அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

கரு.திருவரசு


என்னால் உனக்கெதும் ஆகுவதோ!

எதற்கு வந்தனை? எனக்கேட்க

“முன்னிரா நேரம் என்வீட்டு

முன்றில் நிற்பீர், உணவளிப்பேன்!

என்னை நீவிர் மறந்திருப்பீர்

என்னால் மறக்க இயலவில்லை!

என்னைக் காத்து வாழ்வளிக்க

இறைஞ்சு கின்றேன்!” என்றனளே

பார்த்த நினைவு வருகிறது

பாவாய் உன்னைத் தெரிகிறது!

போர்த்த இருள்போல் உன்சொற்கள்

புரிந்திட வில்லை, தெளிவையினும்

சேர்த்துச் சொல்வாய், உன்னையான்

காத்த லென்னோ? எனத்துறவி

பார்த்தார் அவளைப் பரிவோடு

பாவை தொடர்ந்தாள் துணிவோடு

என்னழகு! என் ஆற்றல்!

– இன்னிசைக் கலிவெண்பா –

காளையரை வேலைவிட்டு மாலைவரை காக்கவைத்துச்

சாலையிலே நான்போகும் காட்சிக்கே ஏங்கவைத்து

வீரர்களைச் சோரவைத்து வேட்கையிலே ஊறவைத்து

சாரமிலாச் சக்கையெனத் தாமாக மாறவைத்து

ஆடவரை ஆடவைத்து ஆசையினால் வாடவைத்து

மாடுமனை விட்டென்றன் மஞ்சமொன்றே நாடவைத்து

மாய அரசோச்சும் மாண்பழகு என்னழகு!

பேயாட்டம் ஆடுகின்ற பேரழகு என்னழகு!

கண்ணிமையால் வாவென்று காட்டிவிட்டால் ஓர்சாடை

மண்ணை மறந்துவிட்டு மன்னவரே வந்துநிற்பார்!

புன்னகையை ஒவ்வொன்றாய் எண்ணிவைத்தே அத்தனைக்கும்

பொன்னகைகள் செய்துவந்து பூட்டிவிட முந்திநிற்பார்!

“வீணை எடுத்துவைத்து மானே இசைத்துவிட்டு

ஆணை எதுவுமிடு, அக்கணமே செய்வ”னென்பார்!

தட்டும் இசைத்தாளத் தொட்டி நடனமிட்டால்

கட்டிப்பொன் அள்ளிவந்து காலடியில் கொட்டிடுவார்!

“இட்ட அடிதொடர்ந்து வந்துவிடு!” என்றுசொன்னால்

கொட்டிப் பொருள்குவித்தே கோடிப்பேர் பின்வருவார்!

அத்தனை ஆற்றலுள்ள ஆரணங்கு இவ்வணங்கு!

இத்தனையும் பெற்றிருந்தும் என்னுள்ளத் தின்பமில்லை!

வருவதெல்லாம் வண்டு, வாழ்வெங்கே?

உள்ளத்தை நாடியென்றன் உள்ளுணர்வைத் தேடியரு

வள்ளல் வருவாரோ, வாழ்வோமா! என்றேங்கிக்

காத்துச் சலித்துவிட்டேன்! காலடியில் ஆண்களெல்லாம்

காத்துக் கிடந்தாலும் பார்த்தேன் ஒருவரிலர்!

தேடி வருவதெல்லாம் ஓடிவிடும் வண்டதனால்

நாடுமொரு நாயகனை நானே வரிப்பதல்லால்

வேறு வழியில்லை, வந்துவிட்டேன் வள்ளலேநீர்

கூறுவீர் என்முடிவில் குற்றம் உளதாமோ!

என்று மொழிந்துவிட்டு நின்றாள் இளைப்புக்கு

என்னால் இயன்றதெல்லாம்…

நன்று மொழிந்தனைநீ ஒன்றும் மறைக்காமல்!

வந்த வழியினிலும் குற்றமில்லை, நீவாழ்ந்த

முந்தைய வாழ்வினிலும் உன்குற்றம் ஏதுமில்லை!

உன்னை உணர்ந்துவிட்டாய், ஓர்வாழ்வை நாடுகின்றாய்!

என்னால் இயன்றதுவாய் ஏதும் உளதென்றால்

உன்னையும் பௌத்த உயர்சங்கம் சேர்த்துவிட்டு

நன்னெறியும் தூய நறுவாழ்வும் காண்பதற்குப்

பாதை வகுக்கும் பணியன்றே! நீவிரும்பின்

போது புலர்ந்ததும் போவோம், வருவாயா?

என்றார் உபகுப்தர், ஏந்திழையாள் எண்ணமென்ன?

அழைப்பும் மறுப்பும்

நன்றி அழைப்புக்கு, நல்லவரே! வள்ளலே!

மஞ்சள் உடையும் மழித்த தலையதுமாய்ப்

பிஞ்சில் காயப் பிறக்கவில்லை தாங்களென்பேன்!

காய்ந்த புழுதியிலே கையை அணைவைத்துச்

சாய்ந்திருக்கத் தக்க உடலல்ல தங்களுடல்!

பேரழகு நற்கலையின் பேர்விளங்கும் பான்மையிலே

சீருடனே சித்தரித்த செம்மை அறையினிலே

தூய மணங்கமழத் தோழியர்கள் யாழெடுத்து

மாய இசைபோல மெல்ல இசைத்திருக்கப்

பஞ்சுக்குப் பட்டுடுத்திப் பட்டில் மலர்பரப்பி

மஞ்சம் அமைத்துள்ளேன் மன்னவரே உங்களுக்காய்!

கொஞ்சம் எழுவீரிக் கோதையுடன் வந்தில்லில்

துஞ்சி நலம்பெறுவீர் தூயவரே! என்றழைத்தாள்!

தொண்டுச் சுவையன்றே கண்டார், அவளழைப்பைக்

கண்டே குறுநகை சிந்திக் கனிவுடனே

நன்றி மொழிகின்றேன், நங்காயிந் நள்ளிரவில்

வென்றோனை வாவென் றழைப்பதனால் நானுன்பால்

செய்துவிட்ட குற்றம் தெளிவாய்த் தெரிந்துகொன்டேன்!

உய்வுபெற நீதான் உதவினாய் என்றுன்னை

உள்ளத்தே வைத்திருப்பேன், உன்னழைப்பை ஏற்காமல்

தள்ளல் பொறுத்துநீ இல்லம் திரும்பென்றார்!

— ஓவியம் வளரும்.

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

கரு. திருவரசு


வணக்கமும் வேண்டுதலும்

– வஞ்சிவிருத்தம் –

தமிழே உணர்வா யானதால்

தமிழே அறிவா யானதால்

தமிழே உயிரா யானதால்

தமிழே நினைக்கை கூப்புகிறேன்!

– ஆசிரிய விருத்தம் –

சிறுபிள்ளை மணல்வீடு செய்தல் போலச்

சின்னஞ்சிறு சொல்லடுக்கிப் பாட்டென் றாடிக்

குறுகுறுத்துத் திரியுங்கால் ஏனோ ஆவல்

குறுங்காவி யமொன்று பாட வந்தேன்!

மறுவின்றிக் கதைப்பாட்டு காவியம்போல்

வந்துவிட்டால் தமிழ்த்தாயே மகனை வாழ்த்து!

குறுமைபல உண்டென்று கண்டால் இந்தச்

சிறுவனைநீ பொறுத்தருள வேண்டும் அம்மா!

காலமும் நிலையும்

– நிலைமண்டில ஆசிரியம் – இந்தியப் பெருநிலம் ஈன்ற மக்கள்

சிந்தனை மிக்கவர் செயற்றிறம் பெற்றவர்

என்ற பெருநிலை தேய்பிறை யாகித்

“தென்றல் நிகர்த்த பெண்தரு மின்பம்

தேவை தேவை அதுபே ரின்பம்!

பாவை உடலைப் பார்க்கவே விழிகள்

தேன்மொழி கேட்கவே தந்தான் செவிகள்

ஊன்மணம் நுகரவே மூக்கெனும் உறுப்பே

பூவிதழ் அமுதைப் பருகவே நாவே

தாவித் தழுவிக் களிக்கவே உடலே”

என்றே மாந்தர் இலக்கணம் கண்டு

நன்றாய்க் காமக் கடலினுள் வீழ்ந்து

மூழ்கி எழுந்து துரும்பாய் அலைந்து

தாழ்வை அணைக்கத் தாவிய காலம்!

பெண்மக வொன்று பிறந்தா லதனைத்

தன்மக வேபோல் அரசே ஏற்றுத்

தக்க பருவ நாள்வரை வளர்த்து

மிக்க அழகுப் பெண்ணாய் மலர்ந்ததும்

எவரும் மணவாப் பொருளாய் வைக்கும்!

அவளை அடையும் பேறு யார்க்கெனின்

ஒருகனி தன்னை ஊர்க்குரங் கெல்லாம்

துருவித் தின்னும் கேவலக் கதைதான்!

பத்துக் கைகள் படக்கென ஒன்றாய்

முத்துக் கனியைப் பறித்திட முந்தின்

பகைமைத் தொல்லை கொலைக்கும் போகும்

வகையை எண்ணி வஞ்சியர் நெஞ்சம்

விரும்பும் வண்ணம் முதலிரண் டென்றே

வருவோம் என்ற வரைவறை செய்தும்

வாய்ப்பை நல்கல் வருவார் பொருளை

வாய்க்கும் அளவு வாங்கல் எல்லாம்

அவர்க்கே உரிமை எனமுறை செய்தும்

ஆட்சி நடத்திய அரசும் இருந்த

மாட்சி மிகுந்த மங்கிய காலம்!

பூவை பொதுமகள் எனவும் நல்ல

பாவை பரத்தை எனவும் அழகுக்

கன்னி கணிகை எனவும் இன்பக்

கலைமகள் கூசும் விலைமகள் எனவும்

தேசுறு நங்கை தாசி எனவும்

மாசுறு வாகி வேசி எனவும்

பொல்லாப் பெயர்கள் மெல்லியர் தமக்கு

மெல்ல மெல்ல வந்த நாளிலே

அறிவை மதித்தும் அன்பைத் துதித்தும்

நெறியைக் குறித்துத் தகுவழி வகுத்தும்

விதியாய் வந்த கொடுமை எதிர்த்தும்

மதியாய்க் கதிராய் மனித்த உருவில்

புத்தப் பேரொளி புறப்பட் டொளிர்ந்தது!

புத்தத் தொண்டர் பொதுப்பணி விரிந்தது!

புதுப்பணித் துறவி

பொதுப்பணி செய்த சமயத் துள்ளே

புதுப்பணி செய்தே புத்தம் பரந்திடப்

புதுப்பணிக் குள்ளே தலைப்பணி யாக

“விதிப்பய னென்றும், வீரர் தொடங்கி

வேந்தர் ஈறாய் விழிக்கொடைக் காக

மாந்த ரெல்லாம் ஏங்கிக் கிடக்கும்

நிலையை, வாய்த்த உயர்நிலை யென்றும்

மயங்கிக் கிடந்த கணிகையர் தம்மைத்

தெளிவுறச் செய்யும்” ஒளிப்பணி செய்தார்!

வேசிகள் என்றே ஏசி விடாமல்

தாசிகள் என்றே தள்ளி விடாமல்

பாவிகள் என்றே பகைத்து விடாமல்

இரக்கம் காட்டி இழிநிலை மாற்றித்

துறக்கமும் காட்டும் தூய்பணி செய்ததால்

புத்தத் துறவியர் பொதுவாய்க் கணிகையர்

சித்தத் துள்ளே தெய்வ மதிப்பை

எளிதாய்ப் பெற்றே அரிதாய் ஒளிர்ந்த

நிலையில், மனத்தால் அலையாத் துறவி

ஒருவர், உபகுப் தரெனும் பெயரியர்

மதுரை நகரின் ஒருபால் இடிந்த

மதிலின் அருகே கிடந்த நிலத்தில்

இரவைக் கழிக்க எண்ணி மெதுவாய்

உறக்கத் தாயின் உறவுபெற் றனரே!

பெண்ணும் பிக்கும்

– ஆசிரிய விருத்தம் -இல்ல விளக்குகள் அணைந்திடவும்

எல்லா மக்களும் உறங்கிடவும்

மெல்லக் கருமுகில் வானத்திலே

மேவி நிலவினை மறைத்திடவும்

அல்லெனும் பெயரின் முழுவடிவம்

அறிகென அடர்ந்திருள் பரவிடவும்

மெல்ல இலைவிழும் ஒலிகூட

“மெத்”தெனும் அமைதி மிதந்திடுங்கால்

சல்சல் சல்லென விளம்பத்திலே

தாளம் தந்திடும் அடிவைத்து

புல்லிக் கிடக்கும் உலகிருளைப்

பிரித்தே இடைவரும் விளக்கோடு

மெல்லியல் ஒருத்தி வந்தனளே!

மேதகு துறவிமுன் நின்றனளே!

வல்லியின் முகமோர் நிலவாகி

மகிழ்வில் ஒளிர மெதுவாக

விளக்கைத் தரையில் வைத்துவிட்டு

முழங்கால் கொண்டு மண்டியிட்டு

தளிர்க்கை விரலால் துறவியவர்

தாளைத் தொட்டாள்! அக்கணமே

பளிச்சென எழுந்தார் உபகுப்தர்

பாவையைக் கண்டார்! நள்ளிரவில்

ஒளித்துணை யோடு வந்தென்னை

எழுப்பிய பெண்ணே, நீயாரோ!

— ஓவியம் வளரும்

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு