பருவ மழை

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

ஸ்ரீமங்கை


அன்று
இப்படிப் பெய்யவில்லை
மின்னல் வெட்டி
காற்றை ஈரித்து
நெட்டிலிங்க மரம் வளைத்து,
முருங்கைக்கிளை சுளுக்கி,
விஸ்தார வயல்களில்
பெரிதாகப் பெய்யுமென
மண்வாசனைக்காய்
மூச்சடக்கிக் காத்திருக்கையில்

அன்னியக்காற்றோடு
மேல்திசைபோன
மேகங்களை நினைவில் சுமந்து
நில வெடிப்புகளில்
ஏக்கங்கள் விதைத்தேன்
மீண்டும்.

இன்று
புதிதாக முளைவிட்ட
செங்கீரைப்பாத்தியில்
காலையில் பாய்ச்சிய நீர்
காயுமுன்னே
முன்னறிவிப்பின்றி
இக்கருமேகங்கள் கொட்டும்
மழை ரசிக்கவில்லை

கீரைப்பாத்தியோடு முழுகுவேனோ
நானும்?

kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை