கா எனும் குரல்…

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


தாழிட்டுக்கொண்டு
தனிமையில் நான் மட்டும்.

கத்தும் சத்தம்
கதவு தாண்டி கால் வைக்க

காக்கைகள்
வான்வெளியில் மேடை போட்டு
வாய்விட்டுச் சொல்வதென்ன?

கா எனும் சொல்கொண்டு
காகம் பேசும் மொழியென்ன?
தம் மொழியால்
காகமெல்லாம் கூடியதென்ன
கூடி ஓன்றாய்க் கோருவதென்ன?

மனிதர்கள் கூடும் மாநாடுகளைவிட
இந்த
ஐந்தறிவிகள் கூடுவது
அர்த்தமுள்ளதாயிருக்கும்.

என்னையும் மனதையும்
திறந்து வரச்சொன்ன காக்கைகள்
எனக்கிப்போது
ஆறாம் அறிவோடு.

இந்தக் காக்கைகள்
கம்பமில்லாத கொடிகளாய்ப்
பறந்து ஏன்
காற்று காட்டும்
கருப்புக் கொடியாக வேண்டும்?

சுதந்திரக் காற்றுக்குச் சோதனையா
உயிரை உயர்த்திக் காட்டி
உலகிற்குக் கண்டனமா?

ஓ…
ஒருகாகம்.

இந்தக் காகத்தோடு
எல்லாக் காகங்களும்
கத்திற்று கா…கா… என.

எம் வாசலில்
ஈழத்திலிருந்து
இங்கு வந்து விழுந்த
அடிப்பட்ட காகம்.

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சி‎ங்கப்பூர்
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி