சலனங்கள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பவளமணி பிரகாசம்


கால நதிக்கரையிலே
வைகறைப் பொழுதிலே
குரங்கென்ற குறியீடின்றி
கூன் நிமிர்ந்து நடக்கையில்
அறியாமை இருளுமே
மெல்ல விலகியதே
பொல பொலவென விடிந்தது
பூகோளம் பெளதீகம் புரிந்தது
நீர் நெருப்பின் பயன் தெரிந்தது
வாழ்வின் சுவை கூடிப் போனது
ரசமான நாடகமாய் ஆனது
எம்பி மனிதன் குதித்த போது
வானம் தலையில் இடித்தது
நிலவைத் தாண்டி பயணமாகுது
இசைவான இயல்பொழித்து
இயற்கை ஏனோ சீறுது
தாயாய் தாங்கிட மறுக்குது
பேயாய் மாறி ஆடுது
பெய்தும் கொல்லுது
பெய்யாமலும் கொல்லுது
பூவை பிஞ்சை தீ நாக்கு விழுங்குது
புரியாத புதிர்களோ
பழைய பழி கணக்குகளோ
புத்திக்கு எச்சரிக்கையோ
போதைக்கோர் மாற்றோ
புது உலகம் சமைக்கவோ
கால நதிக் கரையிலே
அலையின் சலனங்கள்
அதிலுண்டோ அர்த்தங்கள்
ஆடுகின்ற ஓடங்கள்
தேடுகின்ற பாடங்கள்
தீராத தாகங்கள்
ஓயாத மோகங்கள்
நில்லாத போகங்கள்
சொல்லாத சோகங்கள்
வெல்லாத இலக்குகள்
ஏனிந்த சம்பவங்கள்
விடை எங்கே
விடுதலை எங்கே

Pavalamani Pragasam.
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்