அவன்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

நடராஜா முரளிதரன் (கனடா)


நான் வேலைக்குச் சென்ற போது அங்கே அவன் நின்றிருந்தான். தலைமயிர் ஒட்டவெட்டப்பட்டுச் சொக்கைகள் அல்லது கன்னங்கள் பருத்து அழுக்கான உடைகளோடு அலங்கோலமான “பூட்ஸ்களையும்” அணிந்திருந்தான் அவன். எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு “குத்துக்கல்லாக” ஆடாமல் அசையாமல் சிறிது நகர்ச்சிக்கும் தன்னை ஆட்படுத்திவிடாதவாறு அவன் அமர்ந்திருந்ததாகவே எனக்குப்பட்டது.

எப்போதும் உரிய நேரத்தில் வேலைக்குப் போய்ப் பழகியிராத நான் அன்றும் பிந்தியே வேலைக்கு வந்திருந்தேன். வந்தவுடன் அவன் குறித்து பெரிதும் அக்கறைப்பட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஏதாவது “டிலிவறி” இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கையுறைகளை மாட்டிக்கொண்டு இருபது கிலோ கொண்ட ஒரு பெட்டி “சிக்கின்விங்ஸை” “மரனைட் சோஸில்” கலந்து குழைத்து நீண்டு, அகன்ற பெரிய அலுமீனியத்தட்டுக்களிலே வரிசையாக நிரைப்படுத்த ஆரம்பித்த போது ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் “24 மணி” நேர தமிழ் வானொலிப்பெட்டியையும் முறுக்கி விட்டேன். வழமையாக இவ்வாறுதான் எனது நாளாந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துக் கொள்வேன். நான் பணிபுரியும் இடம் “பீஸா” மற்றும் “சிக்கின்”(கோழி) போன்ற வகையறா உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும். அத்துடன் நேரில் வருபவர்களுக்கும் தயார் நிலையிலுள்ள உணவுப் பட்டியலுக்கிணங்க அவர்களுடைய தேர்வுப்படி உணவுகளைத் தயாரித்து வழங்கும்.

முதலாளியும் தன்பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் பாடும் பல்லவியை அன்று மீண்டும் பாட ஆரம்பித்தான். “அண்ணை எக்கச்சக்கமான வேலைகள் கிடக்குது. கெதியாய் முடியுங்கோ. முடிச்சுப்போட்டு ஒருபெட்டி ‘பிறைசும்’(உருளைக்கிழங்கு நீள்நறுக்குகள்), ‘ஒனியன்றிங்சும்’ (வெண்காய வளையங்கள்) வேண்டி வரவேணும். அதோட ‘பாங்கில’ காசும் ‘டிப்போசிற்’ பண்ண வேணும். இல்லாட்டில் ‘செக்’ துள்ள வேண்டியதுதான். காசையும் முதல் போட்டதுமல்லாமல் எவ்வளவு முறி முறிஞ்சும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் இருக்கு. வியாபாரத்தை வித்துப்போட்டு எங்கையாவது போய் வேலை செய்தால் சம்பளமாவது மிஞ்சும்”; என்ற வகையில் விரிந்து செல்லும் நீண்ட பல்லவி அது. “முதலாளிமார் எண்டால் இப்பிடித்தான் அழுவினம். உதுகளையெல்லாம் நம்பக்கூடாது. கள்ளப் பயலுகள்” எண்டு எனது உள்மனம் சொல்லிக் கொண்டாலும் வளர்ச்சியடைஞ்ச கனடா மாதிரியான நாடுகளிலை சிறுவியாபாரம் செய்வதென்பது கஸ்ரமான விசயமாயும் தோன்றியது. ஆனாலும் முதலாளியட்டை இருக்கிற வைப்புச்சொப்பு கனக்க எண்டில்லை. இருக்கிறது சும்மா மூண்டு வீடும், மூண்டு வாகனமும் மட்டுந்தான். அதிலையொண்டு புத்தப்புது “பென்ஸ்”, மற்றதொண்டு “லீசிலை” எடுத்த “ரொயொட்டா” ராவ் மொடல் ஜீப். கடைசியாய் வேண்டின வீடு சுமார் 4000 சதுர அடிக்கு மேலை.

அதற்கிடையில் புதிதாய் வந்து “குத்துக்கல்லாய்” குந்தியிருப்பவனின்; ஞாபகம் வரவே “உதார் புது ஆளாய் கிடக்குது” எண்டு முதலாளியை நோக்கி ஒரு கேள்விக்கணையை வீசினேன். அந்தக் கேள்வியின்ரை வீச்சிலை “என்ர வேலையைப் புடுங்கிக் கொண்டு போக அவன் வந்திருப்பானோ எண்ட ஐமிச்சமும்” உள்ளடங்கியிருந்தது. முதலாளி ஒரு காலை இழுத்தவாறே நடப்பான். அவ்வாறு நடந்துகொண்டே “உந்தாள் எங்கடை தமிழ் பெடியன்தான், பக்கத்திலை இருக்கிற “ஷெல்ரரிலை” இருக்கிறார். சாப்பாடு, படுக்கையெல்லாம் குடுக்கினம். கிழமையிலை ஒருக்கா 25 டொலரும் கிடைக்கும.; குடுத்து வைச்ச ஆள். நாங்களெண்டால் எவ்வளவு “பில்லுகளைக்” கட்டவேணும். இந்த நாட்டு அரசாங்கம் இப்பிடியான ஆக்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்யுது. அவருக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. கவலை இல்லாத மனிசன்” என்ற அறிமுக விளக்கத்தை எனக்குத் தந்தான் .
அப்போது மீண்டுமொரு தடவை அவனைப் பார்ப்பதற்காக அவனை நோக்கி எனது பார்வை நீண்ட போது அவனது கண்கள் என்னை நோக்கியே நிலை கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. நான் அதை அவதானித்த அக்கணத்தில் உண்மையில் தடுமாறிப் போய்விட்டேன். ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் ஒருவாறு சமாளிப்பில் ஈடுபட்டவாறே அவனை நோக்கிச் சிரிப்பொன்றை உதிர்த்தேன். அவனும் மெலிதாகத் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டான்.
நான் மூன்று வேலைகளை ஒரு கணத்தில் நிகழ்த்தும் வித்தைக்காரனாகக் கைகள் “சிக்கின்விங்சுடனும்”;, ஓர் காது “24 மணி நேர வானொலிப்பெட்டியின் காற்றலைகளிலும்” மறு காது முதலாளியின் “கதைகளை” உள்வாங்கியும், இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மூளை தன் ஆளுமையின் மேலாண்மையினை நிலைநாட்டும் பொருட்டு இவ்வாறான வினைத்திறன்களுக்கு ஏற்றபடியான கருத்தாடல்களுக்குத் தன்னைத் தயார் நிலைப்படுத்தியும் அதிஉச்ச வேலைகளைச் செய்து கொண்டிருந்தன.
இடையே தொலைநகலியில் “டிலிவறி ஓடர்” வருவதற்கான சப்தம் எழஆரம்பித்து அதற்கான “கட்டளை” அச்சாகும் ஒலி தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. எனது பிரதான பணி “டிலிவறி ஓடர்களை” காரில் எடுத்துச் சென்று விநியோகிப்பதே. அதை விடுத்து மற்றவைகள் எல்லாம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக இடப்பட்ட பக்கப் பணிகளாகும்.

முதலாளிதான் பிரதான சமையற்காரன். அவன் தொலைநகலியில் வந்த “ஓடரைக்” கிழித்தெடுத்துப் பின் அடிமட்டத்தை வைத்து அரைவாசியாகக் குறுக்கறுத்து ஒருபாதியைத் தனக்கும் மறுபாதியை எனக்கும் தந்துகொண்டான். இரு பாதிகளும் ஒரே தகவல்களையே கொண்டிருக்கும். உணவு விநியோகம் செய்யவேண்டியவரின் பெயர், முகவரி, தொலைபேசிஇலக்கம், வழங்கப்பட வேண்டிய உணவுவகைகள் என அந்த வரிசை அமைந்திருக்கும்.

முதலாளி தான் எடுத்துக் கொண்ட பாதித்துண்டில் குறிப்பிட்டிருந்த உணவுகளைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தான். நான் எனக்கான பாதியில் குளிர்பானங்கள், “சோஸ்” போன்ற சில்லறைச்சாமான்கள் கேட்கப்பட்டுள்ளனவா என்பதைப் தேடிப்பார்த்துத் பிடித்து “பொலித்தீன்” பையொன்றுள் அவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். முதலாளி “பீஸா” ஒன்றையும், இரண்டு ‘பவுண்ட்ஸ்’ “சிக்கின் விங்ஸையும்” சமைத்து முடித்து அதற்கான பெட்டிகளுக்குள் அவற்றை நுழைத்தான். நான் சகல உணவுப்பொருட்களையும் சூடாக வைத்திருப்பதற்காகவெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிகப்புநிற நீள் சதுரப்பையினில் பத்திரப்படுத்திக்கொண்டு புறப்படத் தயாரானேன். எனது “கொண்டா” நீலநிறக் கார் கடையின் பின்புறம் அமைந்துள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமயம் பார்த்துக் “குத்துக்கல்லாய்” குந்தியிருந்தவன் இருக்கையில் இருந்து எழும்பியவாறே “அண்ணை நானும் உங்களோடை வரட்டே” என்று கேட்டான். “அதுக்கென்ன பிரச்சினையில்லை. வாங்கோ கதைச்சுக்கொண்டே போய்க் குடுத்திட்டு வருவம்” என்று பதில் கூறினேன். அவனும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொண்டு காரின் கதவினைத் திறந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். நான் காரினை இயக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் விநியோகப்படுத்த வேண்டிய உணவுகள் உள்ளடங்கியிருந்த சிகப்புநிற நீள்சதுரப்பையினை அவனிடம் நீட்ட அவன் அதனை வாங்கித் தனது மடியினில் வைத்துக்கொண்டு “சீட்பெல்ற்றினால்” தன்னை இறுக்கிக் கொண்டான்.

நான் காரை ஆறுதலாகப் பின்வழமாகச் செலுத்திப் பக்கவாட்டுச் சாலை வழியாகப் பிரதான வீதியான “புளொருக்குள்” நுழைத்து வலப்பக்கமாக வெட்டித் திருப்பினேன். பொங்கிப் பிரவாகித்திருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் கார்கண்ணாடியூடே பாய்ந்து வந்து என் கண்களைக் குத்திக் கூசச்செய்தன. நான் மடிந்து கிடந்த சூரிய ஒளித்தடுப்பினை விரித்து விட்டவாறு வளைந்து, நெளிந்து கிடந்த சாலையில் தொடர்ந்து காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அடர்ந்து செறிந்த சூரியஒளிப்பாய்ச்சல் சாலையின் இருபுறத்தையும் மஞ்சள் மயப்படுத்தின. அந்த வெய்யில் குளியல் ஏற்படுத்திய வெக்கையின் மணம் என் நாசித்துவாரங்கள் வாயிலாக நுரையீரலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களிலே ஆங்காங்கே தென்பட்ட நிழல்பரப்ப முடியாத இலைகளை இழந்த மரங்கள். வானமும், பூமியும் ஓடிச்செல்லும் வாகன இரைச்சல்களாலும், வெளித்தள்ளப்படும் புகைகளாலும் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் கனடாவில் குடியேறிய போர்த்துக்கீசக்குடியேறிகளும், அவர்களின் சந்ததியினரும் பெருமளவில் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். பழைய “பிரிட்டிஷ்” கட்டடக்கலை சார்ந்து செங்கற்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட குடியிருப்புக்களே பெரும்பாலும் வீதியின் இரு புறங்களிலும் அமைந்திருந்தன. பல்லாண்டு காலப்பழமை வாய்ந்த அந்தச் செங்கற்கள் மீது ஐதான கருமை நிறம் படர்ந்திருந்தது. வெடித்தும், பிளந்தும் காணப்பட்ட சில சுவர்கள் சீமெந்து பூசப்பட்டுச் சரிசெய்யப்பட்டிருந்தன. அவ்வாறான பழம்பெருமை வாய்த்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்டடங்களின் வெளிப்புறம் திருத்தவேலைகளுக்கு உட்படுத்தப்படும்போது அவற்றின் வடிவம் மாற்றியமைக்கப்படக் கூடாது என்ற “ரொறொன்ரோ மாநகரசபையின்” கடும் நிபந்தனையும் வழமையான முதலாம் உலக நாடுகளின் நகரங்களுக்கே உரித்தானமுறையில் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது..
ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கடையின் உணவு விநியோக கார்ச்சாரதி வேலையில் இருப்பதனால் அந்தப் பிரதேசத்துக்குள்ளே அமைந்துள்ள ஒவ்வொரு சந்துபொந்;துகளும் எனக்குத் தண்ணிபட்டபாடுதான். ஆனால் கனவுகளிலே திளைத்துக்கொண்டும், சஞ்சரித்துக்கொண்டும், நண்பர்பளோடு கைத்தொலைபேசியில் அரசியல், கலை, இலக்கியம் போன்ற வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்திக் கொண்டும் இவ்வாறான கடமையைப் புரியும் எனக்கு உணவு விநியோகம் செய்யவேண்டிய சரியான முகவரியைத் தவறவிட்டு மூன்று, நான்கு முறையென்று ஒரேயிடத்தையே சுழன்றுசுழன்று வட்டமடிக்கும் சூழ்நிலையும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

அப்போது “புளோர்” வீதியில் வாகனங்கள் நிறைய ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வாகனத்தை என்னால் வேகமாகச் செலுத்த முடியாது, ஏனெனில் பாதசாரிகள் வீதியைக் குறுக்கறுக்கும் விசேடவழிகளும், “சிக்னல்” ஒளிவிளக்குகளுமாகவே அவ்வீதி அமையும். எனவே ஆறுதலாகக் “காரினை” செலுத்திக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த “குத்துக்கல்லு” இளைஞன் எந்த வார்த்தையும் பேசாமல் முகத்தில் எத்தகைய பிரதிபலிப்புக்களையும் வெளிப்படுத்தாது உறைந்தநிலையில் காட்சி புரிவதாகவே எனக்குத் தோன்றியது. எவ்வாறு உரையாடலை இன்னொருவரிடம் ஆரம்பிப்பது என்பதில் எப்போதும் எனக்குச் சங்கடம் நேர்ந்துவிடுவதில்லை. எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இல்லாமல் முன் தயாரிப்பு ஏற்பாடுகள் இல்லாமல் என்னால் எந்த அந்நியரோடும் சம்பாசித்துவிட முடியும்.

எனவே எந்தப் பீடிகையுமில்லாமல் “எப்பிடித்தம்பி இருக்கிறியள்” என்று உரையாடலைத் தொடங்கினேன். அவன் அதற்கு வாயைத்திறந்து பதிலளிக்காமல் முகத்தைச் சிறிதாக அசைவுக்குட்படுத்தி, கண்களைச் சிறிது விரித்து, உதடுகளைச் சுருக்கி எதையும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்தான். ஆனாலும் நான் விடுவதாயில்லை, “தம்பி யாழ்ப்பாணத்திலை எந்த ஊர்” என்று தொடர்ந்தேன். அப்படி ஊரைப்பற்றி நான் விளிக்கையில் “உப்பிடியெல்லாம் கேள்வி கேக்கிறது படுபிற்போக்குத்தனமானது, “யாழ்ப்பாண மையவாதம்” தனது மேட்டுக்குடி மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் புலம்பெயர் வெளிகளிலே தக்கவைப்பதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகவே இவ்வகையான உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து கட்டுடைத்தல் வேண்டுமென்று” அண்மையில் நான் சென்றிருந்த ஏதோ ஓர் தமிழ் கலை இலக்கிய ஒன்றுகூடலிலே யாரோ ஒருவர் அறைந்து கூறியது என் ஞாபகப்பரப்பில் விரிந்தது. மேலும் அந்தப் பேச்சாளரின் சொல்லாடல்களில் கூறுவதாயின் என்னுடைய “பரவணிப்” பழக்கம் அந்தக் கோட்பாட்டுக்கு இசைய மறுத்தது. மேலும் மனம்தளராது என்னால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த முயற்சிகளால் அவன் தொடர்பான சிறிதளவான தகவல்களையே அவனிடமிருந்து திரட்டிக்கொள்ள முடிந்தது உணவு விநியோகத்தைச் செய்துமுடித்துத் திரும்புவதற்குள்.

பருத்தித்துறையைச் சேர்ந்த அவனது தாயும், தந்தையும் இலங்கை அரசாங்கத் திணைக்களமொன்றில் எழுதுவினைஞர்களாகப் பணியாற்றியவர்கள். தற்போது இருவரும் உயிருடன் இல்லை. ஏறத்தாள இருபது வருடங்களுக்கு முன்னமே தான் கனடா வந்து விட்டதாகவும் அதற்கு முன்னரான இறுதிக்காலங்களில் தான் யாழ்பாண நகரத்திற்கு அண்மையில் உள்ள திருநெல்வேலிப்பகுதியில் வசித்து வந்ததாகவும் மிகவும் சுருக்கமாகவே தான் தொடர்பான விபரங்களை எனக்கு ஒப்புவித்தான். இந்த ஒப்புவிப்புக்கு இடையிடையே வாழ்க்கை குறித்த தனது சலிப்பையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை உத்தியோகபூர்வமாக அத்தாட்சிப்படுத்தக்கூடிய அடையாள அட்டை உட்பட வங்கிக்கணக்கு இலக்கம், தொலைபேசி இலக்கம் என எதனையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதெல்லாம் இருப்பதும், இல்லாமல் விடுதலும் அவனைப் பொறுத்த வரையில் ஒன்றுதான் போலும். அன்று எங்கள் கடைக்கு வரஆரம்பித்தவன் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் வேலைக்கு வரமுன்பே அங்கு எழுந்தருளியிருந்தான்.

இடைக்கிடை இவ்வாறு என்னோடு உரையாடிக் கொண்டான். “ஏன் நீங்கள் இந்த வேலை பாக்கிறியள், வேறை ஏதாவது நல்ல வேலை எடுக்கலாந்தானே?” “சும்மா தேவையில்லாமல் இதுக்குள்ளை நிண்டு கொண்டு வாழ்க்கையை அநியாயமாக்கிறியள்.” இதை விட்டுவிட்டு வேறை நல்ல வேலை எடுக்கலாமோ, எடுக்கேலாதோ என்பது குறித்த சரியான விடை எனக்குத் தெளிவில்லாததாக இருந்தபோதிலும் எனதுநிலை குறித்துச் சற்று அவனுக்கு விளக்குவது எனது கடனாயிற்று.

“தம்பி பத்து வருசத்துக்கு மேலை இந்த நாட்டிலை வாழுறன். இன்னும் நான் அகதியாய் இந்த நாட்டிலை ஏற்றுக்கொள்ளப்படாததாலை வதிவிட அனுமதியோ, எதுவுமோ கிடைக்கேல்லை. அதைவிட “இமிக்கிறேசன்” சம்மந்தப்பட்ட வழக்குகள், அதுக்கும் மேலாலை இந்த நாட்டு அரசாங்கம் என்னைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு அனுப்ப வெளிக்கிட்ட வேளையிலை எல்லாம் அதனைத் தடுத்து நிறுத்திறதுக்காய் நீதிமன்றத்தின் தடைஉத்தரவைப் பெற என்ரைமனிசி பின்ளையளையும் இழுத்துக் கொண்டு உந்த உலகமெல்லாம் ஓடித்திரிஞ்சது. ‘இமிக்கிறேசன் பேப்பர்’ இல்லாத மகளை யூனிவர்சிற்றியிலை படிப்பிக்கப் பட்டபாடு ………. இப்படியான கனவிசயங்கள் காரணமாய் நானும் என்ரைகுடும்பமும் என்ன பாடுபட்டிருப்பம் எண்டு நினைக்கிறியள். நல்லாய் படிச்சுப்போட்டு வதிவிட அனுமதியோடை வந்த சனங்களே இங்கை தங்கடை தொழில்சார் பயிற்சிக்கேற்ற வேலையெடுக்N;கலாமல் ‘கோப்பை’ கழுவிக்கொண்டும், ‘ராக்சி’ ஓடிக்கொண்டும், ‘பேப்பர்’ போட்டுக்கொண்டும் திரியிறது உங்களுக்குத் தெரியுந்தானே. அதுக்காண்டி உந்தவேலையளைச் செய்யிறதை தரக்குறைவாய் பாக்கிற ஆளும் நானில்லை” என்று என்ரை முழு விசயங்களையும் அவனுக்கு அக்குவேறை, ஆணிவேறையாய் ஒரேயடியாய் சொல்லமுடியாட்டிலும் கொஞ்சமாய் சொன்னன். இன்னும் கொஞ்சம்கூடச் சொல்லியிருக்கலாம்தான்,

ஆனால் அவனுடைய பாவனைகள் எண்டு சொல்லும்போது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அவனது உடல்மொழியைக் கண்டுகொள்வதிலை அல்லாவிடில் அதனைப் பின்தொடர்ந்து கலைச்சுக் கொண்டு போறதென்பதிலை என்னைப் பொறுத்த வரையிலை அது எனக்குச் சாத்தியாமாய் இருக்கேல்லை எண்டு சொல்லிறது இன்னும் கூடப் பொருத்தமானது. அத்தோடு அவனது சிலநடவடிக்கைகள் எனக்கு விசித்திரமாகவும் பட்டது. அவன் தான்அணிந்திருந்த அழுக்கான உடைகளை மாற்றுவது குறித்தோ அல்லது குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதென்பதிலோ அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால் நேரத்துக்குநேரம் நன்றாய்ச் சாப்பிடவேண்டும். அவனுக்குச் “ஷெல்ரரிலையும்” சாப்பாடு கிடைத்தது. அந்தச் “ஷெல்ரரும்” கூட எங்கடை கடைக்குப் பக்கத்திலைதான் இருந்தது. அதைவிடவும் அந்தப் பகுதியிலை இருந்த சில தேவாலயங்களிலை இலவசஉணவு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனால் சில சமயங்களிலை அதையும் அவன் பயன்படுத்திக் கொண்டான். ஆனாலும் எங்கடை கடையிலை சமைக்கப்படும் “சிக்கின் விங்ஸ்” அவனுக்கு ருசியாய் இருந்திருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் அதைச் சாப்பிடுவதிலை அவன் குறியாய் இருந்தான். அவன் கடையிலை ஒருவரோடையும் பேசாமல் தனியே அமர்ந்திருந்த வேளையிலெல்லாம் அவனுடைய கண்கள் “சிக்கின் விங்ஸையே” குறி வைத்தபடி இருந்தன.

கிழமை நாட்களில் நானும் முதலாளியும் பகலிலை வேலை செய்தாலும் மாலை நேரங்களிலை இன்னொரு “வேலையாள்” எங்களோடு இணைந்து கொள்வார். முதலாளி நிலைமையைப் பார்த்து ஏழு அல்லது எட்டு மணிக்கு கிளம்பி விடுவான் வீட்டுக்கு. அந்த வேலையாள் சகலகலா வல்லவர். இருபது வருடமாக இந்தத் தொழிலிலை இருப்பதாலை அவரால் சமைக்கவும் முடியும். மேலதிகமாகத் தேவைப்படும் போதெல்லாம் சமைத்துக் கொண்டே “டிலிவரிச்” சாரதியாகவும் பணி புரிவார். அவர் முதலாளி இல்லாத வேளைகளில் அவனுக்கு மிகவும் பிரியமான “சிக்கின் விங்ஸை” நன்றாகச் சுடவைத்து ஒரு துண்டு பீஸாவுக்கு மேலே ஏற்கனவே சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயத்தையும், மிளகாயையும் தூவி ஒரு காகிதத்தட்டிலே வைத்துக் கொடுப்பார்.

எனவே ஒவ்வொரு நாளும் இறுதிவரை அந்தச் சாப்பாட்டை அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதாகவே எனக்குத் தோன்றும். அதை நினைத்துப் பார்க்கும் போது பகிடியாகவும் இருக்கும் சில வேளைகளில். ஆனால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரே உடுப்பையே தோய்க்காமல் அவன் உடுத்திக்கொண்டு திரிவது எனக்குச் சிலவேளைகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் கடை திறந்து மூடும் வரை பெரும்பாலான நேரம் எங்களோடுதான் அவன் தனது பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

உடுப்பு என்பது வெளிவேசம் தான். பல வேளைகளில் இந்த வேசத்தையே சமூகம் முன்னுரிமை கொடுத்து எடைபோட முயலுகிறது. அப்படி வெளிவேசம் என்றால் ஒவ்வொருவரினதும் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும் உந்துதலினால்தானே இந்த வேசம் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுவதாகக் கொள்ளலாமா? பற்றுக்கள் குறைந்த ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு உடை குறித்த நாட்டம் ஒப்பீட்டுஅளவில் மற்றையோரைக்காட்டிலும் தாழ்ந்ததாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற வகையில் எழுந்துநின்ற கூற்றுக்கள் என் மூளைநரம்புகளை ஊடறுத்தபடி இருந்தன.

எப்படியாயினும் அணிந்திருக்கும் உடைகளைத் தோய்த்து, உலர்த்தி போட்டுக் கொள்ளலாம்தானே, அதிலென்ன பிரச்சினையிருக்கிறது, உடல்நலத்திற்கும் அதனால் நன்மை பயக்கும், மற்றவர்களுக்கும் அது அசௌகரியத்தைத் தராது என்றே நான் கருதினேன். அதை அவ்வப்போது நினைக்கும் போதெல்லாம் அதை அவனிடம் நேரில் போட்டு உடைத்துவிட வேண்டுமென்ற உத்வேகம் கிளர்ந்தும், அடங்கியும் என்னுள் உழன்றபடி அலைந்து திரிந்தது. அன்று அதற்கான வாய்ப்புக் கிடைத்தது போலும். நான் உணவுப் பொதிகளைத் தயார்படுத்திக் கொண்டு “டிலிவறி” செய்வதற்காக எனது காரை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தவேளை பார்த்து அவன் நானும் வரட்டுமா? என்று என்னைக் கேட்டான். ஏதோ தெரியவில்லை நானும் திடீர் ஆவேசப்பட்டவனாக “நான் இனிமேல் உம்மைக் காரில் ஏத்திறதாய் இருந்தால் நீர் குளிச்சு, தோய்ச்ச உடுப்புகளை மாத்திக்கொண்டு வரவேணும், அதுவரைக்கும் என்ர ‘காரிலை’ உம்மை ஏத்தப்போறதில்லை” என்று உரத்த குரலில் கூறிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் விசுக்கென்று கிளம்பிவிட்டேன்.

நான் காரை எடுத்துக்கொண்டு உணவுவிநியோகத்தை முடித்து மீண்டும் கடைக்குத் திரும்பும் வரைக்கும் எனது மனதுக்குள் நான் நடத்தி முடித்திருந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது என்னை நோக்கி. எனது அகத்தனிமையில் “நான் அப்படி அவனை நோக்கிக் கூறியது சரியா? பிழையா?” என்பது குறித்து எழுந்த விவாதமே அது. அது குறித்த முடிவான தீர்மானத்திற்கு என்னால் இலகுவில் வந்துவிட முடியவில்லை. ஆயினும் அந்த நிகழ்வு தந்த பாதிப்பிலிருந்து என்னால் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இந்தக் கனடா நாட்டுக்குக்குள் நான் புகுந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எனது அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்;லை. மேலும் கூறுவதாயிருந்தால் எனது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக நான் தலைமறைவாகிப் போய்விடலாம் என்ற காரணத்தை முன்வைத்து கனடியஅரசால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். பின் அந்த நாடுகடத்தல் உத்தரவுக்கெதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சமஷ்டிநீதிமன்ற நீதிபதியின் உத்தரவினால் தற்காலிகமாக அந்த வெளியேற்றத்திலிருந்து தப்பிப்பிழைத்து எனது குடும்பத்தோடு இணைந்து வாழ்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டுமொருமுறை நான் கைது செய்யப்படலாம் கனடாவை விட்டுத்துரத்துவதற்காக. அதற்கு இந்த நாட்டுச்சட்டத்திலே இன்னும் இடமிருக்கிறது. எனக்கு இந்த நாட்டிலே வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இங்கு வாழும் சகலருக்கும் உரித்தான இலவச மருத்துவச்சிகிச்சை பெறுவற்கான சான்றிதழ் பத்திரம் கூட என்னிடம் இல்லை. இவை குறித்த நான் தொடர்பான சில தகவல்களையாவது அவன் அறிந்து வைத்திருக்க வேண்டுமென்றே நான் எண்ணியிருந்தேன்.

நான் “டிலிவறியை” முடித்துக்கொண்டு வந்து கடையின் பின்புறம் அமைந்திருந்த கார்த்தரிப்பிடத்தில் எனது “காரை” நிறுத்திவிட்டு சிறிது நேரம் “காரை” விட்டு வெளியே இறங்காமல் உள்ளே அமர்ந்து கொண்டிருந்தேன். மீண்டும், மீண்டும் எனது நினைவுப்பொறிகளுக்குள் சுழன்று கொண்டிருந்தது அவன் குறித்த சிந்தனைகளே. வெண்பஞ்சு மேகங்கள் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அதற்குக் கம்பளம் விரித்தாற்போன்று பின்னணியில் இளநீலம் பரந்த வான்பரப்பில் அப்பிக்கிடந்தது. அதற்கும் கீழே நெரிசல்களாய் காணப்பட்ட வீடுகளின் கூம்பு வடிவில் அமைந்த கூரைகள் முளைத்திருந்தன. எனது பார்வையைத் தரையை நோக்கித் தாழ்த்தினேன். அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவ்வாறே எனக்குப்பட்டது. நான் எனது பக்க கார்க்கண்ணாடியைத் பதித்துக்கொண்டேன். என்னிடம் வந்த அவன் மிக நிதானமாக என்னை நோக்கிக் கூறிய வார்த்தைகள் “உங்களுக்கு எப்ப ‘வேர்க் பெர்மிட்’ (வேலை அனுமதிப்பத்திரம்) கிடைக்குதெண்டு சொல்லுங்கோ, அண்டைக்கு நான் குளிச்சுப்போட்டு என்ரை உடுப்புக்களைத் தோய்ச்சுப் போட்டுக்கோண்டு வாறன்”.


nmuralitharan@hotmail.com

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)

அவன்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

மாதங்கி


பதி, மனைவி கவிதாவைப் பார்த்தான். “பார்த்து, பார்த்து, மிக பத்திரமாகக் கொடு, நானே உன் பக்கத்தில் வருகிறேன்; பாவம் பச்சை உடம்புக்காரி நீ,” என்றவாறு அவளருகில் தன் வயிற்றை உந்தியவாறே தத்தித்தத்திப் போனான்.

கவி வெகு ஜாக்கிரதையாக அந்தப் பொருளை அலுங்காமல் நலுங்காமல் அவன் அடிவயிற்றுக்குக் கீழும் அவன் காலுக்கு மேலுமாய் பூப்போல இடம் மாற்றினாள்.

“அப்பாடா” கவி தன் கடமையைச் சரியாகச் செய்த திருப்தியுடன் பதியைப் பார்த்தாள். பதி, கவி கொடுத்தப் பொருளை நன்றாக கவனித்தான். அது ஒரு திடகாத்திரமான பேரரசு பெங்குவினின் முட்டை. கீழ்ப்பகுதி உருண்டையாகவும் மேல் பகுதி கூம்பு போலவும் இருந்தது.

“கவி பார் நம் குழந்தையின் மாளிகையை; 15 செ.மீ. நீளமும் 12 சி.மீ குறுக்களவும் இருக்கிறது, எடை நிச்சயம் ஒரு பவுண்ட் இருக்கும்; உறுதியாக இருக்கு பார்”.

பதியின் அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் ஒரு மடிப்பு போல் இருந்தது. அதற்குக் கீழே அவன் கால் பாதங்கள். இரண்டுக்கும் இடையில் பத்திரப்படுத்தினான். கவி வைத்த கண் வாங்காமல் அவன் சரியாக வைத்துக்கொள்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்; அவனுக்கு இது முதல் அனுபவம் ஆயிற்றே.

பதி ஆரோக்கியமானவன். 1.1 மீட்டர் உயரம் நாற்பது கிலோ எடை; தலைப்பகுதியும் சிறகுகளும் நல்ல கறுப்பு. மூக்கு நல்ல ஊதா கலந்த இளஞ்சிவப்பு. கழுத்துக்கு இரு புறமும் நல்ல ஆரஞ்சு நிறத்தில் வட்டமான பட்டைகள் தகதகக்கும். பனி நிறத்தில் நெஞ்சும் வயிறும். பளபளக்கும் வளப்பமான மேனி. பேரரசு பரம்பரையில் வந்தவர்களுக்கே உரிய கம்பீரத்துடன் அவளும் இருந்தாள்.

“கவி, கவிம்மா, என்ன எதோ பலத்த யோசனையில் இருக்கியா?”

“இல்லை உங்களை முதன்முதலில் மார்ச் மாதம் சந்திச்சதை நெனச்சுக்கிட்டேன். . இதோ மேமாதம் பேரரசர் பதி இந்த அண்டார்டிக் கடற்கரையில் காலில் ஒரு முட்டையுடன் நிற்கிறாரே என்று பார்த்தேன்”.

“கரை என்றால் இங்கு என்ன- அதுவும் ஐஸ்கட்டிதானே?” “பேரரசன் ஆனாலும் நான் ஒரு பொறுப்பான தந்தைதான் கண்ணு; பச்சை உடம்புக்காரி நீ, பட்டினி இருக்கக்கூடாது; முதலில் நீ சாப்பிடணும்; நல்லா ஓய்வெடுக்கணும். நான் நம்ம குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைப் படாமல் போய்வா”

பிரியத்துடன் பிரியாவிடை கொடுக்க, அவனையும் தன் குழந்தையின் மாளிகையையும் பார்த்துக்கொண்டே, ஐஸ் தரையையில் நடந்து, அவள் சில்லிடும் கடலை நோக்கிப் போனாள். “வா மகளே வா, உன் பசியை நான் போக்குகிறேன்; பசியாற வாம்மா” என்று கடல் அன்னை அவளை அன்புடன் அழைப்பது போல் தோன்றியது. அவள் சிறகுகள் உறுதியான துடுப்பு போல் இருந்தன. அவளுக்குப் மிகவும் பிடித்த உணவுகள் நிறைந்த கடல் அது. சில்லிட்ட தண்ணீரைப் பொருட்படுத்தாது கடலில் பாய்ந்தாள்.

பதிக்கு தந்தையானது பரவசமூட்டுவதாய் இருந்தது. அடிவயிற்றின் கதகதப்பான மடிப்பில் முட்டை இருந்தது. இனி அவன் மிகவும் பதவிசாக நடந்து கொள்ளவேண்டும். கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டால், அவ்வளவுதான், அவர்களது திருமணப் பரிசு உருண்டோடி விழுந்துவிடும்; பின்னர் அதை அடையாளம் கண்டு எடுத்துக்கொள்ளக் கூட அவனுக்குத் தெரியாது.

பரிசு தானாக திறக்க கிட்டத்தட்ட 65 நாட்களாகும். அதுவரை என்ன செய்வது ஒரே இடத்தில் நின்று கொள்ள வேண்டியதுதான். சாப்பாடாவது ஒன்றாவது; இந்த ஐந்து வருடங்களாக ஆசை தீர உண்ணவில்லையா. கவி வரும் வரை இந்தப் பொக்கிஷத்தைப் பத்திரமாகக் காக்கவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டான். சரி எப்படி பொழுதைப் போக்குவது. மிகத் தேவையான சூழல் வராதவரை, இருக்கும் சக்தியை கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாது. அப்படியே நின்று கொண்டு ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டியதுதான்.

“குளிர்காலத்திலா பிரசவத்தை வைத்துக்கொள்ளவேண்டும், வேனிற்காலம் இந்த அண்டார்டிங் பிரதேசத்தில் சுகமாக இருக்குமே” என்று கவியை அவன் முன்பொருமுறை கேட்டான்.

“சரிதான்; குளிர்காலத்தில் பிறந்தால்தான், சரியாக ஐந்து மாதம் கழித்து, நம் குழந்தை சுதந்திரமாக நடைபயிலும் போது, வேனிற்காலம் அவளுக்கு மிக உகந்ததாக இருக்கும் -என்று பதில் கூறியிருந்தாள். கவி கெட்டிக்காரிதான். பெண்தான் என்று தீர்மானமாகச் சொல்கிறாள். பாவம் அவள் இந்த இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு சுமந்திருக்கிறாள். நல்ல கொழுமையான ஸ்விக்டும் மீனும் ஆக்லோபஸ¤ம் அவளுக்குக் கிடைக்கட்டும். அவளது தற்காலிகப் பசிக்கு நீந்தும்போதே கிடைக்கும் மீன்கள் கிடைக்கட்டும். அப்போதுதான் அவளால் தெம்புடன் ஆழ்கடலுக்குள் போக இயலும். கண்ணை மூடிக்கொண்டான் அவன். குறைந்தது 50 மைல் தூரமாவது கவி பிரயாணித்திருப்பாள். .

கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு அவன் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டேயிருந்தான். மோனமே சக்தி தரும். முட்டை கீழே விழுந்தால் அதை அவன் உணர்ந்துகொள்ளக்கூடிய ஓரிரு நிமிட இடைவெளிக்குள் உறைந்து விடும்.

இடையிடையே தூக்கத்தில் ஆழ்ந்து போனான். சிறந்த ஆழ்கடல் நீந்தும் தம்பதிகள் பரிசாக பனிக்கோப்பை பதிக்கும் கவிக்கும் கொடுக்கப்பட்டது. அவர்களை வாழ்த்திய நடுவரை கொல்லும் திமிங்கிலம் விழுங்கியது; கவியும் பதியும் ஒரு ஹெலிகாப்டர் தனியாக இருந்ததைப் பார்த்தார்கள்; உள்ளே முழுக்க பலவித மீன்கள். வெளியே வந்ததும் பதியை கடல் சிங்கம் துரத்தியது; அவன் அடிவயிறு மடிப்பிலிருந்த பாப்பா நழுவி விழுந்து முட்டையாகிவிட்டது ; ஐஸ்தரையில் ஒரு பேரரசி முட்டையை எடுத்துக்கொண்டாள். பதி திடுக்கிட்டு விழித்தான். எல்லாம் கனவு. நல்ல வேளை; பாப்பா மாளிகையுள் பத்திரமாக இருந்தது.

திடீரென்று பேய்க்காற்று வீசியது; கடும் பனிப்புயல் அடிக்கத் துவங்கியது. ஒற்றுமையே வலிமை. அங்கங்கு ஐஸ்கட்டிகளின் மேல் அவனைப் போல் இருந்த பல ஆண்கள் அனிச்சையாக அருகருகில் ஒண்டிக்கொண்டனர். பெரிய வட்டத்தில் கூட்டமாக நின்றுகொண்டனர். வலுவான தன் கால் நகங்களால் ஐஸ்கட்டித் தரையை பதி கெட்டியாகப் பற்றிக்கொண்டான். நெருக்கமாய் நான்கடுக்கில் கட்டப்பட்டிருந்த அவன் இறக்கைகள் எப்பேற்பட்ட பனிப்புயலையும் தாங்கும் சக்தியை அவன் உடலுக்குத் தந்தன.

கொஞ்சம் கொஞ்சமாய் நிற்குமிடத்தை மாற்றிக்கொள்ளும் குழுமனப்பான்மை எல்லோருக்கும் இருந்தது. ஆம்; வட்டத்தின் வெளிபகுதியில் நெடுநேரம் ஒரு சிலரே நிற்பதில்லை; மத்தியில் உள்ள கதகதப்பில் நிற்க அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புக் கிட்டியது. மிக மிக கவனமாக தத்தம் முட்டையுடன் இடம்மாறிக்கொண்டனர். மைனஸ் 60 டிகிரி வெப்பமுடைய சூழலில் முட்டையை 31 டிகிரி C வெப்பத்தில் அடை காப்பது வாழ்க்கையில் ஒரு சவால் என்று நினைத்துக்கொண்டான்.அவர்கள் அனைவருக்கும் பட்டினியாய் வாரக்கணக்கில் கிடப்பது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. முட்டையை கதகதப்பில் பத்திரமாய் வைத்து அவரவர் மனைவியர் வரும்போது நல்லமுறையில் ஒப்படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வே மிகுந்திருந்தது. தொடர் பட்டினியுடன் ஐஸ்கட்டி மேல் நின்றுகொண்டே இருப்பதால் அவன் எடை பாதியாகக் குறைந்திருந்தது. எப்போதாவது வாயை ஈரப்படுத்திக்கொள்ள மிகக் குறைந்த அளவு பனியை அவன் ஓரிரு முறை உட்கொண்டிருந்தான் அவ்வளவே. கவி உரிய நேரத்தில் வந்துவிடுவாள் என்று பதி நம்பினான். அவள் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவே என்றாலும் சோமுவின் மனைவி ரதி போல் திரும்பி வரவில்லையென்றால் அவனும் சோமுபோல் பட்டினியில் இறக்க வேண்டியதுதான்- இது அவன் நண்பன் விந்தன் அவனுக்கு விடுத்த எச்சரிக்கை மற்றும் அறிவுரை.

முட்டையை தன் ஆசை மகனோ மகளோ தங்கள் இளம் அலகால் குத்தி உடைத்து வெளிவரும் நேரத்தில் சரியாக கவி வந்து விட்டால் நன்றாக இருக்கும். அவள் வந்துவிட்டால், பதி என்று பாசத்துடன் குரல் கொடுப்பாள். சுற்றியுள்ள நூற்றுக்கணக்காக ஆடவரில் என்னை அவள் எவ்வளவு எளிதாய் என் குரல் மூலம் அடையாளம் காண்கிறாள். பாவம் அவளும் தேவையான சக்தியை திரட்டிக்கொள்ள வேண்டாமா.

பனிப்புயல் சற்று குறைந்தாற்போலிருந்தது. அவன் தன் தவத்தைக் கலைக்க விரும்பவில்லை. ஏதோ பிப் என்ற மிக மெலிதான ஓசை கேட்டாற்போலிருந்தது. குனிந்து பார்த்தான். வியப்படைந்தான். “அட குட்டி மாளிகையை உடைக்கத் துவங்கிவிட்டதா; உன்னால் முடியும் கண்ணு; உனக்கு வலிமை இருக்கு; கடவுளே கவி இன்னும் வரக்காணோமே; சரி குட்டி முழுமையாக தன் வீட்டை உடைத்துவர இரண்டு மூன்று நாட்களாகலாம். அதற்குள் அவள் வந்துவிடுவாள். பாப்பா பசியோடு இருக்குமே, என்ன செய்வது ”

கவிவருவதற்குமுன் அவள் தந்த பரிசு முந்திக்கொண்டுவிட்டது. நல்ல வித்தியாசமான பட்டைகளுடனும் வெளிர் சாம்பல் நிற உடலில், பாப்பா ப்பியு ப்பியு என்று அவன் அடிவயிற்றுமடிப்பிலிருந்து குரல் கொடுத்தது.

“அட என் பட்டுகுட்டி, இப்போ நீ அப்பா மடியடியிலேயே இருக்கியாம். சமத்துக்கட்டியோட அம்மா சீக்கிரம் வருவாள். பாப்பாக்கு தொப்பை பசிக்கிறதா, கொஞ்சம் இரு கண்ணு; ”
அவன் தன் தொண்டைக் குழாயிருந்து வெள்ளையான ஒரு திரவத்தை வரவழைத்தான்.
அப்படியே கீழே குஞ்சின் வாயை நோக்கி குனிந்து தொடுகையில் குஞ்சு அனிச்சையாக அதை உள்வாங்கிக்கொண்டது. குஞ்சு வாயில் ஊட்டினான். கவி இன்னும் வரவில்லை. அவன் எடை உபவாசத்தால் பாதியாகிவிட்டிருந்தது என்றாலும் மிக மிக கவனமாக தான் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தான். பாப்பா ஆர்வம் காரணமாய் பனித்தரையில் விழுந்துவிடக்கூடாது. அதன் இறக்கைகள் தண்ணீர்புகாத் தன்மை இன்னும் அடையவில்லை.
“பொறுமையாக இருக்கண்ணு; இது ஒண்ணுதான் சாப்பாடுன்னு நினைக்காதே, அம்மா வந்தால் செழிப்பான எண்ணெய், பாதி செரிக்கப்பட்ட மீன் எல்லாம் ஊட்டுவாள். அப்பா அங்கிங்கு போகமுடியாமல் இருக்கிறேன் இல்லையா; இல்லாவிட்டால் உனக்கு மீன் குட்டிகளை பதமாக்கி ஊட்டமாட்டேனா”.

பாப்பா “ப்பியு, ப்ப்யு ” என்றது.

“அம்மாவுக்கு ஒன்றும் ஆயிருக்காது; முன்பொருமுறை வானில் பறந்த ஹெலிகாப்டர் சத்தம் அவளுக்கு பயமாக இருந்ததாம். பிறகு அதுவும் பழகிவிட்டதாம். அம்மா ரொம்ப தைரியசாலி கண்ணு; 700 அடி ஆழத்தில் தொடர்ந்து பல நிமிடங்கள் அனாயாசமாய் போய் வருவாள். நீயும் பெரிசானா நிறைய சாகசம் பண்ணலாம். இப்போ சமத்தா அப்பாவின் அடிவயிற்று மடிப்புக்கடியில் இருப்பியாம்”.
“என்ன பதி; உன் மனைவி இன்னும் வரவில்லையா? சில நண்பர்கள் விசாரித்தார்கள். பதி தன் உடலில் தங்கியிருந்த பெரும்பான்மையான சேமிக்கப்பட்ட கொழுப்பை இழந்திருந்தாலும், மன உறுதியோடு இருந்தான்.

‘க்ரக் க்ரக்’ ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவன் பார்வையைவிட செவிப்புலன் இன்னும் கூர்மையானது. இல்லை; இது கவி இல்லை; வேறு ஒருத்தி அட விந்தனின் மனைவி ரதி; இதோ விந்தனைக் கூப்பிடுகிறாள். அவனும் ‘ராணி இங்கே வா; இதோ இருக்கிறேன் பாரு’ என்று கூவுகிறான். பத்துவினாடிகளில் விந்தனிடமிருந்து முட்டையை ஏந்திக்கொண்டு அடைகாத்து ஓரிரு நாட்களில் பொரித்து விடுவாள். இன்னும் பலருக்கு அவரவர் மனைவியர் வந்துவிட்டனர்.

“கண்மணி இன்னும் கொஞ்சம் வெள்ளைத் தண்ணீர் குடிக்கிறாயா” கீழே அடிவயிற்றில் குனிந்து பார்த்தான்.

“ப்யுக், ப்யுக் ” பாப்பா கொஞ்சியது.

“இன்னும் கொஞ்சம் பொறுமை கண்ணு; அம்மா நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திகிட்டு வந்தாதானே பாப்பாவை கவனிக்க முடியும்? அதுவரை சமத்தா இருப்பியாம் “.
மீண்டும் ஒரு முறை பாப்பா அடிவயிற்றின் மடிப்புக்கும் கால்களுக்கும் இடையில் சரியானபடி இறுத்திக்கொண்டான். சமநிலையை சமாளிக்க சற்று அசைய வேண்டியுள்ளது. மிக கவனமாக இருக்க வேண்டுமே.

“பதி, பதி எங்கே இருக்கிறீர்கள்;” அருகில் ஒரே சலசலப்பு; இருந்தாலும் கவியின் குரல் அவனுக்குக் கேட்டது.

“கவி! கவி! இங்கே வா அப்படியே நேராக வந்துகொண்டே இரு; நான் இங்கே இருக்கிறேன். கவி, கவிக்கண்ணம்மா” குரல் கொடுத்தான். குரலைவைத்துத்தான் கவி அந்தப் பெரிய கூட்டத்தில் அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலும். கவி அவனை உடனே கண்டுபிடித்துக்கொண்டு வந்துவிட்டாள்.

கவி உற்சாகமாக இருந்தாள். ஆரோக்கியமாகக் காணப்பட்டாள். “பதி நீ பாதியாக இளைத்துவிட்டாய். நம் குஞ்சு பாப்பாவைக் கொடு; நான் முதலில் பாப்பாவை வாங்கிக்கொண்டு எனக்கு நேர்ந்த ஒரு புதிய அனுபவத்தைக் கூறுகிறேன்”.

கவி சற்று எதிர்பாராத விதமாய் பாப்பாவைத் தர பதி சம்மதிக்கவில்லை!

“பதி உனக்கென்ன பைத்தியமா! நீ சாப்பிட்டு எத்தனை மாதங்களாகின்றன தெரியுமா? “; பாப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ போய் முதலில் சாப்பிட்டு வா”.

“கவி, கவீஈஈஈஈ! ப்ளீஸ்! இன்னும் கொஞ்ச நாள் நானே வைத்துக்கொள்கிறேனே”.

“பதி, தயவு பண்ணி தாமதிக்காதே அப்புறம் உனக்கு நீந்தி இரை தேடக்கூட சக்தியிருக்காது. சொன்னால் கேளு; போய் ஒரு இரண்டு வாரம் நன்றாய் ஆழ்கடலுக்குள் போய் சாப்பிட்டுவிட்டு வா. பிறகு பாப்பாவை உன்னிடம் விட்டுவிட்டு நான் போய் வருகிறேன். வீண்பிடிவாதம் பிடிக்காதே; நாம் இருவரும் மாறி மாறி போய் சாப்பிட்டுவந்தால்தான் பாப்பாவை நன்கு கவனிக்க முடியும்?”.

பதிக்கு இஷ்டமே இல்லை; பாப்பாவின் ப்யுக் ப்யுக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது; கவி சொல்வது போல் இன்னும் தாமதித்தால் பின் நிரந்தரமாக பாப்பாவைப் பார்க்க முடியாமல் போய்விடும். ஒருவாறு அரை மனதுடன் பதி பாப்பாவை லாவகமாய் அதன் அன்னையிடம் விட அதை பக்குவமாய் கவி ஏற்றுக்கொண்டு கொஞ்சத் துவங்கினாள். தன் வயிற்றிலிருந்து பாதி செரித்த உணவை வரவழைத்து ஊட்டினாள்.

‘ப்யுக், ப்யுக்’ பாப்பா குதூகலித்தது.

பதி தயங்கி நின்றான்.

“இன்னும் என்ன பதி; இங்கேயே பார்த்துக்கொண்டு, சாப்பிடப்போன்னு எத்தனை முறை சொல்லுவது?”

“கவி ஏதோ சுவாரசியமான செய்தின்னு சொன்னியே; அது என்னம்மா – அதையாவது கேட்டுவிட்டு நான் போகலாமா?”

“ஓ அதுவா? சாரி பதி, பாப்பாவை பார்த்த சந்தோஷமும் நீ சாப்பிடப் போகவேண்டும் என்ற கரிசனத்திலும் மறந்தே போனேன். ஹெலிகாப்டருக்கு நான் பழகிவிட்டேன்; பயமில்லை என்றேனல்லவா. ஒரு நாள் இரண்டு மனிதர்கள் எனக்கு மீனெல்லாம் கொடுத்து ஆசை காட்டி அழைத்துப் போனார்கள்”.

“ஹெலிகாப்டரின் உள்ளேயா?”

“சீச்சீ, இங்கிருந்து அறுபது மைல் தொலைவிருக்கலாம்; ஐஸ்தரையில்தான்; ஹெலிகாப்டர் பக்கத்தில் இருந்தது.பிறகு இருவரும் பேசிக்கொண்டு என் உயரம் எடை பற்றிய குறிப்புக்கள் எழுதிக் கொண்டு என்னை திருப்பி விட்டுவிட்டார்கள். நீ பத்திரமாய் போய்ட்டுவா பதி,” என்றாள் கவி.

பாப்பா ‘ப்யுக் ப்யுக்’ என்றது.

பேரரசுப் பெங்குவின்களின் வாழ்க்கை முறையை அண்ட்டார்ட்டிகாவிலேயே தங்கி கூர்ந்து கவனித்துவந்த ஆராய்ச்சியாளர் வடிவழகன் தான் எழுதிய சிறுகதையைப் படித்துப்பார்த்தார். பல்கலைக்கழகத்திற்கு மின்மடலில் ஆய்வேட்டை அனுப்பியாகிவிட்டது, ஊருக்குப் போனதும் முதலில் மகன் நித்தியன் வீட்டிற்குப் போகவேண்டும்; இரவு கண்விழித்துக் கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வது யார் என்பது பெரிய பிரச்சனையாகி மனைவியை அவன் விவாகரத்து செய்வதாக வந்த தகவலைப் பற்றி பேசுவதற்காகவாவது.


mathangihere@gmail.com

Series Navigation

மாதங்கி

மாதங்கி

அவன்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பாஷா


உங்கள் வட்டத்தில்
அவன் இல்லை
உங்கள் காதுகளில் ஒலிக்கும் குரலிலும்
அவன் இல்லை!

சித்தாந்தங்களால் அவனை
செதுக்கிகொண்டிருந்தும்
சிறுபிள்ளையாய்
தேவதை கால்பிடித்து
தேம்பியழுவானவன்!

சந்தர்ப்பவாத நட்பை சகித்துகொண்டு
சாயந்தர தனிமையில்
சில கவிதைகள் சொல்லிதிரிந்தானன்றி
சீ..என்று
தள்ளிபோனவனில்லை!

காற்றில் குப்பைகளாய்
வரும் வார்த்தைகள் வடிகட்டி
உங்கள் உள்ளம் தேடினானன்றி
ஜீவனற்ற செத்துவிழும்
வார்த்தைகளென சொல்லிப்போனவனில்லை!

ஆளில்லா தீவில்
இருள் வெளியில்
கழிவு பொருள்களாய்
அலைகடல் ஒதுங்கிய
உங்கள் அன்பை
சேகரித்துகொண்டிருக்கிறான்
அவன்….
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

அவன்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

ஆனந்த் ராகவ்,பாங்காக்


அவன் பெயர் யாருக்கும் தெரியாது. அழுக்கு ஆடைகளும், சிக்குப் பிடித்த தலையும், ஷவரம் கண்டிராத முகமுமாய், வியர்வை நாற்றமுமாய் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமும் உடையவனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அந்தப் பிரதேசத்தில் யாருக்கும் இருந்ததில்லை. சாலையிலும் அங்காடிகளை ஒட்டிய நடைபாதையிலும் சஞ்சரிக்கும் மனிதர்களின் காலடியில் பட்டுச் சிதறும் குப்பையில் ஒருவனாக இருந்த அவனைப் பற்றிய விவரங்கள் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு அனாவசியாமாய் இருந்தது. யாருக்கும் அவன் பெயர் தெரியாத காரணம் அவன் யாரிடமும் பேசாமல் இருந்ததால் கூட இருக்கலாம். அவன் பேசி யாரும் பார்த்ததில்லை. ஊமையா இல்லை பேச விருப்பமில்லா பித்தனா என்று சொல்ல இயலாமல் ஒரு பிடிவாத மெளனம். எந்தக் கண்களையும் சந்திக்க விரும்பாத தூரப் பார்வை.

ஆனால் அந்தப் பிரதேசத்தில் அவன் வடிக்கும் ஓவியங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த ஜன சந்தடியுள்ள வீதிகளில் அவ்வப்போது துளிர்க்கும் வண்ண மயமான ஓவியங்கள் அவன் கைவண்ணம் தான். நடைபாதையில், தார் சாலையில், சில சமயம் கடை வாசலில் என்று விரியும் அவனின் நேர்த்தியான வண்ண ஓவியங்கள் அந்தப் பிரதேசத்தின் குப்பைக் கடலுக்கு இடையே பூக்கும் அழகுத் தீவு. சக்கரச் சுழற்சியில் விரையும் ஜனங்களை ஒரு நிமிடம் நின்று பார்த்து ஆச்சரியப்பட வைக்கும் வர்ணத் திட்டு. அந்த ஓவியங்களின் அழகைக் கண்டு வியந்து அதன் படைப்பாளியை பாராட்டத் தேடும் கண்கள் அருகிலேயே படுத்துக்கிடக்கும் அந்த அலங்கோலத்தைக் கண்டு அருவறுக்கும். பாராட்டு பச்சாதாபமாகி காசுகளாக ஓவியத்தின் மேல் எறிந்து விட்டு நகரும்.

மக்கள் இடும் காசு அவன் பசியைப் போக்க உதவினாலும் அவன் யாசிப்பதின் பொருட்டு ஓவியங்கள் எழுதுவதில்லை. அது தன் உணர்ச்சிகளின் வெளிப்பாடு போலவோ, தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சி போன்றோ அவன் இயல்பாக நிகழுத்தும் ஒரு படைப்பு. இன்றைக்கு இன்னது என்று திட்டமிடுதல் இல்லாமல், காகிதத்தைப் பார்த்து வரைதல் இல்லாமல், அந்த ஷணத்தின் மன மின்னல்களுக்கு ஏற்றார் போல் சட்டென்று மனத்தில் பதியும் பிம்பத்தை விரல்கள் வடிக்கும்.

அவன் ஓவியங்களுக்கென்று பொதுவான கரு ஒன்று இருந்தது. பெரும்பாலும் இறைவனின் திரு உருவங்களாகவே அவன் எண்ணங்கள் தரையில் விரியும். விநாயகர், விஷமப் பார்வையுடன் பால கிருஷ்ணன், உக்கிரம் பொங்கும் துர்கை, கருணை கடலாய் ஏசு நாதர், சாந்தஸ்வரூபியாய் புத்தர், புனித மெக்கா என்று இறைவனின் வடிவங்கள் மட்டும் தான் அவன் விரல் சிருஷ்டிக்கும். இறைவனின் இன்னொரு அவதாரமாய் இயற்கையை அவன் கருதியாதாலோ என்னவோ அவ்வப்போது இயற்கை அழகுக்கும் அவன் மனது இடம் அளித்தது. அரசியல் தலைவர்களையோ சினிமா நட்சத்திரங்களாகளையோ அவன் விரல்கள் வரைந்ததில்லை. அவன் ஓவியத்தின் வனப்பில் அதிசயத்து அவனிடம் கோரிக்கைகள் வரும். அரசியல் தலைவர் என்றோ தேர்தல் நேரத்து சின்னம் என்றோ அவன் முன் ரூபாய் நோட்டால் வீசிறி கேட்பார்கள். அதற்கெல்லாம் ‘தூ ‘ என்று காறி உமிழ்ந்துதான் அவன் பதில் சொல்லியிருக்கிறான்.

ஏதாவது ஒரு சாலை ஓரத்திலோ தெரு முனையில் மரத்தின் கீழோ படுத்துக் கிடக்கும் அவனது நாள், அந்த நகரம் விழித்துக்கொண்டு முகம் மாறும் முன்பே துவங்கிவிடும். தோளில் ஒரு அழுக்கு காக்கிப் பையில் அவன் ஓவியச் சாதனங்களை அடக்கியபடி, நகரும் அவன் இலக்கில்லாப் பயணம் அதிகாலை இருட்டு நேரத்திலேயே துவங்கிவிடும். விசாலமான நடைபாதையோ சீரான சாலையோ, எங்கு இடம் இருக்கிறதோ அங்கு உட்கார்ந்து விடுவான். அவன் தேர்ந்தெடுத்த இடத்தில் விசை இட்ட மொம்மை மாதிரி இயங்குவான். அவன் உலகமே அந்த ஓவியத்தை சிருஷ்டிக்கும் முயற்சியில் முடங்கிப் போகும்.

அவன் இயங்குவதைப் பார்ப்பதே பரவசம். ஒரு கையை தரையில் ஊன்றியபடி தரையில் தவழ்ந்து தவழ்ந்து ஒரு வெள்ளை சுண்ணாம்புக் கட்டியினால் அன்றைய எண்ணத்தின் எல்லையை நிர்ணயித்து துவக்கக் கோடு போடுவான். அதன் பின் உருவத்தின் முதல் படிவமாய் சின்னச் சின்னக் கோடுகள் உதிக்கும். அவன் கைகளின் ஆணைகளில் வண்ணச் சுண்ணாம்புக்கட்டிகளின் உரசலில் மெல்ல உருவம் பிறக்கும். கடவுளின் கருணை பொங்கும் கண்களோ , வலுவான தோளின் வளைவுகளோ, லேசான புன்னகை தாங்கிய இதழ்களோ அத்தனையையும் அவன் விரல் இடுக்கில் ஒளிந்திருப்பதை விடுவிப்பதுபோல சடார் சடார் என்று தரையில் விழும். திட்டுத் திட்டாய் வர்ணம் கூடும். படோபடமான ஆடை வனப்பையும், ஆபரணங்களின் தங்க மிளிரலையும் வர்ணம் கூட்டி ஓளியிடச் செய்வான். கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அழகு உயிர் கொள்ளும். இரண்டு மணி நேரம், ந ‘ன்கு மணி நேரம், சில நாட்கள் அரை நாள் என்று அவன் இயங்கும் அந்த முழுப் பொழுதும் அவன் வேறு சிந்தனை இல்லாமல் உணவுக்கோ தண்ணீருக்கோ நிறுத்தாமல் தொடருவான். வரைந்து முடிந்ததும், தான் ஒரு கலைப் பொருளை படைத்து விட்ட பெருமிதமோ மகிழ்ச்சியோ இல்லாமல் ஒரு கடமை முடிந்த நிம்மதியோடு ஒதுங்கி விடுவான்.

அது ஒரு ஓவியம் என்று மட்டும் நினைக்காமல் அவன் வணங்கும் கடவுள் எழுந்தருளியது போல, சிருஷ்டி முடிந்ததும் காலில் வீழ்ந்து வணங்குவான். அதுதான் அவன் ஆலயம் போல , அவன் வாழ்தலில் காரணமே அந்த இறைவனின் வடிவத்தை வெளிக்கொணரத்தான் என்பது போல, கடவுளின் அவதாரத்தில் அந்தக் கட்டாந்தரை புனிதம் பெற்றது போல, தொழுதுவிட்டுதான் ஓய்வான். ஓவியத்தின் காலடியில் காசுகள் சேரும். ஐம்பது காசு, ஒரு ரூபாய் சிலசமயம் ஐந்து ரூபாய் என்று உணர்ச்சிவசப்பட்டவர்களின், உதவி செய்ய விழைபவர்கள் இடும் காசு தெறித்து விழும். அவர்கள் எதற்காக க ‘சு இடுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ஓவியத்தின் அழகுக்கா இல்லை கடவுள் என்பதால் காசு இடும் கடமை உணர்ச்சியா ? அவர்கள் இஷ்ட தெய்வத்தைப் பார்த்த மகிழ்ச்சியா ? என்னவென்று தெரியாது. இறைவனின் அவதாரம் மாறுவதற்கு ஏற்ப காசின் அளவு மாறும் விநோதம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அன்றும் அவன் நாள் வழக்கம்போலத்தான் ஆரம்பித்தது. காலை வெளிச்சம் லேசாகப் பரவத் தொடங்க, நடக்க ஆரம்பித்தான். வெகுதூரம் நடந்தான். அமைதி நிலவிய காலையில் அருகிலிருந்த மசூதியின் தொழுகை ஒலி இன்னும் உரக்க காதில் விழுந்தது. அந்த விசாலமான நடைபாதையைப் பார்த்ததுமே நின்றான். தன் பையை அவிழ்த்து வண்ணச் சுண்ணாம்புக் கட்டிகளையும் சாயப் பொடிகளையும் ஓரத்தில் வைத்துவிட்டு சுண்ணாம்புத் துண்டை கையில் எடுத்துக்கொண்டு நடை பாதையின் நடுவில் உட்கார்ந்தான். ஒரு ஷணம் யோசித்துவிட்டு சட்டென்று உதயமான எண்ணத்தின் சாட்டை அடியில் விறு விறுவென்று கோடுகள் இழுத்தான். கோடுகளும் வர்ணத் தீட்டல்களுமாய் ஓவியம் உருப்பெறத்தொடங்கியது. மசூதியின் தொழுகை அவன் காதில் விழாமல், காலை வேளையின் பரபரப்பு இன்றி ஒரு மயான அமைதி சூழ்ந்திருந்தது தெரியாமல், வழக்கமாக விரையும் மனித முகங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்ததை உணராமல், அவன் தன் சிருஷ்டியில் சிறைபட்டான். அவன் கை விரல்கள் விரைய விரைய துளித் துளியாய் அன்றைய இறைவன் ப்ரசன்னமானார். மேகத்தைத் திரட்டிச் செய்த மேனியனாய், தேம்பா கஞ்சம் ஒத்து அலர்ந்த கண்ணனாய், கை வண்ணத்தில் தாடகையை வதம் செய்தவனாய், கால் வண்ணத்தில் கல்லை கன்னியாக்கியவனாய், சிவதனுசு முறித்த தோளினனாய், மெல்ல மெல்ல ராம பிரான் அந்த நடை பாதையில் உயிர்தெழுந்தார். பளீரென்று அடித்த வெளிச்சத்தில் அவர் தன்னைப் பார்த்து புன்னகைப்பது போல உணர்ந்து பரவசமானான். கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். அவர் கால்களை கைகளால் தெ ‘ட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். இருக்கும் அழகு போதாதென்று ஸ்ரீராம மூர்த்தியைச் சுற்றி இன்னும் வர்ண அலங்க ‘ரங்கள் செய்தான்.

அவனுக்கு அது இன்னொரு நாள். அவன் தெய்வங்களில் ஒன்று எழுந்தருளிய சாதாரண நாள். ஊர் இரண்டு பட்டிருந்தது அவனுக்குத் தெரியாது. இறைவனை மறந்த மனிதர்கள் மதத்தின் பெயரால் மல்லுக்கு நிற்பது தெரியாது. சக மனிதர்களின் இல்லத்தை தீக்கிரையாக்கிக்கொண்டும், மனிதர்களை உயிரோடு எரித்துக்கொண்டும் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது அந்தப் பித்தனுக்குத் தெரியாது. அந்த துவேஷத் தீயின் சில பொறிகள் அந்தப் பிரதேசத்திலும் சிதறி ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருந்தது அந்த கடவுள் அபிமானிக்குத் தெரியாது. ஒன்றிரண்டு உயிர்களை பலி வாங்கி , சிறுபான்மை மதத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேசமே கதவடைப்பில் ஈடுபட்டு உஷ்ணம் கூடியிருந்தது அவனுக்குத் தெரியாது. அத்தனையும் தெரியாமல், அந்த ஊரின் பதட்ட நிலையை அறியாமல், மசூதிக்குப் பக்கத்தில் அவன் ராமச்சந்திரனை பிரித்திக்ஷ்டை செய்திருந்தான்.

நன்றாக வெளிச்சம் பரவி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில கடைகள் மட்டும் பாதி திறந்திருந்தது. இறைந்து கிடந்த குப்பைத் தொட்டியை கிளறும் காக்கைகளை தவிர யாருமே இல்லாமல் சாலை வெறிச்சென்றிருந்தது. அப்போதுதான் அந்த மூன்று பேர் சாலையை நோட்டம் விட்டபடி வந்தார்கள். பச்சை சட்டையும் கைலியும் அணிந்த ஒரு வாட்ட சாட்டன் திறந்திருந்த கடைகளைப் பார்த்து குரல் கொடுத்தும், கற்களை எறிந்தும் மிரட்ட அங்கங்கே சந்தேகமாய் திறந்திருந்த ஒன்றிரண்டு கடைகள் கட கட வென்று கதவடைத்துக் கொண்டன. துரிதமாக வரைந்து கொண்டிருந்தவனுக்கு அருகில் வந்து அவர்கள் நின்றார்கள். வந்தவர்களை கவனிக்காமல் அவன் அந்தப் படத்தை வரைவதில் ஈடுபட்டிருந்ததில் அவர்களது மூர்க்கம் அதிகமானது. பச்சை சட்டைக்காரன் ‘டேய் ‘ என்று அவனைப் பார்த்து கத்தினான். அதட்டல் காதில் விழாமல் சலனமில்லாமல் அவன் படம் வரைந்து கொண்டிருக்க…கோபம் கொப்பளிக்க கால்களை ஓங்கி பலம் சேர்த்து அவனை ஆத்திரம் தீர ஒரு உதை விட்டான். அவன், அந்தத் திடார் தாக்குதலில் உருண்டு போய் விழுந்தான்.

‘…ஊரே கதவடச்சி கிடக்குது …என்னடா சாமி படம் வரைஞ்சிகிட்டு இருக்க ? நடையக்கட்றா ‘ ‘என்ன வேலை பண்றான் பாரு ‘ என்று தன் சகாக்களுக்கு அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டினான்.

கீழே விழுந்த அவன் எழுந்து நின்றான். ஓவியத்தைப் பார்த்தான். அவன் விழும்போது அவன் கால் பட்டு குடுவைகளில் இருந்த வர்ணங்கள் சிதறி, ஓவியம் ஓரங்களில் பாழ்பட்டிருந்தது. அவன் பையில் இருந்த சின்னத் துணியை எடுத்து கவனமாக வர்ணச் சிதறலை ஒற்றி எடுத்து, கலைந்து போன அந்த மூலையை கவனமாக புதுப்பித்துத்தான். அவன் இறைவனின் அலங்காரம் கொஞ்சம் சிதைந்து போனதில் கலங்கிப்போய் ஓவியத்தை சீராக்கத் துவங்கியபடி மறுபடி ஓவியத்தில் கவனம் செலுத்தினான்.

‘ஏண்டா.. வேணும்னே செய்யிறியா.. ? உன்னை போகச் சொன்னனுல்ல. திமுராடா உனக்கு ? என்னா தெனாவட்டு இருந்தா எங்க எடத்துல வந்து இந்த படத்த போடுவ ? ‘ இன்னொரு முறை உதைத்தான்.

‘ இது அந்தப் பசங்க பண்ற வேலைதான் மாமு. நம்மள வெறுப்பேத்தறத்துக்காகவே இவங்கிட்ட காசு குடுத்து வரையச் சொல்லியிருக்கானுங்க. கொம்பு சீவிப் பாக்கறானுங்கடா.. ‘

‘படம் வரையற இவன் கையை வெட்டி குடுத்து அனுப்புவோம். இனிமே நம்மள சீண்டமாடானுங்க ‘

‘எவண்டா உன்னை இங்க படம் வரையச் சொன்னது ‘ என்று பச்சை சட்டை அவனை முஷ்டியை மடக்கி அவன் தாடையில் அடித்தான். அவனுக்குள் வலி வெடித்து இறங்கியது. கண்கள் நெருப்பு உமிழ முறைத்தான். பச்சை சட்டைக்கு ரெளத்திரம் கூடி ‘என்னடா மொறைக்கிற.. ‘என்று அவனை அடிக்க ஆயத்தமாவது போல கைச்சட்டையை மடித்தான். ‘ படத்தை அழிடா ‘ என்றான் கண்களில் வெறியுடன். அவன் மெளனமாய் முறைத்தபடி இருக்க, ‘அழிடா ‘ என்றான் அவனை மறுபடி அறைந்து. பதில் சொல்லும் விதமாய் அவன், வாயில் எச்சில் சேர்த்து பச்சை சட்டை மேல் ‘தூ ‘ என்று உமிழ்ந்தான். சட்டை மேல், கைகளில், காலில் அவன் உமிழ் நீர் பட்டுத் தெறித்தது. பச்சை சட்டை வெறி மேலிட அவனை அடித்தான்.

‘ மரியாதையா அழிச்சிடு. ‘

அவன் கண்களில் தீவிரத்தோடு மாட்டேன் என்கிற பாவனையில் பலமாக தலையை ஆட்டினான்.

‘அழிக்க மாட்ட ? பிச்சகார நாயி.. ? ‘ என்று தன் காலால் அழிக்க பச்சை சட்டை அந்த ஓவியத்தின் மேல் வலது காலை உயரத் தூக்கினான்.

அவன் பதறி போனான். உடம்பெல்லாம் நடுங்க, உட்கார்ந்த நிலையிலேயே பச்சை சட்டை மேல் பாய்ந்தான். தூக்கிய அவன் காலைக் கைகளால் பற்றினான். பற்களால் காலைக் கவ்வி வெறிபிடித்தவன் போல கடித்தான். பச்சை சட்டை வலியில் அலற அவன் சகாக்கள் அவனை இழுத்தார்கள். ஆக்ரோஷமாய் அவனை அடித்தார்கள். வலிக் கதறலும், அவனின் ஊளைச்சத்தமுமாய் அந்த நிசப்தமான தெருவில் அந்த கதறல்கள் எதிரொலித்தன. அவர்களின் அடி தாங்காமல் அவன் கால்களை விடுவித்தான். அவர்கள் குரோதம் எல்லை மீறியிருந்தது.

அவன் போராட்டம் தொடர்ந்தது. சட்டென்று குனிந்து அருகில் கிடந்த கல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டான். அதை வைத்திருந்த பாவனையில், அவர்கள் அருகில் வந்தால் அவர்களை அடிக்கத் தயங்கமாட்டான் போல காத்திருந்தான். கொஞ்சம் நகர்ந்து ஓவியத்தின் நடுவில் அதை காவல் காக்கிற தினுசில் அமர்ந்து கொண்டான். அந்த எதிர்ப்பு அவர்களை இன்னும் மூர்க்கமடைய வைத்தது.

மூன்று பேரும் அவனைத் தூக்கி அவன் வரைந்த ஓவியத்தின் மேல் எறிந்தார்கள். அவனை அந்த ஓவியத்தின் மேல் கிடத்தி அடித்தார்கள். அவனை வயிற்றிலும் முகத்திலும் மாறி மாறி குத்தினார்கள். இரண்டு பேர் அவனை பிடித்துக் கொள்ள பச்சை சட்டை அவன் கையை பற்றி அவன் கையாலேயே அந்த ஓவியத்தின் முகத்தில் தேய்த்தான். வர்ணக் குடுவைகள் சிதறின. ஓவியத்தின் வர்ணங்கள் அவன் ஆடைகளில் ஒட்டித் தேய்ந்து பரவின. அவர்கள், அவனை இன்னும் நிலைகுலைய அடித்தார்கள். தலையில் , கண் ஓரத்தில், உதட்டில் அடிபட்டு ரத்தம் கொட்டி, ஓவியத்தின் வண்ணத்தோடு கலந்து சிவப்பு பரவியது. அவன் முகமெல்லாம் ரத்தமாய் , வலியில் கதறிக்கொண்டிருக்க அவர்கள் அடித்து ஓய்ந்தார்கள். தரையில் ஓவியம் கலைந்து போய் வர்ணக் குழப்பமாய் இருந்தது. கலைந்து போன ஓவியம் அவர்கள் மூர்கத்தைத் தணித்தது. இறுதியாய் அவனை ஒரு உதை உதைத்துவிட்டு அவர்கள் ஆத்திரம் தணிந்து விலகிப் போனார்கள்.

அவன் எழுந்து உட்கார்ந்தான். ரத்தத் திரை கண்களை மறைத்தது. நெற்றியிலும் வாயிலும் வடிந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்தபடி படத்தைப் பார்த்தான். கடவுள் இருந்த இடம் வெறும் கட்டாந்தரையாக இருந்தது. ஓவியத்தின் முகம் தொலைந்து போயிருந்தது. அங்கங்கள் கரைந்து போய் அலங்கோல வர்ணத்திட்டுகளாய் உருமாறி இருந்தது. கண்களில் கண்ணீர் பெருகி ரத்தத்தோடு கரைந்து விழுந்தது. இறைவனே அழிந்துவிட்டது போல அழுதான். ஓவியத்தின் ஒரு அங்கமாவது சிதையாமல் இருக்கிறதா என்று தவழ்ந்து தேடினான். ராகவனின் ஆசீர்வதிக்கும் கை மட்டும் கலையாமல் அந்த வர்ணக் குழப்பத்தில் தெளிவாய் இருந்தது.

அவன் கண்களில் கண்ணீர் பெருக கைகளின் முன் மண்டியிட்டு விழுந்தான். அந்தக் கைகளின் மேல் தன் கைகளை வைத்து…உதடு துடிக்க உரக்கக் கதறினான். ‘யா அல்லா … அவங்களை மன்னிச்சிடு ‘

————————————xxx———————————-

anandraghav@yahoo.com

Series Navigation

ஆனந்த் ராகவ்

ஆனந்த் ராகவ்