கீதாஞ்சலி (32) விடுதலை வேண்டும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


மூர்க்கத்தன மானவை
எனக்கு
நேர்ந்த இடையூறுகள்! ஆயினும்
நெஞ்சு வலிக்கிறது,
தடைகளை
உடைக்க முயலும் போது! நான்
வேண்டுவ தெல்லாம் எனக்கு
விடுதலை! அது
வருமென எதிர்பார்த்து
நம்பி யிருப்பது
பெரும் வெட்கக் கேடு!
திண்ணமாய்ச் சொல்வேன்,
விலை மதிப்பில்லாச்
செல்வம்,
உன்னிடத்தில் உள்ளது!
நம்புதற் குரிய எனது
உன்னத
நண்பன் நீதான்.
ஆயினும்
என் வீடெங்கும் நிரம்பி
மின்னும் தோரணரங்களை
நீக்க மனமில்லை
எனக்கு!

மண்தூசியும் மரணமும் மேவி
என்னைப் போர்த்தி யுள்ள
அழியும் தோலை
அறவே வெறுத்தாலும்,
தழுவிக் கொள்கிறேன்
வாஞ்சையோடு!
பெருகிப் போயின எனது
கடன்கள்!
பேரளவில் எனக்குத்
தோல்விகள்!
கனத்துப் போனவை,
நாணப்படும்
எனது இரகசி யகங்கள்! ஆயினும்
உன்னிடம்
நன்னெறி வேண்டி வரும் போது
நடுங்கிடும் எந்தன் நெஞ்சு,
வேண்டுவதை நீ அளித்து
விடுவாய் என்று!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 17, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா