அப்பா

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

அதிரை தங்க செல்வராஜன்


“நான் செத்தாலும், என் முகத்திலே முழிக்காதே போ”

எல்லா தர்க்கங்களின் முடிவிலும் அப்பாவின்
பிரம்மாஸ்த்திரமிது.

இந்த கோபம் 12 மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது.
காலையில் சென்னையில் இறங்கியவுடன் முதலில்
தொலைபேசுவது அப்பாவாகத்தானிருக்கும்.

அப்பா … ம்ம்

நான் வெளிலே போகலாம்னு யோசிக்கிறேன்.

எங்கே

ஈரானுக்கு

ஏன்டா வேற நாடே கிடைக்கலயா?

நல்ல சம்பளம், 3 மாதத்திற்கு 2 வாரம் ஊருக்கு வந்து
போகலாம்.

யோசிச்சு செய்.

தொலைபேசியை வைத்துவிட்டார்.

அப்பா இது போல் சொன்னதேயில்லை.

“ஏம்மா இவன் வெளிலே போறத்துக்கு இப்படி
அழறான், ஆம்பளைனா வெளிலே போனும்
சம்பாதிக்கனும்”.

அப்பாவின் நினைவோடு ஊருக்கு புறப்பட்டேன்.
எப்போது ஊருக்கு புறப்பட்டாலும் சந்தோசம்தான்.

அர்த்த ஜாமத்தில் கதவை தட்டினாலும் முதல் குரல்
அப்பாவிடமிருந்துதான் வரும்.

நடுராத்திரிலே வராதேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிற.
வா, எப்படியிருக்கே?

இருக்கென்பா, நீங்க நல்லாயிருக்கீங்களா?
என்னெத்தெயிருக்கேன், ஏதோ ஓடுது.

கால் கை கழுவிட்டு வா, காலுலே கொஞ்சம் எண்ணெ
தேச்சு விடுடா.

பெரியவனே,

என்னப்பா,

என்ன வாங்கிட்டு வந்தே?

நரசுஸ் காபிபொடியும், ஆப்பிளும்ப்பா.

ஏன்டா அதிரசம் கிடைக்கலியா?

சீண்டல் அடிச்ச மாதிரியிருந்துச்சு, அதான் வாங்கல.

எப்படி இவுங்களை விட்டுட்டு போறதுன்னு புரியலை.
காலையில் சொல்லலாம்னு நெனைக்குபோதே,

எல்லாம் சரியாயிடுச்சா தம்பி, என்ற குரலுக்கு
ஒரு நிமிடம் மொளனமானேன். ம் ஆச்சுப்பா.

என்னைக்கு போகனும்,

ரெண்டு நாள்ல கிளம்பனும்பா.

சரி, படு, காலையிலே பெத்த பெருமளை கும்பிட்டு
மத்த காரியத்தை பாப்போம்.

நாப்பத்தஞ்சு வருஷம் அம்மா செஞ்சதை நம்மாள
நாலு மாசம் செய்ய முடியலே.

நாக்கையும், வாயையும் கட்டுனா நல்ல கதிக்கு போலம்னு
ஆத்தா சொல்லுவாங்க.

அப்பாவால முடியாதது இதுதான்.

அம்மா ஒரு வித பசை, அப்பாவின் அடாவடி பேச்சுக்களால் உடையும் உறவுகளை உதிராமல் ஒட்ட வைத்து விடுவார்.

“சூரியனாரே எம்புள்ளைகளெ நல்லபடியா வையி,
என்ன நல்ல கதிக்கு எடுத்துட்டு போ”.

சீக்கிரம் எழுந்திருச்சு குளிச்சுட்டு வாடா.

அப்பாவிற்கு எல்லாமே அதிகாரம்தான்.

எல்லாம் முடித்து காலில் விழுந்த போது,
எந்திரிப்பா, எந்திரி பத்திரமா போய்ட்டு வா,
துண்ணுருவிட்டு,பத்து ரூபா கொடுத்த போது

அழுகைதான்,

ஏன்டா அழுவுறே, நான் உசுரோடயிருப்பேன்,
ஓன் புள்ள குட்டிய பாத்துக்கிறேன் அழாம போய்ட்டு வாப்பா.

சீக்கிரமா வந்து பத்து குடும்பத்துக்கு சாப்பாடு போடற மாதிரி
ஏதாவதொரு தொழிலை தொடங்குப்பா.

ஊரைவிட்டுப் போவது எப்பவும் இறுக்கம்தான்.

இமிக்ரேசனில், ஏம்பா இரண்டு பேர் ஈரானுக்கு
நிக்கிறாங்க அனுப்பலாமா என்று சக அலுவலரிடம்
விசாரித்த போது வயிறு கலங்கியது.

கையைக் கொண்டு மொழி பேச முடியும் என்பது
ஈரானில் கால் வைத்தவுடன் புரிந்தது.

தமிங்கிலத்தில் வளர்ந்த நமக்கு, பா·ர்சி மட்டுமே
என்றவுடன் பயம் பிடித்துக் கொண்டது.

பத்து நாட்களில் எல்லாம் பழகியது, மனசு மாத்திரம்
ஊரைச் சுற்றியே.

ஈரானில் அர்டபில் நகரம் வரமும் சாபமும் நிறைந்தது.
சபலான் மலையின் மடியில் ஐந்து மாதங்கள் கடும் குளிரில்
பனி போர்த்தி கிடக்கும், மீதி ஏழு மாதங்கள் தென்றல்
வருடும்.

ஊரில் பனிமூட்டம் பார்த்திருக்கிறேன், பனித்துகள் சிதற
ஆரம்பித்து அரைமணி நேரத்தில் பஞ்சு பொதி போர்த்தியது
போலானது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

சூரியனை காணவில்லை, பசிதான் நேரம் நகர்வதை
ஞாபகபடுத்தியது.

ஊருக்கு தொலைபேசியதில் கவலைதான் மிச்சம்.

மாலை சுராபில் ஏரியில் உறைந்து ஐசாகியிருந்த தண்ணீரின்
மேல் குழந்தைகள் சைக்கிளில் வலம் வருவது புதிதாயிருந்தது.

பா·ர்சி மக்கள் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சந்தித்தாலும்
ஸலாம் சொல்வதும், எழுந்து மரியாதை தருவதும் வித்யாசமாக
இருந்தது.

விடியாத காலை எட்டு மணிக்கு கைபேசி அழைத்தது.
கடவுளே எந்த கஷ்டமும் கொடுத்திடாதே,

ஆனால் அழைத்த குரல், மாமா கீழே விழுந்துட்டாங்க,
தஞ்சாவூர் வினோதகனுக்கு கூட்டிட்டு போறோம், நீங்க
வரமுடியுமா?

மனைவிக்கு எதைச்சொல்லி புரியவைப்பது?

டாக்டர்ட காமிச்சுட்டு கூப்பிடு.

பாஸ்போர்ட் ரெஸிடென்ஸ் பர்மிட் பெற சென்றுள்ளது.
சனிக்கிழமை பார்போமென பர்ஸனல் டிபார்ட்மென்டில்
கூறிவிட்டார்கள்.

சனிக்கிழமை நகர்ந்துவிட்டது, பாஸ்போர்ட் வரவில்லை.

நான்கு நாட்களில் அப்பாவின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்பாவின் சப்தமும் திட்டும் குறையவில்லை.

குழந்தைகள் உளறினால் மழலை என மகிழ்வதும், வயதாகி பேசினால் எரிச்சலாய் எடுப்பதும் இயல்பாகி விட்டது.

வணிக மயமான மருத்துவமணையில் எல்லா வயதினரும்
அவரவர் வியாதிக்கு அழுது கொன்டிருந்தனர்.

நாள் நகர்கிறது. வியாதி நகரவில்லை.

சென்னைக்கு மாற்றலாமென்றால்,

டாக்டர் வந்தாத்தான் டிஷ்சார்ஜ், வெயிட் பன்னுங்க.

எப்ப வருவார்?

வந்துருவாங்க வந்துருவாங்க வெயிட் பன்னுங்க.

மாலையாகியும் வராததால் கோபப்பட,

டாக்டர் ஊரிலேயே இல்லையென தெரிய வந்தது. எல்லாம் பணப்பறிப்புக்குத்தான்.

தம்பி அப்பாவிடம்,

அண்ணனெ வரச்சொல்லட்டுமா?

வேணான்டா, வீண் செலவு, எல்லாம் சரியயிடும்
கவலைபடாதே. மெட்ராசுக்கு போய்ட்டா சரியாயிடும்.

அப்பா அப்போலோவில் அடைக்கலமானார்.

எழுபது வயசாச்சு, எந்த வியாதிக்குன்னு பார்க்கிறது?

ஐசியுவில் தூக்க மருந்தின் உதவியில் அரைதூக்கத்திலிருந்தார்.

கால் அமுக்குவதற்க்கு கூட மெஷின் வந்து விட்டது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவின் வாய் அசையாது
இருப்பது இப்போதுதான்.

ஒரு வாரமாக வீடு குழப்பத்தில், ஏதும் நடப்பதற்குள் நான்
அங்கு சென்று விட வேண்டும்.

இத்தனையும் இங்கு உள்ளவர்களிடம் எந்த மொழியில் புரிய வைப்பது. எனது கண்ணீரின் வலிமை தெரியாது நேற்று
மதியமே வார விடுமுறையில் கரைந்து விட்டார்கள்.

பத்து சதவீதம் முன்னேற்றம் உள்ளதாகவும், உடனே என்னைவருமாறும் மருத்துவர்கள் சொல்வதாக செய்தி வந்தது.

இறைவா இன்னும் இரண்டு நாள்கள் நீட்டி கொடு, நான் வந்து
பார்த்து விடுகிறேன்.

வெளியில் பூஜ்ஜியத்திற்கு குறைவான குளிர், வயிறு மட்டும்
பசி என்று விடாமல் நினைவு படுத்தியது.

தேனீர் வடி கட்டும் போது கை பேசி அழைத்தது.

கடவுளே இன்றைக்கு வேண்டாமே.

நான் நேரில் ஒரு தடவை பார்த்த பிறகு எப்படியானாலும்
பரவாயில்லை.

வினோதமான மனம், அப்பா பிழைக்க வேண்டும் என்பதை
விட நான் சென்று பார்க்கும் வரை எதுவும் ஆகக்கூடாது
என வேண்டியது.

அப்பா இனியில்லை.

என் அழுகையினூடே இன்று நான் வர இயலாத நிலையைச்
சொல்ல, தம்பி, நான் பார்த்து கொள்கிறேன் என்றான்.

நீ வரும் வரை அப்பாவை வைக்க இயலாது, நீ வரும் போது
வா என கூறி வைத்தான்.

கூடத்தில் கிடத்திய அப்பாவின் உடலுக்கு, தொலைபேசியில்
கதறிய என் நிலை தெரியுமா?

வெளி நாடு கிளம்பும் போதெல்லாம், எதுக்கு அழுவுறே, ஆம்பள
புள்ளே அழக்கூடாது, பணம் இருந்தாத்தான் மதிப்பும் மரியாதையும்
நெத்தி நெறைய விபூதி பூசி விட்டு பத்து ரூபா பணம் தர இனி அப்பா இல்லை.

கண்ணீருக்கு மொழி இல்லை, எல்லா நாட்டவரும்அணைத்து, தட்டி
கொடுத்து, ஆறுதல் சொன்ன போது கதறத்தான் முடிந்தது.

“நான் செத்தாலும், என் முகத்திலே முழிக்காதே போ”

அப்பாவின் வார்த்தைகள் நெஞ்சுக்குள் எதிரொலித்தது.


Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்

அப்பா

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

எஸ்ஸார்சி


அவனுக்கு எல்லோரும் பரீட்சை வைத்திருக்கிறார்கள். அவனுக்கு எங்கே தெரிந்தது விஷயம். யார் சொல்வதைத்தான் கேட்கிறான் அவன் பார்த்துவிடுவோம் என்பதே அது.

அவனுடைய அம்மா ஆரம்பித்தாள். தம்பி, தம்பி என்பது அவனைத்தான்.

உனக்கு கல்யாணம் ஆயி வருஷம் ஒண்ணுக்கு மேல ஆச்சி. உன்ன செதம்பரம் காலேஜில படிக்கவச்ச உன் பெரியம்மா நெனப்பு இருக்குதா இல்லயான்னு தெரியல்ல

போயி நீயும் பாக்கருது இல்ல கடுதாசி போடுறது இல்ல ஏம்பா என்னா ஆச்சி உனக்கு

சொல்லுடா இதெல்லாம் நல்லதுக்குத்தானா ? கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

&nbs p; மனைவி வருவதற்குள்ளாக பேசிமுடித்தாக வேண்டுமே என்பதில் அவன் தாய் குறியாக இருந்தாள்.

அவ வர்ர நேரம்ல

இல்லப்பா அவ வர இன்னும் நேரம் ஆவும்

எப்படி சொல்றம்மா. அவன் அச்சத்தோடு கேட்டான்.

எல்லாம் ஏற்பாடுதான். கூட போற எதிர் வீட்டுப்பொண்ணுகிட்ட சொல்லித்தான் அனுப்பிருக்கேன்

மணிக்கூண்டு சங்கு புடிச்சப்பறம் தான் அவங்க வருவாங்க நீ விஷயத்துக்கு வா, இப்ப எல்லாம் ரெம்ப நடிக்கிறயாடா தம்பி,

என்னம்மா என்ன புரிஞ்க மாட்டங்கறே. நா உன் புள்ளத்தானே

யாரு இல்லங்கரா அதனாலதான் கேக்குறன். பிரதோஷம் முடிஞ்சி அவ கோவில்லேந்து வர்ரத்துகுள்ள சொல்லிடு நீனும் நானும் என் அக்காவை பாக்கப் போறம் தெரிதா

சரிம்மா போறம் ? யோசித்தான் என்றாலும் வாக்கு கொடுத்து விட்டான்.

நினைத்துப்பார்க்கிறான். இதெல்லாம் என்ன விஷயமோ கொஞ்சம் கூட புரியவேமாட்டேன் என்கிறது அவனுக்கு. திருவள்ளுவரும் திருவிகவும்,அந்த முவவும்கூட மறைந்துபோய் விட்டார்கள் என்பதால் தப்பித்துக்கொண்டுவிட்டார்கள் இல்லாவிட்டால் அவ்வளவுதான் அனிச்சம் மலர் ஆகா ஒகோ என்றீர்களே கொஞ்சம் வந்து பாருங்களேன் என்று தரதரவென இழுத்து வந்து விடலாம். வாசுகிக்கும் ஜென்னிமார்க்சுக்கும் அந்த செல்லாம்மாவிற்கும் எங்கே போவது அவன்.

கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய மனைவி வீட்டின் உள்ளாக வந்துகொண்டிருந்தாள்.

எதிர் வீட்டுப்பெண் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.

ஆயா அதிகார நந்திக்கு இன்னைக்கு வெள்ளிகவசம் சாத்தி இருக்கு. நீங்க கூட வந்திருக்கலாம்.

அப்பிடியா சேதி தெரியாதும்மா எனக்கு நீ சொல்லலயே

இப்பகூடம் நீங்க போய்வருலாம் ஆயா

சரி பாப்பா நானு போயிதான் வந்துட்டுமா

கெளம்புங்க ஆயா

நமக்கு எண்ணக்கி நேரம் ஒழியுது. இதெல்லாம் பாத்தா ஆவுமா. நானு போயி வந்துடறேன்

ஒருக்கால் இது மருமகளின் யோசனையோ. பெரிசை வீட்டை விட்டு கிளப்பி ஏதும் தோது மாது செய்கிறார்களோ. எப்பிடிப்போனால் தான் என்ன என்று

அம்மா கிளம்பினாள்.

அவ்வளவுதான் தாமதம் மனைவியே ஆரம்பித்தாள்,

என்னசொன்னாங்க ஒண்ணும்இல்ல

சொல்லுங்க தெரியாமலாபொயிடும்

அம்மாவொட அக்காவ போயி பாத்து வரோணும்னாங்க

அப்பிடி போடுன்னே என்னடா எலி எட்டு மொழம் வெட்டி கட்டுதேன்னு பாத்தேன்.

சும்மா எதுக்கு பேசுற. அவங்க சொல்லுறது சரிதான்

‘ என்னா சரின்ற. ‘ சடக்கென்று ஒருமையில். மரியாதை குைறைவதின் தொடக்கம் இது. அவனுக்கு இப்போதுதான் இந்த அரோகண அவரோகண சம்பாஷணைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத்தொடங்கி இருக்கிறது.

&n bsp; அப்ப நாம ஊருக்கு போவுறம்

போனது மோசம் என்று நினைத்தான். இவளும் வந்துவிடுவாளோ என்று

ஐயம் எழுந்தது அவனுக்கு. அம்மா அந்தப்பிடியும் கொடுக்கலையே. விபரீதம் தான் விஷயம்.

‘ நீ வர்ரதுன்னா அம்மாகிட்ட கேக்குணும் ‘

எதுக்கு கேக்குணும் நீ சொல்லு நா வருணுமா வேண்டாமா

அம்மாதான் சொல்லிச்சி நாம ரெண்டு பேரும் போறம்னு

அதான் கேட்டேன் யாரு ரெண்டு பேர்

நானும் அம்மாவும்தான்

அதயும் பாத்துடுவும் நீனும் ஒன் ஆத்தாளும் ஊரு கோலம் போவுறதை

மரியாதை கடகட என பரமபத சோபன படத்தில் வரும் ஆதிசேடனாய் இறங்கிக்கொண்டது.

அம்மாவும், அவனும் சென்னைக்குப்புறப்பட்டார்கள். அம்மா தான் வென்றுவிட்டதாக நினைத்துக்கொண்டாள். தன் அக்காவுடனும்,அவர் கணவருடனும் அம்மா எதோ தொண தொண எனப்பேசிகொண்டே இருந்தாள். ஆனால் அம்மாவின் அழகு முகம் வாடிப்போய்தான் இருந்தது. அம்மாவின் அக்கா ஏதும் சொல்லி இருக்கலாம் அவன் ஊகித்தான்.

ஏன் அம்மா ஒரு மாத ிரியாய் இருக்கிறாய்

‘அதெல்லாம் ஒன்றும் இல்லை ‘ என சமாளித்துக்கொண்டாள். அவன் இதில் எதோ ஒரு சமாசாரம் ஒளிந்தும் இருக்கக்கூடும் என நினைத்தான்.

பெரியம்மாதான் அவனைக்கேட்டாள்

‘ ஏம்பா உன் வீட்டுக்காரியெ கூட்டினு வரலாம் இல்லயா. சின்ன பொண்ணுதானே அவளுக்கும் கூட வரணும்னு ஆசை இருக்கும் தானே ‘

அவன் தான் பதில் சொன்னான். ‘மூணு பேரா எதுக்கு வர்ரதுன்னுதான் இப்பிடி ‘

‘அழகுதான் போடா ‘

சொல்லிய பெரியஅம்மா அத்தோடு அதை நிறுத்திக்கொன்டாள். ஒரு வேளைக்குமேல் சென்னையில் தங்கவும் இல்லை புறப்பட்டுவிட்டார்கள்.

வண்டி பிடிக்க மாம்பலம் ரெயில் அடிக்குத்தான் வரவேண்டும் புறப்பட்ட இருவரும் ரெங்கனாதன் தெரு வழியே நடந்துகொண்டிருந்தார்கள். தரையில் பரப்பி வைத்திருந்த தஞ்சாவூர் குட்டிபொம்மைகளை பார்த்து நின்றான் அவன். அழகான ஒரு பொம்மையை கையில் எடுத்துக்கொண்டான்.

இத ஒண்ணு வாங்கிகுவோம் அம்மா

ஏண்டா இது

நல்லாத்தானே அம்மா இருக்கு

பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கினான்.

ஒன்ன சொல்லி குற்றம் இல்லே. நீ என்னடா பண்ணுவே.

அம்மா லேசாக சிரித்து முடித்தாள். அவனுக்கு அம்மாவின் சிரிப்பு என்னமோ செய்தது.

ஊர் வந்து சேர்ந்த இருவரும் தெருவில் ஒருவர்பின் ஒருவராய் பைய நடந்து கொண்டிருந்தனர். அவனுக்கு இந்தப்பயணம் வெட்டிப்பயணமாகவே தெரிந்தது. அம்மாதான் என்ன சாதித்துவிட்டாள்

என்று நினைத்துக்கொண்டான். ‘நான் சொல்ல என் மகன் கேட்டு நடந்து கொள்கிறான் பார் ‘ அவனின் தாய் மகிழ்ச்சி மேலிடத்தான் நடந்கொண்டிருந்தாள்.

பயணம் எப்பிடி ஆயா ஊர்ல எல்லாரும் செளக்கியமா

எதிர் வீட்டுப்பெண்தான் கேட்டாள்.

எப்பிடி இருக்கே பாப்பா. உன் செனேகிதி எப்பிடி இருக்குது

அம்மா பதிலுக்கு கேட்டு முடித்தாள்.

ஊருக்குப்போனாலும் உன் மருமவ நெனப்பு செமந்து கிட்டுத்தான் போவபோல ஆயா ?

அவனுடைய தாய் புன்னகை செய்தாள்.பயணம் முடித்துத்திரும்பிய அன்றிலிருந்து அவன் புதிய தரிசனங்களுக்குத்தயாரானான்.

வீட்டின் மையமாக உள்ள அலமாரியின் மேல்தட்டில் அந்த தஞ்சாவூர் பொம்மை புதிய விஷயமாய்க் கொலுக்கொண்டது.

அவன் மனைவி சண்டைகளை புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றாள்.

நா குத்து க்கல்லாட்டம் இருப்பானே உன் ஆத்தாளொட நீ சோடி போட்டிக்கிட்டு

போவானே. இனி உன் கத என்கிட்ட ஆவாது. அதுக்கு நீ வேற ஆள பாத்துக்கலாம்.

நல்லா இருக்குது சமாசாரம். நாலு பேர் கேட்டா கொழகொழன்னு உன் மொகறைல காரித்துப்பமாட்டாங்க ?

அம்மா அங்கு நடப்பதைக்கண்ணுற்றாள். அதிர்ந்துதான் போனாள்.

எம் மின்னாடி சண்டை வேணாம். கழுதவுளா நா போயி அந்த கெழவன் கிட்டபெசிக்கிறேன் கொற கதயை ? என்று தன் துனிமணிகளை தேடி ஒரு பையில் நுழைத்துக்கொண்டாள்.

வேணாம்மா. எல்லாம் சரிப்பண்ணிக்கிலாம். உடும்மா

எத சரிப்பண்ணறதுப்பா என் சாமி சிறுக்கிக்கு ராங்கி தலைக்கில்ல ஏறி கெடக்கு ?

‘அது உனக்கா இல்ல எனக்கா ‘ குறுக்கே பாய்ந்தாள் மனைவி.

அவன் கண்களை மூடிக்கொண்டான்.

அழுதுக்கொண்டே அன்று கிளம்பியதுதான் அம்மா.அவனும்போகட்டுமே என்றுதான் சும்மாஇருந்தான். சரியோ தப்போ மனத்தைக்கல் ஆக்கிக்கொண்டான். எதிர் வீட்டுப்பெண் அவ்வப்போது வந்து போனாள். அம்மா ஊருக்குப்போய்விட்டால் எத்தனை அழகாய் அமைதியாய் குடும்பம் மாறி விடுகிறது. அந்த தேவ ரகசியங்கள் தாம் எத்தனை புனிதமானவை. மனம் கள்ளத்தனம் பேசியது.

ஊரிலிருந்து அப்பா கடிதம் எழுதி இருந்தார். எப்போதேனும் எழுது வார்தான் அப்பா. ஆசையோடு கடிதம் பிரித்தான். ஊரில் மழை எப்படி,வயல் பயிர் எப்படி, எந்தக்கோவிலில்என்ன உற்சவம் புதியதாய் இறந்தவர்களின் பட்டியலில் யார் யார் சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் விடாமல் கடித்தில் வழக்கமாய் எழுதி முடிப்பார்.

அன்பு தம்பி (அப்பாவுக்கும் தம்பிதான் நான்)

ஊர்திரும்பிய உன் அம்மா செய்திகள் சில சொல்லி என்னிடம்அழுதாள். நானும் உனக்கு எழுத வேண்டாமென்று நினைத்தது உண்டு. ஆனாலும் பாழும் மனம் கேட்டால்தானே. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதைதான். உன் அம்மா எனக்கும் மனைவி. மணமான புதிதில் நானும் நீ படுவது சிலதுகள் பட்டிருக்கிறேன். உன் அப்பாத்தாவைத்தான் நீ பார்த்தது இல்லையே. ஆக புத்தியாய் இரு. நீ படித்தவன்.

ஆனாலும் படிப்புக்கும் வாழ்க்கையில் அந்த சிலதுகளுக்கும் தொடர்பு கிடையாது என்பதை அனுபவித்துத்தான் அறிய வேண்டும். புத்தியை மாத்திரம் இறவல் கொடுக்காதிரு.

இப்படிக்கு பிரியமான உன் தந்தை.

கடித்தை இரண்டு முறை படித்துக்கொண்டான். அம்மாவும் இப்படித்தான் அப்பாவுக்கு ஏதும் பிரச்சனை தந்திருக்கலாம். அதையே கடித்தில் சொல்லாமல் சொல்கிறார் அப்பா என சரியாகவே நினைத்தான். அப்படி இருக்க சாத்யமே இல்லை என ஆழ்மனம் புது

சண்டைக்கு வந்தது. அப்பாவின் கடிதத்தை சுக்கல் சுக்கலாய் கிழித்து எறிந்தான். இது ஏதும் மனைவியின் கண்களில் பட்டுவிட்டால் ஆபத்து .ஆக செய்தது சரி என்று மனதிற்குள் சொல்லிக்கொன்டான்.

பொங்கல் சமீபிக்க அவளோடு ஊருக்குக்கிளம்பினான். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். ராகு கேதுக்கள் விட்டால்தானே. அம்மாவும் தானும் தனித்து இருக்கும் சமயம்பார்த்து ஆரம்பித்தான்.

அம்மா நீயும் கல்யாணமான புதுசுல அப்பாவுக்கு ஏதும் பிரச்சினை கொடுத்தியா

என்னடா உளர்ர என்ன ஆச்சி

இல்லை கேட்டேன்

யார்ரா சொன்னா. கேள்வியே ஒரு தினுசா இருக்கு. பொண்டாட்டி வந்துட்டால்ல

அப்பா ஒரு கடுதாசி போட்டாரு.

என்ன எதாவது உளறி வச்சிருப்பாரு வேறென்ன

இல்ல அத வுடும்மா சும்மா கேட்டேன்

அவ்வளவுதான் பேசினார்கள். அதற்குள்ளாக யார் யாரோ வந்தனர். பொங்கல் முடிந்து அவனும் ஊர் திரும்பினான்.

ஒரு வாரம் முழுசாக முடிந்து போயிற்று. தன் அப்பாவிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வரும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ஆனால் வந்ததுதான் உண்மை. இக்கடிதமும் அலுவலக விலாசத்திற்கே.. ஒருமனிதனுக்கே பல முகங்களும் பல விலாசங்களும் தேவையாய்தான் இருக்கிறது. இல்லை இல்லை என்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.

கடித்தைப்பிரித்தான்.

அன்பு தம்பி

பொங்கலுக்கு வந்த சமயம் நீ அம்மாவிடம் என்ன பேசினாயோ. போதுமப்பா போதும்

இவ்வளவு வெவரம் இல்லாது நீ இருப்பாய் என்று நான் எண்ணியது இல்லை. ஒரு விதத்தில் உன்னைப்பார்த்தால் எனக்கு பரிதாபமாகவே இருக்கிறது. கஷ்டம்தான். இப்படிக்கு உன் பிரியமான தந்தை. அந்தக் கடித்தில் தன் அப்பாவின் முகம் தெரிவதாய் உணர கிழிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். கிழித்து எறிந்து விடுவது விடுதலை. கிழிக்காமல் விட்டால்தானே அவன்.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

அப்பா

This entry is part [part not set] of 4 in the series 20060101_Issue

பாஷா


படைப்பு புறக்கணிக்கும்
முதல் படைப்பாளியாய்….
கோமாளி குல்லாய்களால்
கைகொட்டி அங்கிகரிக்கப்பட்டு
காசு தரும்
கைகாட்டி பொம்மையாய்….
இருண்ட பால்வளியில்
உலகுக்கு ஒளியூட்ட
ஒற்றை நட்சத்திரமாய்,
தேவதூதனாய் தோன்றி-பின்
சாத்தனாக சபிக்கப்படும்
சாந்தமாய்….
அப்பாவென்றொரு உறவு!

எதிர்த்து போராடுவதுமில்லை
எட்டி மிதிப்பதுமில்லை
இயலாமையின் இயல்பென
இமைமூடி அழும்
வெட்டிசாய்க்கப்படும் முதிர்மரமும்
வேர்வை வற்றிய அப்பாவும்!

நெஞ்சிலெ கருவறைகொண்டு
பிரசவ நாள் மறுத்து
நாடியடங்கும் நொடியிலும்
நினைவை சுமந்து செல்லும்
அங்கீகரிக்கப்படாத தாய்மையது!
—-

Series Navigation

பாஷா

பாஷா

அப்பா

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பாஷா


நிஜத்தில் நின்னை நிறுத்தி
நிழலாய் என்னை தள்ளினாய்
என் பேச்சில்,சிரிப்பில்
அறிவில்,யாவுமாய்
நீ மட்டுமே தெரிகிறாய்!
பத்துவயதில் வாங்கிய அறையும்
இருபத்தொரு வயதில் நிகழ்ந்த
இருபெரும் சண்டையும்
உன்னை என்னிடமிருந்து எடுத்து
எங்கோ சென்றுவிட்டிருந்தது
உன்னை விரோதியாக்கி பார்த்த நாளில் கூட
உன்னிடமிருந்து என் சாயலை
எடுக்க முடிந்ததில்லை.

ஆயிரம்ரூபாய் போனசையும் என்
ஆயுளுக்காய் அடைகாத்தாய்
இலட்சங்கள் புரண்டபோதுமுன்னை
இரட்சிக்க துணிந்ததில்லை நான்!

மனித இயல்புகள் உனக்கும் உண்டென்பதை
மறுத்தே வாழ்ந்தேன் நான்
தந்தையாகி பார்த்தபிறகுதான் நீ
தியாகியென்றே தெரிந்துகொண்டேன்

தியாகிகள் வாழுப்போதுமட்டுமல்ல
மரணத்திலும் மதிக்கப்படுவதில்லை
‘உயிர் போயிடுச்சா…. ‘
உனது இறுதி நாளில் உன்னை
காட்டிற்கு அனுப்பிவிட்டு
அடுத்தவேலை பார்க்கும் அவசரத்தில்
அனைவரும் இருக்க
இதழ்விரிந்த ரோஜாவாய்
இறுதி நொடியிலும் உன்னால்
சிரிக்க முடிந்ததெப்படி ?

உலக வாழ்க்கையோடு என்
உடன்படிக்கை முறிந்துவிட்டது
உன்னிடமே வருகிறேன்
என் செல்ல அப்பா
முதியோர் இல்லத்தில் கைவிடப்பட்ட
அனாதை அப்பனாக!

sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

அப்பா

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாடா… எங்கே நீ பாட்டுக்குப் போற ? உங்கம்மாக் கிட்டயா ? இங்க நானொருத்தன் குத்துக்கல்லாட்டம் நிக்கறேனே தெரியலையா ? சொல்ல வேண்டியதை எங்கிட்டச் சொல்லக் கூடாதா ?

என்னடா முணுமுணுங்கறே ? இருந்த வேலையையும் போயிட்டுது. எங்கயாவது மூலையில சுருண்டு கிடக்காம இந்த ஆளுக்கு என்ன புலம்பல் வேண்டிக்கிடக்குது ? அப்படித்தான நினைக்கிற ? சொல்லித் தொலையேன். உங்கம்மா குணம் உனக்கு….. வேண்டாண்டா.. அவளை நான் கொண்டாடினதும் போதும்.. அதனால நான் பட்டதும் போதும்.. நம்பாதே..! அவளை மட்டுமல்ல எந்தப் பெண்ணையுமே நம்பாதே.. கொஞ்சம் விட்டா சக்திதான் பெரிசும்பாங்க….

நான் உளறல.. உண்மையைச் சொல்றன்.. எனக்கு நேர்ந்தது உனக்கும் நேர்ந்துடக் கூடாது பாரு. அந்த அக்கறையில சொல்றேன்…..

*****

கையில் வாங்கிய வேலை நீக்க உத்தரவை ஒருமுறைக்கு இருமுறையாக வெங்கடாசலம் படித்துப் பார்த்தார். ஏதேதோ உதவாக்கரைக் காரணங்கள். கையாலாகாத அரசாங்கம். அதற்கு வசதியாக ஒரு சட்டம். முகத்தைத் திருப்பி, துளிர்த்த கண்ணீர்த் துளிகளைக் கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துக் கொண்டார். வேலை நீக்கத்திற்கான வரிகள் பழுக்கக் காய்ந்த அலகாக நெஞ்சில் இறக்கப்பட்டிருந்தது. மெழுகாக உருகி நெஞ்சை அடைத்த துயரைக் கட்டுபடுத்த முயன்றுபார்த்தார். மார்பை அடைத்தது. அப்படியே பக்கத்திலிருந்த தூணில் மெல்ல சாய்ந்தார். இன்னும் கொஞ்ச நேரமிருந்தால் துக்கம் அவரை சின்னாபின்னமாக்கி விடுமென்கிற பயம்.. அவரது கபாலம் நிறைய ஏதேதோ ஊர்ந்தன..

அரசுப் பணி வாழ்க..!.

*****

ம் சொல்லு… எங்கிட்ட சொல்லு.. உனக்கு ேலை கிடைச்சுதா ? எங்களைப் பலிபீடத்துல நிறுத்திட்டு உங்களுக்குப் பட்டாபிஷேகமா ? எத்தனை நாளைக்குடா ? நம்பிக்கை இருக்குதா ? உங்களுக்கு அரசாங்கத்து மேலேயும் அரசாங்கத்துக்கு உங்க பேர்லயும் பரஸ்பர நம்பிக்கை வரணுமே.. வருமா ?

என்ன அப்படி பார்க்கிற ? ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் நான் ஏதாவது சொல்லும் போதெல்லாம் அலட்சியம் காட்டுற. எனக்கு வேலை போனது வாஸ்த்தவம். ‘அப்பன் ‘ ங்கிற ஸ்தானம் கூடவா இல்லாம போயிடும். ஏன் உன்னோட சரீரம் இப்படி நடுங்குது ? கண்களைப் பாரு.. பெண்களிடத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுகின்ற குணம் பளிச்சுண்ணு தெரியுது.. எனக்குள் மட்டுமல்ல உன் இரத்தத்திலும்கூட அடங்கிப் போகும் குணம் பூரணமா, தெளிவா இருக்குது. அதைத்தான் எந்த நரம்பையாவது துண்டித்து கொட்டிடுன்னு சொல்றேன்…..

*****

வெங்கடாசலம் தாலுக்கா அலுவலக வளாகத்திலிருக்கும் வேப்ப மர நிழலில் ஒதுங்கினார். கடந்த சில வாரங்களாகப் பியூன் ராமசாமியிலிருந்து தாசில்தார்வரை உத்தியோக பேதமின்றி, கடன் சொல்லி வாங்கிய டாயுடன், அவரவர் விருப்ப தமிழ்த் தினசரிகளில் வந்துள்ள, தங்கள் வேலைநிறுத்தம் குறித்துச் செய்திகளை விவாதித்து, நீதிமன்றத் தீர்ப்புகளில் நம்பிக்கை வைத்து, இறுதியாக எங்கே எவரிடம் குறைந்த வட்டியில் பணம் கிடைக்குமென்கிற தகவலுடன் கலைகின்ற சபை; இன்றைக்கு ஆதரவற்றிருந்தது. வெங்கிடாசலம் வானத்தையும் மண்ணையும் தேவையின்றித் திரும்பத்திரும்பப் பார்த்தார்.. தள்ளியிருந்த சாலையில் பதினொன்றே காலுக்கு வந்தவாசிக்கு புறப்பட்டுச் செல்லும் அரசுப் போக்குவரத்து பேருந்து வழக்கம் போல பதினொன்றரைக்குப் போய்க் கொண்டிருந்தது. தேய்ந்த டயர்ச் செருப்போடு கணுக்கால் தெரியும் சாயம் போன நூற் சேலையும், வியர்வையில் முதுகு நனைந்த இரவிக்கையும், முந்தானை சும்மாட்டில் சாப்பாட்டுக் கூடையுமாகத் தாலுக்கா அலுவலகத்திற்கு ஆண்டாள் சரியாக பதினொன்றைரைக்கு வந்து விடுவாள். வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்த ‘கிளைவ் ‘ காலத்து முண்சீப்கோர்ட்டு கூடுதல் நீதிபதி எப்போதும் போல முகத்தை இறுகவைத்து, பதட்டத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். பஞ்சபூத சேர்க்கையிலான உலகம் தன் பாட்டிற்கு வெங்கடாசலத்தைப் பற்றிய கவலையின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. உச்சிவெயில். தார்ச்சாலை சிற்றெறும்பாய், இவர் திசைமயக்கத்திலிருந்தார்.

அரசுப் பணி வாழ்க..

*****

உங்க அம்மாவைப் பத்தின உன்னோட அபிப்ராயமென்ன ? கொஞ்சம் முயற்சி பண்ணிபாரு. நல்லதா நாலுவார்த்தை.சொல்ல முடியுமா ?.. முடியாது. அவளோட முகம், அவளோட கண்கள், அந்தத் திராவகம் தோய்ந்த குரல், அதில் தெறிக்கும் நெடி.. ராட்சஷி. புண்களைக் குத்தி சுகம் காணும் காக்காய் ஜாதி.. அவளின் கைப்பிடியில் சிக்கி அழுக்கேறிய துணியாய் கல்லில் அடிபட்டு கிழிந்திருக்கிறேன். வேறென்ன சொல்ல.

*****

வெங்கிடாசலம் கடந்த அரைமணி நேரமாக மனம் போனபோக்கில் நடந்து கொண்டிருக்கிறார். திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். பார்க்கின்றவர்கள் கண்களில் ஆச்சரியமும் தொடர்ந்து அலட்சியமும் சேர்ந்து கொள்கின்றது.

‘கொஞ்சமாவது விவஸ்தை இருக்கணும். நாலுபேரபோல பிழைக்கத் தெரியணும். நீங்க எதுக்கும் லாயக்கற்றவர். ‘ பார்வதியிடம் சாதாரண நாட்களிலேயே வருகின்ற பஞ்சமில்லாத வார்த்தைகள்.

‘என்ன தப்பு செஞ்சேன் ? இந்த நாற்பது வருட சர்வீஸ்ல ஒரு குறை, ஒரு தவறு சொல்ல முடியுமா ? ஒரு மெமோ உண்டா ? கை நீட்டி ஓர் அஞ்சுரூபா வாங்கியிருப்பேனா ?…. தீ விபத்துண்ணு வர அப்பாவிங்கக்கிட்டகூட அம்பது நூறுண்ணு கறக்கும் பயலும், முதுகில எலும்பில்லாம வளைஞ்சு கொடுத்து காக்காய் பிடித்துக் காலம் தள்ளுற பயலெல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டும்…நான் வேண்டாம். இருபது வருஷப் படிப்பு, சர்வீஸ் கமிஷன், ரெவன்யூ டெஸ்ட், முப்பத்தைந்து வருஷ சர்வீஸ் எல்லாத்தையும் பெருக்கிக் கூட்டி குப்பைகளோட சேர்த்தாச்சு. இனி கொஞ்சம் கொஞ்சமாக மக்கணும். விட்டுடுவேனா ? விசாரணை நடக்கட்டும். எல்லாப் பயலுவளையும் நாற அடிச்சுடறேன் பாரு ‘ தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

திண்டிவனத்தை குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு, வீட்டை அடைந்தபோது மாலை ஐந்து. வீடு

பூட்டியிருந்தது.

ஒவ்வொரு நாளும் பார்வதி இந்த நேரத்தில் கதவருகில் இவரை எதிர்பார்த்து காத்திருப்ப்பாள். எங்கே போய்விட்டாள் ? இவர் நுழையும்போதே முகத்தைச் சுளித்துச் சுளீரெனச் சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளால் விளாசப் பழகியவள். சோர்ந்து கூடத்திலிருந்த நாற்காலியில் விழுந்தார். திடாரென்று விழித்துப் பார்த்தபோது, எதிரே பார்வதி.

‘எங்க வந்தீங்க. ? அப்படியே எங்கேயாவது ஒழிய வேண்டியதுதானே ? ‘

‘பார்வதி வேண்டாம்.. உன்னோடு விவாதம் பண்ண நான் தயாராயில்லை. நொந்துபோய் வந்திருக்கேன். என்னை குதறாதே. நீ எங்கே போயிருந்த ?.. ‘

‘எங்கே போனா என்ன ? சம்பாதிக்கறவனத் தேடிப் போனன்.. உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு உப்பு மிளகாய்க்குக்குக் கூட வழியில்லையே..! ‘

‘அசிங்கமா பேசாதே.. ‘

‘நானா பேசறேன். அப்படி பேச வைக்கிறீங்க. வயசுக்குத் தகுந்த புத்தி இருக்கணும். ஒழுங்காகச் சம்பாதிச்ச காலத்துலேயே மளிகை பாக்கி, பால் பாக்கிண்ணு மென்னியைப் பிடிக்குது. இப்ப வேலையையும் தொலைச்சுட்டு வந்து நிக்கறீங்க.. என்ன செய்யப் போறதா உத்தேசம் ? ‘..

‘அவனுவ போன்னு சொன்னா போய்விடுவேனா ? தொலைச்சிட மாட்டேனா ? பார்க்கத்தான் போற.. சுப்ரீம் கோர்ட்வரை போவன் ? ‘

‘கிழிச்சீங்க.. ஆம்பிளையா லட்சணமா யோசனை பண்ணுங்க. சித்தமுன்ன சாம்பசிவம் சாரை பார்த்துட்டு வந்தேன். நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அவர் ஆலோசனைப்படி நடக்கப் பாருங்க..அப்படி இல்லன்னா.. விடுங்க. இந்த வீட்டுல ஒண்ணு நீங்க இருக்கணும் இல்ல நாங்க இருக்கணும்.. முடிவுக்கு வாங்க.. சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள். ‘

மெல்ல எழுந்துபோய், பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பார்வதியின் தோளைப் பற்றினார். பதறிக் கொண்டு திரும்பினாள். ‘தள்ளி நில்லுங்க. என்னைத் தொடாதீங்க… உத்தியோகம் புருஷ லட்சணம். அதையும் உதறிட்டுவந்தா பொம்பிளை எப்படி மதிப்பா ? ‘

‘பார்வதி.. நிதானமா யோசனை பண்ணு. நானா வேலை வேண்டாம்னு நிக்கறேன். என்னை நோக அடிக்க இது நேரமில்லை. எங்க அப்பாவும் இப்படித்தான், கிராமத்துல கர்ணமாகவிருந்தார். திடார்னு ஒரு சட்டம் கொண்டுவந்து அத்தனைபேரையும் வீட்டுக்கு அனுப்பிச்சாங்க. அப்பவும் இப்படித்தான் எங்க அம்மா வேலை போனதுக்கு எங்க அப்பதான் காரணமின்னு ஆவேசப்பட்டாங்க. அப்பா பொறுமையாகச் சொல்லிப் பார்த்தார். கேட்கலை… பிறகு என்ன நடந்தது தெரியுமா ?.. வேண்டாம்.. அதைப்பற்றி பேச நான் விருப்பப்படலை. இங்கே பாரு நான் தனி ஆள் இல்லை. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க ஆயிரக் கணக்குல இருக்காங்க…. இதற்கு அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆகணும்…

‘ இங்கே பாருங்க உங்க வியாக்கியானமெல்லாம் எனக்கு வேண்டாம். முடிஞ்சா வேலையோடு திரும்ப வாங்க.. இல்லை நான் கிளம்பறேன். ‘

‘எங்க சாம்பசிவம் கிட்டியா ?.. ‘ வேண்டாம்டி. நான் மூர்க்கன். எங்கப்பா படிச்சுப் படிச்சு சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்ணு சொன்னார். அதை உண்மையாக்கிடாதே. அவரை மாதிரியே என்னையும் கொண்டு போயிடாதே ‘ வெங்கிடாசலம் நெருங்கி வந்தார். முகம் கருத்திருந்தது. கண்களில் திடாரென இரத்தம் பரவிநின்றது.

‘என்னைச் சீண்டனிங்கன்னா, விதண்டாவாதத்துக்காவது அப்படித்தான் என்பேன் ‘

‘அப்பா நீங்க சொன்னது சத்தியம். நான் உங்க பேச்சைக் கேட்டிருக்கணும். என்னை மன்னிச்சிடுங்கப்பா..

‘நில்லுங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு ?.. திடார்னு இப்படி என்னென்னவோ பேசறீங்க ?

‘சிவம் பெருசுண்ணு சொல்லவறேன்.. கிட்டவா வலிக்காது.. எங்க அப்பா அம்மாவை அடக்க கையாண்ட வித்தை. இரண்டு விரல் போதும்…. ‘

‘என்னது ?… எதுக்காக என் கழுத்தை இப்படி.. என்ன.. என்ன செய்யறீங்க நீங்க…ஐய்….! ‘

******

என்னடா நான் சொல்றது காதிலே விழுந்ததா ? பெண்களை நம்பாதேண்ணு எங்கப்பா எனக்குச் சொன்னார். அதை நான் உனக்குச் சொல்றேன். உம்மனசுல என்ன ஓடுதுண்ணு எனக்கு விளங்குது. என்னை பைத்தியக்காரன்னு நினைக்கிற. என் பிம்பத்தை சுத்தமாத் துடைச்சிட; என்னை மறந்திட துடிக்கிற. எப்படி முடியும் ? என்னோட பிரதி நீ. கருப்பு வெள்ளை நிழற்படமல்ல, இரத்தமும் தசையினாலுமான வார்ப்பு. வேறொரு தகப்பனுக்கு அவனோட பிள்ளை அன்னியனாக்கூட மாறிப்போகலாம். என்னிடம் முடியாது. நான் அனுமதிக்கமாட்டேன். எனக்கேற்பட்ட ரணமும் வலியும் உனக்கு வேண்டாம். நாளைக்கு நீயும் இந்தத் தப்பைச் செய்யக்கூடாது பாரு. வா.. உன்னை அடைகாக்க நானிருக்கேன். எங்கப்பா மாதிரியே பொத்தி பொத்தி வளர்ப்பேன்.. உன்னோட அப்பன் சொல்றேன் அப்பன்…

‘என்ன வழக்கம்போல தனியே நிண்ணு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்களா ? உள்ளே வாங்க. ரோட்டுல போற ஜனம் அத்தனையும் உங்களத்தான் பார்க்குது. இல்லாத பிள்ளையை கற்பனை செய்துகொண்டு..

கடவுளே. ‘. பார்வதி தலையிலடித்துக்கொண்டாள்..

******

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

அப்பா!

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

வ.நகிரிதரன்


ஆறடி தாண்டிய ஆகிருதி.
சிந்தனைக் கண்கள்.
குமிண் சிரிப்பு.
நான் பார்த்து அப்பா
வேலைக்கென்று வெளியே
போனதில்லை.
வேலைக்குப் போகாத அப்பா.
எந்த நேரமும்
சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி
கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட்
ஹவுஸ், ஜோசப் கொன்ராட்,…
ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,…
இதைத் தவிர வேறென்ன செய்தார் ?

அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா ?
குடும்பம், குட்டியென்று…
எல்லாமே அம்மாதான்.
அதிகாலையெழும்பி, அடுக்களை
அலுவல் முடித்து, பாடசாலை செல்லும்
அம்மா போய்ப்
பொழுதுபட வந்தால்..
மீண்டும்
அடுக்களைதான்.
அம்மா வரும்வரை
அப்பா குட்டி போட்ட
நாயாய்
அலைவார்.
அப்பா ஏனப்படியிருந்தார் ?
அம்மா அதுபற்றி அலட்டிக்
கொண்டது கிடையாது.
ஏன்
அப்பாவும் தான்.
சில போதுகளில் பழையதை
எங்களுடன்
பகிர்ந்து கொள்வதுமுண்டு.
அந்தக் காலத்தில் அவர்
படித்த பாடசாலை
‘களியாட்டு விழா ‘ வொன்றில்
அம்மாவைக் கண்டதையவர் கூறக்
கேட்டிருக்கின்றேன்.
‘குந்தவை ‘ , ‘வானதி ‘போல்
கன்னியரிருவர் கண்டு
சிந்தையைப்
பறிகொடுத்ததைச் சொல்லிச்
சொல்லியே சிரிப்பார்.
பதிலிற்கு
அம்மாவும் ஆசிரியப்
பயிற்சிக் கலாசாலையொன்றில்
பயின்றுகொண்டிருந்த
காலமொன்றில்
பல நூறு மைல்கள் தொலைவில்
நடுக்காடொன்றில் நிலம்
அளந்து கொண்டிருந்த
அப்பாவைக் காண்பதற்காய்
அவசரமாய்க்
கார் பிடித்து வந்த போது இடையில்
குறுக்கிட்ட பஸ்சொன்றில்
தெரிந்த முழு நீளச் சட்டைக்
கையொன்றை வைத்து
அப்பாவைக்
கண்டு பிடித்த
கதைதனை கூறிக் களிப்பார்.
அப்பொழுதெல்லாம் அப்பா
வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆழ நடுக் காடுகளில் நில
அளவையாளராக
அவர் பார்த்த வேலை பற்றி
அம்மா சொல்வதுண்டு.
காதலென்றால்
என்னவென்று அவர்கள்
மூலம்தான்
கண்டு கொண்டேன்.
அந்தக் காலத்தில் காதலிப்பதில்
அவர்களிற்கிருந்த துணிச்சல்
இந்தக் காலத்தில் என்னிடம்
கூட இருந்ததில்லை.
கருத்தொருமித்தவர் காதல் செய்தால்
கிடப்பதெல்லாம் களிப்பே.
அப்பாவிற்கந்தக் காலத்தில்
அவர் பெயரில் வீடு,
வளவு, வயலென்று
அள்ள அள்ளக் குறையாத
சொத்துக்கள். சொல்லி
மாளாதாம்.
சின்ன வயதில்
பெற்றவர் போய்விடத்
தனித்திருந்தவரை
சுற்றமென்றிருந்தவர்கள்
முடிந்தவரை சுருட்டி
விட்டே
மறைந்தனராம்.
ஐந்திற்கும் பத்திற்கும்
அடகு வைத்து ,
அடகு வைத்த
வட்டி அளவற்றுப் பெருகிவிட,
வெளியுலகம் தெரியாத
அப்பா
அவர்களிற்கோர் காமதேனு.

அதன் பிறகு…..
அப்பா அவர்பாட்டில்
முயன்று முயன்று
முன்னுக்கு வந்தவராம்.
பல்கலைக் கழகப் படிப்பைப்
பாதியிலே விட்டு விட்டுத்
தொழில் நுட்பம் கற்று,
நில அளவைத் தொழில்
புரியும் போதுதான்
கல்லூரிக் களியாட்டு
விழாவொன்றில்
குந்தவையைக் கண்டு
காதல் கொண்டாராம்.

காதலிக்கும் போது வேலை
பார்த்துக் கொண்டிருந்த அப்பா
கல்யாணம் முடிந்ததும்
பென்ஷன் ‘
பெற்றுக் கொண்டாராம்.

ஏனென்று அப்பாவை
என்றும் கேட்டதில்லை.
அப்பாவும் கூறியதில்லை.

அவர்கள் காதலித்தார்கள்.
அவர்களிற்கதுவோர் பிரச்சனையேயல்ல.
அவர்கள் அன்பைச் சொரிந்தார்கள்.
அது போதும் எங்களிற்கு.

அறியாப் பருவத்தில்
அதுதவிர வேரென்ன வேண்டுமெமக்கு ?
புத்தகம் மட்டுமிருந்து விட்டால்
போதுமப்பாவிற்கு. எங்களிற்கும் தான்.

ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா,
குமுதம், கதிர், விகடன்,
கல்கி,கலைமகள்,மஞ்சரி,
தீபம்…இதுதவிர
பத்திரிகைகள் பலப்பல.
ஜெகசிற்பியன், ஜெயகாந்தன்
கோமகள், அநுத்தம்மா, நல்லபெருமாள்
கல்கி, சாண்டில்யன்,பி.வி.ஆர்,
அறிஞர் அண்ணா,
மு.க, கொத்தமங்கலம்சுப்பு…
கதைகள் படிப்பது;
நிரைப்படுத்தித் தொடர்கதைகளைக்
கட்டி வைத்துப் படிப்பது..

அப்பா வேலைகுப்
போகவில்லைதான்.
அப்பா வேலைக்குப்
போகவிட்டால்
தானென்ன ?
வளர்ப்பதிலென்ன குறை
வைத்தார் ? எங்களை
வளர்ப்பதிலென்ன குறை
வைத்தார் ?

அப்பாவிற்கு அதிகாலைகளில்
வானொலியில்
அந்தக் காலத்துப் பாடல்களைக்
கேட்பதிலோர்
களிப்பு.
பி.யூ.சின்னப்பா, பாகவதர்,
எம்.எஸ், டி.ஆர்.ராஜகுமாரி…

‘சிவபெருமான்
கிருபை வேண்டும்.. ‘

‘ராதே! உனக்குக் கோபம்
ஆகாதடா.. ‘

‘காற்றினிலே வரும்
கீதம்.. ‘

அப்பா அம்மாவைப்
பெரிதும் காதலித்தார்.
பதிலிற்கு
அம்மாவும் அப்பாவை
ஆழமாக நேசித்தார்,
இருந்தும் இஇடையிடையே
சிறுசிறு மோதல்கள்..உரசல்கள்…
அப்பொழுதெல்லாம்
அப்பா சொவார்:
‘செல்லச் சன்னதியிலைச்
சாமியாராய்ப் போவன் ‘
கடைசிவரைச் சாமியாராய்
அவர் போகவில்லை.
கடைசிவரை அவரால்
கட்டை மீற முடிந்ததில்லை.
அதற்காகச் சொல்லாமலிருக்கவும்
அவரால் முடிந்ததில்லை.

அம்மாவை நினத்தால்
எப்பொழுதுமே வியப்பு;
பெருமிதம்தான்.
ஒருநாள் கூட
அப்பாவிடம்
ஒருவார்த்தை வேலைபற்றி
அவர் கூறிக் கேட்டதில்லை.

‘அவர்தானே உங்களைப்
பார்த்ததெல்லாம் ‘
‘அவர்தானே உங்களை
வளர்த்ததெல்லாம் ‘

அப்பா வேலைக்குப் போகாதது
அப்பொழுதும் குறையாகப் பட்டதில்லை.
அப்பா வேலைக்குப் போகாவிட்டால்
தானென்ன ?
அப்பா ‘அப்பா ‘வாகயிருந்தார்.
அது போதாதா எங்களிற்கு.
அந்த வேலையை அவர்
ஒழுங்காகவே செய்தார்.
அது போதாதா எங்களிற்கு ?
‘தந்தை மகற்காற்றும் நன்றி
அவையத்து
முந்தியிருப்பச் செயல் ‘
அது போதாதா எங்களிற்கு ?

அப்பா நல்லதொரு
அப்பாவாகவிருந்தார்.
அதுதவிர அப்பாவின்
உள் உலகம் எப்படியிருந்தது ?
அதிலென்னவென்ன ஆசைகள், தாபங்கள்..
அப்பொழுது
அதுபற்றிச் சிந்திக்கும்
வயதாவெங்களிற்கு ?
இப்பொழுது சிந்திக்க முடிகின்றது.
அப்பா எங்களிற்கு
அப்பாவாகயிருந்ததில்
அளவிடா மகிழ்ச்சி. இருந்தும் வளர்ந்து,
உயர்ந்து, கிளை விட்ட சமயத்தில்
அவரிலையேயென்று கவலைதான்.
அப்பா!
‘நீ நீட்டி நிமிர்ந்து படுத்தபடி,
பொண்டாட்டியின் உழைப்பில்
பொழுதைப் போக்கியவ ‘னென்று
யாரும் சொல்லியிருக்கலாம்.
யார் சொல்லியென்ன ?
அம்மா சொன்னாளா ?
அவளுக்கோ
நல்லதொரு கணவனாய்
நீயிருந்தாய்.
எங்களிற்கோ……
நல்லதொரு தந்தையாய்
நிழல் தந்தாய்.
அது போதுமெங்களிற்கு.
அது போதும்.
அப்பா!
அது போதும்.
அப்பா!
அது போதும்.
***
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

அப்பா

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கே ஆர் விஜய்


ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பள்ளியில் சேர்க்கும் போதும்
பொய்யான பிறந்தநாளைக் கொடுத்தாய்..
வீட்டில் உனக்கு சுமையென்று…

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது
ஏழை எனச் சொல்லி
இலவச புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாய்…

ஊருக்கு குடும்பத்தோடு
செல்லும் போது வேண்டுமென்றே
பேருந்தில்
என் வயதைக் குறைத்தாய்…

விருந்தாளிகள் யாரேனும் வந்தால்
பணமில்லை என
என்முன்னே பொய்யுரைத்தாய்..

ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பிற்படுத்தப்பட்டோர் சமூக அந்தஸ்தைக்கொண்டு
இலவசமாய் கிடைக்கும் சலுகைகளை
பயன்படுத்திடவே நினைத்தாய்..

தொலைபேசியில் அழைப்பு வந்தால்
இருந்து கொண்டே இல்லை என்றாய்…

முதன் முதலாய் வேலைக்குப் போனபின்
பக்கத்து வீட்டார் சம்பளம் கேட்க
வேண்டுமென்றே மூவாயிரம் குறைத்தாய்…

ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
எதற்கெடுத்தாலும் நாம் நடுத்தர வர்க்கம்
என்று போலிப் பெயர் சூடிக் கொண்டாய்.
எதிர்த்துப் பேசிய போது
‘உனக்குத் தெரியாதுடா உலகம் ‘
எனத் தடுத்தாய்..

என் திருமணத்திற்கே
வரதட்சணை வாங்கினாய்…

உன் அப்பா அம்மாவை
முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்…

பணம் கேட்டு உறவினர் வந்த போது
அவரிடம் இல்லை என்று சொல்லி விட்டு
அமைதியாய் பீரோ திறந்து எண்ணிக் கொண்டாய்.

என் குழந்தையை நீ தொடாதே அப்பா….

அதை நான் வளர்க்கிறேன்…
உன்னை மாதிரியல்ல…
உன்னிலும் மேலாக….
சமூகத்திற்கு பயந்து கொண்டல்ல…
சமூகத்திற்கு பயன்தருபவனாக –
வருங்கால இந்தியாவை வலம்வருபவானாக-
முன்மாதிரியாக வளர்க்கிறேன்..
இனியாவது கற்றுக்கொள்…

***
vijay_r@infy.com

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்