கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அந்த நாள் வரப்போகு தென்று
அறிபவன் நான்,
கண் பார்வை யிழந்து
மண் பூமி தெரியாத போது!
விழித்திரை யிட்டு
விடுவித்துக் கொள்ளும் என்னுயிர்
நிசப்த நிலையில்!
இரவு வானில் ஆயினும்
என்னைக் கண்காணிக்கும்
விண்மீன்கள்!
விடியும் காலைப் பொழுது
கடந்த நாளைப் போல!
கடல் அலைபோல் இன்ப துன்பங்களில்
மாந்தரை உலுக்கும்,
காலத்தின்
மணிக் கணங்கள்!
ஆயுளின் அந்தி வேளையில் மனத்தின்
அரண் மதில்கள் உடைந்து,
பரிவற்ற களஞ்சியம்
நிரம்பிய
உனது உலகைக் காண்கிறேன்,
மரண வெளிச்சத்தில்!
தாழ்வான ஆசனம் என்ப தில்லை!
கீழான வாழ்க்கை யென ஒன்றில்லை!
வீணாக ஆசை
ஊட்டிய பொருட்களும், வாழ்நாளில்
ஈட்டிய சொத்துக்களும்,
நீங்கி விட்டென்னை
விலகட்டும்!
எறிந்து விட்ட துரும்புகளும்,
நினைவில்
புலப்படா அற்பப் பொருட்களும்,
துணையாய் எனக்கு
நிலைக்கட்டும்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 24, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா