பெரியபுராணம் – 36

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பா.சத்திய மோகன்


4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
21. மூர்த்தி நாயனார் புராணம்
968.
உலகில் நிலைத்த தொன்மை புகழ் பூண்டது பாண்டி நாடு
நிலைத்த செல்வமுள்ள குடிகள் நிறைந்திருந்த சிறப்பால் உயர்ந்து ஓங்கியது
முகில்கள் நிலையாகத் தங்கும் உச்சிகளுள்ள
ஒளி மணி மாளிகைகள் கொண்டது
அன்பு கெழுமிய உள்ளமுள்ள பல நல் துறை மாந்தர்கள் போற்றுவது
969.
சாயும் தளிர் போன்ற கொடி இடையும் நீண்ட பெரிய கண்ணும்
மூங்கில் தோளும் உடைய பெண்களின் வாய்படுவதால் இனிய சொற்கள்
முத்தம் பெறுகின்றன –
நீள் கரையை மண்ணை மோதி ஓடும் குளிர் தாமிரபரணி ஆற்றினால்
கடலில் ஒளிமிக்க முத்துகள் உண்டாகின்றன.
970.
மொய்க்கும் வண்டின் கூட்டம் ஒலிக்கின்ற
இருண்ட சந்தனச் சோலை சூழ்ந்த பொதியமலையிலிருந்து
மென்மையாக உலவும் சிறிய தென்றல்
நறுமணம் கமழும் ஈரத்தைத் தரும்
உலகை அளந்த மேன்மையும் தெய்வத் தன்மையும் உடைய தமிழ்
நல்ல மணம் செய்வதற்குரிய அன்பைத் தரும்.
971.
சூழும் இதழ்களுள்ள தாமரை போல
அத்தாமரை மலர் மீது உறையும் இலக்குமி
தாழ்விலாமல் எக்காலத்திலும் ஒப்பிலாமல் வாழப்பெறுவது மதுரை.
யாழின் மொழியில் குழலின் இசை அரும்பும் நகரம்
மதுராபுரி எனும் மதுரை.
972.
செய்யுள் பாய மூன்று தமிழ் தாங்கிய அழகிய மூதூர்
நூல்கள் கற்கப்படும் இடங்களும் உள்ள ஊர்
வயலுள் ஏறும் பால்பாயும் ஆவினங்கள் முலை தோய
தாமரைகள் தேன்பாய
சேல்மீன்கள் எங்கும் துள்ளும் நீர் நிலைகள் கொண்ட ஊர்.
973.
தென்றல் காற்று அசையும் மாளிகை மாட முற்றத்தில்
பந்தாடும் மங்கையர் தாமரைச் செங்கைகள்
சந்தனம் பொருந்திய முலைகளைத் தாங்குகின்றன
தாழ்ந்த காதணிகளோ
ஒலியுடைய முகமான தாமரை மலர்மீது உள்ளன.
974.
மெய்ப்பொருளைத் தரும் தமிழ்நூலின் வாய்மையான
செம்மைப் பொருளாக திரு ஆலவாயில் இறை எழுந்தருளி
எமது பாவம் தீர்ப்பவரின் தலைமை இருப்பதினால்
மூன்று உலகங்களிலும் மேலன்றோ அம்மூதூர்!
975.
பொன் போன்ற அந்த அழகிய மதுராபுரியிலே
வணிககுலத்தில் ஆன்ற சிறப்பும் தொன்மையும் கொண்டு
யாவரும் போற்றும் பெருமைமிகு குடியினர் செய்த தவத்தால் தோன்றினார் அவர் –
எப்பற்றினையும் அறுத்து காளை ஊர்தி ஏறும் சிவபெருமானின் தாளையே
மெய்ப்பற்று என விடாத விருப்பத்தில் மிகுந்தவர்.
976.
தினமும் பெரும் காதல் நயந்து
விருப்பத்தாலே சொந்தமும் துணையும் முதலிய கேடில்லாத பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமானின் திருவடித்தாமரை அல்லாமல் வேறு இல்லாதவர்
மூண்டு பெருகும் அன்பு எனும் குணமே மூர்த்தியாகி
மூர்த்தியார் என்ற பெயர் கொண்டது.
977.
அந்திப் பிறையை செஞ்சடை மேலணிந்த
ஆலவாயுடையரான எம் தந்தைக்கு அணிகலனாக
சந்தனக் காப்பிடுவார் பிறழாமல் அச்செயலில் நிலை நின்றார்
அடியார் மகிழ சிந்தை மகிழ திருப்பணி செய்து வரும் நாளில் –
978.
காட்டினை அரண் என உடைய வடுகக்கரு நாடர்களின்
காவல் பெற்ற பெரும்படை மன்னன் வலிந்து வந்தான் நிலம் கைப்பற்ற
யானைகள் , குதிரைகள், கருவிகள், வீரர்கள், திண்மையுடைய தேர்களின்சேனையுடன்
கடல் போன்ற படை செலுத்திக் கொண்டு தென்திசை நோக்கி வந்தார்.
979.
வந்துற்ற பெரும்படை தரை தெரியாத வண்ணம் பரவி நின்று
சந்தனச் சோலை சூழ்ந்த பொதியமலையுடைய தமிழ்நாட்டில் புகுந்து
மன்னன் பாண்டியன் வீரம் அழியுமாறு
போரில் வென்று தன் ஆணை செலுத்தும் வழியால்
மணமுடைய பூஞ்சோலை சூழ் மதுராபுரியை ஆண்டு வந்தான்.
980.
வலிய ஆண்மையால் வன்மையுடைய தமிழ்நாடு வளம்படுத்தி
நில்லாத தன்மையுள்ள இல்லாமையாலே அந்த அரசன்
நீண்ட மேருமலையை வில்லாய் வளைத்த சிவனின் அடிமைத் திறம் சாராமல்
சமணர் சமயத்தில் சிந்தை தாழ்ந்தான்.
981.
தாழும் சமணர்களின் வஞ்சமான தவத்தை மெய்யென சார்ந்து
வீழ்கின்ற கொடிய மன்னன் அது தவிர
பாம்புப் பிறைச்சந்திரனுடன் வாழும் சடை கொண்ட
சிவபெருமானின் அடியாரையும் வன்மை செய்தான்
கொடிய முன் வினைப்பயனால்.
982.
சிவந்த வானம் போன்ற சடையுடையவரான
காளையூர்தி உடையவரான திருவால வாயுள் எழுந்தவரான முக்கண் சிவனாரின்
தொண்டரை மூர்த்தியாரை
கரியகல் போன்ற நெஞ்சுடை வஞ்ச மன்னன்
சமணர் என்ற பேர் கொண்ட ஈனர்களுக்கு உடன்படச் செய்து
இகழ்ந்த செயல்கள் செய்ய எண்ணி –
983.
முடிவில் கொடுமைகள் செய்தாலும்
அன்பனார் தம் முறைமைப் பணி முறை தவறாமல் செய்து வந்தார்
தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பிலே ஒழுகி நின்கின்ற பெருமைகளை
எவர்தாம் தடுக்க இயலும்.
984.
இகழ்வான எல்லையிலாத வலிந்த செயல்களைச் செய்யவும்
தவறாமல் செயல்படும் மூர்த்தி நாயனார் சந்தனக்காப்புத் தேடிப்
பெறும் வழியை அடைத்தான் கொடுங் கோன்மை செய்யும் மன்னன்
தெள்ளிய கங்கை ஆறு சூடிய சடையுடையாருக்கு அடியாரும் சிந்தை நொந்து –
985.
?புன்மையான செயலில் வல்ல சமணர்களுடன் பொழுது போக்கும்
வன்மையான கொடும் பாதகன் இறந்துவிட
உண்மையான வேதங்களிலே கூறப்பட்ட
நன்மைதரும் திருநீற்றின் சைவ நன்னெறி தாங்கும் மேன்மை பொருந்திய
தன்மையுடைய புவி மன்னரை
என்று இந்நாடு அடையுமோ ? என நினைப்பார்.
986.
காய்கின்ற சினமுடைய கொடிய கண்டகனான
வடுகக் கருநாட மன்னன் சந்தனம் பெறும் வழி அடைத்ததால்
ஆராய்கின்ற மனச் சுழற்சியில் பகலின் எல்லை அடங்கக் காத்திருந்து
திருவாலவாய் சிவபெருமானுக்கு நல் சந்தனம் எங்கும் கிட்டாமல்
சிந்தை சாய்வுற்று வருந்தினார் தம்பிரான் கோவில் தன்னில்.
987.
?நடனம் செய்யும் எம் இறைவர் அணியும் நல்ல திரு மெய்ப்பூச்சு இன்று
முட்டுப் பாடு வந்து சேரும் தன்மையாயினும்
சந்தனத்தைத் தேய்க்கும் கைக்கு முட்டுப்பாடு உண்டாகாது ? என்று
வட்டமாய் விளங்கிய பாறையில் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டிப் போர்த்திய புறத்தோல், நரம்பு, எலும்பு கரைந்து தேய.
988.
கல்லின் மீது தேய்த்த முழங்கை கலுழ்ந்து குருதி சிந்தி
தேய்க்கும் பரப்பு எங்கும் எலும்பு திறந்து அதனுள்ளே
முளைப்பகுதியும் தேயும் படி கண்டு பொறுக்கவில்லை தம்பிரானாருக்கு
அந்த இரவில் இறைவரின் அருள் வாக்கு எழுந்தது.
989.
?அன்பின் துணிவால் இது செய்யாதே ஐயனே! உன்னிடம்
வலிய கொடுமை இழைத்தவன் கொண்ட நாடு முழுதும் கொள்க
முன்பு புகுந்த துன்பங்கள் முழுதும் நீக்கிக் காத்து வருக
பின்பு உன் திருப்பணி செய்து நம் பேருலகு எய்துக ? என்றது.
990.
இவ்விதம் இறைவரின் அருள்வாக்கு கேட்டு எழுந்து அஞ்சி
முன்பு செய்த செயலை மறுபடி செய்ய
தேய்ந்த புண் துன்பம் நீங்கி கைவண்ணம் நிரம்பியது
நல் வாசமெலாம் கலந்து
மூர்த்தியார் பொருந்திய விளக்கமானதோர் ஒலியை எய்தினார்.
991.
மின்னல் தோன்றி நிற்கும் கால அளவே நீண்டிருக்கும் உடல்
சங்கரனைச் சாராதோருக்கு அதுவும் நிலைக்காது எனும்
உண்மை விளங்க
சமணர் சார்ந்த மன்னன் வடுகக்கருநாடர் வாழ்வும் அன்றிரவே முடிந்தது.
{ மூர்த்திநாயனார் புராணம் தொடரும் }
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்