கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



சோம்பிக் கிடக்கும்,
முடங்கிய நாட்களில் நானிழந்த
கடந்த காலத்தை எண்ணிக்
கவலை யுற்றுக்
கண்ணீர் விட்டேனா?
ஆனாலும்,
என்னரும் அதிபதியே!
நானதை ஒருபோதும் மெய்யாய்
இழந்து விட வில்லை,
ஏனெனில் என் வாழ்க்கையின்
ஒவ்வொரு கணத்தையும்
உன் கரத்தில் ஏந்தித்
தாங்கிக் கொண்டுள்ளதால்!
பொருட்களின்
கருவில் புதைத்து வைத்து,
விதைகளைக் கண்காணித்து
மொட்டுகளை வளர்க்கிறாய்!
பூக்கள் மொட்டி லிருந்து புலரும்!
மூப்பெய்திய பூக்கள் பயன்தரும்
பூப்பெய்திக்
காய்கனிகள் ஆகின!
களைத்துச் சோம்பிய நிலையில்
தூங்கி விழும் போது,
என்பணிகள் எல்லாம்
நிறுத்த மாகி விட்டதென
நினைத்தேன்!
பொழுது புலர்ந்ததும்
விழித் தெழுந்து நான்
பளிச்செனக் கண்ட அற்புதக் காட்சி எனது
முழுத் தோட்டத்திலும்,
மயக்கும்படி பூத்துக் குலுங்கின,
வியக்கும் பூக்கள்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 9, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா