பெரியபுராணம் — 13

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

பா. சத்தியமோகன்


201.

அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்ல

செவ்வியமறையோர் திரும்பி திருமறை முனியை நோக்கி

இவ்வுலகின் மீது நீ இன்று இவரை உன் அடிமை என்ற

வசை பொருந்திய வழக்கை எம்முன் மெய்ப்பி என்றனர் மீண்டும்.

202.

ஆட்சியோ ஆவணமோ அயலவரின் சாட்சியோ

மூன்றில் ஒன்று காட்டுக என்றதும்

மாயையில் வல்ல மாயவன்-

“மூல ஓலை ஆவணம் காட்டுவேன் நான்

ஆரூரன் கிழித்தது படி ஓலைதான் ! மூலமல்ல’’ என்றாரே.

203.

காட்ட வல்லீரெனில் மூலஓலையை இங்கு காட்டும் என்றனர் அவையோர்

நம்பிஆருரர் முன்போல் செய்யார் என சொல்ல வல்லீரெனில் காட்டுவேன் என்று வேதியர் சொல்ல நாங்கள் தீங்குற விடமாட்டோம் என்றனர்

அல்லல் தீர்த்தாள இறையோன் அதனை அவைமுன் கொண்டு சென்றார்

204.

கருமையான கழுத்தை மறைத்த வேதியர் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவினர்

ஆவணத்தை தொழுது வணங்கி வாங்கினான் அவையின் அருளைப் பெற்ற கரணத்தான்

உறையை எடுத்து விலக்கிச் சுருண்ட சுருளை விலக்கி பழமையைப் பரிசோதித்து

அறிவுடையோர் யாவரும் கேட்க வாசகத்தை உரக்கப் படித்துச் சொன்னான்

205.

“அந்தணர் வாழும் திருநாவலூரில் ஆதிசைவ மரபிலே

ஆரூரன் என்ற நான் பெருமுனிவரான திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு நானும்

என் வழியில் வருவோரும் வழிவழியாய்த் தொண்டு செய்வோம்

என்பதற்கு இந்த ஓலை மனமும் செயலும் சம்மதித்து எழுதித் தந்தேன் இதுஎன் எழுத்து”.

206.

வாசகம் கேட்டவர்கள் கையெழுத்தும் சாட்சியும்

சரியாக இருப்பதை அறிந்து குற்றமிலா அவையினர்

ஆரூரரைப் பார்த்து ‘ஐயா அறிந்து இவ்வோலையின் கையெழுத்து

பாட்டனாரின் எழுத்தே ஆனால் தெளிய முழுதும் சோதித்தறிக என்றார்.

207.

அந்தணர் சொன்னதும்-

“ஓலையைக் கண்டு தெளிய இந்த அடிமையோ உரியவன் ?

இவனது பாட்டனின் வேறு கைச்சாத்து இருப்பின் வரவழைத்து

நீங்கள் ஒப்பிட்டு மொழிக என்றார் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.

208.

திரண்ட மாமறையோர் திருநாவலூரர் கொண்ட

மயக்கம் தெளியுமாறு அவரது பாட்டனார் தம்கைபட எழுதிய ஓலை

பாதுகாவலில் இருந்த இடத்திலிருந்து வரவழைத்து ஒப்பு நோக்கி

இரண்டும் ஒத்திருக்கின்றன! இனி நாம் செய்ய ஒன்றில்லை! என்றனர்.

209.

நம்பி ஆரூரரே ! நான்மறை முனிவரிடம் தோற்றீர்

அவர் ஏவல் இடும் தன்மைபடி ஏவல் செய்தல் உமதுகடன் என்று

பண்பில் மிக்க மேன்மையோர் விளம்ப

விதிமுறை இதுவே ஆகில் இசைய மறுக்கலாகுமோ ! என்றார் நம்பி.

210.

செழிக்கும் மறை முனிவர் நோக்கி திருமிகு மறையோர் கேட்டனர் :

‘’அரிய முனிவரே! நீவீர் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்

பெருமைசேர் வெண்ணெய் நல்லூரே ஊர் என எழுதப்பட்டுள்ளது.

அப்படியாயின் உங்கள் வீடும் நீண்ட வாழ்வும் காட்டுக.”

211.

ஒப்பிலா வழக்கைப் பேசி வென்ற புண்ணிய முனிவர் சொன்னார்:

என்னை ஒருவரும் அறியவில்லையெனில் வருக என்னுடன் என்றார்

சூழ்ந்த பெருமறையோர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல

திருஅருட்துறை எனும் கோவிலுள் புகுந்தார்

அதன் பின் எவரும் கண்டிலர், திகைத்து நின்றார் !

212.

விளங்கும் பூணூல் அணிந்த மார்பர் எம் இறைவனின் கோவிலில்

புகுந்ததன் காரணம் என்ன என்று திருநாவலூர் நம்பி

தம்பெரு விருப்பினோடு செல்ல அழைத்தது ஈசன் உணர்வே

காளையூர்தியில் எழுந்தருளி காட்சி உணர்த்தினார் உண்மையே.

213.

“முன்பு நீ நமக்குத் தொண்டன் மங்கையற்மேல் வேட்கை வைத்தாய்

பின்பு நம் ஏவலாலே பிறந்தரிய மண்ணின் மீது

துன்புறும் வாழ்க்கை நின்னை தொடரக்கூடாதென தொடர்ந்து வந்து

அந்தணர் முன்னிலையில் நாமே தடுத்தாண்டோம் “என்றார்.

214.

ஆண்டோம் என்ற ஓசை கேட்டு தாய்ப்பசுவின் கனைப்பு கேட்ட

ஆண் கன்றைப்போல் கதறினார் நம்பி.

கைகால் முதலான திருமேனி எங்கும்

புளகம் தோன்ற தொழுதார் கைகளைக் குவித்து தலைமேல் வைத்து

மன்றில் ஆடும் தெய்வமோ என்னை வலிய ஆட்கொண்டது என்றார்.

215.

திருவருள் வெளிப்பாட்டால் ஐந்தெழுத்தின் ஓசை கேட்டது வானமெங்கும்

விண்ணவர் பூ பொழிந்தனர் துந்துபி முரசும் ஒலித்தது

மண்ணவர் மகிழ்ச்சி பொங்க வேதங்கள் முழங்கி ஆர்த்தன

ஓலையைக் காட்டி அண்ணலுக்கு ஆண்டவர் அருளிச் சொன்னார் :-

216.

நம்மிடம் நீ வலிந்து பேசியதால் வந்தொண்டன் எனும் நாமம் பெறுவாய்

பெற்றாய் நம் அன்பில் பெருகிய சிறப்புகளில் சிறந்த

அர்ச்சனை என்பது பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை

உன்சொல் தமிழ் கொண்டு பாடு என்றார் மறைகள் துதிக்கும் வாயார்.

217.

தேடிய நான்முகனும் திருமாலும் தேடியும் காணாமல் ஐந்தெழுத்தைப்பாடித்

துதித்த பொருளாய் உள்ளான் நம்மைப் பாடுக என்றதும்

நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் தில்லைச் சிற்றம்பலத்தில்

ஆடிய திருக்கூத்தன் திருவடியை அஞ்சலித்தார் கைகூப்பி நின்று.

218.

வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்வதற்கென்று வந்த

அருட்செயலை அறியாதிருந்தேன் எனக்கு உணர்வு தந்து உய்யக்கொண்ட

கோதிலா அமுதே இன்று உன் குணப்பெரும் கடலை நாயேன்

அதனை அறிந்து என் சொல்லிப் பாடுவேன் என மொழிந்தார்.

219.

அன்பனை அருளால் நோக்கி இறைவர் அருளினார்

முன்பு எனை பித்தன் என்று மொழிந்தாய் ஆதலாலே

என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார்

வன்பெரும்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடத் தொடங்கினார்.

220.

கொத்தான மலர் குழலாளை ஒரு பாகம் வைத்து

அடியவர் மீது மெய்த்தாயினும் இனிமை செய்யும் பெருமானை

‘பித்தா பிறை சூடி’ எனத் தொடங்கும் திருப்பதிகம்

இந்நிலவுலகம் உள்ளிட்ட உலகெலாம் உய்யப் பாடினார்.

(பதிகம் : பத்து பாடல் )

221.

பண் இலக்கணம் பதினொன்றில் முறையாய் வரும் நான்கு பண்களில்

‘இந்தோளம்’ எனும் இசைப்பாகுபாட்டாலும் அதற்கேற்ற பொருந்திய உரிமையாலும்

தாள விகற்பங்கள் இலக்கணம் நிரம்புமாறு நீடுபுகழ் வகையால்

இறைவன் மகிழும் தமிழ் இசைப்பாட்டைப் பாடினார்

தமக்கு நிகரில்லா ஆரூரர்.

222.

சொல்லால் தமிழ் இசை பாடிய தொண்டந்தனை இன்னும்

பலவகையால் உலகினில் நம்புகழ்பாடு என்று பரிவுற்று

நல்லோர் வாழும் திருவெண்ணெய்நல்லூர் அருட்துறை இறைவன்

எல்லா உலகும் உய்யத் திரிபுரம் எரித்தவன் அருள் செய்தான்.

223.

கைம்மை நோன்பில் இருந்தவர் மணம் அன்றே அழிந்ததால்

புத்தூரில் வந்த சடங்கவி சிவாச்சாரியாரின் மகளும்

உயர்ந்த நாவலூர் தனிநாதனை நீங்காமல் நினைவில் கொண்டு

தியானித்த வழியால் சிவலோகம் எளிதாம் வகை பெற்றாள்.

224.

நாவலூர்காரர் நம்பிஆரூரரை வெண்ணெய்நல்லூரில்

மேவும் அருட்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்ட பின்

மலர்கள் பூக்கின்ற நீர்நிலைகள் கொண்ட திருநாவலூர் புகுந்து

தேவர்களின் தலைவனான இறைவனைப் பணிந்து திருப்பதிகம் படித்தார்.

225.

சிவன் உறையும் திருத்துறையூர் சென்றார் அணைந்தார்

தீவினையால் அவநெறியில் செல்லாமல் தடுத்து ஆண்டாய்

அடியேற்குத் தவநெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்றார்

பலநெறிகளில் சிக்காமல் விலக்காகும் திருப்பதிகம் பாடினார்.

226.

நம்பி ஆரூரார் வேண்டிய வண்ணம் புலன்கள் தவத்தில் படிய அருள் கொடுத்தார்

மலர்கள் நிறைந்த நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்து அருளும்

நிலவும் குளிர் கங்கையும் ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம்

மலர்தூவிப் போற்றி இசைத்து வந்தனை செய்தார் வன்தொண்டர்.

227.

திருத்துறையூர் தனைப் பணிந்து புறப்பட்டார்

சிவபெருமான் அமர்ந்தருளும் இடம் பலவும் சென்று இறைஞ்சினார்

எம்பிரான் திருக்கூத்து நிகழ்த்தும் சிதம்பரம் சென்று வணங்க எண்ணி

நினைவுற்று வருத்தம் தரும் ஆசை மிக புறப்பட மனம் கொண்டார்.

228.

மலையில் வளரும் சந்தனம் அகில் எனும் மரங்களையும்

மயிற்பீலியையும் மலர்களையும் வாரி எங்கும் பரப்பி மணிகள் கொழிக்கும்

குளிர் அலைதரும் பெண்ணையாறு கடந்து ஏறினார்

பசும் நிலவு மேவும் கடலின் மாலைப் பொழுதில் அடைந்தார் திருவதிகை.

229.

இறைவனால் ஆளாகக் கொள்ளப்பட்ட உலமெனும் அரசில்

கல்முள் முதலியன விலக்கும் உழவாரப் படையுடைய திருநாவுக்கரசர்

இறைவர்க்கு கைத் தொண்டு விரும்பிச் செய்த

திருஅதிகை வீரட்டானத்தை மிதித்து நடக்க அஞ்சுகிறேன் என்று

நகரில் புகாமல் புறம்பே உள்ள சித்தவடமடம் புகுந்தார்.

230.

இசைப் பாடல்பாடும் வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த மடத்தில்

விரிந்த அலைகளுடைய நீர்மிக்க கெடில ஆற்றில் வடகையில் உள்ள

வீரட்டானத்து இறைவனை மனதினில் நினைத்தார் வன்தொண்டர்

பரிவாரம் துயில் கொள்ள பள்ளி கொண்டார்.

— திருவருளால் தொடரும்.
-cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்