அன்புடன் இதயம் – 14 – காற்று

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

புகாரி


உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு

நாசிகள் தொட்டு நாளும் வாசம்
நெஞ்சம் கிறங்க நிமிண்டுவ தாரு
உயிரைத் தொட்டு உயிராய் நிறையும்
ஒவ்வோர் சுகமும் காற்றின் அசைவே

காற்றில் அலையும் பூங்கொடி தானே
நாட்டியம் ஆடப் பாடம் எடுத்தது
காற்றில் மிதக்கும் வாசனை தானே
சமையற் கலையைக் கற்றுத் தந்தது

நீரின் மீதினில் காற்றின் கோலம்
ஓவியம் தீட்டும் உள்ளம் ஈன்றது
மணலின் மீதினில் காற்றின் கோலம்
சிலைகள் வடிக்கச் சொல்லித் தந்தது

இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்

செவியும் மூக்கும் எப்படித் திறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்
ஓசைகள் இன்றி மொழிகளும் இல்லை
மொழிகள் இன்றி உலகமும் ஊமை

ஒவ்வோர் ஜீவனும் தசைநார் பின்னி
உன்னதக் கூட்டை உடலுள் கட்டி
ஒவ்வொரு முறையும் ஏங்கித் தவிக்க
ஓடித் திரியும் நாடோடிக் காற்று

இதமாய்த் தழுவும் சுகமாய்க் காற்று
இதயம் வருடும் அன்பாய்க் காற்று
தலையைக் கோதும் கரமாய்க் காற்று
உயிரைப் பேணும் தாயாய்க் காற்று

மனதின் சோகம் பெருமூச் சாகும்
கடலின் சோகம் புயலாய் மாறும்
நிலமும் கூட நீள்மூச் செறியும்
நடுக்கத் தோடு பிளந்தே மூடும்

நீரின் நெருப்பின் சுவாசம் காற்று
நிலத்தின் காதல் தழுவல் காற்று
காற்றே இன்றி உயிர்கள் இல்லை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி