இந்தியா ஒளிரக்கூடும்…

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

சாந்தி மனோகரன்


இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ
என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள்
கவனக்குறைவால் தடுமாறிய உன்னை
முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து
உயிர் உடைத்தனர்…

சேலை வாங்க போன ஆத்தா
செத்துப்போனாள் எனச்சொல்ல
வெட்க்கமாகத்தான் இருக்கிறது…

நெருப்பில் உன்னுடல் எரிந்திருக்கையில் -உன்னை
மிதித்து வதைத்த கால்களுக்குச் சொந்தமான கண்கள் சில
நீரில் நனைந்திருக்கும்…

இதோ
எவரோ எறிந்துசென்ற சேலை
இதயமாய் கனக்கிறது என் கைகளில்

…ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்…. உன் மரணத்திற்கு பாதைவிரித்த
சேலையொன்றும் எனக்கு தேவையில்லை-எனவே
எறிகிறேன் சேலையை…எரியும் உன் பிணத்தின் மேலே…

ஒரு வேளை..
சேலையில் பற்றிக்கொண்ட
நெருப்பின் ஜுவாலையில்
இந்தியா ஒளிரக்கூடும்…
இன்னும் பிரகாசமாய்…!!!
—-
shanthi_yem@yahoo.com

Series Navigation

சாந்தி மனோகரன்

சாந்தி மனோகரன்