பெரிய புராணம் – 20

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

– பா .சத்தியமோகன்


9.இயற்பகை நாயனார் புராணம்
404.
நீடுகின்ற வெண்கொற்றக்குடை உடைய
சோழர் குலத் தோன்றல் அநபாயனின் முன்னவர்கள் பெருக்கிய புகழ் சிறப்பில்
நிலைத்த புகழ் கொண்ட மருதநிலம் சார்ந்த நீர் நாட்டிலே
வயல்களில் வளங்கள் பெருக இயல்பாய் அளித்த
காவிரியின் மிக்க நீர் பாய்ந்து கடலையும் தூய்மையாக்கும்
நல்ல – நெருடிய -பெரிய – நீர்நிலை நலம் கொண்டது வளமான பூம்புகார் நகரம்.
405.
அத்தகு வளம் மிகு நகரில் இயற்பகையார் தோன்றினார்
வணிக மரபினராக
அளவிலாச் செல்வத்தால் எல்லா வளமும் அமைந்தவர்
செக்கச் சிவந்த மாலைக் காலத்தில் தோன்றி விளங்கும் பிறைச் சந்திரனை
அணியும் சடையுடை சிவபெருமானின் அடிமைத் திறத்தில் சிறந்தவர்
வேதங்களான சிலம்புகள் ஒலிக்கும் சிவனது அடியார்க்கு
வேண்டிய யாவும் இல்லையெனச் சொல்லாமல்
இக்கடல் சூழ் உலகில் தருவதே இயல்பாகக் கொண்டவர் . சிறந்தவர்.
406.
கங்கை ஆறு சூடிய இறைவனின் மெய்யடிமைத் திறத்தில்
அளவற்ற அருளை மனதில் நிறைத்தார்
திருநீறு பூசிய திருமேனியர் உள்ளத்தில்
நினைத்த எதனையும் செயலிலே முடிப்பார்
மாறுபாடிலா நல் வழியில் வாழ்ந்து விளங்கும்
இல்லறம் தரும் மகிழ்ச்சியால் வந்த பெருமையெல்லாம்
அடியார்கள் ஏவும் செயலை செய்யும் பெருமையே
எனப் பேணி வாழ்ந்த நாளில் –
407.
உள்ளே ஆராய்கின்ற நுட்பமான பொருளேயாகியும்
வெளியே அம்பலத்துள் ஆடுகின்ற இறையவர்
நாயகிக்கும் அறியும் வகையிலோ அறியா வகையிலோ என நாம் அறியோம்!
தூய வெண்நீறு பொன்மேனியில் விளங்கிக்
காமம் தோன்றும் குறிப்புகள் கொண்டவேடத்தோடு வேதியராகி
மாயத் தோற்றம் கொண்டு தன்தொண்டர்
இல்லை எனக்கூறாது தரும் இயல்பைக் காட்ட வந்தார்.
408.
பூம்புகார் வந்தார்
வணிகர் தெரு அருகில் உள்ள இயற்பகையனார் இல்லத்தில்
அவ்வேதியரான இறைவர் புகுந்தார்
?எம் இறைவரின் அடியவர் வந்து அணைந்தாரே! ?
எனக் கூத்தாடினார் நாயனார் இன்பத்தின் ஆதரவால்.
சிந்தையில் அன்போடு சென்று எதிர் நின்று வணங்கிச்
சிறப்புமிகு அர்ச்சனைகள் முதலில் செய்து-
யானும் எம் முன்னோடு செய்த தவமோ
தாங்கள் இங்கே எழுந்தருளியது என்றார்.
409.
என்று கூறிய இயற்பகை நாயனார் முன்னே வந்த அந்தத் தூர்த்த வேதியர்
காமம் தரும் குறிப்புகள் கொண்ட வேதியரான இறைவர்-
?கொன்றை அணிந்த வார்சடையாரின் அடியார்கள்
வேண்டுவதெல்லாம் இயல்பெனக் கொண்டு
இல்லையெனக் கூறாது உவந்து அளிக்கும் உண்மை கேள்விப்பட்டேன்
உன்பால் எனக்கொன்று வேண்டிப் பெற
இங்கு யான் வந்தேன் அதற்குச் சம்மதமெனில் இயம்புகிறேன் ? என்றார்.
410.
அதனைக் கேட்ட இயற்பகையார்
?தாங்கள் வேண்டுவது என்னிடம் இருப்பதாயின்
அது எம்பெருமான் அடியவர்க்கே உடைமை
இதில் சந்தேகம் இல்லை நீவீர் உறையுங்கள் ? என்றதும்
நிலைத்த காதல் மிக்க உன் மனைவியை வேண்டி வந்தேன் இங்கு ?
என்று நேருக்கு நேர் சொன்னபோதிலும்
பொறுமையுடன் முன்னைவிட மகிழ்ந்து தூயதொண்டனார் தொழுதார் ; கூறினார் :-
411.
?இது என்னிடம் முன்னமே உள்ள ஒன்றையே வேண்டினீர்
இது எம்பிரான் எனக்கு செய்த பேறு ! ? எனச் சொல்லி
விரைவாக வீட்டினுள் சென்று
மனைவாழ்வின் கற்பில் மேம்பட்ட காதலியாரை
?விதிப்படி மணம் கொண்ட குலமடந்தையே
இன்று உனை இந்த மெய்த் தவத் துறவியார்க்கு நான் கொடுத்தனன் ? என்றார்
தேன்மலர்க் குழலியான மனைவி கலங்கி
மனம் தெளிந்து பின் கூறலானார் இப்படி:-
412.
?இன்று நீங்கள் அருளிய ஆணை இதுவானால்
என் உயிருக்கொரு நாதா ! நீங்கள் உரைத்த ஒன்றை
அவ்வாறே செய்வதைத் தவிர
உரிமை வேறு உளதோ எனக்கு ? என்று
தன் தனிப் பெரும் கணவரை தாழ்ந்து வணங்கினார்.
தொண்டனராகிய நாயனாரும் வணங்கினார்.
இலக்குமியை விடச் சிறந்தவரான அந்த அம்மையார்
இறைவரான மாதவன் சேவடி வணங்கித் திகைத்து நின்றார்.
413.
மனைவியைக் கொடுத்த மாதவரான இயற்பகையார்
முன்னைவிட மகிழ்ந்து பேருவகையில் மலர்ந்தார்
இனியான் செய்யக்கூடிய பணி யாது என்றே இறைஞ்சி நின்றதும்
?இயல்பிலே சாதி வேதியராகிய தாம்
இம்மங்கையைத் தனியாய்க் கொண்டு செல்கையில்
இவள் மீதும் உன்மீதும் காதல் கொண்ட சுற்றத்தையும் ஊரையும் கடக்க
துணையாய் நீ என்னுடன் வருக ? என்றார்.
414.
என இறைவர் கூறி அருளியதும் ?நான் முன்னரே செய்து
முடிக்க வேண்டிய செயல் இது! இதனை என்னை உடையவரான
இம்மாதவர் கூறுமளவு காலம் தாழ்ந்தது பிழையாம் ? என
தமக்குள் நினைத்து வீட்டினுள் சென்று
பொன் திகழும் நல் ஆடை அணிந்து அதன் மீது அழகிய கச்சினைக் கட்டி –
415.
வாளுடன் பலகை ஏந்தி வந்தார்
வந்து எதிர் வணங்கினார் வீரமிக்க ஆண் சிங்கம் போல்வார்
இறைவரையும் அம்மையாரையும் முன் போகச் சொல்லி
தோளிணைத் துணையாகப் போயினார்
தம்மை மறுத்து எதிர்த்து வந்தவரையெல்லாம் நிலத்தில் வீழ்த்த எண்ணியபடி.
416.
மனைவியாரின் சுற்றத்தாரும்
வள்ளலான நாயனாரின் சுற்றத்தாரும்
?இத்தகு செயலை இதுவரை யார்தான் செய்தார்
இவர்தாம் பித்தம் கொண்டு தம் மனைவி ஈந்தால்
அது காரணமாய் ஒருவர் கொண்டு போவதா ?
இச்செயலால் உற்ற பெரும் பழியினின்று மீட்க எண்ணி
சுற்றிக் கொண்டனர் தொடர்வதற்காக.
417.
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்தார்
மிக்க எழும் காற்றின் விசையோடு சென்று
காவலுடைய அந்நகரத்தின் ஒரு பக்கத்தில்போய்
நெருங்கிப் பரந்த ஆரவாரத்துடன் கடல்தான் பொங்கியதோ எனும்படி வந்து
வளைத்துக் கொண்டனர்.
418.
வழியெலாம் காக்கும் துணையாகிக் காக்கும் தொண்டர் பின்னால் வர
வழித் துணை பெற்ற வேதியரான (இறைவர் )
பெரும் காதலைக் காட்டிக் கொண்டு காரிகையுடன் செல்லும் போதில்
?துன்மார்க்களே! போகாதே நில் ! இங்கு எம்குலக் கொடியை விட்டு
உன் செயல் தந்த பழியை நீங்கிச் செல்வாயாக ? என்றபடி
கூட்டமாகக் கூடி வந்தனர்.
419.
வேத முனி ( இறைவர் ) அச்சம் கொண்டது போல்
இயற்பகையாரின் மனைவியைப் பார்க்க அவரும்
?இறைவனே அஞ்ச வேண்டாம்! அவர்கள் யாவரையும் இயற்பகை வெல்லும் ?
என்றார் அதனை ஒலிக்கும் கழல் அணிந்த இயற்பகையாரும் கேட்டு
அவரையெல்லாம் தரையில் விழும்படி செய்கிறேன் தளரேல் ? என்று –
420.
பேராற்றல் உடைய சிங்கம் போல்
தீப்பொறி சிந்தும்படி பார்த்து
அவமானம் அடைவாரே எனத் தடுக்க வந்த பெரும் சுற்றத்தாரை
?ஒருவரும் எதிர் நில்லாமல் ஓடிப்போய் உயிர் தப்பிப் பிழையுங்கள்
இல்லையேல் தீப்போல் வருத்தும் என் வாளில் துண்டாகித் துடிப்பீர் ? என நின்றார்.
421.
?ஏடா! நீ என்ன செயல் செய்தாய்.
இச்செய்கையால் நாடு அடையும் பழியும் இகழ்ச்சியும் குறித்து
நீ நாணப்படவில்லை.
இன்று மனைவியை ஒரு வேதியனுக்குத் தந்துவிட்டு
உன் வலிமை பேசலாமோ
இதில் நாங்கள் யாவரும் இறக்க நேரினும் உன் மனைவியைத் தரவிடோம் ? ? என்றனர்.
422.
சுற்றத்தார் சொன்ன மாற்றம் கேட்டதும்
மனதில் வந்த சினம் பொங்க
உங்கள் உடல்களைத் துண்டாக்கி எங்கும் சிந்தி
முற்றிலும் உங்கள் உயிரை விண்ணில் ஏற்றியபின்
இந்த நல் தவத்தவரைப் போகவிடுவேன் என எழுந்தார்.
423.
போருக்கு நேர்ந்து எழுந்தபோது
நிறைந்திருந்த சுற்றத்தாரும்
சார்ந்த இயற்பகையார் முன்பு செல்லாமல்
எதிர்த்துப் பொங்கிய பெருஞ்சினத்தால் தடுத்தனர்
அம்மையாரைத் தன்னுடன் கொண்டு நிலத்தில் ஊர்ந்து செல்லும் வேதியரை.
424.
சென்று அவர் தடுத்தபோதில்
இயற்பகையார் முன் சீறி
வலிய வாளை இடவலமாக சாரி சுற்றி வந்து
எதிர்த்து நெருங்கியவரின் தோள்களும் கால்களும் தலைகளும்
துண்டம் ஆக வெட்டி வீழ்த்தினார் –
போர் செய்யும் ஆண்புலி போன்றவராக
போர் விளையாட்டில் மிக்கவராக.
425.
பலர் ஒன்று கூடி எதிர்த்தார்
சிலர் தனித்தனியாய் எதிர்த்து முட்டினார்
வேண்டிய திசைகள் தோறும் வந்து போரிட்டார்
போர் செயும் பொழுதில் ஆண்மைமிக்க நாயனார்
தாம் ஒருவரே அனைவர்க்கும் அனைவராகி
அங்கங்கே காணும்படி விசையுடன் பாய்ந்து கலந்து வெட்டி வீழ்த்தினார்.
426.
செறிந்து கிடந்தன குடல்கள் எங்கும்
எங்கும் துண்டாய்க் கிடந்தன உடல்கள்
பரந்து கிடந்தன தலைகள்;
கூடின கழுகுகள்
கண்கள் எரிந்தன
எங்கும் எதிர்ப்பவர் எவருமின்றிச்
சிவன் கழல் புனைந்த வீரர் தனியாய்த் திரிந்தார் அக்களத்தில்.
427.
வெட்டி உடல் துண்டங்களின் குருதி விட்டு விட்டு அலை போல் பொங்கிட
மடிந்த போர்க்களத்திலிருந்து ஓடியவரே தப்பியிருந்தனர்
எதிர்ததவர் யாவரும் மடிந்தே போயினார்
நீடிய வாளை ஏந்தி நாயனார் தனியாய் எஞ்சி நின்றார்.
428.
திரு உடைய மனைவியாரைக் கொடுத்து
தடை செய்தவரைச் செறுத்து
வரும் பெரும் சுற்றத்தை வாளால் துணிந்து கொன்று
அருமறை முனிவரை நோக்கி
?அடிகளே நீவீர் அஞ்சா வண்ணம் இச்சோலை கடக்க
துணையென நான் வருவேன் ? எனப் போந்தார்.
429.
நான்முகனும் அறியாத
திருமுகனும் அறியாத
இயல்புடைய சிவபெருமானின் பின் செல்லும் அம்மையார்
எதிர்த்தவரைப் போரிட்டு வெல்லும் வலிய நாயனார் பின்போக
முன் போகும் அருமறை வேதியர்
?திருச்சாய்க் காட்டின் ? அருகில் வந்ததும்
வீரம் பொருந்திய தோள்களுடைய இயற்பகையாரைப் பார்த்து
?இனி நீ போ ? எனச் செப்பினார்.
430.
தவமுனி தன்னை மீளச் சொன்ன பின்
அவர் திருவடிகளைக் கீழே விழுந்து வணங்கி பிறகு
கையார வணங்கி மூவுலகில் உய்ய எழுந்தருளிய வேதியாரைத் துதித்து
?சிவனருள் பெறப் பெற்றேன் ? என மகிழ்ந்து மீண்டார் இயற்பகையார்.
431.
செய்வதற்கு அரிய செய்கை
செய்த நல் தொண்டர் திரும்பிப் போக
அருமை விளங்கும் கண்டரான
எட்டுத் தோள் கொண்ட மறையவர் மகிழ்ந்து நோக்கி
?பொய்தரும் உள்ளம் இல்லான் இவன்
திரும்பியும் பார்க்காது செல்கிறானே ? என்று
மெய்யன்பு தரும் சிந்தையாரை மீண்டும் அழைத்தார்.
432.
மயக்கம் இல்லாத வேதங்கள் தமை நோக்கி
ஓலமிட்டு அழைக்க நான்முகன் திருமால் தேடும்படி நின்ற இறைவர்
?இயற்பகையானே! ஓய் ! நீ திரும்பி வருவாயாக, ஓலம்!
எப்போதும் என் நினைவு மறவாதவனே ஓலம் !
அன்புடையவனே ஓலம்! செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் ? என்றார்.
(ஓலம் – அபயம் )
433.
அழைத்த பேரோசை கேட்ட இயற்பகையார்
?அடியேன் இதோ வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் இன்னும் எவரேனும் உண்டாகில்
பெரிய வலிமைக் கை வாளில் வெட்டுபடுவர் அவர் ?
எனச் சொல்லி வந்து எய்தியதும்
காதணி விளங்கும் இறைவரும் அருள் சக்தி வெளிப்படக் கோலம் கொண்டு மறைந்தார்
434.
திரும்பிச் சென்ற இயற்பகையார்
முனிவரை காண இயலார் ஆனார்
தம் மனைவி மட்டும் கண்டார்
பொன் மயமாய் விளங்கும் குன்று
வெள்ளிமலை மீது விளங்கினாற்போல்
தந்துணை உமையாளுடன் வானில்
இறைவரைக் காளையூர்தி மீது கண்டார்
நிற்கவில்லை.
தொழுது வீழ்ந்தார்.
பின் நிலத்தினின்று எழுதார் துதித்தார்.
( திருவருளால் தொடரும் )
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்