பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

ருத்ரா


====

( ‘கவிதை ‘ (Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது)

அந்த வயதில் ஒருநாள்

வயதுக்கு வந்ததுபோல்

அது வந்தது.

என்னைத்தேடி..துருவி

அது வந்தது.

எனக்குத்தெரியாது

அது எங்கிருந்து வந்தது என்று.

பனி இறங்கும் விழுதுகளிலிருந்தா ?

ஆறுகளின் கீற்றுகளிலிருந்தா ?

எனக்குத்தெரியாது.

எப்படி

எப்போது

அந்த பூனை

பையைவிட்டு

வெளியே வந்தது

என்று எனக்குத்தெரியாது.

மை துப்பிய

எழுத்து எச்சிலுக்கும்

பிரசவ வலி

வந்தபோது

பேனா முதுகுக்குள்

சுருண்டு நிமிர்ந்தது

ஒரு

எரிமலையின் தண்டுவடம்.

அந்த

கன்னிக்குடம்

உடைந்த போது

அது

கருப்பா சிவப்பா

என்று எனக்குத்தெரியாது.

அது

ஒலிக்கூட்டங்கள் இல்லை.

அது

வார்த்தைச்சடலங்கள் இல்லை.

அது

மெளனத்தின் இடுகாடு இல்லை..

ஒரு தெருக்கோடியில்

அது

என் பிடறி பிடித்து உந்தி

அழைத்தது.

அங்கும் இங்குமாய்

கிளைவிட்டுக்கொண்டிருந்த

இரவு விருட்சத்திலிருந்து…

தொப்பூள் கொடி

அறுத்துவிட்டது போல்

முன் பின் தெரியாத

அந்த அவர்களிடமிருந்து…

வெறிபடர்ந்து

மரணப்பூக்களைத்தூவும்

துப்பாக்கிகளின்

அந்த காட்டுத்தீயிலிருந்து…

அல்லது

ஒற்றைப்பனைமரம்

உலா போனது போல

தனி ஆளாய்

நான் திரும்பிக்கொண்டிருந்த

அந்த தடத்திலிருந்து…

நான்

பரிணாமம் பெற்றுவிட்டேன்.

ஆனால்

மூளியாய்

முகம் இல்லாமல்

நின்றிருந்தேன்.

அது என்னை

தொட்டு உயிர்த்தது.

அதைப்பற்றி

என்ன சொல்ல ?

பெயர் சூட்ட முனையும்

என் வாய் குளறுகின்றது.

அதை

தரிசிப்பதற்கு

எனக்கு கண்கள் இல்லை.

என்

உள்ளுக்குள்ளே

ஏதோ ஒரு

தொடக்கம்

உறுமியது.

காய்ச்சல் கண்டு நடுங்கியவனாய்

ஒட்டிப்பிறந்த சிறகுகள்

உதிர்ந்து

அவற்றின்

ஓர்மை அற்ற பறவையாய்

கீழ் நோக்கி

விழுந்து கொண்டே

அதில் ஒரு பாதையை

நான் செதுக்கிவைத்து

செதில் செதில்களாய்

அர்த்தங்கள் இல்லாமல்

சிதறுண்டு போவதிலிருந்து

மீண்டு

அர்த்தப்பிழம்பாய்

அவதரித்துக்கொண்டேன்.

சுடப்பட்டு வீழ்ந்த

என்மீதே

எழுந்து நான்

உட்கார்ந்து கொண்டேனோ ?

என்ன மயக்கம் இது ?

என் முதல் வரி

மங்கலாய்

கசங்கலாய்

வெறுமையாய்

உணர்வுகள் வறண்டனவாய்

ஆனால்

தூய அறிவுப்பிண்டமாய்

அங்கே கிடந்தது.

எல்லாமே தெரிந்து கொள்ளுதல்

எனும்

ஆபாசம் கலக்காத

அந்த அறிவின்மையே

உண்மையான அறிவுடைமை.

பளிச்சென்று

எல்லாவற்றையும்

நான் பார்த்துவிட்டேன்.

எங்கோ உயரத்தில்

விறைத்துக்கிடந்த வானம்

வாய்பிளந்து

திறந்து கொண்டது.

இந்த பிரபஞ்சம் எல்லாமே

அம்மணமாய் தெரிந்தது.

கோள்கள் எல்லாம்

நெஞ்சுமுனைக்குள் வந்து

துடித்து துடித்து

ரத்தம் இறைத்தன.

நிழல் செறிவுகள்

சல்லடையானதில்

இருள் ஒழுகல்கள்

புதிர்க்காட்சிகள் ஆயின.

கூரிய அம்புகள் போல்

துளைக்கும் குண்டுகள் போல்

மொக்கு அவிழும் மலர்கள் போல்

முறுக்கு ஏறி

முறுக்குவிடும்

சுழல் இரவில்

அண்டவெளியே

அருவியாய் இறங்கும் கவிதை!

துளியிலும் துளியாய்

தூசியிலும் தூசியாய்

நான்.

நட்சத்திரங்களைக்கொண்டு

மிடைந்த வைத்திருந்த போதும்

வெறுமை

கவிழ்ந்த போதையில்

குப்புறக்கிடக்கும்

வானம்.

அடங்காத தாகம்

என்னை

ஆர்ப்பரித்துக்கொண்டே

குடித்து தீர்த்தது.

எதையோ

நான் பிரதிபலித்தேன்.

பிடிபடாத

ஏதோ ஒரு

பிம்பத்தின் குழம்பில்

நான் புதையுண்டு கிடந்தேன்.

தொடமுடியாத

ஒரு ஆழத்துள்

இன்னும்

அசுத்தங்களால்

தீண்டப்படாமல்

பிண்டம் பிடிக்கப்படாத

ஒரு பிண்டமாய்

பிரண்டு பிடக்கின்றேன்.

அந்த நட்சத்திரங்கள்

என் காலச்சக்கரம்

உருட்டித்தள்ளி

நொறுக்கிவிட்ட

சுவடுகள்.

நாள நரம்புகளை

அறுத்துக்கொண்டு

விடுதலை பாடும்

என் இதய யாழ்

உங்கள் மூச்சுகளில்

முட்டுகிறதா ?

சன்னல்கம்பிகள்

உடைந்து தூளான பின்

அதோ

துல்லியமாய்

ஒரு வானம்.

(இது ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல. அந்த கவிதையின் மொழி உயிர்ப்பு)

====ருத்ரா.

< eepiyes@yahoo.com > or < epsi_van@hotmail.com >

Series Navigation

ருத்ரா

ருத்ரா