நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நெஞ்சில் பளிச்சிட்டு நான்
பாட வந்த
கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் கால நேரம்
மெய்யாக
வரவில்லை இன்னும்!
சொற்களை
செம்மையாகக் கோர்க்க முடிய வில்லை!
வேட்கை மீறி
கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரணமாய் கீதம்
சீராகப் பூத்து விரிய வில்லை
இன்னும்!
காற்று மட்டும்
அருகில்
பெருமூச்சு விடுகிறது!

அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகத் தொடும்
அவனது
பாத ஓசைகள் மட்டும் எனது
காதில் பட்டுள்ளது!
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம்
விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இப்போது
இருட்டி விட்டது!
இன்னும்
விளக்கேற்ற வில்லை!
வாராய் வீட்டின் உள்ளே என்று
வரவேற்க முடியாத
சங்கடத்தில் உள்ளேன்!
ஒருநாள் அவனை
சந்திப்போம் என்னும்
ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கிறேன்!
ஆனால்
சந்திப்பு ஏற்பட வில்லை
இதுவரை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 3, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா