குகன் ஓர் வேடனா ? ?..

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

கவியோகி வேதம்


அவனை-ஓர் வேடன்என் றழைக்காதீர்!-நம்

..அன்பு ‘ராம ‘ நாடனென் றழையுங்கள்!

….

குகனேஅக் காட்டில் உதவிநின்றான்!-அதன்

…கொடுமையைக் குறைக்கவும் வழிசெய்தான்;

குகனேதன் தலைவனைக் கண்டுகொண்டான்!-இவனும்

…குழைந்துதன் துணையெனப் போற்றிநின்றான்!..(அவனை–)

..

அவனது கண்ணில் தீ-பொரியும்!-இராம

..அண்ணலை எதிர்த்து யார்வரினும்!

அவனது உதடும் துடிதுடிக்கும்!-இராம

..ஆணையை மீறி யார்செயினும்!..(அவனை)

..

இராமனின் விருப்பம் அவனறிவான்!-அதை

..எளிதிலே முடித்து மகிழ்ந்திடுவான்!

இராமனின் துன்பம் அவனறிவான்!-தனது

..இன்னுயிர் தந்தும் நீக்கவல்லான்!

..

தூரத்தில் பரதன் வருகின்றான்!-போர்

..தொடுக்கவந் ததாக இவன்நினைத்தான்!

ஆரவாரம் செய்(து) எதிர்த்துநின்றான்!- ‘தியாக ‘

..அன்பினைக் கண்டபின் நெகிழ்ந்துவிட்டான்!..(அவனை)

..

இராமனோர் சைவனென் றவனறியான்!-மீனையும்

..இனியநல் தேனையும் உ(ண்)ணக்கொடுத்தான்!

இராமனோ குகனுளே தேவன்கண்டான்!-அதனால்

..இவனும்என் ‘தம்பி ‘என் றறிவித்தான்!

..

துன்பத்தில் உதவுவோ ரெலாம் ‘குகனே ‘!-நமக்குத்

…துணையென முன்வரு வோர் குகனே!

இன்பப்ப டகளிப்போர் எலாம் ‘குகனே!–வாழ்வில்

… இனிமையைச் சேர்ப்போர் எலாம்குகனே!

..

அதனால்,

அவனை-ஓர் வேடன்என் றழைக்காதீர்!-நம்

..அன்பு ‘ராம ‘ நாடன்என் றழையுங்கள்!

****(கவியோகி வேதம்)

yogiyarvedham@vsnl.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்