3 மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

மதியழகன் சுப்பையா


—-

யாரும் என்னுடனில்லை
எல்லோருடனும் இருக்கிறேன் நான்

அவர்களுடன் இருக்கிறாய் நீ
உன்னுடன் அவர்கள்

யாருடனும் யாரும்
இருந்துவிட முடியுமா ?

யாரையும் யாரும்
பிரிந்துவிட முடியுமா ?

எல்லோருடனும்
எல்லோரும் இருக்கிறார்கள்

என்னுடந்தான் யாருமில்லை
நான் இருக்கிறேன் எல்லோருடனும்

—-

கோப்புகளுக்கிடையில்
பதிந்து கிடக்கிறதுன்
பார்வைகள்

கணிணியிலும்
காகிதங்களிலும்
ஒட்டிக் கிடக்கிறதுன்
தொடுதல்கள்

தொலைபேசியில்
சிக்கிக் கிடக்கிறதுன்
பேச்சொலிகள்

காதல் தொலைத்தாய்
காமம் தொலைத்தாய்

கண்களின் பீழையைப் போல்
மிக எளிமையாய்
அகற்றுகிறாய் என்னை

—-

இதுவரை
இப்படி பேசிக் கொண்டதே
இல்லை

இதுவரை
இத்தனை இடைவெளியில்
சந்தித்ததே இல்லை

இதுவரை
இத்தகையதோர் உறவு
இல்லை

எதுவரை
இப்படியே தொடரும் ?
அதுவரை
நிலைக்குமா இவ்வுறவு ?

—-
**
தொடர் வண்டி
—-

மழையில் நனைந்து
வெயிலில் காய்கிறது

நிறம் மங்கி
உருவம் சிதைகிறது

ஓடிக் கழைத்து
நிற்கிறது ஓரிடத்தில்

பகலில் கஞ்சாப்
புகை கக்கி
இரவில் முக்கி
முனகும்

அசைவதே இல்லை
என்றாலும்
அழகாய்த்தான் இருக்கிறது
பழைய தொடர் வண்டி.

**
பணிப் பழு
—-

தலைவலி எப்படியிருக்கு ?
எதாவது சாப்பிட்டுக்கோ
நல்லா தண்ணீர் குடி
பொறுமையா வேல பாரு
படபடப்பா இருக்காத
ரொம்ப வேலையாடா செல்லம் ?

அழைக்கையில்
சொல்கிறேன் நான்
அழைத்து சொல்கிறாய் நீ
இவ்வளவுதான் நம்
அன்பின் வெளிப்பாடு

தினமும் படுக்கையில்
சந்தித்து
படுக்கையில் பிரிந்து
கழிகிறது நம்
வாழ்க்கை.

மதியழகன் சுப்பையா.
மும்பை
**

மதியழகன் சுப்பையா
மும்பை

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா