைச் சிவயோகியார் ஒருவர் இருந்தார்.

3563.

அவர்-

“அணிமா” முதலான

அரிய எட்டுவகை சித்திகள் கொண்டவர்

இறைவனின் திருக்கயிலை மயிலையில்

“குறுமுனி” என அழைக்கப்படும் அகத்தியரிடம்

கொண்டிருந்த தொடர்பால் நட்பால்

சிலநாட்கள்

அம்முனிவருடன் தங்குவதற்கு

நல்ல தமிழ் வாழும் பொதிய மலை செல்ல

வழிகொண்டு புறப்பட்டார்

3564.

கயிலாய மலையிலிருந்து புறப்பட்டு

நிலைத்த புகழுடைய

பசுபதி நேபாளத்தைப்

பணிந்து துதித்தார்

நெருங்கிய சடையுடைய சங்கரானார் ஆகிய சிவபெருமான்

ஏற்றுக்கொண்ட

தூயநீர் உடைய கங்கை ஆற்றில்

அன்னப்பறவைகள் நிறைந்த

அகன்ற நீர்த்துறையின்

அரிய கரையின் பக்கமாக வந்தார்

( சிவநெறியில் நிற்கும் நேபாள நாடு,

அரசு மரபைக்கொண்டது.

அது பசுபதி நேபாளம் என்று போற்றபடும்)

3565.

அந்த யோகியார்

கங்கை நீர்த்துறையில் நீராடினார்

பிறவித்துறையை உடைய கடலிலிருந்து கரையேற்றுகிற

அங்கணராகிய சிவபெருமான் மகிழ்ந்து அருள்கின்ற

அவிமுத்தம் எனும் காசியை வணங்கித் துதித்து

மேகங்கள் தங்குவதற்கு இடமான

விந்த மலையையும்

நிலைபெற்ற “ சீ பருப்பதம் எனும் sriசைலம் வணங்கினார்

இறைஞ்சினார்

பிறைச்சந்திரன் சூடிய திருக்காளத்திமலை சென்றார்

( அவிமுத்தம் – காசிமுத்தம் – நீங்குதல்)

வி – சிறப்பு உணர்தும் சொல்.

அவிமுத்தம் – விசேடமான நீங்குதல்

“அ” என்ற எதிர்மறை சேரும்போது பிறவிக்கடலில் புகுதல் இல்லாது செய்வது என்பது பொருள் )

3566.

நிலையான திருக்காளத்தி மலை மீது நிலவுகின்ற

தாணுவான சிவபெருமானை வணங்கினார்

பிறகு-

அருள் கூத்தாடும்

“திருவாலங்காடு” எனும் தலம் தொழுதார்

துதித்தார்

மண்ணுக்கும் விண்ணுக்கும் தேடிய

திருமாலுக்கும் நான்முகனுக்கும் காண்பதற்கு அரிதாய் நின்ற

சிவபெருமான் வீற்றிருக்கும்

திருஏகாம்பரம் பணிந்தார்

உயர்ந்த பொன்னால் ஆன மதில்கள் கொண்ட

நீர்வளம் மிகுந்த காஞ்சிபுரத்தில் தங்கினார்

3567.

அழகிய தலமான

அந்த காஞ்சிபுரத்தில்

சிவயோகியான முனிவர்களை விரும்பி வணங்கினார்

பிறகு –

கல் மதில் சூழ்ந்த வீரட்டானம் சென்று வணங்கி

நீலகண்டத்தை உடைய இறைவர்

அற்புதக் கூத்தாடுகின்ற

திருஅம்பலம் சூழ்ந்த திருவீதிகள் உடைய

பொற்பதியான “ பெரும்பற்றப்புலியூர்” எனும்

தில்லையாகிய சிதம்பரம் வந்து அடைந்தார்

3568.

எல்லா உலகும் உய்யும்படி

தூக்கிய சேவடி உடைய கூத்தப்பெருமானின்

செவ்விய அன்பை நினைத்து வணங்கினார்

சிந்தை களித்து

அந்த அனுபவத்தில் திளைத்தார்

உயிர் போதம் தாண்டி

மெய் உணர்வான

சிவபோத நிலையில் வெளிப்படும்

சிவ ஆனந்தக்கூத்தை

முழுதுமாக

அவ்வியல்பில் நின்று கும்பிட்டார்

அப்பதியில் விருப்புடன் தங்கியிருந்தார்.

(பதி – தலம்)

3569.

பெரும் நிலைகள் கொண்ட மாளிகைகள் உடைய

பெரும்பற்றபுலியூரில் தங்கி

வணங்கிய பிறகு

“வலிமையுடைய காளை மேல் வரும் இறைவர்

அமுது செய்யும்படி

சற்றும் அஞ்சாமல்

நஞ்சினை அளித்தது கடல் பகுதிதானே” என எண்ணி

உலகுக்கு அனைத்து வளமும் அளித்து

கடலின் வயிற்றை நிறைக்காத

காவிரியின் கரை அடைந்தார்.

3570.

காவிரி நீரான பெருமையுடைய தீர்த்தத்தில்

கலந்தாடினார் கரையேறினார்

பசுவின் கன்றுபோல

உமை அம்மை தவம் புரியும்

திருவாவடுதுறை சென்று சேர்ந்தார்

பசுபதியான இறைவரின்

செழுமையான கோவிலை வலம் வந்து வழிபட்டார்

பொருந்திய பெரும் காதலால் வணங்கினார்

அங்கே விருப்பம் உடையவராகி –

–இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்