பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

மொழியாக்கம் இரா.முருகன்


—-

அவங்க ஒரு பக்க முகம்
(வலது பக்கம்)
எல்லாரையும் போலத்தான்.

ஆனா இன்னொரு பக்கத்துலே
தசையெல்லாம் சேர்ந்து வீங்கி
இறுகிக் தழும்பு பிடிச்சு
கொத்துக் கறி கணக்காக் கிடக்கு.

எரிஞ்சு போச்சோ,
திராவகம் தெளிச்சு வெந்து போனதோ
நமக்கு ஒண்ணும் தெரியாதுங்க.

ஒத்தைக் கண்ணு
ஒரு முலையை அறுத்து எடுத்தாச்சு.
கருப்பையும் போயாச்சு.
சோளக்கொல்லை பொம்மை போல
சேலை சுத்தி
பாதி முக்காடு போட்ட
நரைச்ச தலையிலே
கரையான் அரிச்ச மாதிரி
ஒட்ட வெட்டின முடி.

எந்நேரமும் இங்கே
அம்மாக்காரிங்களுக்கு
ஒத்தாசை பண்ற அம்மாச்சி.
சம்பளம் வாங்காத நரசம்மா.
தெருவிலே பிறந்து விழுந்த
எல்லாப் புள்ளைங்களையும்
குளிப்பாட்டுற பெரியாத்தா.

அதுங் கையிலே
ஒரு வாளி நிறையத் தண்ணியும்
துண்டு சோப்பும்
ஒரு குளிக்காத கொழந்தப் புள்ளையும்
கொடுங்க சொல்றேன்.

பிள்ளை ரொம்ப அழுக்கா இருந்துச்சின்னா
ரொம்பவே மேல்.
கரிஞ்சு போகாத பாதி முகத்திலே
எப்பவுமே பாதியிலே நிக்கற சிரிப்பு
சிரிச்சு முடிக்காமலேயே
முழுசானதாத் தோணும் அப்போ.

பரிசு கிடைச்ச மாதிரி
பிள்ளையை வாங்கித்
துணியை உருவறபோது
வலது கண்ணு
குறுகுறுன்னு மின்னும்.

இப்ப டிரவுசரைக் அவுக்குதே
வாலுப் பய
இந்த மாதிரி கையிலே கிடைச்சா
பெரியாத்தாளுக்கு
பெறகென்ன சந்தோசம் வேணும்னேன்.

பெரியாத்தா நடைபாதையிலே
ரோட்டைப் பார்த்துக்
குந்தியிருக்கு.
அதோட சேலை
முழங்கால் வரைக்கும் ஏறிக்கெடக்கு.

பொடியன் கண்ணுலே சோப்பு எரியுது போல.
மேலெல்லாம் நுரை. துள்ளறான்.
என்னா அழும்பு. என்னா அழும்பு.
பெரியாத்தா காலை நீட்டி
அதும் மேலே நீளவாக்கிலே
குப்புறத்திப் போட்ட பயபுள்ள
தொப்பலா நனைஞ்சிருக்கான்.

பெரியாத்தா கைக்கு வாகாப்
நீலக் குவளை ஒண்ணு
பக்கத்து வாளித் தண்ணியிலே
படுகுஷியா மிதக்குது.

ஆத்தா காலு ரெண்டும்
ஆகாசத்தைப் பாத்து நிமிர்ந்து கெடக்கு.
அதுங் கைவிரல்
பயலோட புட்டத்தை இறுக்கிப் பிடிச்சுக்
கால்லே கவுத்து வச்சபடிக்கு
உடம்பை நீவிநீவி
சோப்பைத் தேய்க்குது.

பெரியாத்தா கணுக்கால்லே
மூக்கு அழுந்தின கொழந்தப் பையன்
திமிற முடியாமக் கிடக்கறான்.
வளைஞ்சு நெளிஞ்சு
வழுக்கற அவன் உடம்பிலேருந்து
கருப்பு சிலேட்டுலே வழிஞ்ச மாதிரி
சோப்பு நுரை
முட்டி மோதி, கலைஞ்சு திரும்ப எழும்பி
மேலே கீழே பக்கவாட்டிலே வழியுது.

பயலைத் திருப்பிப் போடுது பெரியாத்தா.
அதுங் காலுக்கு நடுவுலே
உதைக்கறான் அவன்.
ஓன்னு அழுதுக்கிட்டு
உலகத்துக்கே முட்டி மடிச்சுக் காட்டறான்.

பெரியாத்தா
அவனோட ரெண்டு காலையும்
ஒண்ணாப் பிடிச்சபடி
முகத்தைக் கசக்கிக் கழுவுது.
காதை விரிச்சு,
மூக்கைத் திருகி
உள்ளே விரலைவிட்டு,
கையை முறுக்கி,
கொட்டையைப் பளபளன்னு கழுவி
குஞ்சைப் பிடிச்சு விளையாட்டா இழுத்து
மூணு குவளைத் தண்ணியை
சடசடன்னு மேலே ஊத்திப்
பிள்ளையைக் குளிப்பாட்டுது பெரியாத்தா.

பயலோட உடம்பிலேருந்து
பெரியாத்தா காலிடுக்கிலே
மடைதிறந்தது போல வழியற தண்ணி
நடைபாதைப் பக்கம்
பொங்கி வழிஞ்ச நட்சத்திர
நுங்கும் நுரையுமாப் பெருகி
நீண்ட குளியல் ஆறாக நடக்க
ஓரமாகக் காத்திருந்த எலிவளை
உள்ளே இழுத்து விழுங்குது.

வெள்ளம் வடிஞ்ச அப்புறம்
பெரியாத்தா பிள்ளையை
தலைக்கு உசரத் தூக்கித்
தரையிலே நிப்பாட்டுறா.
முழுக்க நனைஞ்ச பிள்ளை
முழுசாத்தான் இருக்குது.

வேதப் புத்தகத்துலே வருவாரே
பிரளயம் முடிஞ்சு பிழச்ச நோவா
அவர் போல தள்ளாடிக்கிட்டு
கால் வளஞ்சு நிக்கறான் பயல்.
அவன் கம்புக்கூட்டுலே பெரியாத்தா கை
பிடிச்சு இறுக்கி நிப்பாட்டினாலும்
தன் கால்லே தான் அவன் நிக்கறான்
சண்டைக்காரன் ஆயிட்டான் பாருங்க
தம்மாத்தூண்டு பயலா இருக்கச் சொல்லவே.

பெரியாத்தா துண்டை எடுத்து
அவன் தலையிலே போட்டுத்
துவட்டி விடுது.
தலை நிக்காம அவன்
மாட்டேன் மாட்டேன்னு
தன்பாட்டிலே ஆட்டிக்கிட்டே கிடக்கான்.
பெரிய பெரிய கட்டிடமா
அவனைச் சுத்தி எழும்பி
இரைச்சல் போட்டு மிரட்டும்
உலகத்தைப் பார்க்கிறான்.
அதுக்கு பதில் சொல்றது எப்படின்னு
அவனுக்குத் தெரியுமே.

உலகத்தைக் குறிவச்சு அவனோட
தண்ணித் துப்பாக்கியை நீட்டறான்
(அப்படிப் போடுடா பயலே
அது மேலே ஒண்ணுக்கிருடா)
வளைச்சு மூத்திரம் அடிக்கறான்.
காலை வெளிச்சத்திலே
உற்சாகமா மின்னி மினுங்கி வழியுது அது.

(அருண் கொலட்கரின் ‘காலா கோடா போயம்ஸ் ‘ தொகுதி – The Ogress (பூதகி) கவிதை –
மொழியாக்கம் இரா.மு நவம்பர் 7 2004)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்