ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்


புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை.
——————————————————–
ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்
SIMPLE VERSES BY JOS`E MART`I .
THE CUBAN REVOLUTIONARY MARTYR.
தமிழாக்கம் : புதுவை ஞானம்.
———————————————-

வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த
தேம்படு பனை வளம் செறிந்ததென் நாடு.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசா என்
உள்ளத்தில் ஊறும் எளிய கவிதைகள்
உலகம் அறிய உரைத்திடல் வேண்டும் !

யாருக்குமே நான் புதியவன் அல்லன் -என்
கால்படாப் பகுதியே இந்நாட்டினில் இல்லை
.உங்களில் ஒருவன் யான் உங்களோடிருக்கையில் .
மலைகளில் ஒன்றாவேன் மலைகளோடிருக்கையில் !

மெல்லிய கொடிகளின் விசித்திரப் பெயர்களும்
துல்லிய மலர்களின் வகை தொகை அனைத்தும்
கொல்வகைப் பொய்களும் உள்ளுறை துயரமும்
தெள்ளியவாறு தெரியும் எந்தனுக்கு !

இரவின் ஆழம் தரை தொடுங் காலை
விண்ணிழி தெள்ளிய விசும்பின் ஒளிக்கதிர்
என் தலை மீது மெல்லெனக் கவிவதில்
கரைந்து சிலிர்க்கும் கவி மனம் என்னது !

அழகிய மகளிரின் விம்மிய தோள்களில்
சிறகுகள் முளைத்துப் படபடப்பதையும்
அழுகிய குப்பைக் குவியலில் விளைந்த
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிப்பதையும்
கண்டு களித்துக் கிறுகிறுத்தவன் யான் !

உயிர்க்கிடர் தவிர்க்க உருவிய வாளுடன்
உயிர்ப்போடு இருந்த ஒருவனை அறிவேன்
பாவை ஒருத்தியின் ஆரத்தழுவலில் அவன்றன்
ஆவி பிரிந்தது கூடு விழுந்தது யாரெனக் கேட்பின்
யான் சொல மாட்டேன் ! மாட்டவே மாட்டேன் !

என்றன் ஆன்மாவின் தரிசனத்தை, சொல்லப்போனால்
கண்டேன் இருமுறை தெள்ளத் தெளிவாய்
ஒன்றெந்தன் பரிவிற்குறிய தந்தையின் இறப்பில்
மற்றெந்தன் பிரிய சகி எனைப் பிரிந்த நொடியில்.

தடுமாறி இருக்கிறேன் ஒரு முறை
தலை குப்புற விழுந்திருக்கிறேன் மிரண்டோடி
திராட்சைத் தோட்டத்தின் தலை வாயில் நுழைவில்
என்னிளம் தோழியின் பிஞ்சு நெற்றியில் அந்தக்
கோழைக் குளவி கொட்டிய போது.

பெரும்பேறு ஒரு முறை கிட்டியதெந்தனுக்கு
யாரும் பொறாமை கொள்ள இயலாத பேறு அது.
எந்தன் பெயர் பொறித்த மரண தண்டணையைக்
கண்ணீர் மல்க சிறைத்தலைவர் வாசித்த வேளையில்.

புவிப்பரப்பைக் கடந்ததொரு பெருமூச்சு கேட்கிறது
கடற்பரப்பைப் புரட்டும் ஒரு பெருமூச்சு கேட்கிறது
அடுப்படியில் இருந்து வந்த சீறல் அல்ல அது
அன்பு மகன் துயிலெழுந்து திமிர் முறித்த மூச்சு !

அணி வணிகர் கொட்டாரம் புகுந்து நான்
அள்ளி வந்து விட்டதாக யாரேனும் சொல்வர்
அள்ளி வந்ததொரு நல்ல நண்பன் மட்டும்
அதற்கு நான் அளித்த விலை அன்பு -அன்பு – அன்பு !

காயம்பட்டுக் குருதி சிந்தி வானத்தில்
வட்டமிடும் வல்லூற்றுக் கழுகே !
நச்சினை முறிக்கும் பச்சிலை வாழும்
மறைவிடம் எங்குளதென்பது எனக்குத் தெரியும் !

பலவீனமுற்றிருக்கிறது உலகம் என்பதும்
விரைவில் வீழும் தரையில் என்பதும் -தெரியும் எனக்கு .
பின்னர் முற்றிலும் தழுவியதோர் மோன நிலையில்
மெல்லச் சலசலக்கும் சிற்றோடை மட்டும் !

இன்பத்திலும் துன்பத்திலும் மெய் விதிர்த்த போது
பற்றுக்கோடாகக் கைப்பற்றி இருக்கிறேன் தெம்பாய்
முன்னொரு காலத்தில் விண்ணில் ஒளிர்ந்த மீன்
இற்று விழுந்தது என் தோரண வாயிலில் !

மிகக் கடுமையான வேதனைகளை ஒளித்து வைத்துள்ளேன்
தைரியம் மிக்க என் பரந்த நெஞ்சகத்துள்
அடிமைப் பட்டதொரு தாயகத்தின் மைந்தன்
வாழ்வதும் சாவதும் அதன் விடுதலைக்காகவே !

———————————————————————————————

சரிதான்…..அனைத்துமே, அழகுதான்….அனைத்துமே
அறிவும் இசையும் போல் அதனதன் காலத்தில்.
வைரமாய்ப் பட்டை தீட்டி ஒளிர்வதற்கு முன்
வெறும் கரிதான்…..நிலக்கரி ! அல்லவா ?.

கண்ணீரும் போற்றுதலும் கரை கடந்து இருக்கும்
பூமியில் முட்டாள்கள் புதைக்கப்படும் போது.
புனிதமான எல்லாப் பழங்களும் அழுக விடப் படுகின்றன
புதை நிலத்தில் என்பதெனக்குத் தெரியவே தெரியும் !

புரிந்து கொண்டேன் எந்தவொரு வார்த்தையும் இன்றி
ஒதுக்கியே வைத்தேன் பகட்டான கவிப் புனைவை.
உதிர்ந்த கிளைகளில் ஒன்றினைத் தேர்ந்தேன்
முனைவர் அங்கியைத் தொங்க விடுவதற்காய் !
—————————————————————————————
07:05 PM 6/12/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்