மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

மதியழகன் சுப்பையா



ஓயாது

கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது
இரவின் அமைதி
எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி
எங்கும் நிறைகிறது கனத்த இருள்
தளர்ந்து படுக்கையில் சாய
படர்கிறது தனிமைப் போர்வை
கனவுத் திரையில் கடந்தகால காட்சியோட்டம்
கதவு தட்டும் ஓசையும் கடிகார ஓசையும் ஓயாமல்
தட் தட் தட் – டிக் டிக் டிக்
நினைவு அங்குசங்களின் நிரந்தரக் குத்தல்கள் தாங்கி
தூக்கத்தின் பாதங்கள் பற்றி
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்

இதற்கு மேலும்
இதற்குமேல் ஒன்றும் கேட்க முடியாது
அதற்குமேல் ஒன்றும் சொல்லவும் முடியாது
கேள்விகளின் போது செவிடாகி விடுவதும்
பதில் சொல்லும் போது ஊமையாகிப் போவதும்
வாடிக்கையாகி விட்டது
கல்லால் தோணி செய்து கடல் கடக்கும்
வேடிக்கை முயற்சிக்கு யார்தான் உதவுவாரோ?

விருப்பம்

நீ கடலாக இருக்கலாம்
ஓராயிரம் நதிகள் உன்னில் கலக்கலாம்
ஜீவநதியாய் இருக்கவே விரும்புகிறேன் நான்

நீயும் மரமும்

ஒவ்வொரு இலையாய்
ஒவ்வொரு பூவாய்
உதிர்க்கும் மரம்
உதிர்ந்தவைகள் உரமாகிப் போகிறது
உதரிய மரத்துக்கே
விழுகின்ற இலைகள் பார்த்து
கெக்கலிக்கிறது புத்திலை
மகரந்தம் சேர சூழ்பையுடன்
விழலாம் பறிக்கப் படலாம்
புத்தம்புது மலர்கள்
வியப்பில்லை மரத்துக்கு
துயரில்லை மரத்துக்கு
நீயும் மரமும் ஒன்றெனக் கொள்
Madhiyalagan@gmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

மதியழகன் சுப்பையா


துளி-1
—-
நீ நனையக் கூடாதென நானும்
நான் நனையக் கூடாதென நீயும்
குடையை விட்டு விலகுகிறோம்
குழப்பத்தில் நனைகிறது குடை

துளி-2
—-
தலை நனைக்கும்
மழை தவிர்க்க
மரத்தடி
கட்டிட ஓரம்
தேடுகிறேன்

கையையும்
மாராப்பையும்
குடையாக்கி என்
தலை காக்கிறாய்

தொப்பளாய்
நனைந்து போகிறதென்
மனம்.

துளி-3
—-
மழை கண்டதும்
பிள்ளையாகிறாய்

கை நிறைய
கண் நிறைய
உடல் நிறைய
மழை வாங்கிக் கொள்கிறாய்

வலுக்கிறது மழை
கொட்டுகிறது மழை
அடிக்கிறது மழை

துளி-4
—-
நீர் கொட்டும்
ஆடையுடன்
வீடு நுழைந்தாய்

மாற்று ஆடை கேட்டு
மாற்றிக் கொண்டாய்

ஊறிய உதடு குவித்து
முத்தம் துப்பினாய்

வெளியே மழையடித்தது
மனதில் அனலடித்தது

துளி-5
—-
மஞ்சு உரசலில்
மின்னல் ஒளிர்ப்பு

மஞ்சு உரசலில்
இடிகள் இடிப்பு

மஞ்சு தழுவலில்
மழையின் பொழிப்பு

மஞ்சு தழுவலில்
ஆக்கம்- சிறப்பு

நம் உரசலில்
நம் தழுவலில்
மின்னி
இடிந்து
பொழிகிறது இன்பம்.

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மதியழகன் சுப்பையா மும்பை


1
ஆதிக்கச் சமூகத்தில்
—-

வார்த்தைகளால்
காயப் படுகிறாய்

செயல்களால்
சிதைந்து போகிறாய்

மன்னிப்பும்
சமாதானங்களும் கூட
வர்க்க யுக்தி என்கிறாய்

என்னைக் கொல்ல
இயலாது
உன்னை வருத்துகிறாய்

கைகளை இறுக
பிடித்துக் கொண்டு
ஆழியில் தள்ள முனைகிறாய்

பேச மறுக்கிறாய்
ஈச மறுக்கிறாய்

ஒன்று செய்
தினமும் காரி உமிழ்
ஆதிக்கச் சமூக நிறம்
கழுவி வெளுக்கிறேன்.

2
பண் பட்டதல்ல
என் மொழி

பழக்கப் பட்டதல்ல
இவ்வுறவு

என் பிழைகளை பொறு
தவறுகளை சகி

3
மொழி தெளிந்தவனல்ல
வழி தெரிந்தவனுமல்ல

பழி சொல்லி
பிரியாதே நாளும்

முடிந்தால்
என் மொழி திருத்து
என் வழி திருத்து

தனிமை
இனிமையல்ல உனக்கு

தனிமை
இனிமையல்ல எனக்கு

தனிமை
இனிமையல்ல நமக்கு

தனிமை
இனிமையல்ல எவர்க்கும்

5
ஆதிக்க நாற்றமடிக்கும்
வார்த்தைகளை கழுவு
என் வாயை வெறுக்காதே.

ஆதிக்க நரம்புகளை
மூளையிலிருந்து பிடுங்கு
என் உடலை வெறுக்காதே

ஆதிக்க செயல்களை
என்னிலிருந்து களை
என்னை ஒதுக்காதே

உன் கையில் நூல்கள்
ஆட்டுவித்துக்கொள்

தலைமுறை கோபம்
தனிந்து கொள்

வெறுக்காதே- விலகாதே- ஒதுக்காதே.

6
யாரோ ஒருத்தருக்காக
சண்டையிட்டாயிற்று

யாரோ ஒருத்தருக்காக
பிரிந்தாயிற்று

யாரோ ஒருத்தருக்காக
கோபித்தாயிற்று

யாரோ ஒருத்தருக்காக
மகிழ்ந்தாயிற்று

யாரோ ஒருத்தருக்காக
கவலைப்பட்டாயிற்று

யாரோ ஒருத்தருக்காக
—-

யாரோ ஒருத்தருக்காக
—-

எஞ்சிய இறுதிப் பொழுதுகளில்
நமக்காக
வாழ்வோம் வா….

7
மெளனவெளி
உடைக்க
எதாவது சொல்

சொல்லிவிட்டதெல்லாம்
பொய்களே

உண்மைகள் எப்பொழுதும்
சொல்லப்பட்டதில்லை

எதுவும் சொல்லக் கூடாது
எனவே தோன்றும்
எப்பொழுதும்

ஆனாலும்
அச்சுறுத்துகிறது அமைதி

அதனால்
சொல்லி விடுவோம்
எல்லாவற்றையும்

பொய்களாய்
பொய்களாய்.

8.
நிகழ்வுகளை
நினைப்புகளை
விவரிக்க
பொறுத்தமான
போதுமான
சொற்கள் இன்றி
தடுமாறியிருக்கிறேன்

ஒற்றெழுத்து
ஒற்றைச் சொல்
சலவைக்கல் வாசகம் என
விதவிதமாய் வெளிப்படுத்தி
விட்டார்கள்

அண்டம் முழுதும்
அப்பியிறுக்கும்
ஆற்றல்மிகு
மெளனச் சொல்லால்
உணர்த்தப் பார்க்கிறேன்
என் உயிர் குடையும்
உணர்வுகளை.

9
எத்தனை முறை
சொல்ல எத்தனித்திருக்கிறேன்

எப்பொழுதாவது
சொல்லிவிட வேண்டும்
என்பதால்
பழைய, புதிய
நவீன, அதிநவீன
என வகையாய்

ஏடுகள் பல புரட்டி
சேகரித்திருக்கிறேன்
காதல் தோய்ந்த
சொற்களை

இத்தனை சொற்களில்
என்னை வெளிப்படுத்த
ஏதுவான சொல்லெதுவென
எங்ஙனம் தேர்வது ?

10
நீ உதிர்த்த
அத்தனை சொற்களையும்
சப்பித்திரிகிறேன்

உன் உமிழ் நீர்
ஊரிய சொற்கள்
வாங்க
வாய் பிளந்து
நிற்கிறேன்

என் முன்னிலை தவிர்த்து
தன்னிலை சுகிக்கும் நீ
என்னிலை அறிய
என்று முனைவாய் ?

11.
மொழிகள் பல
சொற்கள் கோடி

சொற்கள் இணைந்து
இரட்டிப்பாகிறது
சொற்கள்

எதிரொலித்து வருகிறது
எக்கச்சக்கமாய்
சொற்கள்

பிறமொழி கலந்து
தனிமொழி ஈணும்
சொற்கள் பலபல

இத்தனை இருந்தும்
அத்தனை சந்திப்புகளிலும்
மெளனித்து விடுகிறாய்
மனதை கல்லாக்கி.

madhiyalagan@rediffmail.com
http://madhiyalagan.blogspot.com

Series Navigation

மதியழகன் சுப்பையா, மும்பை

மதியழகன் சுப்பையா, மும்பை

மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

மதியழகன் சுப்பையா, மும்பை


1
என் தொடுதல்களை
பொருட்படுத்தியதில்லை நீ
சுகித்து மகிழ்கிறேன் நான்.

என் உரைகளை
புரிந்ததில்லை நீ
உலரி மகிழ்கிறேன் நான்.

என் எண்ணங்களை
உணர்ந்ததில்லை நீ
வெளிப்படுத்தி மகிழ்கிறேன் நான்.

என் செயல்களை
வாழ்த்தியதில்லை நீ
செய்து மகிழ்கிறேன் நான்.

என் காதலை
ஏற்றதில்லை நீ னாலும்
காதலித்து மகிழ்கிறேன் நான்.

2
கடிதமிட்டிருக்கலாம்
கத்தி சொல்லியிருக்கலாம்

இணையம் மூலம் கூட
இணைந்திருக்கலாம்

எதிர் வீட்டு
தம்பியையோ
பக்கத்து வீட்டு
தங்கையையோ
தூதாக்கியிருக்கலாம்

இதயம் வரைந்த
வாழ்த்து அட்டையோ
திரைப்பட பாடலோ கூட
உதவியிருக்கக் கூடும்

என்று காதலை தெரிவிக்க
வழி சொல்லி புலம்புகிறாய்

ஒரு முறையாவது
என் மார்பு நுனி விட்டு
கண்களை கண்டிருந்தால்
தெரிந்திருப்பாய்
உனக்கான என் காதலை.

3
நிஜம் தொடரும்
நிழல்கள்

சொல் உமிழும்
பொருள்கள்

வினை விதைக்கும்
வினைகள்

ஒன்று இயக்கவே
மற்றொன்று இயங்கும்

இருத்தல் கூட
இயக்கமாகும்
சில பொழுது

சலனமும்
ஸ்திரமும்
சமமாகும் சமயத்தில்

உண்டு இல்லை
ஒன்றாகும் ஒருவேளை

க்கல் அழித்தல்
நிகழும் நொடியில்.

4
தோழனுடையதோ
தோழியுடையதோ
ஒருமுறை
தொடர்பு கொண்டு
தெரிந்திடலாம் தான்
என்ன கேட்பது
எப்படி கேட்பது என்ற
தயக்கம் வேறு

அகர வரிசையில் உள்ள
எண் முகவரி ஏட்டில்
தேடித் தெரிவதும்
சிரமம் தான்

உரியவரே
தொடர்பு கொண்டால்
நினைவுக்கு வரலாம்

இருப்பினும்
தொலைபேசி எண்னேட்டில்
பெயர் குறிக்க
மறந்து போன
எண்ணைப் பார்க்கையில்
பதைக்கிறது மனம்.

5
தாம்புலச் சிகப்பாய்
வெளிர் மஞ்சளாய்
வெண்மையாய்
பிறையாய்- அரையாய்
முழுதாய் என
பரிணாமங்களை
ரசிக்கச் சொல்கிறேன்
உச்சுக் கொட்டி
உதடு பிதுக்கிறாய்

துளியாய் உதிர்த்து
துளித்துளியாய் தெரித்ததை
உடைத்து சிதைத்து
கோடு வரைந்து
வலக்கை பிடித்ததை
இடக்கை ஊற்றி
நாக்கை நீட்டி
நடுவில் வைத்து
வந்து உன்னை
வாழச் சொல்கையில்
எதையும் இழுத்து
வைக்காதே என
எரிந்து விழுகிறாய்

பெருக்கி கூட்டி
வகுத்து கழித்து
குழம்பிப் போய்
குந்துகிறாய்

வங்கி நிரப்பியும்
வீட்டில் தெளித்தும்
அமைதி உன்னிடம்
அட்டை வடிவில் தான்

சொல்லித் தந்ததை
மறந்து விட்டாய்
சொல்லித் தருகிறேன்
மறுத்து விடுகிறாய்.

6
என்ன துணிச்சல்
என்னிடம் சொல்வதற்கு

நான் ஏற்கனவே…………

உனக்கு இது தேவையா ?

இதெல்லாம் எனக்கு பிடிக்காது

இப்படியாய்
எதாவது கூட இருக்கலாம்
மெளனமென்றால்
சம்மதம்
என்பதைத் தவிர.

7
நான் கவிதை குறித்து பேசுகிறேன்
நீ கைகள் சிவக்க முத்தமிடுகிறாய்

ஏதேனும் சாதித்த பின்
சாக வேண்டும் என்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்

அடிமைத்தனத்தை நம்
வீட்டிலிருந்தே ஒழிக்க
வேண்டுமென்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்

வேறுபாடற்ற சமுதாயத்தை
உருவாக்க திட்டம் சொல்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்

பிரச்சனைகளுக்கெல்லாம்
தீர்வு காண்பிக்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்

உன் வேலைகளை நீயும்
என் வேலைகளை நானும்
செய்ய வேண்டுமென்கிறேன்
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாய்

முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்
கண்களை மூடி
செவி திறக்கிறாய்.

8
ஒண்ணு ரெண்டு மூனுயென
எண்ணியும்

ராமா ராமாவென
உச்சரித்தும்

கண்ணை மூடி
பல்லைக் கடித்து
அடக்கியும்

அடங்காமல்
மீண்டும் பார்த்து விட்டேன்

பேரூந்தில் கைதூக்கி
நின்றவளின்
அக்குள் கிழிசலை.

9
குறிப்பறிந்து
சமைக்கிறாய்
துவைக்கிறாய்
கால் பரப்பி
படுக்கிறாய்

நானும் குறிப்பறிந்து
மேற்படி நடந்தால்

எனக்காக இப்படியொரு
கவிதையை நீ வடிக்க
நேரிடும்

அதனால்

பின்னோர்கள்
பின்பற்ற
புதிய வாழ்வு முறையை
வடிவமைத்து கொடுப்போம்.

10
எதேச்சையாக
எதிர்பட்டு புன்னகைக்கிறேன்

தொடர்பற்றுப் பேசி
தொந்தரவு செய்கிறேன்

வேலைக்கு விரைகையில்
ஓட்டமும் நடையுமாய்
தொடர்கிறேன்

தொலைபேசியில் அழைத்து
வழிகிறேன்

மறுக்கையிலும்
பரிசுகளை திணிக்கிறேன்

கேட்காமலேயே
அபிப்ராயம் சொல்கிறேன்

இத்தனை இயல்களிலும்
காதல் வெளிப் பட்டதாய்
கற்பிதம் சொல்லி
நட்பை கொன்று விட்டாய்.

11
உனக்கு
புன்னகை மூட்ட
புன்னகை மூடி
பொறுத்திக் கொண்டுள்ளேன்.

இயல்பாய்
உன் மீது பட்ட விரர்களை
கண்களில்
ஒற்றிக் கொண்டுள்ளேன்

வேராய் இறங்கும் உன்
நினைவுகளை
உடம்பில்
சுற்றிக் கொண்டுள்ளேன்

இன்னும் உள்ளேன்கள்
பல உள்ளன

மெய் விரித்து
நிற்குமென்னில்
கைவிரித்துப் படர்ந்திடு
கதை கதையாய் சொல்கிறேன்.

12
கருப்பாய் இருந்தாலும்
எடுப்பாய் இருக்கீங்க என்ற
இந்திராவிடம்

‘விளையும் பயிர்………….. ‘
பழமொழியை
அழுத்திச் சொன்ன
வனிதாவிடம்

ஓடிப் போயிடுவோமாடா ?
எனக் கேட்ட
எனக்கு மூத்த
மல்லிகாவிடம்

அம்மாவை அத்தையாக்கி
என்னை அத்தானாக்கிய
பாக்கியத்திடம்

அப்பொழுதே யாரிடமாவது
வெளிப் படுத்தியிருக்க வேண்டும்

முன் தலை வழுக்கை
காதோர நரை
செல்லமாய் தொப்பை
இந்நிலையில்
யாரிடம் வெளிப்படுத்த
இளைய எண்ணங்களை
எப்படி மறைக்க
வெளிப்பட்ட முதுமையை.
madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா, மும்பை

மதியழகன் சுப்பையா, மும்பை