பெரிய புராணம் – 40

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

பா. சத்தியமோகன்


24. திருநாளைப் போவார் நாயனார் புராணம்
(தில்லைக்கு ?நாளைப் போவேன் ? ?நாளைப் போவேன் ? என்று கூறியதால்
இவர் திருநாளைப் போவார் என்று பெயர் பெற்றார்)
1041.
நீர் மிக்க கொள்ளிடம் தன் அலைக்கைகளால்
பொன்னும் நல்ல செழுமணிகளும் முகந்துதரும்
தம்மிடம் படர்ந்த தாமரை மலர்களான கைகளால்
அகன்ற வயல்களில் நீர்வளம் அதனை ஏற்கும் சோழநாடு
அங்குள்ளது மேற்கா நாட்டின் ஒரு பகுதியே ஆதனூர்
அவ்வூர் –
உலகம் கொண்டாடும் சிறப்புடைய பழைய பகுதியே ஆகும்.
(பதி ; ஊர்)
1042.
திருநீற்றின் பேரொளி நெருங்கி விளங்கும் அவ்வூரில்
வளர்ந்த கரும்பின் காற்றால் அலைகின்ற வயல்களிலே
தகடு போன்ற வரால் மீன்கள் எழ
எருமை பூட்டிய ஏர்கள் செல்லும்
கலப்பையின் கொழு கிழித்த படைச்சாலின் வழியில்
மெல்ல அசைந்து ஏறி சேற்று நண்டுகள் கருவை ஈனும்
அக்கரு உண்ண செழுமையான தாமரை மலர்கள் –
தேன் சொரியும்.
1043.
அரும்புகள் நிறைந்த கொம்புகள்
செறிந்த தளிர்களால்
செழும் மரங்களின் கூட்டம் பெருகி
ஞாயிறு மண்டலத்தைத் தடவும்
மேகம் பொருந்தி அசைந்து அலைவதால்
தேன் வண்டுகள் பக்கமெலாம் சூழும் பூஞ்சோலைகளில்
நீர் மழையோ தேன்மழையோ ஓயாமல் பொழியும்.
1044.
வாளை மீன்கள் இளைய பாளை விரித்து மணம் கமழும்
பசுமையான இலைகளையுடைய தென்னை மரங்கள் அசையுமாறு
பெரிய நீர்ப்பள்ளங்களிலிருந்து மேலே அலை எழும்
அதனால் தென்னையின் நெற்றுக்கள் சேற்றில் புதைய விழும்போது
நீண்ட முதிர்ந்த பலாக்கனிகள் மீது விழுந்ததால்
அவை கிழிந்து வழிந்து பெருகிய தேன் வெள்ளத்தில் கலக்கும்.
1045.
வயலில் உண்டாகும் வளங்களும்
கைவினையால் செயல்படும் பசிய தோட்ட வளங்களும்
அகன்ற இடம் எங்கும் நிறைந்திருந்தது
மிக்க பெரிய செல்வம் உடையனவாகி
முகில் தவழுமளவு மாடங்கள் அழகுடன் இருந்தன
பக்கமுள்ள பிற இடங்களிருந்தெல்லாம் நெருங்கி
குடிகள் தழைக்குமாறு
நெருக்கத்தைக் கொண்டது அவ்வூர் ஆதனூர்.
1046.
அந்த ஆதனூரில்
வெளியே
வயல்களின் பக்கத்தில் புலைச்சேரி ஒன்று இருந்தது
சுற்றம் விரும்பிய உரிமையுடைய தொழில் உழவர்கள் கூட்டம் நிரம்பி
பற்றிய சுரைக்கொடி
மேலே ஏறிப்படர்ந்த பழங்கூரை உடைய புல்லால் வேய்ந்த
சிறிய இல்லங்கள் பல நிலைகளாக நெருங்கி விளங்கியது.
1047.
அச்சேரியில் உள்ள வீடுகளில்
கூர்நகமும் மெல்லடியும் கொண்ட பெட்டைக்கோழியின் குஞ்சுகள்
குழுவாகச் சுற்றிக் கொண்டிருக்கும்
முற்றங்களில் நாய்க்குட்டி விளையாடும்
கரிய இரும்புக்காப்புகள் நெருக்கமாக அணிந்த கரிய சிறுவர் கவர்ந்து ஓட
எழுகின்ற அக்குட்டிகளின் மென்மையான குரைப்போசையை
அச்சிறுவர்களின் இரும்புமணி சதங்கைகள் அடக்கிவிடும்.
1048.
மருதமரநிழலில் உழத்தியர்களின் குழந்தைகள் உறங்கும்
வஞ்சி மரநிழலில் புதைக்கப்பட்ட பெரிய பானைகளில்
பெட்டைக்கோழிகள் தம்முட்டை அடை காத்து கொண்டு ஒடுங்கும்
மாமரங்களில்
வார்களால் இழுத்துக் கட்டப்பட்ட பறைமேளங்கள் உறங்கும்
தென்னை மரங்களின் அடியில் உள்ள பொந்துகளில் நாய்க்குட்டிகள் தங்கும்.
1049.
மிக்க வன்மையுடைய திண்மையான பள்ளர்கள்
உழவுக்கான விடியற்காலத்தை அளந்து காட்டி
அவர்களைத் தொழிலில் புகுத்த அழைகின்ற
சிவந்த உச்சிக் கொண்டை உடைய கோழிகள்
மணமும் குளிரும் நிறைந்த காஞ்சிமர நிழலின் பக்கங்களிலெல்லாம் தங்கும்
புலை மகளிர் நெல்குற்றிப் பாடும் ஒலி எங்கும் பரவும்.
1050.
பறவைகள் குளிர்ந்த நீர்நிலைகளில் களித்து ஒலிக்கும்
தள்ளாடும் நடை அசைவினால்
தளை கவிழ்ந்து பூங்குவளை மலர்கள்
தேனைச் சிந்துவதற்கு இடமான பசிய கூந்தலில்
நெற்கதிர்கள் சூடி கள்ளினை உண்டு ஆடும் புலைச்சியர்கள்
ஆட்டத்திற்கேற்ப பறைகளும் ஒலிக்கும்.
1051.
இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில்
தம் உண்மையான அன்பு
சிவன் திருவடிக்கே விளைவித்த முன் உணர்வோடு
இவ்வுலகில் நந்தனார் என ஒருவர் இருந்தார்
அவ்வூரில் வெட்டிமைத் தொழிலைத் தாயமாக உடையவர்
தனக்கு ஒப்பிலாதவர்.
1052.
பிறந்து
உணர்வு தெரிந்த நாளிலிருந்து
பிறைமதியான கண்ணிமாலை சூடிய பெருந்தகை சிவனையே
சிறந்த பெரும் காதலினால் சிறப்புடைய சிந்தையராக இருந்தார்
மறந்தும் பிற நினைவின்றி
தம் குலத்திற்குரிய சிவதருமங்கள் செய்து வந்தார்.
1053.
ஊரில் விடப்பட்ட வெட்டிமைத் தொழிலை
தம் உணவுக்கு ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தார்
தம் பிறப்பினால் வரும் தொழில் செய்வதில் நின்ற அவர்
தொண்டினால் தலை சிறந்து விளங்கினார்
கூர்மையான மூன்று தலைகளையுடைய
சூலம் ஏந்திய சிவபெருமானின்
பேரிகை முதலான பிற கருவிகளுக்கும் –
1054.
போர்வைத் தோலும்
கட்டப்படும் வாரும் தந்து வந்தார்
இவ்வாறான மற்ற சாதனங்களும்
இசைக்கின்ற வீணைக்கும் யாழுக்கும் ஏற்ற
பொருத்தமான நரம்பும் தந்து வந்தார்
அன்புடனே தேவர்பிரான் சிவபெருமானுக்கு
அர்ச்சனைக்கு ஆர்வத்துடன்
கோரோசனை முதலிய பொருளும் அளித்து வந்தார்.
1055.
இவ்விதமாக தன் தொழிலால் இயன்றதெல்லாம்
எல்லா இடத்திலும் செய்து வந்தார்
கோவில்களில் திருவாயிலின் வெளியே நின்று
உண்மை பொருந்திய பேரன்பின் மிகுதியால்
ஆடுதலும் அவ்வியல்பில் பாடுதலுமாய் இருந்து வந்த நாளில் –
1056.
திருப்புன்கூரில் எழுந்தருளும் சிவலோக நாதரின் திருவடிகள் மிகநினைத்து
விருப்பத்தோடு தாம் செய்ய விரும்பிய திருப்பணிகள் செய்வதற்கே
ஆகையினால் உள்ளம் ஒருமைப்பட்டு ஆதனூரிலிருந்து
வருத்தமுறும் காதலினால் திருப்புன்கூர் தலத்தின் பக்கம் வந்து சேர்ந்தார்.
1057.
புகழ் ஏறுகின்ற இசை பாடி திருத்தொண்டர் நந்தனார்
திருப்புன்கூர் திருவாசலில் நின்று
இறைவரை நேரே கும்பிட வேண்டும் என நினைத்தார்
அவ்வாறே இறைவன் அருள் செய்து
மேகங்கள் தவழும் மதில் சூழ்ந்த திருப்புன்கூர் சிவலோகநாதர்
தம் திரு முன்பு இருக்கும்
போர் வல்ல ஏற்றை ( காளையை ) விலகி இருக்க ஆணையிட்டு
தம்மை நந்தனார்க்கு அருள் புரிந்து புலப்படுத்தினார்.
— திருவருளால் தொடரும்.
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்