மல மேல இருக்கும் சாத்தாவே!

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

ருத்ரா


விக்கிலிங்கபுரத்திலெ இருந்து

அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா

அங்ஙனெ இருந்து

ஊர்க்காடு

செல்லும் பாதேல

தாம்ப்ரபரணிக் கரைக்கு

வல்லாட்டு போட்டாப்ல

கெடக்கும் சாலெ அது.

பக்கத்துல

மல மேல இருக்கும் சாத்தா

பளிங்கு பாய்

விரிச்சாப்ல ஓடுற

தண்ணிய

ஊடுருவிப் பாக்கும்.

தல உச்சியிலே

எலிவால் பின்னல்

போட்டமாதிரி

ஆட்டி ஆட்டி

ஆடுற நாணப்புல்லுக

தண்ணிக்குள்ள

தகிடுதத்தம் போடுறதயும்

பாக்கும் அது.

நீட்ட நீட்டமா

வளந்த அந்த புல்லுக

தொட வரைக்கும்

சீலைய தூக்கிகிட்டு

ஆத்துக்குள்ள

நடக்குற

பொண்டுகளப் போல

தோணும்

அந்த சாத்தாவுக்கு.

ஆத்துக்குள்ள

கொத்து கொத்தா

போய்ட்டிருக்கும்

அயிரைகூட்டங்களை

தன் முண்டக்கண்ணாலயே

பாத்து பொரிச்சு

குழம்புவச்சு சாப்ட்ரதைப்போல

அதுக்கு

ஒரு பூதப்பார்வை!

அக்கரையில

கல்டகுருச்சி ஊரு

படித்துறையிலே

சலவைக்காரங்க

வீசி வீசி அடிச்சு

தொவக்கிற

துணிகள்ள கேக்குற

தூரத்து தாளங்க தான்

சாத்தாவுக்கு தாலாட்டு.

எதுக்கால

சாமியாடறவ

துண்ணீரு வீசுனாலும் சரி

வேப்பங்கொள

அடிச்சாலும் சரி

முட்டைய ஊதி

கப்பூரம் கொளுத்துனாலும் சரி

சாத்தா பாட்டுக்கு

தூங்கிட்டு தான் நிக்கி.

அந்த சந்திப்பின்

ஆலமரத்து நிழலில்

குட்டியாய்

இன்னொரு

‘சொள்ள மாட சாமி ‘

புதிதாய் வர்ணம் பூசிய

வெட்டரிவாளை

தூக்கிப்பிடித்துக்கொண்டு

நின்றிருந்தார்.

அறுவாளின் கூர்முனை

வானத்தை

குத்திக்கிழித்ததில்

கிழிந்த மெத்தையிலிருந்து

சிதறிய பஞ்சுகள் போல்

மேகங்கள்.

பீடத்தில்

பிஞ்சுகளாய்

குறும்பாடுகள்.

பீடவிரிசலில்

நீண்டு செழித்த

புல்கற்றைகளை

புசித்துக்கொண்டு

தன் ‘கோலி உருண்டை விழிகளில் ‘

சில கனவுகளின்

சித்திரப்பார்வைகளோடு

அவை அங்கு

திரிந்து கொண்டு நின்றன.

அந்த மேடையின்

இன்னொருபக்கம்

தோல் சுருங்கி

எட்டாய் மடிந்து கிடந்த

ஒரு தொண்ணூற்று

வயதுக்கிழவன்

படுத்துக்கொண்டே

கத்திக்கொண்டிருந்தான்.

‘மல மேல இருக்கும் சாத்தாவே!

கொஞ்சம் பொறுத்துக்கப்பா.

எங்கள தெண்டிச்சிறாதே. ‘

என்று கும்பிட்டு விட்டு

இந்தப் பக்கம்

சின்னப்பயல்களப்பாத்து

கத்தினான்.

‘எலெ மாசானம்

அந்த ஆடுகளப் புடிச்சு

கட்டிப்போடுலெ

இன்னும் ரெண்டு நாள்ள

கொடெ வருதுலெ. ‘

மானசீகமாய்

பம்பைக்கொட்டு உறுமலும்

பூசாரியின் வெட்டுக்கத்தியும்

அந்த கிழட்டு நாக்கில்

ஜொள் ஊற வைத்தது.

குரலைக் கேட்டு

வெறித்த ஆடுகள்

கிழவனையே

உற்றுப்பார்த்தன.

ஆவேசங்கொண்டு

ஒரு மாறுதலுக்காக

அந்த ஆடுகளின்

கனவுக்காட்சிகள்

தலைகீழாய் மாறின.

புல்லை மேய்ந்து

தண்ணியைக்குடித்து

மே…என்று

தீனக்குரல்களில்

காதுகளை

சடசடத்துக்கொண்டு

கொம்பை கொம்பை ஆட்டி

ஏதோ

அத்வைதத்தையே

புசித்து தின்றுவிட்டு

செரித்தது போல்

திக்விஜயங்கள் செய்துவிட்டு

….

அப்புறம் புளுக்கை போட்டு

குட்டி போட்டு பெருக்கி விட்டு

….

திடாரென்று ஒரு நாள்

பிரெஞ்சு புரட்சி

கில்லட்டின்

கத்திக்குள்

தலை துண்டு பட்டு போவதுபோல்

கதை முடிந்து

கசாப்புக்கடையின்

கல்லாப்பெட்டி சில்லறைகளாக

தேங்கிப்போகும்

அந்த உயிர்க்குப்பைகள்

கூட

ஒரு பிரெஞ்சு புரட்சியை

கெனா கண்டன.

கத்தியும் பிரம்மம் தான்.

ஆடும் பிரம்மம் தான்.

சாமியாடும்

பூசாரிக்குள்

அத்வைத பாஷ்யம்

ரத்தம் அல்லவா கேட்கிறது.

ஆடுகளின் கண்கள்

ஒவ்வொன்றும்

இப்போது

வெறும் கோலிக்குண்டுகள் அல்ல.

ரத்தப்பசியெடுத்த

ருத்ராட்சங்கள்!

அத சூச்சுமமா பாத்த

மலமேல இருக்கும்

அந்த சாத்தாவுக்கு கூட

மொகம் தொங்கிப்போச்சு.

ஏன் ?

இது தான்

அந்த ஆடுகளின் கனவு..

கிழவன் கழுத்தில் மாலை.

மஞ்சத்தண்ணி

தெளிக்கப்பட்டு

வெட்டுக்கட்டையில்

அவன் கழுத்து

அமுக்கிப்பிடிக்கப்பட….

பூசாரியாய் வந்த

ஒரு முரட்டு வெள்ளாட்டின்

கையில்

பளபளப்பாய்

ஒரு வெட்டரிவாள்!

ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா