அதிசயம்!

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

காசிகணேசன் ரங்கநாதன்.


எங்கள் ஊர் பை பாஸ் ரோடில் அமர்ந்து இருந்தேன். அன்று ஏனோ வண்டி வாகனம்

எதுவும் இல்லை. நடுச் சாலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு இடப்புறம் சற்றுத் தள்ளி யாரோ ஒரு வாழை மரத்தை வெட்டி நடுச்

சாலையில் சாய்த்திருந்தார்கள். ஒரு மாடு அந்த வாழை மரத்தை விட்டு விட்டு

அருகிலிருந்த ஒரு மாமரக் கட்டையைப் போட்டுக் கடி கடி எனக் கடித்துக்

கொண்டிருந்தது. அதைப் பார்த்து எனக்கு மகா எரிச்சல் வர,

‘இந்த மாட்டுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… ‘

கொஞ்சம் சத்தமாகக் கத்திவிட்டேன் போலிருக்கிறது. அருகில் அமர்ந்திருந்த

நிர்மல் இடைமறித்தான்.

‘சரி வுட்ரா அது என்னாமோ பண்ணிட்டுப் போட்டும். உனுக்கென்ன வந்துச்சு… ‘

‘நிர்மல் இருக்கும் இடமெல்லாம் ஆனந்த் இருக்கும் இடமாகக் கருதப்படும். அடடே

ஆனந்தைக் காணமே ?… ஓ அதானே பாத்தேன் ‘

ஆனந்த் நிர்மலுக்கு இடப்புறமாக அமர்ந்திருந்தான். நிர்மல் அவனை மறைத்தபடி.

எனக்கு எதிரே தார்ச் சாலையிலிருந்து திடாரெனச் சரியும் பள்ளத்தின் கீழே

நிலத்தை உழுது புழுதி பண்ணிப் போட்டிருந்தார்கள். சிறு கற்களையெல்லாம்

பொறுக்கி எடுத்து மண் பஞ்சு பஞ்சாக…

‘ம்ம்ம்… இந்தப் பயல்கள் ஒத்து வந்தால் கட்டிப் புரண்டு சண்டை போடலாம்..

அற்புதமான களம். ம்ம்ம்… இவன்களாவது ஒத்து வருவதாவது.. ‘

இடப்புறம் திரும்பினேன். நிர்மலும் ஆனந்தும் வழக்கம் போலவே குசு குசுத்துக்

கொண்டிருந்தார்கள்.

‘யப்பா… இவனுங்க வேலைய ஆரம்பிச்சிட்டானுங்கப்பா… இனிமே

உருப்புட்டா மாதிரிதான். ‘

இவர்கள் அருகிலிருப்பவர்களின் மண்டையைக் குழப்பிக் குளிர்காய்வதில் வல்ல

எமகாதகப் பயல்கள். ஏதோ பரம ரகசியத்தைப் பேசுவதுபோல எப்போதும்

குசுகுசுத்துக்கொண்டே இருப்பார்கள். மிக அருகில் நெருங்கி ஒட்டுக் கேட்டாலும்

கேட்காது. பிறகு அவன்களே வாயைத் திறப்பார்கள்; பார்த்தால் விஷயம்

ஒன்றுமே இருக்காது. வெறும் சப்பை மேட்டராக இருக்கும். ஆனால் முகத்தை அப்படி

ஒரு சீரியசாக வைத்துக் கொண்டு பேசுகிற தோரணையைப் பார்க்கிற போது

எதோ அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் மிக ரகசியமான ஒப்பந்தம்

குறித்துப் பேசுகின்ற மாதிரி இருக்கும்.

எதிர்த்த நிலத்துக்கு இடப்புறம் இருந்த நிலத்தில் விவசாயி கோவணத்துடன்

இரட்டைக் காளையும் கலப்பையுமாக உழுது கொண்டு நிலத்தைப் புழுதி பண்ணிக்

கொண்டிருந்தான். இரண்டு நிலத்துக்கும் இடையே சற்றே உயர்வாக கெட்டிப்பட்ட

ஒரு வரப்பு. ஒரு சமயத்தில் ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்ல முடியும்.

நிலத்தைக் கவனித்தபடியே இடப்புறம் கவனித்தபோது அந்த தடித்

தாண்டவராயர்களுக்கு எதிரில் புங்கை மரத்தில் இரண்டு குதிரைகள் கட்டப்

பட்டிருந்தன. மிகுந்த ஆச்சர்யத்தோடு நிர்மலைக் கேட்டேன்,

‘டேய் என்னடா இது ? இங்க யாரு குதிரையக் கொண்ணாந்து கட்னது ?.. ‘

‘ஹி..ஹி..ஹி.. ‘ இரண்டு பேரும் அசட்டுத்தனமாகச் சிரித்தபடியே சொல்ல

ஆரம்பித்தார்கள்.

‘அது வேற ஒண்ணுமுல்ல மாமு; நம்ம குதிரைக்காரன் கொள்ளப் போட்டுட்டு

ரொம்ப அவசர வேலயா வெளியூர்ல இருக்கற மச்சானைப் பாக்கப் போய்ட்டான்.

பக்கத்து ஊட்டுக்காரன்தான் பாத்துக்கிட்டுருந்தான். நைசா அவன் தலயத் தடவிக்

குடுத்துக் குதிரைங்களத் தட்டிக்கினு வந்துட்டோம். ‘

‘அப்ப சரி எடுத்துண்ணு ரவுண்டு அடிக்க வேண்டியதுதானே ? சும்மா லட்டு லட்டு

மாதிரி ஒரு சேன்ஸ் கெடச்சுருக்குது; இப்புடி ரெண்டு பேரும் பைபாஸ் ரோடுல

ஒக்காந்து முணுமுணுத்துன்னு இருக்குறீங்க… ‘

குதிரைகள் வாழை இலையையும் மட்டையையும் இழுத்து இழுத்து மென்று

கொண்டிருந்தன.

மறுபடி நிர்மல் அசடு வழிந்தபடி.. ஆரம்பித்தான்,

‘ஹி.. ஹி.. ஆனந்துக்குக் குதிரை ஓட்டத் தெரியாதே.. எங்க கிட்ட ரெண்டு

குதிரை இருக்குதே.. ஒண்ண வுட்டு ஓண்ண எடுத்துன்னு போகவும் முடியாது.

உன்னோன்ன எவனாச்சும் தள்ளின்னு போய்ட்டான்னா.. ‘

‘கவலைய உடு; உன்னொண்ண நான் எடுத்துக்கறேன். ‘

‘அப்ப ஆனந்து… ‘

‘அந்தக் களதைய உனுக்குப் பின்னால ஏத்திக்கோ. ரெண்டு களுதங்களும் ஒரே

குதிரைல வாங்க.. என்னான்ற ? ‘

‘ஆமாம் ஆமாம் அதுவும் சரிதான். ‘

‘குதிரைகளை வயல்கள், கொல்லைகள் வழியாகத்தான் ஓட்ட வேண்டும். தார்

ரோட்டில் போறதுக்கு குதுரை எதுக்கு பஸ்லயே போலாமே ? ஒத்தையடிப் பாதை

பத்தாது அதனால் என்ன நிலத்துக்குள்ள எறங்கி ஓடட்டும். பொதுவாக குதிரையை

ஓட்டத் தெரியாதவர்கள் ஓட்ட முடியாது. பின்னிப் பெடலெடுத்துவிடும்.

ஒவ்வொருமுறை எக்கித் தாவும் போதும் நம் மேல் அடி விழுகிற மாதிரி

இருக்கும். தொடை வலிக்கும், எரியும். புதுசாக் குதிரை ஓட்டக் கிளம்பி

குப்புறக் கவுந்து தலையைச் சேற்றில் சொருகிக் கொண்டவர்கள் கதையெல்லாம்

உண்டு. ‘

நாங்கள் குதிரைகளையும் புழுதி பண்ணிய நிலத்தையும் மாறி மாறிப்

பார்த்தபடித் திட்டம் போட்டுக் கொண்டிருந்த போது, திடாரென்று ஏழெட்டு

ஜப்பானியர்கள் திமுதிமுவென்று எங்களைச் சட்டையே செய்யாமல் வரப்பில்

இறங்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். மூன்று பேருக்கும் ஒரே

அதிர்ச்சி!!!

‘டேய் என்னடா இது! நம்மூர்ல இவனுங்க எப்புடி!!! ‘

‘தெர்லயே ?!.. ‘

‘இர்ரா நான் போய் பாத்துட்டு வந்துர்ரேன்.. ‘

ஆனந்த் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறந்தான். ஆனந்துக்குக் குதிரை

ஓட்டத்தெரியாதே ஒழிய அவனே ஒரு குதிரைதான். கராத்தே படித்த

காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குரூப்பாக ஊரை அண்டிய காட்டுப்

பகுதிக்குள் பதினாறு கிலோமீட்டர் ஓடுபவன். அவுத்து வுட்டதாம் கழுத எடுத்து

வுட்டதான் ஓட்டம்னு சொல்வாங்களே அது ஆனந்துக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.

கடைசியில் நிர்மல்,

‘டேய் கொம்முனு ஒக்கார்ரா… மொதல்ல என்னதான் செய்யுறாங்கன்னு

பாப்போம்… ‘ என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார்த்தவும் அமைதியானான்.

அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரப்பு வழி கடந்து போனார்கள். புழுதி

பண்ணிய வயலுக்கு அடுத்து உள்ள வயலில் தண்ணீர் கட்டி, தழையடித்து, கழனி

கலக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வயலின் வரப்பின் மேல் நின்று வேடிக்கை

பார்த்துக் கொண்டிருந்த அந்த நிலத்துக்குச் சொந்தக்கார கிழவரை

அணுகினார்கள். அவர்கள் அந்தக் கிழவரிடம் எதுவோ சொல்வதும் அதனை அவர்

பேரன் அவருக்கு விளக்குவதும் தெரிந்தது. சற்று நேரத்தில் பேரன் பண்ணை

வீட்டிலிருந்து நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்து போடப் பெரியவர்

உட்கார்ந்து கொண்டார். அவர்கள் சம்பிரதாயமாக ஒரு பெரிய சட்டை ஒன்றை

அவர் மீது போர்த்துவது தெரிந்தது. ஆனந்த் கண்டுபிடித்துவிட்டான்.

‘டேய்.. அது நாம போடுற ஜாக்கெட் மாதிரி தெரியல… ‘ நிர்மல்

அடக்கினான்.

‘ஆமாடா.. இரு என்னதான் பண்ணுறாங்கன்னு பார்ப்போம். ‘

பிறகு அந்தச் சப்பானியன் ஒரு மஞ்சள் பட்டாலான ஒரு நீளத் துண்டை அவர்

கழுத்தின் மீது சார்த்த அது அவர் இடது தோள்வழி சரிந்த போது அதில்

தென்பட்ட பச்சை நிற சப்பானிய எழுத்துக்கள்!..

‘எனக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது இது சர்வதேச ஜூடோ சேம்பியன்களுக்கு

மரியாதை நிமித்தமாக அணிவிக்கப்படும் உடை. அப்படியென்றால் இன்று

எதாவது சப்பானிய பண்டிகையாக இருக்க வேண்டும். நமது உழவர்த் திருநாள்

போல… ‘

அனைத்துச் சப்பானியர்களும் கூட்டமாக அவர் காலில் பலமுறை விழுந்து விழுந்து

எழுந்தார்கள்.

அப்போதுதான் நான் கவனித்தேன். புழுதி பண்ணப்பட்ட வயலின் இடப்புற

வரப்பினை ஒட்டியிருந்த இரட்டைப் பனை மரத்தின் அருகே திடாரென்று ஒரு ஒளி

தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதுவும் வெட்ட வெளியில்..

எப்படி ?! ஆனந்த் வாய் விட்டுக் கத்திவிட்டான்.

‘ஆ.ஆ.ஆ.ஆ.ஆ… ‘

ஆனாலும் பயல்கள் இருந்த இடம் விட்டு அசையவில்லை. ஆனால் என்னால்

பொறுமையாக இருக்க முடியவில்லை. சாலையிலிருந்து தாவிக் குதித்து,

கால்கள் புதைய, திபுதிபுவென ஓடினேன். புழுதி பறந்தது. அருகில் சென்று

பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த ஒளி மறையவும் அங்கே

ரஜினிகாந்த் தோன்றியிருந்தார். ஆம் சூப்பர் ஸ்டாரேதான். அருகில் சென்று

கேட்டேன். நீங்கள்…

‘ஆமா…. ‘

அதே ஸ்டைல். குரலில் அதே கம்பீரம். அவர் மூச்சுவிடும் ஓசை கூட எனக்குக்

கேட்டது. எனக்குத் தலைகால் புரியவில்லை. தலை சுற்றியது. தடாலென்று

நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து விட்டேன். அவர் இரண்டு

கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அங்கிருந்த அத்தனைபேரின்

கவனமும் இந்த அதிசயக் காட்சிமேல் பதிந்தது. ஆனால் அடுத்த சில

விநாடிகளில் ஒரு மாயாஜாலம் போல அவர் மறைந்தே போனார். ம்ம்ம்…

சப்பென்று ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் மூச்சுவிடும் ஓசை மட்டும் கேட்டுக்

கொண்டே இருந்தது. ஆஹா.. என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்!

சப்பானியர்கள் என் அருகில் கூட்டமாகக் கூடிக் கியான்.. பியான்.. என்று

என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. ஆனால்

அவர்கள் சொன்னதில்

‘சாங் சீன் சுதான்சுகீ… ‘ என்பது மட்டும் புரிந்தது.

‘சுதான்சுகீ என்றால் லோயர் பஞ்ச். அடப்பாவிகளா! அப்படியானால் என்னை

உதைக்கப் போகிறார்களா ? இது எங்க ஊர் மாப்பளைங்களா.. மேல கைய

வச்சிப் பாரூ மவனே சும்மா குனிய வச்சு குமுறிடுவோம்; ஆமா. ‘

ஒருவழியாக இரண்டு பேர் மட்டும் தெளிவாக ஆங்கிலம் பேசினார்கள்.

நன்றாகப் புரிந்தது. மூச்சுத் தடைபட்டு.. தடைபட்டு வருவதால் அவருக்குச் சளி

பிடித்திருக்கக் கூடும் என்று கவலை தெரிவித்தார்கள். எனக்கு என்னமோ இந்த

மூச்சு விடும் ஓசை நான் மிகவும் கேட்டுப் பழகிய ஓசையாகத் தெரிந்தது.

‘புர்ர்ர்ர்… ‘

எங்கே கேட்டிருக்கிறேன் ? சட்டென்று நினைவுக்கு வர மறுத்தது. மறுபடி மறுபடி

என் நினைவறைகளின் கதவுகளை தட்டினேன். கொஞ்சம் நினைவுக்கு வருகிறார்

போலத் தோன்றியது…

ஆம்.. வந்தேவிட்டது. இது என் தாயாரின் குறட்டை ஒலி… சபாஷ். நானே

என் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

சே! அதற்குள் தூக்கம் கலைந்துவிட்டது.

—-

ranganath73@yahoo.co.uk

Series Navigation

காசிகணேசன் ரங்கநாதன்

காசிகணேசன் ரங்கநாதன்

அதிசயம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

பவளமணி பிரகாசம்


அதிசயமான அதிசயம்
எகிப்திய நாட்டினிலே
அகண்ட பாலைவனத்திலே
அமர்ந்திருக்கும் அதிசயம்
பிரமிடெனும் பிரமாண்டம்

பெண் முக சிங்கமோ
உயர்ந்த கூம்பு வடிவமோ
பொருளற்ற பொருளாய்
அண்ணாந்து பார்க்கும்
பாலகன் விழிகளிலே

பின்னாளில் பின்னின்று
பார்க்க சவாலாய்
பெரிதான மலைப்பாய்
நெஞ்சுக்கு நேரிலே
வாலிப வயதிலே

இன்னும் பின்னால்
செல்லச் செல்ல
சிறுக்கத் துவங்கி
புள்ளியாய் மாறி
மறைந்தே போனது

மாறிய கோணத்திலே
இடைப்பட்ட வெளியிலே
மாறவில்லை அதிசயம்
மாறிவிட்டது பரிமாணம்
அது ஒரு பரிணாமம்

தோள்கள் வளர வளர
கால்கள் நகர நகர
மறைகின்ற உருவம்
குறைகின்ற உக்கிரம்
அது என்ன மாயம்

வலிகள் வடுக்களாய்
மயங்கும் நினைவுகளாய்
அடங்கிய அலைகளாய்
எய்துகின்ற ஓர்நிலை
ஏந்தி வரும் அமைதியினை

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்