அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்)



(1) முனகல்கள்
—————-

எங்கிருந்து முனகல்….
எதிலிருந்து
இந்த அன்னத்தூவிகள்..
எதற்குள்ளிருந்து இப்படி
படாம்பூச்சிகளின்
வண்ணக்கொப்புளங்கள்…
பாறைகளின் அடியில்
கண்ணாடிச்சிறகுகள்.
தட்டாம்பூச்சிகளின்
“டிஷ்யூ” சிறகுகளில் கூட
கண்ணுக்குத்தெரியாத
முள் குத்திய காயங்கள்..
அதோ வேக வேகமாய்
கலைந்து செல்லும்
மேகங்கள்.
அதன் மீது
“பேப்பர் வெய்ட்டுகளாய்”
என் கனவுகள்..
னாலும்
துரத்தல்களே இங்கு
வாழ்க்கையாகிப்போனது.
கனவுகளை
துரத்துபவனுக்கே
வாழ்க்கை.
கனவுகள்
துரத்துபவனுக்கு
கவிதைகளே
மிச்சம்.

(2) அசையும் திரைச்சீலைகள்

அதோ
அந்த திரைச்சீலை
டிக்கொண்டிருக்கிறது.
அதில்
அச்சிட்ட பூக்கள்
ஒடிந்து ஒடிந்து சிதறி
மீண்டும் மீண்டும்
உயிர் பெறும்
நட்சத்திரங்களாய்
நாடகம் காட்டின.
சாளரம் வழியாய்
நுழைந்தன ஈக்கள்.
வெளியேறின கவிதைகள்.
சன்னல் கம்பிகள்
ஒரு மின்னலின்
இமை மயிர்களிலிருந்து
வெள்ளி உருக்கி வழிந்ததை
அள்ளிப்பூசிக்கொண்டன.
தலையணைக்குள்
கண்கள் புதைத்தேன்.
திரைச்சீலை நெளிவுகளில்
பிக்காசோவின்
நசுங்கிய தூரிகைகள்.
திரைச்சீலை சுழிவுகளில்
ஓரச்சிரிப்போடு
கடித்துக்கொண்ட
அவள் உதடுகள்…
இன்னும்
அந்த திரைச்சீலைகள்
காகித கசக்கல்களாய்
சுருட்டி சுருட்டி
எறிந்தன.
கருப்புக்குள்
முக்குளித்தது போதும்.
இருட்டு எனும்
இந்த தார் டின்களை
கொட்டியது யார்?

(3) நிப்பு முனைகள்

கடிகார முள்ளின்
ஒவ்வொரு கணமும்
கனத்தது.
அது
குத்தி துளைத்து
குத்தி துளைத்து
காலத்தின்
வயிற்றிலிருந்து
சரிந்த குடல்கள்.
அதையும் கூட
மணக்கும்
ஏலக்காய் மாலைகளாய்
சூட்டிக்கொண்டு
மகிழும் போதையில்
கவிதை எழுதும்
கசாப்பு புத்திரர்களே!
எங்களை
கழுவில் ஏற்ற
உங்கள்
நிப்புமுனைகள் தானா
கிடைத்தது?

(4) நாக்குகள்

அந்த முதல்
சிக்கி-முக்கிக் கல்
காறி உமிழ்ந்த
தீச்சாரலில்
குளிர்
சூடு வைத்தது.
ஈசல்கள் இற்று வீழ்ந்தன.
சிலுவைகளில்
ரம்ப நாக்குகள்
கவ்விக்கிடக்க
கோரைப்பற்கள்
இறகு பேனாக்கள் கொண்டு
வசனங்கள் எழுதித்தீர்த்தன.
வானத்தின் உச்சிக்கு
குழைந்து நீட்டிய
உள் நாக்கில்
தொங்கிக்கிடந்தன
தொழுகைப்பிண்டங்கள்.

(5) அனக்கொண்டா

ஒரு கவிதையின்
நீண்ட பாதை
எப்போதும் என்னை
விழுங்கிக்
கொண்டேயிருக்கும்.
அந்த அனக்கொண்டாவில்
பேனா எலும்புகள்
நொறுக்கப்படுகின்றன.
எழுத்துக்கள் கூழாகின.
தேடிப்பாருங்கள்
அதில்
இதய நாளங்களை.

(6) விடியல்

மேஜை விளக்கின்
அடியில்
கனத்த இருட்டு வானத்தை
கட்டிப்போட்டேன்.
பொசு பொசு வென்ற
அந்த பொமரேனியனின்
கழுத்து சங்கிலி..
கண்ணி கண்ணியாய்
உடைந்து சிதற
வானத்துண்டுகள்
என் இமையோரம்
வீழ்ந்து கிடந்தன.
யார் முகம் அது?
இப்போது
சங்கிலி என் கழுத்தில்.
கட்டியது யார்?
இரவு எனும்
அந்த கம்பங்கூழ் குடித்து
நொதித்துப்போனேன்.
விடியலின்
புளிச்ச ஏப்பம்.
கிழக்கில்
சூரியனில் வாந்தி.

(7) பாடல்

துணித்தொட்டிலை
குலுக்கி குலுக்கி
தாலாட்டுகிறாள் தாய்.
குழந்தையின் விழிகள்
செருகின்றன.
மெல்லிய தூக்கம்
போர்த்துகிறது.
தாலாட்டுப்பாடல்
இந்த
பூமத்திய ரேகையின் வழியே
இரண்டாய் பிளக்கிறது.
கடலின் தாகம்
கடலையே குடிக்கிறது.
தொப்பூள் கொடியில்
கிடார் நரம்புகள்
முறுக்கேறிய இசை.
விருதுகளுக்கும்
பரிசுகளுக்கும்
அப்பாற்பட்ட இசை.
னந்த கனவில்
தூக்கத்தின் நடுவில்
குழந்தை பெய்த
மூத்திரத்தில்
‘கிராம்மி அவார்டு’ இசைச்
சமுத்திரங்கள் கூட
நனைந்து போயின.
உலகக் கோளத்தின்
உட்கோளம் எல்லாம்
நெருப்பின் குழம்பு.
தாயின் கருப்பை
அங்கே அல்லவா வேர்
பிடித்திருக்கிறது.
உயிர்ப்பிழம்பின்
இதமான அன்பின் வெப்பம்
அங்கே
இசையாய்
இறைந்து கிடக்கிறது.

================================
அமானுஷ்ய புத்ரன். – epsi_van@hotmail.com –
07-02-2007

Series Navigation

அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்)

அமானுஷ்ய புத்ரன் (இ.பரமசிவன்)