ஆண்மையை எப்போது

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

புகாரி


பிள்ளைப் பிராயத்தில்
சிவந்த அல்லிக் குளத்துமேட்டில்
அரைக்கால் சட்டையில்
அரையணா இடைவெளியில்
அனாயாசமாய் நின்றுகொண்டே
சிறுநீர் வார்த்தபோது
நான் உணரவில்லை

பறக்கத் துடிதுடிக்கும்
குயிலிறகுக் கூட்டங்களாய்
கருத்தடர்ந்த அழகு மீசை
மேலுதட்டு மொட்டை மாடியில்
குப்பென்று வளர்ந்து நின்று
கம்பீரம் காட்டியபோது
நான் உணரவில்லை

மேற்குமலைத் தொடர்களாய்ச்
செழித்துத் திரண்ட தோள்கள்
வான் நிமிர்த்தி வாட்ட சாட்டமாய்
யானை நடை பயிலவைத்தபோது
நான் உணரவில்லை

அந்திவெயில் குடையின்கீழ்
குறுகுறுவென்ற கிளிக் கண்கள்
பலநூறு… கூட்டமாகக்
கொத்திக்கொத்தித் தேன்தின்று
குறும்பாகப் பார்த்தபோது
நான் உணரவில்லை

முட்டவந்த முரட்டுக் காளை
எட்டியோட முட்டி விரட்டி
நெஞ்சு வேர்க்க நின்றபோது
நான் உணரவில்லை

கல்யாண ஊர்வலத்தில்
மணமகன் கோலத்தில்
ஊரறிந்த நாயகனாய்
பேரின்பக் கண்கொதிக்க
ஊர் உலா வந்தபோது
நான் உணரவில்லை
.

நான் கருவான முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

பனிக்குடப் பிசுபிசுப்போடு
எட்டி இந்த உலகு பார்த்து
நானழுத முதல் இரவு
என் முதலிரவில்லையாம்

சட்டப்படி பெண்ணொருத்தியை
பட்டு மெத்தையில்
தொட்டுப்பார்க்கும் இரவுதான்
எனக்கு முதலிரவாம்

அடடா…
பாலுறவில் உள்ளதோ
நம் பண்பாடு ?

அந்தச் சமுதாயப்
பண்பாட்டு இரவிலும்கூட
நான் உணரவில்லை
.

பின்
எப்போதுதான் உணர்ந்தேன்
நானென் ஆண்மையை ?
.

என்னுயிர் தொட்டுத்
தன்னுயிர் கலந்து
புத்துயிரென்னும்
கருவோடு மிளிர்ந்தாள்

பெண்மை என்னும்
கர்வத்தோடு எழுந்தாள்

என் தாகத்திற்குத்
தாகத்தாலேயே
தண்ணீர் தந்த தேவமல்லி

என் மோகத்திற்கு
மோகத்தாலேயே
தீர்வு தந்த பவளமுல்லை

அப்போதுதான்
ஆம்… ஆம்…
அப்போதுதான் நான்
சத்தியமாய் உணர்ந்தேன்
என் ஆண்மையை
.

பெண்மையை உணர்த்துவது
ஆண்மையுமல்ல

ஆண்மையை உணர்த்துவது
பெண்மையுமல்ல

இயற்கையின் துணையோடு
இருவரும் சேர்த்துச் சமைக்கும்
உயிர்க்கரு என்ற
உன்னதக் கூட்டு முயற்சியே
.

இதில்
ஆண்மையும் ஆனந்திக்கும்
பெண்மையும் பூரிக்கும்

ஆண்மை பெண்மை
இரண்டும் ஒன்றாய்க் கலந்த
அழியா இயற்கையும்
பூத்துக் குலுங்கும்!

*

அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation

புகாரி

புகாரி