சிறுவாயளைந்த அமிர்தம்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

சாரங்கா தயாநந்தன்


புதுவசந்தத்தின்
பொன்வண்ண மலராய்
அசைந்தாடி நடக்கிறான் குழந்தை
அவன் சிந்திய சிரிப்புக்களில்
நட்சத்திரத்தோட்டமாய் நம் வீடு
இங்குதான்
என்வாழ்வின் மகிழ்வு உச்சம்
உதித்தது.
அந்த அற்புதமான பொழுது,
என் மகன்
மகாராஜனாக
தன்னைத் தானே பிரகடனப்படுத்தியுள்ள
அவனது பொம்மைகளின் உலகில்
குற்றமிழைத்தவை
காலுடைந்திருக்கக் கண்டபோதல்ல….
பனியுறை இரவொன்றில்
தன் கம்பளிப்போர்வையை
பொம்முக்குட்டிக்குத் தானமாக்கி
‘குட்டிப் பாரிவள்ளலாய் ‘
அவன் நின்ற போது அல்ல….
வாயில் ஊட்டிய உணவில்
சிறுகை அளாவி
என் வாயில் வைத்தபோதுமல்ல….
நான் சொல்லிக்கொடுத்த
தேனூறிய தமிழை
திகட்டாத தித்திப்பை
தன்வாய் அளைந்து
அமிர்தமாய் என்னில் ஊற்றியபோது
ஜனித்தது.
—-
nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்