கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


கடலில் எனது
படகை
மிதக்க விட்டு
துவக்க வேண்டும் எனது
பயணத்தை!
அந்தோ! இப்போது ஏன் எனக்கு
இந்த தயக்கம் ?
களைத்த எனது முதுமைக்
கால நேரங்கள்
கடந்து போகும் வீணாய்
கடற் கரையில்!
வசந்த காலமும்
பூத்துக் குவிக்கும் பணியை முடித்து
கடந்த கால மானது!
பயனற்றுப் போய்
இப்போது,
வாடி வதங்கிய பூக்களைச்
பாரமாய்ச் சுமந்து
பதுங்கி நிற்கிறேன்
ஒதுங்கிய வண்ணம்!

பேரி ரைச்சலை எழுப்பு கின்றன,
நீரலைகள்!
கடற்கரை மீது காய்ந்து
பழுத்துப் போன
மஞ்சள் நிற இலைகள் தள்ளாடி
விழுகின்றன,
நிழல் படிந்த சந்து பொந்தில்!
உற்று நோக்கி
வெற்று வானை நீ
வெறித்துப் பார்ப்ப தென்னே ?
அப்போது
வெகு தொலைவில்
அக்கரைக் கப்பால் வெளியாகி
காற்றிலே நீந்தி வரும்,
தாளமுள்ள
கானம் உனைத்
தழுவிச் செல்லும் போது,
மெய்சிலிர்த்து
மேனி உனக்குப்
புல்லரிக்க வில்லையா ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 5, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா