குடை வாசிக்கும் கவிதை

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

புதியமாதவி.


சூடான வாடாபாவுக்காக
ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய்,
அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான்.
ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில்
சாலைவிதிகளை மறந்து
ஓடிவந்து
உன்னுடன் கலந்து
ஒன்றாக நனையலாம்தான்.
ஆடைகள் நனைந்துவிடுமே..
அச்சத்திலேயே
குளிர்காய்கிறது என் நெருப்பு.

**
உன்னோடு உன் குடையில்
உன்னோடு ஒரே மழையில்
ஒன்றாக நனையும்
ஒற்றை நிமிடத்திற்காய்
குடை மறைத்து வருகிறது
என் காற்று.

குடைவாங்கித்தந்துவிட்டு
குடைப்பிடித்தே நடக்கிறது
உன் கால்கள்.
குடைக்கிழித்து தடம்மாறிப்
புயலாகப் புறப்படுமோ ..என் காற்று!.
நடுக்கத்திலேயே கழிகிறது
இருட்டைக்கிழிக்கும் மின்னலுடன் மழை.

**

தலை நனைகிறது
குடைப் பிடிக்கிறாய்
உடை நனைகிறது
குடைப் பிடிக்கிறாய்
குடை நனைகிறது
நீயும் நனைகிறாய்..
இருந்தாலும்
குடைப்பிடித்தே நடக்கிறாய்
மழையில் நனையாமல்
நடக்கின்ற பாவனையில்
மழையை ஏமாற்றி
மனசை ஏமாற்றுகிறாய்!.

**

நனைக்கமறுத்த மழைத்துளிகள்
வெள்ளப்பெருக்காய்
வீடுடைத்து
காடுடைத்து
யாரைத் தேடுகின்றன ?
எதற்காக அலைகின்றன ?
காலம் தவறிக் கொட்டும்மழையில்
கல்லறைகள் நனைவதில்லை.

**
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை