அம்மி

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

வைகைச் செல்வி


வேகமாய்த் திரும்புகையில்

இன்றும் காலில் இடறிற்று

கருங்கல் அம்மி.

‘அரைக்கவும் ஆட்டவும்

என்னென்னவோ இருக்க

எடத்தை அடைச்சிட்டு

ஏன்தான் இருக்குதோ ? ‘

இப்படி-

அன்றாடம் மாமியார்

கண்டனம் தெரிவித்தும்

ஆசை அம்மியை

அறுத்தெறிய மனசில்லை.

அம்மா வீட்டில் இது

சும்மாவா இருந்தது ?

வெள்ளைத் தேங்காயும்

கறுப்பு மிளகும் ….

பச்சை மிளகாயும்

சிவப்பு வற்றலுமாய் ….

தாள லயத்தோடு

அம்மா அரைக்கையிலே

ஆத்துக்கு அக்கரையில்

அழகருக்கும் வாயூறும்.

இன்றோ-

அவசர உலகத்தில்

அடுக்கு மாடிக் குடியிருப்பில்

பதுங்கிக் கிடப்பதற்கு

முற்றமோ ?… புதுக்கடையோ ?

ஒதுங்கிக் கிடப்பதற்கு

திண்ணையோ இல்லாமல்

கவனிக்க ஆளின்றிக்

காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்

வயோதிகம் போல் அம்மியும்.

ஆயினும் ஓர்நாள்-

மழைநாள் இரவில்

மின்சாரம் தடைபட்டுச்

சிம்னி கதகதப்பில்

ராச்சோறு சுவைப்பதற்காய்

பருப்புத் துவையலதைக்

கை வலிக்க அரைக்கையிலே

வீடெல்லாம் மணந்தது

அம்மாவின் வாசனையில்….!

vaigai_anne@yahoo.com

Series Navigation

வைகைச் செல்வி

வைகைச் செல்வி